Skip to main content

ராம்குமார் துணிந்து பேசும் போது…


ராம்குமார் கைது செய்யப்பட்ட போது மனுஷ்யபுத்திரன் எழுதினார் “ராம்குமார் பேச வேண்டும். அப்போது தான் வழக்கின் உண்மைகள் வெளியே வரும்.” இப்போது சிறையில் இருக்கும் ராம்குமார் தன்னை சந்திக்க வந்த வக்கீல் ராமராஜிடம் சுருக்கமாக இரண்டு விசயங்களை கூறியிருக்கிறார். 1) குற்றத்தில் தனக்கு பங்குள்ளது. ஆனால் பிரதான குற்றவாளி தான் அல்ல. காவல்துறை பிரதான குற்றவாளிகளை காப்ப்பாற்றவே தன்னை பலிகடாவாக்குகிறது.

2) காவல்துறையினரே அவரது கழுத்தை வெட்டி விட்டு நாடகமாடி இருக்கிறார்கள்.
இதற்கு மேல் உண்மைகளை வெளிப்படுத்த அவர் அஞ்சுகிறார். அவரை காவல்துறையினர் செங்கோட்டையில் அவர் வீட்டருகே வைத்தே என்கவுண்டர் செய்திருப்பார்கள். ஆனால் டி.வியில் மாலன் போன்றவர்களும் பேஸ்புக்கில் பலரும் ”என்கவுண்டர் நடக்கும்” என கவலை தெரிவித்ததால் காவல்துறை ராம்குமாரை விட்டு வைத்தது. பதிலுக்கு கழுத்தை வெட்டி மிரட்டி இருக்கிறது. கழுத்தை வெட்டியதன் மூலம் உடனடியாய் மக்களிடம் ராம்குமாரே முழுமுதல் குற்றவாளி எனும் பிம்பத்தை காவல்துறையினரால் ஏற்படுத்த முடிந்தது. வெறுமனே பிடித்திருந்தால் சந்தேகங்கள் நீடித்திருக்கும். ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றதுமே மக்கள் “குற்றம் செய்யாதவன் ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும்?” என யோசிக்க தலைப்பட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணை உண்மையில் பலவீனமானது. ராம்குமார் தானே குற்றத்தை முழுக்க ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் இவ்வழக்கு ஒருவேளை தோற்கலாம். ராம்குமாரே குற்றவாளி என நீதிமன்றம் அணுக முனையும் பட்சத்திலும் குற்றம் எப்படி, எதற்காக நடந்தது எனும் கேள்விளுக்கு ராம்குமாரும் காவல்துறையும் அளிக்கும் பதில்கள் வேறுவேறாக இருக்கும். ஏனென்றால் காவல்துறை கணிசமான தகவல்களை மறைத்தும் திரித்துமே வழக்கை கட்டமைக்க விரும்புகிறது. ஆக காவல்துறையால் நேரடி சாட்சிகளை பயன்படுத்த முடியாமல் போகும். தமிழ்ச்செல்வன் நிச்சயம் ஸ்வாதியை தாக்கியவரும் கொன்றவரும் வேறுவேறு என்கிறார். இது குழப்பத்தை ஏற்படுத்தும். ராம்குமாரின் நண்பர்களை ஆஜர்படுத்தினாலும் உண்மைகள் வெளிவரும். ஆக காவல்துறைக்கு பல சங்கடங்கள் உள்ளன. எங்கள் ஊரில் சொல்வார்கள்: அக்குளில் உள்ள பொருளை எடுக்கவும் வேண்டும், அதேநேரம் கையையும் தூக்கக் கூடாது என்று. காவல்துறையின் நிலை தற்சமயம் அது தான். இப்படி காவல்துறையை கட்டுப்படுத்தும்படியான கடும் அழுத்தும் அதற்கு மேலிருந்து அளிக்கப்படுகிறது. இது நிச்சயம் விசாரணையை கேள்விக்குள்ளாக்கும்.
இதுவரையிலும் மரண பயம் மட்டுமே ராம்குமாரை உண்மையை பட்டவர்த்தமாக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பயணத்தின் போது போலீஸ் தன்னை கொன்று விடுமோ என அவர் பயந்து கொண்டே இருந்திருக்கிறார். தூங்காமல் இரவெல்லாம் விழித்திருந்திருக்கிறார். திருச்சியை நெருங்கும் போது தன்னை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என பதறித் தவித்திருக்கிறார். இப்போதும் கூட சிறையில் இருக்கும் அவரை பிற குற்றவாளிகளை பயன்படுத்தி அங்கேயே கொல்ல போலீசால் முடியும். அதே போல் வெளியே விசாரணைக்கு அழைத்துப் போகும் போதும் என்கவுண்டர் செய்யப்படலாம். இந்த மிரட்டலைக் கொண்டே அவரையும் அவர் குடும்பத்தினரையும் இந்த ஜோடனை வழக்குக்கு உடன்பட வைக்கலாம் என காவல்துறை எதிர்பார்க்கிறது. இதுவே இப்போதைக்கு இவ்வழக்கை வெற்றிகரமாய் முடிப்பதற்கான ஒரே துருப்புச்சீட்டு.
ஆரம்பத்தில் வெளியான வாக்குமூலம் போலீசாரே எழுதி தயாரித்து தன்னை மிரட்டி கையெழுத்துப் பெற்ற ஒன்று என இப்போது ராம்குமார் கூறுகிறார். காவல்துறை இப்போதைக்கு நம்பவே முடியாத வகையில் வழக்கை பலவகைகளில் திரித்து சித்தரிக்கிறது.
 ஸ்வாதியை ராம்குமார் ஏற்கனவே ரயில்நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளதாய் காவல்துறை அறிக்கை கூறுகிறது. ஆனால் இத்தாக்குதலை நேரில் பார்த்த ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஸ்வாதியை அறைந்த நபர் சிவப்பான உயரமான ஆசாமி என்கிறார். அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஏன் தமிழ்ச்செல்வனைக் கொண்டு கொலையாளி ராம்குமார் தானா என காவலர்கள் உறுதிப்படுத்த தயங்குகிறார்கள்? ஏன் அவர் வாயை மூடி வைத்திருக்கிறார்கள்?
ராம்குமார் ஸ்வாதியை மூன்று மாதங்களாக மட்டுமே அறிவார் என காவல்துறை கூற, ராம்குமாரோ ஒருவருடத்திற்கு மேலாக ஸ்வாதியை தான் அறிவேன் எனக் கூறுகிறார். காவல்துறையின் தரப்பு இது போல் அப்பட்டமான முரண்களால் நிரம்பி இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விசயம் உள்ளது. ராம்குமாரின் தரப்பும் முழுக்க நம்பும்படியாய் இல்லை. அவர் தனக்கு ஸ்வாதி பேஸ்புக்கில் பழக்கமானதாய், சாட்டிங்கில் நிறைய உரையாடியதாய் சொல்கிறார். ஆனால் அவரது பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்தால் அவர் ஒரு வருடமாகவே பேஸ்புக்கில் செயல்பட்டதாய் தெரியவில்லை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு ஒரு லைக் கூட போடவில்லை.
இப்போதைக்கு இந்த வழக்கை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்:
1)   ராம்குமார் ஒரு வாடகைக்கொலையாளி. கொலைச்செயல்களில் சிறிதளவு பழக்கமுள்ளவர். ஆனால் போதுமான அளவுக்கு அனுபவம் அற்றவர். அவரை ஏவி விட்டிருக்கிறார்கள். கொலைக்கு பிறகு அவர் தனக்கு உதவி கிடைக்கும் என நம்பி, அதற்காக முழுநாளும் மேன்சன் அறையில் காத்திருந்திருக்கலாம். பிறகு ஊருக்கு சென்றவர் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்திருந்தது விசித்திரம். காவல்துறை தன்னை நெருங்குகிறது என அஞ்சியவர் முதலில் செய்ய வேண்டிய காரியம் போனை அணைத்து, ஆதாரங்களான ரத்தம்பட்ட சட்டை, ஸ்வாதியின் போன் ஆகியவற்றை அழிப்பது தானே? அவர் ஏன் அதை செய்யவில்லை? குற்றத்துடன் சம்மந்தப்பட்டவர்களுடன் அவர் போன் தொடர்பில் இருந்தாரா? அல்லது இந்த ஆதாரங்களை போலீசே ராம்குமார் வீட்டில் இருந்து எடுத்ததாய் நாடகமாடுகிறதா?
போலீஸ் வரும் வரை அவர் ஏன் தப்பித்துப் போக முயலாமல் வீட்டில் இயல்பாக காட்டில் ஆடுமேய்த்தபடி இருந்திருக்கிறார்? ஒன்று, அவர் இக்கொலையில் தான் ஒரு சிறு புள்ளி மட்டுமே என நம்பி இருக்க வேண்டும். இக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட பிறரின் போன் தொடர்பில் அவர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தன்னை காப்பாற்றுவார்கள் என அவர் நம்பியிருக்க வேண்டும். போலீஸ் தேடி நெருங்கும் போது கூட மாட்டிக் கொள்வதை விட உயிரை காப்பாற்றுவதே அவருக்கு முக்கிய அக்கறையாக இருக்கிறது. இதுவே அவருக்கு குற்றத்தில் முழு பங்கில்லை அல்லது குற்றத்தில் அவருடன் பிறரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறி.
2)   இன்னொரு கோணம் இது ராம்குமார் உணர்ச்சிவசப்பட்டு மன சமநிலை இழந்த தருணத்தில் செய்தது என்பது. (ஆனால் அப்படியான கொலைகள் இவ்வளவு துல்லியமாய் திட்டமிடப்பட்டு நடக்குமா என்ற கேள்வியும் உள்ளது.) இந்த கோணத்தை ஏற்கும்பட்சத்தில் ராம்குமாரை கொலைவெறிக்கு தூண்டும்படியாய் ஸ்வாதி என்ன செய்திருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை பொதுவில் வைத்து கொல்ல வேண்டும் என்றால் ஒன்று தான் அவளால் ஏமாற்றப்பட்டதாய் அவன் உணர்ந்திருக்க வேண்டும். அல்லது அவளது இருப்பு அவனுக்கு நடைமுறையில் பிரச்சனைகளை தருவதாக இருக்க வேண்டும். சாலையில் பார்த்த பரிச்சயம் மட்டுமே கொண்ட பெண்ணை தன்னை ஏமாற்றியதாய் ஒரு ஆண் நம்ப வாய்ப்பில்லை. ஒன்றை தருவதாய் உறுதியளித்து பின் மறுப்பது தானே ஏமாற்றம்? ஸ்வாதி அப்படி எதை தருவதாய் சொல்லி ஏமாற்றினார்? இந்த கேள்வி முக்கியமானது.

நிராகரிப்பின் பொருட்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் கத்திக்குத்து, ஆசிட் வீச்சு, கற்பழிப்பை தொடர்ந்து கொலை என. ஆனால் இக்கொலை ஒரு வெளிப்படையான சேதியாக தோன்றியது. யாருக்கோ யாராலோ விடுக்கப்பட்ட சேதி போல்.

ஸ்வாதி தனது பேஸ்புக் நண்பர் ஒருவருக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்ததாய் ஒரு டிவி பேட்டியில் ஸ்வாதியுடன் பணி செய்த பெண் ஒருவர் கூறுகிறார். இவ்வளவு பணம் ஸ்வாதிக்கு எங்கிருந்து வந்தது? யாரிடம் இருந்து பெற்றார்? கொலைக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ஸ்வாதியை யாரோ போனில் அழைத்து மிரட்டியதாய் அவரது அண்டை வீட்டார் தெரிவிக்கிறார்கள். இது உண்மை என்றால் ஏன் மிரட்ட வேண்டும்? ஸ்வாதியால் நிராகரிக்கப்பட்ட ஆண் ஏன் அவளை போன் செய்து மிரட்ட வேண்டும்? இப்படுகொலை நிகழப்போகிறது என ஸ்வாதியின் அப்பா ஊகித்திருக்கிறார். அது அவர் தன் மகளின் பிணத்தை கண்டதும் கூறின சொற்களில் தெரிந்தது. நம் ஊரில் ஒருவர் மிரட்டப்படுகிறார் என்றால் ஏவி விடப்பட்டு கொல்லப்படுகிறார் என்றால் அது பணம் அல்லது அதிகாரம் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். ஸ்வாதியின் பொருளாதார பரிவர்த்தனைகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும்.

இக்குற்றத்தில் ராம்குமார் தண்டிக்கப்படுவது பிரச்சனையில்லை. அவரே தனக்குள்ள தொடர்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் போலீசார் பொய்யாக ஒரு வழக்கை தம் சௌகர்யப்படி ஜோடிப்பது தான் சிக்கல். இது மிகவும் ஆபத்தானது. போலீஸ் தம் விருப்பப்படி ஆதாரங்களை சமைத்து சில குற்றவாளிகளை காப்பாற்றியோ முக்கியமான தகவல்களை மறைத்தோ வழக்கை ஜோடிப்பது மொத்த நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் காரியம். இது தடுக்கப்பட வேண்டும். போலீசாரே போலியாய் குற்றவாளிகளை கட்டமைக்கவும் உண்மையான குற்றாவாளிகளை தப்பிக்க வைக்கவும் அனுமதிப்பதன் பேர் நீதி விசாரணை அல்ல.

ஸ்வாதியை பற்றி சேதிகள் வெளிவரக் கூடாது என்பது அதிகார மட்டத்தின் முடிவாக இருக்கலாம். ஆனால் ஒரு குற்றம் நிகழ்ந்த பின் அதில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நற்பெயரை காப்பாற்றுவதை விட நாணயமாக அதை விசாரித்து முழு உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியம். நிர்பயாவுக்கு என்ன நடந்தது? அவர் பெயர் களங்கப்படக் கூடாது என்றால் அவர் பலவந்தப்படுத்தப்படவில்லை, அவரை சில கொள்ளையர்கள் தாக்கிக் கொன்று விட்டார்கள் என வழக்கை ஜோடித்திருக்கலாம். ஆனால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? குற்றவாளிகள் உச்சபட்ச தண்டனையில் இருந்து தப்பித்திருப்பார்கள். தலைநகரில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழாதிருந்திருக்கும். ஒரு உண்மையை மறைப்பது நூறு குற்றங்களுக்கு இடம் கொடுப்பதாக முடியும்!

Comments

சுவாதியின் தந்தை தன் மகளின் பிணத்தை பார்த்ததும் கூறியது என்ன ?
vivek said…
Whats is the current report of this case in high court??
Unknown said…
சுவாதியின் தந்தை தன் மகளின் பிணத்தை பார்த்ததும் கூறியது என்ன
nature said…
Police is doing their duties these blogs to be ignored
Siva Style said…
Ramkumar is the murderer as you mentioned. So he can reveal if someone else is there. We should appreciate TN police for finding the murderer Ramkumar and arresting him. If he did this for money through someone he should open his mouth and say the same. Swathi is very good and nice girl. No second thought about her character or anything. So only question is someone else helped ramkumar or he is just a killer for money.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...