Skip to main content

தலைமுறைகள்

இப்போதெல்லாம் மைலாப்பூர் பக்கமாய் அடிக்கடி இலக்கியவாதிகளை சந்திக்கிறேன். அதுவும் சற்றும் எதிர்பாராமல். போன வாரம் ஒருநாள் காலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மைலாப்பூர் ஆர்.கெ சாலைக்கு பக்கத்து தெருவில் இந்திரா பார்த்தசாரதி நடைபழகுவதை பார்த்தேன். கைத்தடியால் மெல்ல மெல்ல ஊன்றி ஒரு குழந்தை நடக்க கற்பது போல் தனியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். முதலில் இ.பாவா அல்லது அவரைப் போன்று வேறொருவரா என குழப்பம். வண்டியை திருப்பி அவர் அருகே போனேன். என்னைப் பார்த்ததும் அவர் குழப்பமாகி நின்று விட்டார். அவரிடம் சென்று வணங்கினேன். “இ.பா தானே?” என்றேன். அவர் கண்களில் ஆர்வம் ஒளிர தலையசைத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இ.பா போல் உதட்டை மென்மையாய் குவித்து பல்லைக்காட்டாமல், கன்னத்தசைகளை விரிக்காமல் புன்னகைக்க வெகுசிலருக்கே வரும். பார்க்க அவ்வளவு அழகு.

நேற்று மாலை நேர இடைவேளையின் போது ஒரு கடையில் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மங்கலான சட்டையும் பேண்டும் அணிந்து தோளில் பை மாட்டின ஒருவர் என்னிடம் தயக்கத்துடன் வந்தார். நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். வெளி.ரங்கராஜன் போல் மிக சன்னமான குரலில் அந்தரங்கமான தொனியில் பேசினார். என் பெயரை தயங்கி தயங்கி குறிப்பிட்டு ”நீங்கள் தானா?” என்றார். ஆமாம் என்று கைகுலுக்கி விசாரித்தேன்.
நான் ஊகித்தது போல் அவர் போன தலைமுறை இலக்கிய வாசகர். அவர்கள் தான் இவ்வளவு அருகில் வந்து மென்மையாய் உரையாடுவார்கள். இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் கைகளை ஆட்டியபடி குரலை உயர்த்தி பேசுவார்கள் (என்னையும் சேர்த்து தான்). இருபது வருடங்களில் நம் குரலும் உடல்மொழியும் முழுக்க மாறிப் போய் விட்டது.  
அவர் பெயர் செந்தில். அருகில் ஜெம் எனும் பருத்தி நூலை பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை மேலாளராக வேலை செய்கிறார். என் கட்டுரைகளை படிப்பதாய் சொன்னார். “நீங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு விவாதிப்பேன்” என்றார். எனக்கு சங்கோஜமாய் இருந்தது. அவர் இலக்கியம் வாசிக்கும் காலத்தில் நான் பள்ளியில் ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்திருப்பேன்.
போன தலைமுறையினர் என்னைப் படிப்பதாய் அறிந்தால் நான் மிகுந்த உவகை கொள்வேன். நான் ஊரில் சிறுவனாய் அத்தகையோருடன் தான் வளர்ந்தேன். சு.ரா, ஜெ.மோ, கலை இலக்கிய மன்றத்தின் பொன்னீலன், முஸ்தபா, ரசூல், என்.டி, நட.சிவகுமார் இவர்கள் எல்லாருமே என்னை விட இருபது வயது மூத்தவர்களாகவே நான் சந்திக்கும் போது இருந்தனர். அவர்களிடம் இருந்து தான் நான் அத்தனையும் கற்று வளர்ந்தேன். சொல்லப் போனால் என் வயது எழுத்தாள நண்பர்களை விட இவர்களிடமே நான் அதிக சௌகர்யமாய் உணர்வேன். நேற்று அந்த நண்பருடன் உரையாடும் போது என் அத்தனை சீனியர்களும் என்னை ஆசீர்வதித்ததாய் உணர்ந்தேன்.
“எனக்கு அ.மார்க்ஸ் நண்பர்” என்றார். நிறப்பிரிகை வெளிவந்த காலகட்டம் பற்றி பேச ஆரம்பித்தோம். அதன் ஒவ்வொரு இதழும் எப்படி ஆழமான பார்வையும் விவாதமும் கொண்டிருக்கும் என வியந்தேன். அதன் பின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்திருக்கிறது. நிறப்பிரிகை குழுவில் உள்ளவர்கள் இருவர் சேர்ந்து விரிவாய் வாசித்து தயாரித்து விவாதித்து ஒரு கட்டுரை எழுதுவார்கள். அதன் பின் இருபது நாள் உழைப்பாவது இருக்கும். இன்றைக்கும் பல நிறப்பிரிகை கட்டுரைகள் படிக்க முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது. அவர் “ஏன் அந்த பத்திரிகை நின்று போனது?” எனக் கேட்டார். அது போன்ற ஒரு பத்திரிகை சில தீவிரமானவர்கள் ஒரே சமயத்தில் கூடி வேலை செய்யும் சந்தர்ப்பம் அமையும் போது நிகழும் அற்புதம். அதற்கு குறைவான ஆயுள் தான் இருக்க முடியும் என்றேன். உயர்வான தரத்தில் நீண்ட காலம் ஒரு பத்திரிகை கொண்டு வர இயலாது.
 நிறப்பிரிகை வட்டத்தில் மிகத் திறமையானவர் ரவிக்குமார் தான் என்றேன். அவர் “கண்காணிப்பின் அரசியலை” குறிப்பிட்டார். ரவிக்குமார் மட்டும் அரசியலுக்கு சென்றிராவிட்டால் இன்று எழுத்தில் முன்னணியில் உள்ள பலரை தாண்டி சென்றிருப்பார் என பேசிக் கொண்டோம். அப்போது அவர் சொன்னார் “மார்க்ஸே என்னிடம் ஒருமுறை இப்படி ரவிக்குமார் பற்றி குறிப்பிட்டார்: ‘ரவிக்குமார் என்னை விட தரமாய் எழுதக் கூடியவர்’”. எனக்கு அதைக் கேட்டு வியப்பு தீரவில்லை. மார்க்ஸ் தன்னைக் கடந்து சிந்திக்கக் கூடியவர், ஈகோ பார்க்காதவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு தன்னையே விட்டுத் தந்து இன்னொருவரை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேரால் இப்படி self-effacingஆக இருக்க முடியும் சொல்லுங்கள். அப்படி பேசினாலே அது நம் பலவீனம் என கருதுவார்கள்.
அவர் வளர்மதியைப் பற்றி குறிப்பிட்டார். எனக்கு அவரது “இசையின் அரசியல்” நூல் மிகவும் பிடித்தமானது என்றேன். பேராசிரியர் அரசுவின் பதிப்பான “கங்கு வெளியீட்டின்” நூல்கள் அத்தனையும் அபாரமானவை. 70 பக்கங்களுக்குள் பல வேறு கருத்துநிலைகள், கோட்பாடுகள் பற்றின எளிய அறிமுக நூல்கள், ஆனால் மிக தரமாகவும் இருக்கும். அவர் சொன்னார் “நான் வளர்மதியிடம் உங்களைப் பற்றி குறிப்பிட்டேன். கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருநாள் சந்திக்க வேண்டும் எனச் சொன்னார்”. வளர்மதி ஒரு இணையதளம் நடத்தி வந்தார். அதில் என் ரசிகன் நாவல் பற்றி மதிப்புரை ஒன்று பிரசுரித்தார். அப்போது என்னை போனில் அழைத்து பேசினார். நான் சந்திக்க விரும்பும் ஒருவர் என்னையே போனில் நம்மை அழைத்து பேசினது எனக்கு மிகவும் நிறைவாய் இருந்தது. நான் அதைப் பற்றி இவரிடம் கூறவில்லை. ஏனோ கூச்சமாய் இருந்தது. மௌனமாய் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
”ஏன் கட்டுரைத் தொகுப்பு ஒன்று கூட வெளிக்கொணர வில்லை; நாவல்களாய் எழுதித் தள்ளுகிறீர்களே?” எனக் கேட்டார். என் தவறு தான். நான் அதற்கான போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை. போன வருட இறுதியில் அம்ருதாவில் என் கட்டுரைத் தொகுப்பு வெளியிடலாம் எனக் கேட்டார்கள். தொகுக்க ஆரம்பித்து அதை வெகுவாக தாமதித்து விட்டேன். இன்னொரு பக்கம் பெரும்பாலான பதிப்பாளர்களும் கதைத் தொகுப்புகள், நாவல்களை வெளியிடவே விரும்புகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. வாசகர்கள் கதைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கட்டுரைகளுக்கு கொடுப்பதில்லை.
மிக மென்மையாய் கைகுலுக்கி பிரிந்தார். அவர் ஒரு வேலை நாளின் களைப்புடன் வீட்டுக்கும், நான் மீதி வேலை நாளின் களைப்பை அனுபவிக்க என் அலுவலகத்துக்கும் சென்றோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...