முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கிளியும் டிவி சீரியல் சண்டைகளும்




மனுஷ்யபுத்திரன் வீட்டில் ஒரு கிளி உண்டு. நன்றாக பழகும். என் கையில் இருந்து கூட உணவு வாங்கி தின்றதுண்டு. ஆனால் தன்னை யாராவது சீண்டினால் எரிச்சலாகி விடும். ஒருமுறை ஒரு நண்பர் அதனிடம் ஓவராக பேசப் போய் அது கோபித்துக் கொண்டு கூண்டுக்கு திரும்பி விட்டது. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரே குஷி. குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே “பாருங்க ஒரு கிளிக்கு கூண்டுங்கிறது ஒரு சிறை. ஆனா உங்க கிட்ட பேசுறதுக்கு கூண்டே மேல்னு நினைச்சு உள்ளே போயிடுச்சு” என்றார்.

 ஒற்றைக் கிளி தான். அது பாட்டுக்கு சத்தம் போட்டபடி ஒரு வயதான கன்னியாஸ்திரியை போல் முறைத்தபடி அமர்ந்திருக்கும். மனுஷ்யபுத்திரன் அது பாவம் தனியாக இருக்கிறதே என எண்ணி அதற்கு ஜோடியாக ஒரு ஆண் கிளியை வாங்க சென்றிருக்கிறார். கடைக்காரர் இரண்டு கிளிகளாகத் தான் தருவேன் என்றதால் அவர் ஒரு ஜோடியாக வாங்கி இதன் கூண்டில் விட்டிருக்கிறார். நான் அவர் வீட்டுக்கு போன போது கூண்டில் ஜோடிக்கிளிகள் தனியாகவும் அதன் எதிரே பழைய கிளி கோபமாய் முறைத்தபடியும் இருந்தன. ரொம்ப நேரமாய் அமைதியாக முறைத்தபடி இருந்தன. எனக்கே பார்க்க பயமாய் இருந்தது. “நாலைஞ்சு நாளா கிளிகளுக்கு இடையே ஒரே சண்டை. பழைய கிளி இதுகளை ஒத்துக்க மாட்டேங்குது. அது நிம்மதியா தனியா இருந்துது. நான் தான் அதுக்கு நன்மை பண்றேன்னு குழப்பத்தை உண்டாக்கிட்டேன் போல” என்றார்.
 நான் அவரிடம் என் வீட்டில் நடந்ததை சொன்னேன். என் வீட்டில் முதலில் ஒரு பூனை இருந்தது. அதற்கு இரண்டு வயது இருக்கும் போது ஒரு ஜடை பூனையை குட்டியாக கொண்டு வந்தேன். பழைய பூனை மிகவும் வெறுப்புடன் ஜடைபூனை குட்டியை நடத்தியது. தன்னுடைய இடத்தில் புது பூனை வந்தது அதை மிகவும் எரிச்சலாக்கியது. இப்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் பூனைகள் ஒன்றை ஒன்று சகித்துக் கொள்ளுமே ஒழிய தோழிகள் ஆகவில்லை. அதன் பிறகு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்தேன். பழைய பூனை நாயை இன்னும் அதிகமாய் வெறுத்தது. நாய்க்கோ பூனை மேல் பிரியம் அதிகம். பக்கத்தில் போனாலே பூனை அதன் முகத்தில் நகங்களை விரித்து அறைந்து கிழிக்கும். இரண்டாவது வந்த பூனையோ நாய் வந்த புதிதில் ஒரு வாரம் வீட்டுக்குள் வரவே மறுத்து ஜன்னல் திண்டில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு இரண்டாவது பூனையும் நாயும் காதலர்கள் போல் நெருக்கமாகி விட்டார்கள். அதன் பிறகு ஒரு முயலை கொண்டு வந்தோம். ரெண்டு பூனைகளும் முயலை கடும் வெறுப்புடன் நடத்துகின்றன. இப்படி ஒரு இடத்தில் கூடுதலாய் ஒரு நபரை கொண்டு வரும் போது மகிழ்ச்சியை விட பிரச்சனைகள் தான் அதிகமாகின்றன. என் ஊரில் ஒரு பெண்ணை வெளியூரில் கட்டிக் கொடுத்தார்கள். அவ்வீட்டில் கணவனின் அம்மா, சகோதரி எல்லாம் கூட்டுக்குடும்பமாக வசித்தார்கள். நிறைய பேராய் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பது பிடிக்கவில்லை என்று சொல்லி அப்பெண் பிரிந்து வந்து விட்டாள். பிறகு இரண்டு வருடங்கள் அவள் கணவன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான். அவள் முடியாதென்று விவாகரத்து செய்து விட்டாள். இந்த விவகாரத்தை அழுத்தமாய் நம் டிவி சீரியல்கள் பேசுகின்றன. அங்கு பிரதான பிரச்சனையே ஒரு பெண் புதிதாய் ஒரு குடும்பத்தில் நுழைகிற போது வருகிற சிக்கல்கள் தானே – மாமியார் மருமகள் சண்டை, சகோதரிகளுக்கு இடையிலான சச்சரவு, கணவனின் காதலி இப்படி இப்படி.
 இடத்துடன் மனிதனுக்கும் மிருகங்கள் பட்சிகளுக்கும் கூட தீவிரமான உறவு இருக்கிறது. தன்னுடைய ஒரு அடி இடத்தை கூட பகிர்ந்து கொள்ள தாங்க முடியாத ஒன்று. உணவு, ஜோடியை கூட பகிரலாம். குடும்ப சண்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிறைய இடம் இருந்தாலோ (யாரோ ஒருவர் பதுங்கிக் கொள்வதற்கான அறை), வீட்டுக்குள் ஒருவர் அருகாமையில் மற்றவர் அதிக நேரம் இல்லாமல் இருந்தாலோ நிறைய சண்டைகள் எழாது. அஜித்திடம் முன்பு ஒரு பேட்டியில் “உங்களுக்கும் ஷாலினிக்கும் இடையில் சண்டை வருவதுண்டா?” எனக் கேட்டார்கள். அவர் சொன்னார் ” we do have our proximity squabbles”. அதாவது ஒரே இடத்தில் தொடர்ந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருப்பதால் வருகிற சண்டைகள் எங்களுக்கு இடையிலும் வருவதுண்டு என்று.
 நம்முடைய சாதி சண்டைகள், குடும்ப பகைகள் நிலத்தை யார் எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றியது தானே! இடத்துடனான விகிதாச்சாரம் சரியாக இல்லாமல் போகும் போது வரும் குழப்பங்களையும் மனக்கொதிப்புகளையும் தான் சீரியல்கள் பேசுகின்றன. ஒவ்வொரு frameலும் ஐந்து பேருக்கு மேல் இருப்பார்கள். இதில் மூன்று பேரை குறைத்தால் பிரச்சனைகள் தீர்ந்து சண்டை நின்று சீரியல் முடிந்து போகும்.
 நான் கிளம்பும் போது மனுஷ்யபுத்திரனிடம் சொன்னேன் “ஒருவேளை புதிதாய் வந்த ஆண் கிளி பழைய பெண் கிளியை சற்று காலம் கழித்து ஏற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆகலாம் இல்லையா?”. அவர் சொன்னார் “அந்த ஆண் கிளி என்ன உங்களை மாதிரின்னு நெனச்சிட்டீங்களா?”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...