முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

Image result for ஜெயமோகன்

நான் சமீபத்தில் ஜெயமோகனுக்கு எழுதிய மின்னஞ்சல்களின் தொடர்ச்சியான ஒரு கடிதம் இது. முதல் மின்னஞ்சலுக்கு அவர் எனக்கு அளித்த கனிவான பதிலை இதில் நான் இணைக்கவில்லை.
 நான் ஜெயமோகனிடம் முரண்பட்டிருக்கிறேன். விமர்சித்திருக்கிறேன். நிறைய கசப்பை கக்கியிருக்கிறேன். கடந்த சில வருடங்களாய் இவையெல்லாம் அபத்தம் என எனக்கு தோன்றியவாறு இருந்தது. என்னைக் குறித்து நான் நடத்திய உள்விசாரணை தான் இக்கடிதம். ஜெயமோகன் குறித்த என் இதுவரையிலான பதிவுகளுக்கு மற்றொரு பக்கத்தை இக்கடிதம் அளிக்கும் என நம்புகிறேன்.


அன்புள்ள ஜெயமோகன்
ஈரமான விழிகளுடன் இதை எழுதுகிறேன். எனக்கு உங்கள் மீது இருக்கும் மிதமிஞ்சிய பிரியமும் possessivenessஉம் தான் பிரச்சனை. என் ஆளுமை உங்களை சார்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை பொருட்படுத்தவில்லை எனும் கற்பனை என்னை கட்டற்ற ஏமாற்றத்துக்கும் கசப்புக்கும் இட்டுச் சென்றது. உங்களை பழிசொல்லியும் விமர்சித்தும் மறுத்துமே நான் அதை கடக்க முயன்றேன். ஒரு சந்தர்பத்தில் விஷம் கக்கி கக்கி நானே ஓய்ந்து விட்டேன் என நினைக்கிறேன்.
 அது மட்டுமல்ல உங்கள் ஆளுமையின் கடும் வெளிச்சத்தின் அருகாமையில் கருகி விடுவேனோ என என் உள்மனம் அஞ்சியிருக்கலாம். உங்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகனின் மனதின் பகுதியாகவே நீங்கள் மாறி விடுவீர்கள். உங்களை மீறி அவனால் யோசிக்கவே முடியாது. எனக்குள் அந்த முரண் இருளோடு மோதும் சுடரைப் போல் துடித்துக் கொண்டே இருந்தது. என்னை உங்களிடம் இருந்து விலக்கிக் கொள்ள என்னை அறியாது நானே நடத்திய நாடகமோ இந்த தாக்குதல்கள் என நான் பலதடவை என்னிடம் கேட்டதுண்டு.
 உங்களிடம் முரண்பட்டு தான் நான் என் சுயமான பார்வையை அமைத்துக் கொள்ள முடியுமா? ஆனால் நான் இதை இன்னும் கண்ணியமாய் செய்திருக்க வேண்டும் அல்லவா!
போன வருடம் கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷ்ரினியிடம் போனில் உரையாடும் போது அவர் உங்களைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு நிமிடம் கடுங்கோபத்தில் தொடர்பை துண்டிப்பீர்கள். ஆனால் மறுநிமிடம் குழந்தை போல் இணக்கமாகி விடுவீர்கள் என்றார். அவர் உங்களிடம் மிக குறைவாகவே உரையாடி இருக்கிறார். ஆனால் உங்களை துல்லியமாய் அவதானித்திருக்கிறார். நான் ஒப்பிடுகையில் உங்களிடம் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். உங்களைக் குறித்து சதா யோசித்து அலசி இருக்கிறேன். ஆனால் உங்கள் ஆதார இயல்பை தவறாகவே புரிந்து வைத்திருந்தேன் என எனக்கு அப்போது தோன்றியது.
உங்களை மட்டுமல்ல நான் பொதுவாக மனிதர்களை புரிந்து கொண்டிருந்த விதமே தவறானது தான்.
சமீபத்தில் கவிஞர் குமரகுருபரன் மறைந்த போது அவரது மூர்க்கமான அன்பு பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனிதர்களை அப்படித் தான் அணுக வேண்டும் எனப் பட்டது. என் சிக்கல் நான் மனிதர்களை என் அறிவால் நேசிக்கிறேன் என்பது. நான் என்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றியது.
என் உடல் நிலை எப்போதும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்கள் அமைதியாய் இருக்கும். திடீரென பாதாளத்தில் போய் விழுவேன். இரண்டு முறை மரணத்தை அருகில் பார்த்து விட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆயுள் சராசரியாகவே குறைவு தான். இன்னும் பத்திருபது வருடங்கள். இந்த குறைந்த காலத்தில் இன்னும் மகிழ்ச்சியாக திறந்த அன்புடன் வாழ ஆசைப்படுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட ஒழுங்கு ஒரு பழக்கமாய் எனக்குள் மாற சற்று காலம் ஆகலாம். ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
எழுத்து குறித்து நீங்கள் சொன்னது உண்மையே. ஒருவேளை எழுத்து இல்லாமல் இருந்திருந்தால் நான் முழுக்க சீரழிந்திருப்பேன். எனக்குள் நொதிக்கும் தீமையை அது வடிகட்டி எனக்கே அருந்த தருகிறது. நான் எழுத வேண்டாம் என முடிவெடுத்த பின் நான் மிக அதிகமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னை தடுக்கவே முடியவில்லை. சிலநேரம் வண்டி ஓட்டும் போதோ காரில் நண்பர்களுடன் பயணிக்கும் போதே எழுத வேண்டிய சொற்களில் என்னில் இருந்து பீறி வழிகின்றன. கோர்வையாய் வரிகள் மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நான் கையாலாகாமல் அவற்றை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் மகனுக்கு 11 மாதங்கள் ஆகின்றன. ஊரில் இருந்திருந்தால் உங்கள் கைப்பற்றி அவனை அரிசியில் முதல் எழுத்து எழுத வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இவ்வளவு வருடங்களும் நடைமுறையில் வாழ்க்கையை வீணடித்து விட்டேனோ என தோன்றுகிறது. நான் திடீரென போய் விட்டால் என் மகனுக்கு ஒன்றுமே இராது. வெறும் புத்தகங்கள். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். எழுதப்பட்ட என் சொற்கள். அவனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு நிழலாக நான் எஞ்சி விடக் கூடாது. பொருள் சேர்க்க வேண்டும். நிலைப்பட வேண்டும். நான் மறையும் முன் அவனுக்கு ஒரு அடித்தளம் அமைத்து தர வேண்டும்.
இன்னும் தெளிவாய் திறந்த மனதுடன் மனிதர்களை அணுக வேண்டும். காரண காரியம் பார்க்காத அன்பை காட்ட வேண்டும். வேறுவிதமாய் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
உங்களுடைய நேரத்தை அதிகமாகவே எடுத்துக் கொண்டு விட்டேன். நன்றி.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...