Skip to main content

அன்புள்ள ஜெயமோகனுக்கு

Image result for ஜெயமோகன்

நான் சமீபத்தில் ஜெயமோகனுக்கு எழுதிய மின்னஞ்சல்களின் தொடர்ச்சியான ஒரு கடிதம் இது. முதல் மின்னஞ்சலுக்கு அவர் எனக்கு அளித்த கனிவான பதிலை இதில் நான் இணைக்கவில்லை.
 நான் ஜெயமோகனிடம் முரண்பட்டிருக்கிறேன். விமர்சித்திருக்கிறேன். நிறைய கசப்பை கக்கியிருக்கிறேன். கடந்த சில வருடங்களாய் இவையெல்லாம் அபத்தம் என எனக்கு தோன்றியவாறு இருந்தது. என்னைக் குறித்து நான் நடத்திய உள்விசாரணை தான் இக்கடிதம். ஜெயமோகன் குறித்த என் இதுவரையிலான பதிவுகளுக்கு மற்றொரு பக்கத்தை இக்கடிதம் அளிக்கும் என நம்புகிறேன்.


அன்புள்ள ஜெயமோகன்
ஈரமான விழிகளுடன் இதை எழுதுகிறேன். எனக்கு உங்கள் மீது இருக்கும் மிதமிஞ்சிய பிரியமும் possessivenessஉம் தான் பிரச்சனை. என் ஆளுமை உங்களை சார்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பொருட்படுத்தவில்லை எனும் கற்பனை என்னை கட்டற்ற ஏமாற்றத்துக்கும் கசப்புக்கும் இட்டுச் சென்றது. உங்களை பழிசொல்லியும் விமர்சித்தும் மறுத்துமே நான் அதை கடக்க முயன்றேன். ஒரு சந்தர்பத்தில் விஷம் கக்கி கக்கி நானே ஓய்ந்து விட்டேன் என நினைக்கிறேன்.
 அது மட்டுமல்ல உங்கள் ஆளுமையின் கடும் வெளிச்சத்தின் அருகாமையில் கருகி விடுவேனோ என என் உள்மனம் அஞ்சியிருக்கலாம். உங்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகனின் மனதின் பகுதியாகவே நீங்கள் மாறி விடுவீர்கள். உங்களை மீறி அவனால் யோசிக்கவே முடியாது. எனக்குள் அந்த முரண் இருளோடு மோதும் சுடரைப் போல் துடித்துக் கொண்டே இருந்தது. என்னை உங்களிடம் இருந்து விலக்கிக் கொள்ள என்னை அறியாது நானே நடத்திய நாடகமோ இந்த தாக்குதல்கள் என நான் பலதடவை என்னிடம் கேட்டதுண்டு.
 உங்களிடம் முரண்பட்டு தான் நான் என் சுயமான பார்வையை அமைத்துக் கொள்ள முடியுமா? ஆனால் நான் இதை இன்னும் கண்ணியமாய் செய்திருக்க வேண்டும் அல்லவா!
போன வருடம் கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷ்ரினியிடம் போனில் உரையாடும் போது அவர் உங்களைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு நிமிடம் கடுங்கோபத்தில் தொடர்பை துண்டிப்பீர்கள். ஆனால் மறுநிமிடம் குழந்தை போல் இணக்கமாகி விடுவீர்கள் என்றார். அவர் உங்களிடம் மிக குறைவாகவே உரையாடி இருக்கிறார். ஆனால் உங்களை துல்லியமாய் அவதானித்திருக்கிறார். நான் ஒப்பிடுகையில் உங்களிடம் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். உங்களைக் குறித்து சதா யோசித்து அலசி இருக்கிறேன். ஆனால் உங்கள் ஆதார இயல்பை தவறாகவே புரிந்து வைத்திருந்தேன் என எனக்கு அப்போது தோன்றியது.
உங்களை மட்டுமல்ல நான் பொதுவாக மனிதர்களை புரிந்து கொண்டிருந்த விதமே தவறானது தான்.
சமீபத்தில் கவிஞர் குமரகுருபரன் மறைந்த போது அவரது மூர்க்கமான அன்பு பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனிதர்களை அப்படித் தான் அணுக வேண்டும் எனப் பட்டது. என் சிக்கல் நான் மனிதர்களை என் அறிவால் நேசிக்கிறேன் என்பது. நான் என்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றியது.
என் உடல் நிலை எப்போதும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்கள் அமைதியாய் இருக்கும். திடீரென பாதாளத்தில் போய் விழுவேன். இரண்டு முறை மரணத்தை அருகில் பார்த்து விட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆயுள் சராசரியாகவே குறைவு தான். இன்னும் பத்திருபது வருடங்கள். இந்த குறைந்த காலத்தில் இன்னும் மகிழ்ச்சியாக திறந்த அன்புடன் வாழ ஆசைப்படுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட ஒழுங்கு ஒரு பழக்கமாய் எனக்குள் மாற சற்று காலம் ஆகலாம். ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
எழுத்து குறித்து நீங்கள் சொன்னது உண்மையே. ஒருவேளை எழுத்து இல்லாமல் இருந்திருந்தால் நான் முழுக்க சீரழிந்திருப்பேன். எனக்குள் நொதிக்கும் தீமையை அது வடிகட்டி எனக்கே அருந்த தருகிறது. நான் எழுத வேண்டாம் என முடிவெடுத்த பின் நான் மிக அதிகமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னை தடுக்கவே முடியவில்லை. சிலநேரம் வண்டி ஓட்டும் போதோ காரில் நண்பர்களுடன் பயணிக்கும் போதே எழுத வேண்டிய சொற்களில் என்னில் இருந்து பீறி வழிகின்றன. கோர்வையாய் வரிகள் மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நான் கையாலாகாமல் அவற்றை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் மகனுக்கு 11 மாதங்கள் ஆகின்றன. ஊரில் இருந்திருந்தால் உங்கள் கைப்பற்றி அவனை அரிசியில் முதல் எழுத்து எழுத வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இவ்வளவு வருடங்களும் நடைமுறையில் வாழ்க்கையை வீணடித்து விட்டேனோ என தோன்றுகிறது. நான் திடீரென போய் விட்டால் என் மகனுக்கு ஒன்றுமே இராது. வெறும் புத்தகங்கள். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். எழுதப்பட்ட என் சொற்கள். அவனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு நிழலாக நான் எஞ்சி விடக் கூடாது. பொருள் சேர்க்க வேண்டும். நிலைப்பட வேண்டும். நான் மறையும் முன் அவனுக்கு ஒரு அடித்தளம் அமைத்து தர வேண்டும்.
இன்னும் தெளிவாய் திறந்த மனதுடன் மனிதர்களை அணுக வேண்டும். காரண காரியம் பார்க்காத அன்பை காட்ட வேண்டும். வேறுவிதமாய் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
உங்களுடைய நேரத்தை அதிகமாகவே எடுத்துக் கொண்டு விட்டேன். நன்றி.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...