Skip to main content

வாசிப்பு ஏன் ஆறுதல் தருகிறது?

ஒவ்வொருவருக்கும் ஓய்வு கொள்வதற்கு, மனதை ஆறுதல்படுத்துவதற்கு, உடலின் கடிகாரத்தை மீண்டும் முடுக்கி விடுவதற்கு தமக்கான வழிமுறைகள் இருக்கும். சிலருக்கு குடிப்பது, நண்பர்களுடன், பெண்களுடன், ஆண்களுடன் பேசுவது, கலவி கொள்வது, படம் பார்ப்பது, தூங்குவது, ஊர் சுற்றுவது, வீட்டு வேலைகள் செய்வது, சமைப்பது, வீட்டுப் பொருட்களை துடைத்து ஒழுங்கு பண்ணுவது. நான் அடிப்படையில் சோம்பேறி – எனக்கு வாசிப்பு தான் ஒரே மார்க்கம். வேலை நாள் முடிந்ததும் என் மனம் அம்பெய்த நாண் போல் அதிர்ந்தபடியே இருக்கும். அப்போதெல்லாம் நான் ஏங்குவது வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டு சில பக்கங்களாவது படிக்க வேண்டும் என்பது.
வாசிப்பு இன்பம், அறிவுப்பெருக்கம், மொழிகூர்மை போன்ற பொதுவான காரணங்கள் தான் என்னையும் வாசிப்பை நோக்கி ஈர்ப்பது. ஆனால் ஓய்வு நேரத்தின் சிறந்த பொழுதுபோக்காக, ஆறுதல் அனுபவமாய் வாசிப்பு இருப்பது ஏன் என யோசிக்கிறேன்.

டி.வி பார்ப்பது, பேஸ்புக்கை புரட்டுவது, அரட்டை அடிப்பதை விட மிக அதிகமான கவனமும் மன உழைப்பும், உணர்வுகளின் குவிப்பும் வாசிப்புக்கு தேவைப்படுகிறது. அதாவது வாசிப்பு ஒரு ஓய்வு செயல் அல்ல, அது மூளையையும் உணர்வுகளையும் அதிகமாய் தூண்டும் ஒரு வேலை. ஆனால் வாசிப்பின் ஒரு முக்கிய தன்மை வேறு பொழுதுபோக்குகளுக்கு இல்லை. அது தனிமை.

 தனிமை என்றால் பௌதிகமான தனிமை அல்ல. அகத்தனிமை. வேறு பொழுதுபோக்குகளின் போது ஒன்று மனிதர்களோ, குரல்களோ, பிம்பங்களோ நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். வாசிப்பு மட்டுமே யாருமில்லாத பிரதேசத்துக்கு நம்மை அழைத்துப் போகிறது. எல்லாரையும் விட்டு எல்லாவற்றையும் விட்டு கொஞ்ச நேரம் தனித்திருக்க மனம் ஏங்குகிறது. புத்தகம் மட்டுமே எனக்கு அதற்கு உதவுகிறது.

என்னுடைய பேராசிரியர் ஒருவர் ரொம்ப களைப்பானால் தன் அலமாரியில் உள்ள புத்தகங்களை அடுக்கத் துவங்கி விடுவார். நாங்கள் மாணவர்கள் அவர் அறையில் கூட்டமாய் இருந்து சத்தமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் நைசாய் கழன்று ஒரு புத்தகத்தை தேடும் சாக்கில் அலமாரிக்குள் சரணடைந்து விடுவார். நடுநடுவே எதையாவது சொல்லி எங்கள் அரட்டையில் தானும் பங்குபெறுவதாய் தோற்றம் கொடுப்பார். ஒரு அடுக்கு நூல்களை கலைத்து புது நூல்களை கண்டறிந்து புரட்டிப் பார்த்து அடுக்கினதும் அவர் முகத்தில் நூறு வால்ட் பல்ப் எரியும். எங்களுடன் மீண்டும் உற்சாகமாய் அரட்டையில் கலந்து கொள்வார்.

நமக்கு எந்தளவு மனிதர்களோடு இருப்பது அவசியமோ அந்தளவு மனிதர்கள் இல்லாது இருப்பது தேவை. ”இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரனில்” ஜாருதஷ்டிரன் பல ஆண்டுகளாய் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி மலை உச்சியில் தனிமையில் வாழ்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் தனிமை தரும் ஒளி அவன் மனமெங்கும் நிரம்புகிறது. தன்னை தேனால் நிரம்பிய ஒரு தேனியாக கற்பனை செய்கிறான். ”என் கழுத்து வரை ஞானம் நிரம்பி நிற்கிறது. நான் அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.” என்கிறான். ”மாலையில் கடலில் மூழ்கிய சூரியன் காலையில் அதில் இருந்து எழுவது போல் நான் தனிமையில் இருந்து உதித்து மக்கள் மத்தியில் எழப் போகிறேன்” எனக் கோருகிறான். இல்லாவிட்டால் அவன் திக்குமுக்காடி உருக்குலைந்து போவான். அதனால் அவன் மலையில் இருந்து இறங்கி ஊருக்கு மக்கள் மத்தியில் வருகிறான். அந்த ஞானம், அந்த தேன், மொழி தான்.

நமக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேச்சு ஒரு கட்டத்தில் அலுப்படைய வைக்கிறது. களைத்து ஒதுங்க நினைக்கிறோம். அப்போது தனிமை அவசியமாகிறது. ஆனால் தனிமை என்பதும் நாம் நம்முடன் நிகழ்த்தும் ஒரு பேச்சு தானே. அந்த பேச்சின் சொற்கள் நமக்குள் மலையாக குவியும் போது நாம் தனிமையில் இருந்து வெளியே வருகிறோம். யாரிடமாவது உரையாட தவிக்கிறோம். மிகவும் உக்கிரமாய் தீவிரமாய் தீக்கங்குகளைப் போல் சொற்களை சமூகத்துக்கு கொண்டு வருகிறோம். இத்தகையோர் – அதாவது தொடர்ந்து தனிமையில் இருந்து எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் – வெளியே வந்ததும் பித்துப் பிடித்தது போல் பேசுவார்கள். ஒரு உக்கிரமான உறவுக்காக ஏங்குவார்கள். மலைப்பாம்பு போல் நண்பர்களை தம் நாவால் சுருட்டி கட்டிக் கொள்வார்கள். கொஞ்ச நாளில் மீண்டும் இந்த தீப்பிழம்பான உறவுகளில் இருந்து தப்பித்து தனிமைக்கு செல்ல ஏங்குவார்கள்.
வாசிப்பது ஒரு விதத்தில் மொழியில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி தான். வெளியே பேசும் மொழியில் இருந்து தப்பித்து உள்மொழிக்கு செல்வது. ஆனால் மனிதர்கள் முழுக்க மொழியில் இருந்து தப்பிக்கவே இயலாது. சாருவின் நாவல் ஒன்றில் கதைசொல்லி ஒரு களேபரமான கொண்டாட்டத்தில் இருப்பான். அவனைச் சுற்றி நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். கதைசொல்லி சட்டென அவர்களுடன் தான் இல்லை என உணர்வான். அந்த கூட்டத்தின் நடுவே தான் மிகவும் தனியாய் இருப்பதாய் சொல்வான். அவனுக்கு அந்த தனிமை தான் வசதிப்படும். அவனால் கூட்டத்திற்கு வெளியிலும் செல்ல முடியாது. உள்ளுக்குள்ளும் சிறைப்பட முடியாது. மனிதனின் ஆகப்பெரும் அவஸ்தையே இது தான்.
அடிக்கடி பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து துறவறம் போகிற நண்பர்களை எனக்குத் தெரியும். பாதி வழியில் எப்படியும் திரும்ப வந்து விடுவார்கள். ஆனாலும் ஏன் அப்படிப் போகிறார்கள்? இரைச்சல் தாங்க முடியாமல் தான். உலகில் மிக அதிகமான ஜனநெருக்கடி உள்ள இடம் பேஸ்புக் தான். பேஸ்புக்கை சீரியசாய் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கும் போது சட்டென வெறுப்பு ஏற்படுகிறது. இதில் வரும் கொண்டாட்டங்கள், அன்புப் பெருக்கு, கோபம் எல்லாம் பொய் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை தவிர்க்கவோ தள்ளி நிற்கவோ முடியாது. நிஜ உலகில் அதற்கு ஒரு இடம் உள்ளது. பேஸ்புக்கில் நீங்கள் அமைதியாய் இருக்க ஒரு ஊசிமுனை இடம் கூட கிடையாது. இங்கு இருந்தால் நீங்கள் எதையாவது செய்து கொண்டு, பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சொற்கள் நம் கழுத்து வரை நிரம்பி நின்று மூச்சு முட்ட செய்கின்றன. டி-ஆக்டிவேட் செய்கிறோம். பேஸ்புக்கை தம் தேவைக்காய் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே நிரந்தரமாய் அதில் இருக்கிறார்கள்.


வாசிப்பின் மிக முக்கியமான பயன் அது நமக்கு தனிமையின் அத்தியாவசியத்தை கற்பிக்கிறது என்பதே. பேஸ்புக் நம்மை “தனியாய் போய் விடாதே” என அச்சுறுத்திக் கொண்டே இருக்க, புத்தகங்கள் தனித்திரு என காதில் சொல்கின்றன. இரண்டுக்கும் நடுவே மகிழ்ச்சி இருக்கிறது. 

Comments

கூட்டு வாசிப்பு அதிகம் நிகழ்வதில்லை, ஆனால் அது இன்னமும் மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன். புத்தகக் கண்காட்சியில் இதை படிப் படியாக அறிமுகம் செய்ய வேண்டும். அதுபோலவே ஃபேச்புக்கில் கூட்டத்தில் இருந்து விலகி தனி உரையாடல்களில் திளைப்போரின் இன்பம் வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...