இம்மாத தீராநதியில் கண்மணி குணசேகரனின்
சிறுகதை “வாடாமல்லி” வாசித்தேன். கொஞ்சம் பிசகினால் “முதல் மரியாதை” போல் நாடகீயமாகி
விடக் கூடிய கதை. ஆனால் தடுமாறாமல் நூல் பிடித்தாற்போல் கதையை கொண்டு போகிறார். மல்லிகா
பன்னீர் எனும் கிராமத்து ரோமியோவை காதலிக்கிறாள். இருவரும் சேர்ந்து ஓடிப் போகும் போது
ஊர்க்காரர்கள் பிடித்து பிரித்து வைத்து விடுகிறார்கள். இருவருக்கும் வேறு நபர்களுடன்
திருமணம். வெறுப்பில் சக்கரை குடிகாரனும் பொறுக்கியும் ஆகிறான். மல்லிகா தன் கசப்பையும்
ஏக்கத்தையும் வைராக்கியமாய் மாற்றிக் கொள்கிறாள். எதுவுமே பாதிக்காதத்து போல் குடும்ப
வாழ்க்கையை சிறப்பாய் நடத்துகிறாள். குழந்தை, கணவன் என நிறைவான வாழ்க்கை. அப்போது பன்னீர்
இறந்து போன சேதி வருகிறது. அதுவரை அவன் தன் வாழ்க்கையில் இல்லாதது போல் நடந்து கொண்டவள்
இப்போது சட்டென கலங்கி நிற்கிறாள். ஊர் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் அவனை இறுதியாய் பார்க்க
கிளம்புகிறாள். ஆளுயர மாலையை வாங்கிப் போய் அவன் உடம்பில் போடுகிறாள். அவளைப் பார்த்து
ஊர் அதிர்ந்து நிற்கிறது. கடும் அழுத்தத்துடன் காதலை மறைத்து வாழ்பவர்கள் ஒருநாள் அதே
அழுத்தத்துடன் துணிச்சலுடன் அதை வெளிக்காட்டவும் செய்வார்கள். இந்த உளவியல் தான் கதைக்கு
அழகு.
இரண்டு விசயங்கள். இக்கதையை இமையம்
இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பார் என ஒரு கணம் தோன்றியது. இன்னும் சில பரிமாணங்களை
கதைக்கு சேர்த்திருப்பார். ஒரு சில வசனங்களில் பக்க பாத்திரங்களை இன்னும் உயிரோட்டம்
கொள்ள வைத்திருப்பார். இன்னும் கூர்மையான கவுச்சி வாசம் வீசும் வசனங்களை எழுதியிருப்பார்.
நவீன சிறுகதையில் எழுதப்படாத விதி
ஒன்று உண்டு. பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அந்த துளி விஷத்தை பற்றி எழுத வேண்டும்
என்பது அது. கண்மணி குணசேகரன் இயல்பாகவே அந்த பாலைப் பற்றியே எழுதுகிறார். அப்படி எழுதி
ஒருவர் மௌனியும் அசோகமித்திரனும் தொட்ட உயரங்களை அடைவது சிரமம்.
Comments