Skip to main content

தமிழரின் பண்பாட்டு தோய்வுக்கு காரணம் என்ன?


இக்கேள்விக்கு வரும் முன் நீங்கள் நம் சமகால பண்பாட்டு உண்மையிலேயே ஆழமற்றது, வெறும் கேளிக்கை நடவடிக்கைகள் சார்ந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது இங்கு இலக்கியம், தத்துவம், வரலாறு ஆகியவற்றை அறிவதில் அவற்றை ஆய்வு செய்வதில் மக்களுக்கு ஆர்வமில்லை. ஆம், இது உண்மை தான் என்றால் இனி இந்நிலைக்கு என்ன காரணங்கள் எனக் கேட்போம்.


பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழவன் திராவிடக் கட்சிகளை குறை சொல்கிறார். கர்நாடகத்திலும் கேரளாவிலும் அரசியல் உணர்வு  மக்கள் பேரியக்கமாய் வளர்ந்து வந்த கட்டத்தில் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் முக்கிய பங்காற்றினர். அதனாலே அங்கு எழுத்தாளர்களுக்கு அதிக மதிப்புள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல் எழுத்தி அறுபதுகளில் சினிமா நட்சத்திரங்கள் வழியாகவே நிகழ்கிறது. எம்.ஆர். ராதா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றோர் இங்கு அரசியல்-சமூக-பண்பாட்டு இயக்கமொன்றை சினிமாவை மையமிட்டு கட்டி எழுப்புகிறார்கள். மூன்று பெரும் திரை நட்சத்திரங்கள் மாநிலத்தின் உச்ச அதிகாரத்தை பெறுகிறார்கள். இதனாலே இங்கு இசை, நடனம், எழுத்து என ஒவ்வொன்றும் சினிமாவின் முகமாகவே மாற்றப்பட்டு விட்டது. சினிமா கலைஞர்கள் அல்லாது வேறு யாரும் இங்கு கவனிக்கப்படுவதில்லை. இது தமிழவனின் பார்வை. வரலாறு ஒரு புள்ளியை மையமிட்டு அதிகாரத்தால் கட்டமைக்கப்படுகிற ஒன்று எனும் அமைப்பியல் நோக்கு இதில் உள்ளது. தமிழவன் ஒரு அமைப்பியல்வாதி.

ஜெயமோகன் இது தமிழகம் கடந்த நூற்றாண்டில் சந்தித்த கடும் வறுமையின், பஞ்சங்களின் விளைவு எனப் பார்க்கிறார். ஒரு வளமான பாதுகாப்பான சூழலின் இருந்தே சிறந்த இலக்கியமும் அழகியல் பார்வையும் தழைக்க முடியும். இதற்கு அவர் கிரேக்கத்தின் பொற்காலத்தை சான்றாய் பார்க்கிறார். அடிமைகள் உழைக்க நாடு தழைக்க கிரேக்கர்கள் அந்த வியர்வையின் ரத்தத்தின் விலையை கொண்டு சொகுசாக வாழ்ந்தனர். அந்த செழிப்பிலும் அது தந்த ஓய்வு மற்றும் பாதுகாப்பில் இருந்தும் உன்னத தத்துவங்களும் நாடக இலக்கியமும் தோன்றியது. ஜெயமோகனின் இந்த பார்வைக்கு ஒரு மாற்றுத்தரப்பும் உண்டு. நீட்சே அக்கால கிரேக்கத்தை போர்கள், அழிவுகள், அரசியல் குழப்பங்கள், பிரச்சனைகள் என கடும் நெருக்கடிக்கும் சவால்களுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்கள் திரளாக பார்க்கிறார். அவர்களின் அக/புற நெருக்கடிகளே அவர்களின் உன்னத கலாச்சாரத்துக்கு காரணம் என்கிறார்.
இந்த நீட்சேயிய தரப்புக்கு இங்கிலாந்தின் இலக்கிய வரலாறும் இதற்கு ஒரு உதாரணமே. இங்கிலாந்தின் இலக்கிய பண்பாட்டின் உச்சம் என இரு காலகட்டங்களைச் சொல்லலாம். ஒன்று 16ஆம் நூற்றாண்டு. ஷேக்ஸ்பியர், பேகன், மில்டன், ஜான் டன்களின் நூற்றாண்டு. இன்றும் இவர்களை விஞ்ச கலைஞர்கள் இல்லை. இக்காலகட்டம் இங்கிலாந்தின் தடுமாற்றங்களின் காலகட்டம். எலிசபத் அரசியின் கீழ் அரசியல்ரீதியாய் ஓரளவு இங்கிலாந்து நிலைப்பெற்றாலும் தொடர்ச்சியான மதக்குழப்பங்கள், பிரான்சுடனான போர், உள்நாட்டு அரசியல் சதிகள், ஐரோப்பிய இலக்கிய, தத்துவ பிரதிகள் மொழிபெயர்ப்பாகி இங்கிலாந்தில் வாசிக்கப்பட்டு உருவான சிந்தனை/பார்வை மாறுதல்கள் என முழுக்க ஸ்திரமற்ற சூழல் அங்கு நிலவியது. ஷேக்ஸ்பியரின் அரசியல் நாடகங்கள் முழுக்க இப்படி தத்தளிக்கும் அரசியல் நிலை, அது சமூகத்தில் ஏற்படுத்தும் குழப்பங்கள் பற்றியவை தான். ஆனால் இதன் பின்னான நூற்றாண்டுகளில் இங்கிலாந்து பெரும் செல்வ செழிப்பையும் அதிகார நிலைப்பையும் நோக்கி சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகையே காலனியாதிக்கம் செய்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் ஆகியது. ஆனால் இலக்கியத்தை பொறுத்தமட்டில் இந்த செழிப்பான காலம் தான் வறிய காலம். இலக்கியத்தில் இங்கிலாந்தில் அடுத்த மேதைகள் தோன்ற இருபதாம் நூற்றாண்டு வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அது இங்கிலாந்தின் வீழ்ச்சியின் காலம். சாம்ராஜ்ஜியம் துண்டுதுண்டாகி சிதைந்து விட்டது.
 இரண்டாம் உலகப்போரின் முடிவுடன் இங்கிலாந்தும் எனும் சாம்ராஜ்ஜியம் அஸ்தமித்தது. இது ஏற்படுத்திய பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளும் சிதைவுகளும் உன்னத் இலக்கியத்துக்கு வழிகோலியது. விர்ஜினியா வூல்ப், கிரெகம் கிரீன், டி.எச்.லாரன்ஸ், ஆர்வெல், சி.எஸ். லீவிஸ் தோன்றினர். டி.எஸ். எலியட் அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்து தன் ஆகச்சிறந்த கவிதைகளை எழுதினார். இதே இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா பொருளாதார, பண்பாட்டு, மத ரீதியாய் கடும் சோதனைகளை சந்திக்கிறது. உயிரும் பொருளாதாரமும் எதிர்காலமும் நிலையற்றது, அர்த்தமற்றது என மக்களுக்கு தோன்றுகிறது. இது ஏற்படுத்தும் கடும் அழுத்தத்தில் பெரும் இலக்கியங்களூம் தத்துவங்களும் தோன்றுகின்றன.
இந்த இரண்டு தரப்புகளில் எது உண்மை? செழிப்பா அல்லது வறுமையா? ஸ்திரமான சூழலா அல்லது ஸ்திரமின்மையா? அச்சமா பாதுகாப்புணர்வா? எது பண்பாட்டு உன்னதத்துக்கு வழிகோலுகிறது?
சமகாலத்தை கவனிக்கும் போது இரண்டுக்கும் சாத்தியமுள்ளது எனத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அதிகார, பொருளாதார வலிமை அவர்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கும் ஒரு உந்துசக்தியை அளித்துள்ளது; லத்தீன் அமெரிக்க நாடுகளின் தத்தளிப்பு அங்கிருந்து மார்க்வ்ர்ஸ், போர்ஹெ போன்ற பெரும் கலைஞர்கள் தோன்ற உதவியுள்ளது.
இன்னொரு சுவாரஸ்மான பதில் மரபைப் பற்றியது. ஒரு தேசத்திலோ மாநிலத்திலோ நீண்ட அழுத்தமான மரபு இருந்தால் அங்கு புது கலாச்சார, சிந்தனை மாற்றங்கள் சாத்தியப்படாது என்பது இந்த பார்வை. தமிழர்களின் ரெண்டாயிரம் வருட மரபு இங்கு ஒரு இறுக்கமான மத/சாதிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. நமது பழம் இலக்கியங்கள் அழுத்தமான உணர்வுகளை, மொழி கட்டமைப்புகளை நம் மீது சுமத்தி உள்ளது. நாம் இவற்றை மீள மீள விதந்தோத முடியுமே அன்றி உதறி புது சிந்தனைகளை ஏற்க முடியாது என்பது இந்த வாதம். அதாவது தமிழனின் மரபே அவனது முதுகை வளைக்கும், பண்பாட்டை மழுங்கடிக்கும் பெரும் சுமை.

ஏப்ரல் மாத அம்ருதாவில் வெளிவந்த தனது பேட்டியில் லஷ்மி மணிவண்ணன் நமது சினிமா மையமிட்ட கலாச்சார சீரழிவுக்கு இதைத் தான் காரணம் காட்டுகிறார். கேரளாவும் கர்நாடகாவும் புதிதாய் தோன்றின மாநிலங்கள், அவற்றின் பண்பாட்டு உருவாக்கம் அண்மையானது என்பதால் அம்மாநில மக்கள் வெளியில் இருந்து புது ஊடுருவல்களை தம் பண்பாட்டில் தொடர்ந்து அனுமதிக்கிறார்கள். தம்மை தொடர்ந்து கலைத்துப் போட தயாராக உள்ளார்கள். அதனாலே அங்கு நவீன சிந்தனைகளும் பரீட்சார்த்த முயற்சிகளும் அவற்றை முன்னெடுக்கும் படைப்பாளிகளும் கொண்டாடப்படுகிறார்கள் என்கிறார் லஷ்மி மணிவண்ணன். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...