Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சை


பிரம்மராஜன் – கல்யாணராமன் - ஆத்மாநாம் சர்ச்சையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?
 கல்யாணராமன் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதினார்: “சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி”. இது பிரம்மராஜனின் தொகுப்பு முறை பற்றியது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவரது எடிட்டிங் பற்றியது. அவர் எவ்வாறு ஆத்மாநாமின் கவிதைகளை நூலாக தொகுக்கும் போது அவற்றை பல இடங்களில் மூலத்தில் இருந்து மாற்றி இருக்கிறார் என கல்யாணராமன் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். எனக்கு இதில் வரும் மூலக் கவிதை வரிகளையும் மாற்றப்பட்ட வரிகளையும் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட வரிகளே மேல் எனப் பட்டது.

கூர்மையான பக்கங்களைக்கொண்ட, புற்கள் தாறுமாறாய்ச், சிதறிக் காத்தன, ஏரியை
என்கிற ஒரு கவிதை வரியில் ”புற்கள்” பிரம்மராஜனின் தொகுப்பில் “பற்கள்” ஆகி விட்டன. எனக்கு தாறுமாறாய் சிதறிக் கிடக்கும் பற்கள் கொண்ட ஏரிக்கரை என்பது இன்னும் அழகான, வித்தியாசமான, சர்ரியல் தன்மை கொண்ட சித்திரமாய் படுகிறது. இது எதேச்சையாய் நடந்த தவறு என்றாலும் கூட நல்ல தவறு தான்.
ஆத்மாநாமின் ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை என்ற வரியை தொகுப்பாளர் பிரம்மராஜன் ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை என்று மாற்றி இருக்கிறார். நுணுகவில்லை என்பது ஒரு உருவகம். அது அவ்வரியை பாரமாக்கி விடுகிறது. ”அணுகவில்லை” இன்னும் நேரடியாய் மென்மையாய் இருக்கிறது. (நவீன கவிதையில் உருவகங்களை தவிர்ப்பதே நல்லது என்பது என் நம்பிக்கை) இதுவும் நல்ல மாற்றமே.
இப்பரந்த உலகின் தூசி முனையில் என்பதை இப்பரந்த உலகின் ஊசி முனையில் என மாற்றுகிறார். இதுவும் சிறப்பே. தூசிக்கு முனை உண்டா? தூசி உருளை வடிவென்றால் எப்படி அதற்கு முனை சாத்தியமாகும்? ஊசி முனை எனும் போது உடனே நமக்குள் ஒரு சித்திரம் எழுகிறது. பிரம்மராஜனின் மாற்றம் இவ்வரியை இன்னும் விஷுவலாக மாற்றி இருக்கிறது.
 மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்துஆத்மாநாம் வரி
”‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்துபிரம்மராஜன் திருத்திய ஆத்மாநாம் வரி

மற்றவரை விட மாற்றான் என்பதே இன்னும் ஆற்றல் மிக்கதாக எனக்கு படுகிறது. மற்றவர் என்பதை இன்னொருவர் என ஆத்மாநாம் கண்டிருக்க இயலாது. அரசியல் பொருளில் படிக்கையில் குறிப்பாய் மாற்றான் எனும் சொல்லே எனக்கு இன்னும் பிடித்தமாய் இருக்கிறது. எதிர்தரப்பு என்பதை விட மாற்று நிலை கொண்டவன் என்றே நான் மாற்றானை பார்க்கிறேன்.
இதே “சுதந்திரம்” எனும் எமெர்ஜன்ஸி பற்றின கவிதையில் வரும் மற்றொரு வரியான உனதுயிர்மீது ஆசை இருந்தால் எனபதை “உன் மீது ஆசை  இருந்தால் என்று பிரம்மராஜன் மாற்றுகிறார். எமெர்ஜென்ஸி உயிர் மீதான ஒடுக்குமுறை அல்ல. சர்வாதிகாரத்தை ஆத்மாநாம் நம் இருப்பு சம்மந்தமான பிரச்சனையாகவும் தான் பார்த்தார். அப்படி இருக்கையில் “உன்” எனும் சொல் தான் “சுயம்” என்கிற பொருளில் பொருத்தமாய் இருக்கிறது. “உன் உயிர்” என்பது சற்றே பௌதிகமாக அதில் பேசப்படும் மனிதனை அர்த்தப்படுத்தி விடுகிறது.
அருகில் கேட்கும், குழாயின் ஒழுகல் 
என்பதை
இருளில் கேட்கும், குழாயின் ஒழுகல்  என பிரம்மராஜன் மாற்றியிருக்கிறார். இந்த திருத்தமும் அதிக விஷுவல் தன்மை கொண்டதே. ஒரு நல்ல மாற்றம் தான். அருகில் கேட்கும் குழாயின் ஒலியை விட இருளில் கேட்கும் ஒலியை கற்பனை செய்ய இன்னும் அணுக்கமாய் தீவிரமாய் அழகாய் உள்ளது.
”காலம் கடந்த” கவிதையின் இறுதி வரிகள் சிலவற்றை பிரம்மராஜன் நீக்கியிருக்கிறார்.
அக்கவிதை, “என் காலடியில், கொஞ்சும் நாய்க்குட்டிக்காக, இன்னும் எனது நம்பிக்கை, நசித்துப்போகவில்லை, இன்னமும் கொஞ்சம், அன்பு மீதமிருக்கிறதுஎன்று முடிகிறது.
ஆனால் உண்மையில் அது
இது ஏசுவோ புத்தரோ
ஆதி சங்கரரோ
மகாத்மாகாந்தியோ
பிரச்சாரம் செய்த
அன்பு அல்ல
நானே
ஆகிய    
அன்பு 
என்று தான் முடிந்திருக்க வேண்டும். நீக்கப்பட்ட வரிகள் ஒரு statement என்பதை படிக்கும் எந்த வாசகனாலும் புரிந்து கொள்ள முடியும். கவிதை ஒரு அறிவிப்புடன், கவிஞனின் அறிவுறுத்தலுடன் முடிய வேண்டாம் என நினைத்து பிரம்மராஜன் நீக்கியிருக்க கூடும். இங்கும் அவர் எடிட்டிங் ஆத்மாநாமின் கவிதையை மேம்படுத்தி இருப்பதாகவே நினைக்கிறேன். முக்கியமான எந்த கூடுதல் பொருளும் தராத வரிகளை ஏன் நீக்கக் கூடாது?
டெலெக்ஸ் என்பதை டெலக்ஸ் என்பதாக்கியது ஒரு பெரும் தவறு அல்ல. “1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன என்ற வரியில் 74,000 என்பதை பிரம்மராஜன் 75,000 என்று தவறாக மாற்றி இருக்கிறார். இது கவிதையின் அர்த்தத்தை மாற்றாது என்பதால் மன்னித்து விடலாம்.
சில கவிதைகளில் “ஒரு” என்பதை “ஓர்” என மாற்றுகிறார். ”சுவற்றில்” “சுவரில்” ஆகி விட்டது. இது போல் வேறு பல தொந்தரவு இல்லாத சிறு மாற்றங்கள். ஆத்மாநாமின் சில கவிதைகளின் தலைப்புகளை பிரம்மராஜன் மாற்றியதையும் கல்யாணராமன் குறிப்பிடுகிறார். இந்த இடங்களில் கவிதைகளை அத்தலைப்பு மாற்றங்கள் சீரழித்தன என்பதை விட ஆத்மாநாமின் சம்மதத்தை பெற்றாரா இல்லையா என்பதே கேள்வி.

ஒட்டுமொத்தமாய், பிரம்மராஜன் இந்த creative editing மூலமாய் ஆத்மாநாமுக்கு நல்லது பண்ணியிருப்பதாகவே நான் நம்புகிறேன். இதன் அறம் மட்டுமே பிரச்சனை. இதனை ஆத்மாநாம் ஏற்றிருப்பாரா இல்லையா? நமக்குத் தெரியாது.
இன்னொரு கேள்வி: ஒரு படைப்பை நாம் அதை எழுதிய படைப்பாளியின் சொத்தாக, அவனுக்கு மட்டுமே முழு உரிமை கொண்ட பொருளாக ஏன் பாவிக்க வேண்டும்? எனக்கு கடந்த மாத உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றை படிக்கையில் இறுதி சில வரிகளை கத்தரித்திருக்கலாமே என தோன்றியது. என் மனதுக்குள் அவ்வாறு எடிட் செய்து படித்து ரசித்தேன். நாளை நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை என் பாணியில் எடிட் செய்து பிரசுரிக்கலாமா? ஏன் கூடாது? ஒரு வாசகனாய் எனக்கு அந்த உரிமை, சுதந்திரம் நிச்சயம் உள்ளது. ஒரு சிறு குறிப்பை மட்டும் இறுதியில் சேர்க்க வேண்டும்: “இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காதது தான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம். இதற்கு போய் அவரை ஏன் அடித்து துவைக்க வேண்டும் என எனக்கு சத்தியமாய் புரியவில்லை.

நான் குமுதம் கிரிக்கெட்டோகிராபியில் 3000 ரன்களை 4000 என எழுதியதற்காய் ஒருவர் ”என் கட்டுரையை படித்தால் தற்கொலை புரியும் எண்ணம் வருகிறது” என பேஸ்புக்கில் எழுதினார். இன்னொருவர் என்னை பேஸ்புக் முட்டுச்சந்துக்குள் வீச்சருவாளோடு விரட்டினார். பாவம் பிரம்மராஜன், அவரை ஆட்டோவில் ஆளுக்கு ஒரு கத்தியை சுழற்றியபடி வந்து துரத்துகிறார்கள்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...