முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்விப்பண்ணைகளின் இந்தியா

இன்றைய ஆங்கில ஹிந்து நாளேட்டில் பள்ளித் தேர்வுகளின் நெருக்கடி எப்படி பிள்ளைகளின் திறமை, படைப்பூக்கத்தை உலர்ந்து போக வைக்கிறது, தற்கொலைக்கு தூண்டுகிறது என்பது பற்றி ஒரு நல்ல நடுப்பக்க கட்டுரை வந்துள்ளது. எழுதியவர் ரோஹித் தன்கர். அஸிம் பிரேம்ஜி பல்கலையின் பேராசிரியர்.

ஒரு மாணவரின் திறமையை, உழைப்பை, வருங்கால சாத்தியங்களை எப்படி தேர்வுத்தாளின் வறட்டுக் கேள்விகளும் எந்திரத்தனமான மதிப்பீட்டு முறையும் மதிப்பிட முடியும்? ஏன் பிள்ளைகளை கறிக்கு வளர்க்கிற லகான் கோழிக்குஞ்சுகளைப் போல் நடத்துகிறோம்? இதற்கு ரோஹித் தன்கர் காணும் காரணம் நமது சாதிய, படிநிலை அமைப்பு. ஏற்கனவே இறுகிப் போயிருந்த சாதி அமைப்பு பிற்பாடு ஆங்கிலேய காலனிய காலத்தில் தேர்வு அமைப்பாய் நீட்சி பெற்றிருக்கிறது என்கிறார்.
இனி எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்:
 மத்திய சாதியினர் தம் படிநிலை இடங்களில் இருந்து முன்னும் பின்னும் நகரவும், மேல் சாதியினர் தம் இடத்தை தக்க வைக்கவும் தேர்வு முறை பயன்படுகிறது. இரு சாராருக்கும் இடையில் போட்டி துவங்குகிறது. மத்திய சாதியினருக்கு இடையிலும் கூட ஓட்டப்பந்தயம் தான். தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கீடு உண்மையில் நம் சாதிய கட்டமைப்பை குலைக்கவில்லை.
இந்தியாவில் வியாபாரம் மூலம் சமூகத்தில் உயர்ந்த மத்திய சாதியினருக்கு கல்வியை விலைக்கு வாங்கவும் கல்வித் தந்தைகள் ஆகவும் பண / அரசியல் அதிகாரம் பயன்படுகிறது. (பண அதிகாரத்துடன் அவர்களுக்கு கல்வி தரும் அந்தஸ்தும் முக்கியமாய் உள்ளது.) இப்படி கல்வி அதிகாரம் இருப்பவர்களுக்கு மட்டும் எட்டும் கனியாகிறது.
 கல்வி இருந்தால் மட்டும் கூட மத்திய வர்க்கத்தில் இருக்கும் ஒருவர் இதே அதிகாரத்தை அடைந்து இழந்த இடத்தை கைப்பற்றலாம் எனும் சாத்தியமும் உள்ளது. இப்படி ஒரு சுழற்சி தோன்றுகிறது. பணம் – கல்வி = கல்வி - பணம்
 அதாவது ஒரு மத்திய சாதி செல்வந்த குடும்பத்தினர், அரசியலில் பெரும் செல்வாக்கு படைத்தவர்கள், தம் பிள்ளைகளை நேரடியாய் வியாபாரத்தில் அறிமுகப்படுத்த மாட்டார்கள். அவர்களை வெளிநாட்டில் எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு கற்க அனுப்புவார்கள். அந்த பட்டம் வெறும் அலங்காரம் தான். இது நம் சமூக அமைப்பில் இன்றும் கல்வி பணத்தை கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளதை காட்டுகிறது. அதாவது பணம் ஈட்டுவது – கல்வி மதிப்பை பெறுவது – சாதிய அதிகாரத்தை உயர்த்துவது அல்லது தக்க வைப்பது --- இந்த சங்கிலித் தொடரில் இருந்து மக்கள் தப்பிப்பது எளிதே அல்ல.
எனக்கு இந்த கட்டுரை ராஜ் கௌதமனின் ஒரு கட்டுரையை நினைவுபடுத்தியது. அவர் எப்படி பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவசாய குடிகளாய் இருந்த பிராமணர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கல்வி மற்றும் நகர மயமாக்கத்துக்கு உள்ள அதிகார சாத்தியங்களை புரிந்து கொண்டு நகர்ந்தார்கள் என்றும், பண்ணை வாழ்வை கைவிடாது, நிலப்பிரபுக்களாய் வாழ நினைத்த வெள்ளாளர்கள் எப்படி வீழ்ந்தனர் என்றும் விவரிக்கிறார்.
கல்வி அமைப்பை கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் எப்படி தம் பிள்ளைகளுக்கு தேர்வு நேரம் வந்து விட்டால் மும்முரமாய் அதற்கு உதவுவதற்கு போய் விடுகிறார்கள் என்பதையும் ரோஹித் தன்கர் நக்கலடிக்கிறார். உண்மையில் நமக்கு வேறு வழியில்லை. நமக்கு தேர்வு அமைப்பில் நம்பிக்கை இல்லை என்பதற்காய் நம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காமலோ தேர்வில் தோல்வியடைய அனுமதிக்கவோ முடியாது. தேர்வை விமர்சிக்கும் நாமும் அதை ஏற்று இயங்கித் தானே பிழைக்க முடிகிறது! இதுவும் சாதி அமைப்பின் சிக்கல் தான். சாதியை எதிர்க்கிற நீங்களோ நானோ அதற்கு வெளியில் நின்று வாழ முடியுமா? முடியாது.
தேர்வு முறைக்கு நம்மவர்கள் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்திற்கு எனக்கு மற்றொரு காரணம் தோன்றுகிறது. நமது மக்கள் தொகை. அமெரிக்காவில் யாராவது பில் கேட்ஸ் அல்லது ஸ்டீவ் ஜாப்ஸின் கல்வித் தகுதி பற்றி கவலைப்பட்டார்களா? ஜாப்ஸ் தன் படிப்பை கூட முடிக்கவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். காரணம் அங்கு மக்கள் தொகை குறைவு, மிதமிஞ்சிய resources உள்ளன. பன்னிரெண்டு வயதில் இருந்தே நம் பிள்ளைகள் டியூசன் போய் மனப்பாடம் செய்யும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் தன் குடியிருப்பில் உள்ள பொது கணினியில் புரோக்ராம் எழுதவும் அதை புரிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருந்தார். சில வருடங்களிலேயே அவரும் நண்பர்களும் புது கணினியையே உருவாக்குகிறார்கள். ஆப்பிள் தோன்றுகிறது. நம் மாணவர்கள் இதற்கான வாய்ப்புகள் மட்டுமல்ல அவகாசமே இருக்காது. ஒரு மக்கள் தொகை குறைவான பணக்கார நாட்டில் நீங்கள் குறைவாய் படித்தால் கூட பிழைக்கலாம். நம் நாட்டில் பிச்சை எடுக்க வேண்டியது தான்.
 இங்கு நூறு பேர் வேலைக்கு ஆயிரம் பேர் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களை வடிகட்ட நமக்குள்ள ஒரே எளிய முறை எழுத்துத் தேர்வு. இந்த அமளிதுமளியில் நமக்கு ஒரு மாணவன் எதிர்கால ஸ்டீவ் ஜாப்ஸா என்பது பற்றி அக்கறை இருக்க முடியாது.
போட்டியிடும் மக்களின் எண்ணிக்கை உயரும் போது அது படைப்பூக்கத்தை, பரீட்சார்த்த முயற்சிகளை பின்னுக்கு தள்ளி, உற்பத்தியின் அளவையும், போல செய்வதையும் (imitation) மட்டுமே ஊக்குவிக்கும்.

டெஸ்மண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் ஆய்வாளர் The Human Zoo எனும் நூலில் இதைப் பற்றி பேசுகிறார். விலங்குகளால் மனிதர்களைப் போல் இவ்வளவு கூட்டமாய், மந்தையாய் வாழ முடியாது. அப்படி வாழும் போது மனம் இயல்பாகவே நெருக்கடிக்கு உள்ளாகிறது. அச்சமும் குழப்பமும் சூழ்கிறது. ஐம்பது பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேரை அடைக்கிறார்கள். அங்கு நீங்களும் இருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் உடல்கள். உங்கள் முதல் எண்ணமே எப்படி நம்மை பாதுகாப்பது என்பதாய் அப்போது இருக்கும். நம் கல்வி அமைப்பும் இப்படியான ஒரு மனித மிருக காட்சியகம் தானே. அதிலிருந்து தப்பிக்க ஒரே மார்க்கம் தேர்வு எனும் போது அனைவரும் முந்தியடிப்பதில் வியப்பில்லை தானே?

கருத்துகள்

Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லோருமே கல்வி என்று வரும்போது கருத்தை தெரிவிப்பதுண்டு ஆனால் அது பொதுவில் மட்டுமே. தனி வாழ்வில் கருத்து தெரிவித்தவர் சாமானியனாக மாறிப்போகிறார் கருத்தும் தன்னை பிழையெனக் கருதி கரைசேராமல் ஆழத்தில் ஒளிந்து கொள்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...