ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து மையநீரோட்ட அரசியலில் இறங்க முடிவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. இன்னும் சில வருடங்கள் போனால் அவர் இறந்து, ஒரு ரத்த சாட்சியாக, தியாகியாக, குறியீடாக மட்டுமே எஞ்சி இருப்பார். கட்சிக்காரர்கள் அவரை வைத்து இன்னும் சில பத்தாண்டுகள் அரசியல் பண்ணி இருப்பார்கள். தமிழ் முற்போக்காளர்கள் அவருக்கு மனதில் மணிமண்டபம் எழுப்பி இருப்பார்கள். ஆனால் அதனால் அவருக்கோ மணிப்பூர் மக்களுக்கோ பயனில்லை.
ஒரு அரசியல் போராளி யாருக்கும் எதற்கும் குறியீடாக, பதாகையாக வாழ்ந்து சாகக் கூடாது. சுயசிந்தனையுடன், சுயமுடிவுகளுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஒடுக்குமுறையை முறியடிக்க சிறந்த வழி பிரிவினையோ ஆயுத போராட்டமோ அல்ல. மையநீரோட்ட அரசியலில் நுழைந்து வெல்வது தான். கேரளாவில் நக்ஸல்பாரி இயக்கம் பெறாத வெற்றியை மார்க்ஸிய அரசியல் கட்சி தான் பெற்றது. அது பல பிழைகளை செய்திருக்கலாம். ஆனால் சமூகத்தை முதுகெலும்பு கொண்டதாய் மாற்றியது, அதை சாதிக்க அது மக்களோடு மக்களாய் கலந்து ஜனநாயக முறையில் செயல்பட்டு வெற்றி கண்டது.
தமிழில் விடுதலை சிறுத்தைகளின் திராவிட இயக்க அணுக்கம், சாய்வு, அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தலித்தியத்திற்கு சமூக அளவில் ஒரு முக்கிய கவனமும் அங்கீகாரமும் சிறுத்தைகளின் ஜனநாயக அரசியல் நுழைவினால் தான் சாத்தியப்பட்டது. மாறாக விடுதலை புலிகள் தி.கவினரை போல் ஒதுக்கி நின்றிருந்தால் அது முழுமையான வீணடிப்பாய் முடிந்திருக்கும். அந்த விதத்தில் என்னைப் பொறுத்த மட்டில் தியாகுவை விட ரவிக்குமார் நூறு மடங்கு சிறந்த போராளி. நக்சல்பாரிகளை விட அதிமுக, திமுகவினர் ஆயிரம் மடங்கு சிறந்த மக்கள் தொண்டாளர்கள். ஏனென்றால் அவர்கள் குறைந்தபட்சம் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். மக்கள் இயக்கத்தின் எதிர்முனையில் இல்லை.
ஐரோம் ஷர்மிளாவை பாராட்டி வரவேற்போம்.
Comments