Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தலைமுறைகள்

இப்போதெல்லாம் மைலாப்பூர் பக்கமாய் அடிக்கடி இலக்கியவாதிகளை சந்திக்கிறேன். அதுவும் சற்றும் எதிர்பாராமல். போன வாரம் ஒருநாள் காலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மைலாப்பூர் ஆர்.கெ சாலைக்கு பக்கத்து தெருவில் இந்திரா பார்த்தசாரதி நடைபழகுவதை பார்த்தேன். கைத்தடியால் மெல்ல மெல்ல ஊன்றி ஒரு குழந்தை நடக்க கற்பது போல் தனியாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். முதலில் இ.பாவா அல்லது அவரைப் போன்று வேறொருவரா என குழப்பம். வண்டியை திருப்பி அவர் அருகே போனேன். என்னைப் பார்த்ததும் அவர் குழப்பமாகி நின்று விட்டார். அவரிடம் சென்று வணங்கினேன். “இ.பா தானே?” என்றேன். அவர் கண்களில் ஆர்வம் ஒளிர தலையசைத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இ.பா போல் உதட்டை மென்மையாய் குவித்து பல்லைக்காட்டாமல், கன்னத்தசைகளை விரிக்காமல் புன்னகைக்க வெகுசிலருக்கே வரும். பார்க்க அவ்வளவு அழகு.

நேற்று மாலை நேர இடைவேளையின் போது ஒரு கடையில் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மங்கலான சட்டையும் பேண்டும் அணிந்து தோளில் பை மாட்டின ஒருவர் என்னிடம் தயக்கத்துடன் வந்தார். நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். வெளி.ரங்கராஜன் போல் மிக சன்னமான குரலில் அந்தரங்கமான தொனியில் பேசினார். என் பெயரை தயங்கி தயங்கி குறிப்பிட்டு ”நீங்கள் தானா?” என்றார். ஆமாம் என்று கைகுலுக்கி விசாரித்தேன்.
நான் ஊகித்தது போல் அவர் போன தலைமுறை இலக்கிய வாசகர். அவர்கள் தான் இவ்வளவு அருகில் வந்து மென்மையாய் உரையாடுவார்கள். இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் கைகளை ஆட்டியபடி குரலை உயர்த்தி பேசுவார்கள் (என்னையும் சேர்த்து தான்). இருபது வருடங்களில் நம் குரலும் உடல்மொழியும் முழுக்க மாறிப் போய் விட்டது.  
அவர் பெயர் செந்தில். அருகில் ஜெம் எனும் பருத்தி நூலை பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை மேலாளராக வேலை செய்கிறார். என் கட்டுரைகளை படிப்பதாய் சொன்னார். “நீங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு விவாதிப்பேன்” என்றார். எனக்கு சங்கோஜமாய் இருந்தது. அவர் இலக்கியம் வாசிக்கும் காலத்தில் நான் பள்ளியில் ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்திருப்பேன்.
போன தலைமுறையினர் என்னைப் படிப்பதாய் அறிந்தால் நான் மிகுந்த உவகை கொள்வேன். நான் ஊரில் சிறுவனாய் அத்தகையோருடன் தான் வளர்ந்தேன். சு.ரா, ஜெ.மோ, கலை இலக்கிய மன்றத்தின் பொன்னீலன், முஸ்தபா, ரசூல், என்.டி, நட.சிவகுமார் இவர்கள் எல்லாருமே என்னை விட இருபது வயது மூத்தவர்களாகவே நான் சந்திக்கும் போது இருந்தனர். அவர்களிடம் இருந்து தான் நான் அத்தனையும் கற்று வளர்ந்தேன். சொல்லப் போனால் என் வயது எழுத்தாள நண்பர்களை விட இவர்களிடமே நான் அதிக சௌகர்யமாய் உணர்வேன். நேற்று அந்த நண்பருடன் உரையாடும் போது என் அத்தனை சீனியர்களும் என்னை ஆசீர்வதித்ததாய் உணர்ந்தேன்.
“எனக்கு அ.மார்க்ஸ் நண்பர்” என்றார். நிறப்பிரிகை வெளிவந்த காலகட்டம் பற்றி பேச ஆரம்பித்தோம். அதன் ஒவ்வொரு இதழும் எப்படி ஆழமான பார்வையும் விவாதமும் கொண்டிருக்கும் என வியந்தேன். அதன் பின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்திருக்கிறது. நிறப்பிரிகை குழுவில் உள்ளவர்கள் இருவர் சேர்ந்து விரிவாய் வாசித்து தயாரித்து விவாதித்து ஒரு கட்டுரை எழுதுவார்கள். அதன் பின் இருபது நாள் உழைப்பாவது இருக்கும். இன்றைக்கும் பல நிறப்பிரிகை கட்டுரைகள் படிக்க முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது. அவர் “ஏன் அந்த பத்திரிகை நின்று போனது?” எனக் கேட்டார். அது போன்ற ஒரு பத்திரிகை சில தீவிரமானவர்கள் ஒரே சமயத்தில் கூடி வேலை செய்யும் சந்தர்ப்பம் அமையும் போது நிகழும் அற்புதம். அதற்கு குறைவான ஆயுள் தான் இருக்க முடியும் என்றேன். உயர்வான தரத்தில் நீண்ட காலம் ஒரு பத்திரிகை கொண்டு வர இயலாது.
 நிறப்பிரிகை வட்டத்தில் மிகத் திறமையானவர் ரவிக்குமார் தான் என்றேன். அவர் “கண்காணிப்பின் அரசியலை” குறிப்பிட்டார். ரவிக்குமார் மட்டும் அரசியலுக்கு சென்றிராவிட்டால் இன்று எழுத்தில் முன்னணியில் உள்ள பலரை தாண்டி சென்றிருப்பார் என பேசிக் கொண்டோம். அப்போது அவர் சொன்னார் “மார்க்ஸே என்னிடம் ஒருமுறை இப்படி ரவிக்குமார் பற்றி குறிப்பிட்டார்: ‘ரவிக்குமார் என்னை விட தரமாய் எழுதக் கூடியவர்’”. எனக்கு அதைக் கேட்டு வியப்பு தீரவில்லை. மார்க்ஸ் தன்னைக் கடந்து சிந்திக்கக் கூடியவர், ஈகோ பார்க்காதவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு தன்னையே விட்டுத் தந்து இன்னொருவரை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேரால் இப்படி self-effacingஆக இருக்க முடியும் சொல்லுங்கள். அப்படி பேசினாலே அது நம் பலவீனம் என கருதுவார்கள்.
அவர் வளர்மதியைப் பற்றி குறிப்பிட்டார். எனக்கு அவரது “இசையின் அரசியல்” நூல் மிகவும் பிடித்தமானது என்றேன். பேராசிரியர் அரசுவின் பதிப்பான “கங்கு வெளியீட்டின்” நூல்கள் அத்தனையும் அபாரமானவை. 70 பக்கங்களுக்குள் பல வேறு கருத்துநிலைகள், கோட்பாடுகள் பற்றின எளிய அறிமுக நூல்கள், ஆனால் மிக தரமாகவும் இருக்கும். அவர் சொன்னார் “நான் வளர்மதியிடம் உங்களைப் பற்றி குறிப்பிட்டேன். கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருநாள் சந்திக்க வேண்டும் எனச் சொன்னார்”. வளர்மதி ஒரு இணையதளம் நடத்தி வந்தார். அதில் என் ரசிகன் நாவல் பற்றி மதிப்புரை ஒன்று பிரசுரித்தார். அப்போது என்னை போனில் அழைத்து பேசினார். நான் சந்திக்க விரும்பும் ஒருவர் என்னையே போனில் நம்மை அழைத்து பேசினது எனக்கு மிகவும் நிறைவாய் இருந்தது. நான் அதைப் பற்றி இவரிடம் கூறவில்லை. ஏனோ கூச்சமாய் இருந்தது. மௌனமாய் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
”ஏன் கட்டுரைத் தொகுப்பு ஒன்று கூட வெளிக்கொணர வில்லை; நாவல்களாய் எழுதித் தள்ளுகிறீர்களே?” எனக் கேட்டார். என் தவறு தான். நான் அதற்கான போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை. போன வருட இறுதியில் அம்ருதாவில் என் கட்டுரைத் தொகுப்பு வெளியிடலாம் எனக் கேட்டார்கள். தொகுக்க ஆரம்பித்து அதை வெகுவாக தாமதித்து விட்டேன். இன்னொரு பக்கம் பெரும்பாலான பதிப்பாளர்களும் கதைத் தொகுப்புகள், நாவல்களை வெளியிடவே விரும்புகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. வாசகர்கள் கதைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கட்டுரைகளுக்கு கொடுப்பதில்லை.
மிக மென்மையாய் கைகுலுக்கி பிரிந்தார். அவர் ஒரு வேலை நாளின் களைப்புடன் வீட்டுக்கும், நான் மீதி வேலை நாளின் களைப்பை அனுபவிக்க என் அலுவலகத்துக்கும் சென்றோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...