ஜூலை மாத அம்ருதா மிக நன்றாக வந்திருக்கிறது.
முக்கிய கவர்ச்சி கிறிஸ்டபர் நோலனின் (மொழியாக்கப்பட்ட) பேட்டி தான். ஒரு இறுக்கமான,
நடைமுறை கரார்தன்மையுடன் பேசுகிறார். சரளமான மொழியாக்கம். நான் வாழ்க்கையில் பெரும்
வெற்றி பெற்றவர்களிடம் காணும் ஒரு விசித்திரமான குணம் அதிருப்தி. நோலன் தன் திரைவாழ்க்கையை
திரும்ப பார்க்கும் போது பல்வேறு கட்டங்களில் தன் விருப்பத்திற்குரிய திரைப்படங்களை
உருவாக்க பட்ட பாடுகளை குறிப்பிடுகிறார். ஒரு கசப்பான அனுபவத்தை கூறி விட்டு, இறுதியில்
அது ஒரு முக்கியமான, உற்சாகமான நிகழ்வாக இருந்தது என்றும் முத்தாய்ப்பாய் சொல்கிறார்.
அவருக்கு தன்னால் சுதந்திரமாய் இயங்க முடியவில்லை எனும் அதிருப்தி உள்ளது. இவரை விடுங்கள்,
பணம் படைத்த எழுத்தாளர்களிடம் தம்மால் படைப்பூக்கத்துடன் செயல்பட முடியவில்லை எனும்
அதிருப்தியை காண்கிறேன். படைப்பூக்கத்துடன் செயல்படுகிறவர்களிடம் பணம் இல்லையே எனும்
ஆற்றாமையை காண்கிறேன். ஏதோ ஒரு அதிருப்தி நல்லது தான் எனப் படுகிறது. அது உங்களை உயிர்ப்புடன்
வைத்திருக்கும்.
சாம்ராஜின் துள்ளல் நடையில் ஒரு
கட்டுரை – தமிழ் சினிமாவில் இலக்கிய நாவல்கள் படமாக்கப்பட்ட வரலாறும், அதன் போதாமைகளும்
பற்றி. மிகவும் ரசித்து படித்தேன். சாய்ராட் படம் பற்றின சுரேஷ் கண்ணனின் கூர்மையான
அவதானிப்புகளும், துல்லியமான நடையும் கொண்ட கட்டுரையும் அற்புதமானது. இதழை வேகமாய்
ஒரு புரட்டு புரட்டி படித்ததில் கவர்ந்தவை இவை. இன்னும் மீதம் சில கட்டுரைகளும் கதைகளும்
உள்ளன.
இப்போது அம்ருதா படிக்க ரெண்டாயிரத்தின்
துவக்கத்தில் வந்த “உயிர்மை” இதழ் போல உள்ளது. முழுக்க முழுக்க பத்திகள். (மூத்த இலக்கிய
நட்சத்திரங்கள் இல்லை என்பதே வேறுபாடு.)
தற்போதைய குமுதமும் நிறைய பத்திகளுடன்
தான் வருகிறது. வண்ணப்படங்கள், நடிகைகளின் குறும்பேட்டிகள், வெட்டி ஒட்டினது போன்ற
செய்தி அறிக்கைகளை விட பத்திகள் மேல் என்பது என் நம்பிக்கை. பத்திகள் எப்போதும் வாசகனுடன்
நேரடியாய் உரையாடக் கூடியவை. எழுத்தாளனின் ஆளுமையை கண்ணாடி போல் பிரதிபலிப்பவை. குமுதத்தில்
பழைய வெகுஜன நட்சத்திர எழுத்தாளரை அழைத்து கதைத்தொடர் எழுத செய்கிறார்கள். இப்போது
பட்டுக்கோட்டை பிரபாகர். பட்டுக்கோட்டையின் மொழி எப்போதும் சுஜாதாத்தனம் கொண்டிருக்குமா
அல்லது இப்போது தான் அப்படியா? அவரை தொடர்ந்து படித்து வருபவர்கள் தான் சொல்ல வேண்டும்.
சமகாலத் தலைமுறையின் மனப்போக்கை அவர் கவனித்திருப்பதில் எனக்கு ஆச்சரியம். இலக்கிய
எழுத்தாளர்கள் எப்போதும் ஒரே காலத்தில் தான் இருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள்
தாம் வாழும் காலத்துடனே இருக்கிறார்கள். இதை நான் நிறைகுறையாக பார்க்கவில்லை. இது ஒரு
அடிப்படை இயல்பு.
Comments