Skip to main content

மனம் இணைய இதழில் என் பேட்டி

உங்களது இலக்கியப் பயணம் எந்த இடத்தில் தொடங்கியது?
என்னுடைய எழுத்துப் பயணம் என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. நான் அறிவார்ந்த ஆள் கிடையாது. முழுக்க உணர்ச்சிகளின் உலகத்தில்தான், நான் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறேன். சுமார் பதினான்கு வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிறகு, சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன். அப்போது, கட்டுரைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. அப்படியாக வளர்ந்து வருகிறபோதுதான், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உடனான நட்பு கிடைத்தது. அப்போது எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. சில மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதிக்கொண்டுபோய், அவரிடம் காண்பித்தேன். அதைப் படித்த மனுஷ்யபுத்திரன், அதைப் பதிப்பிக்கலாம் என்று சொன்னார். ஆனால், சில காரணங்களால் அது பதிப்பிக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில்தான், உயிரோசை என்கிற இணையதளத்தை மனுஷ் ஆரம்பித்தார். அதில் நிறைய புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்படி, அதில் எழுத எனக்கும் வாய்ப்பளித்தார். அங்கேதான், ஒரு கட்டுரையாளனாக நான் உருவானேன். தொடர்ச்சியாக எழுத எழுத, அதன்மேல் ஒரு தீவிரமான ஈடுபாடு வந்துவிட்டது. இதுதான், பின்னாட்களில் ஒரு நாவலாசிரியனாக உருவாகக் காரணமாக அமைந்தது!


கால்கள் நாவல் எவ்வாறு உருவானது?
நாவல் எழுதும் ஆசை குறித்து மனுஷிடம் சொன்னபோது, தினமும் அரை மணி நேரம் எழுதுங்கள். என்ன வருகிறதோ, அதை முதலில் எழுதிவிடுங்கள். அதுதான், உங்களுடைய அன்றைய நாவலுக்கான பங்களிப்பு. தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், மூன்று மாதங்களில் உங்களுடைய நாவலை முடித்துவிடலாம் என்றார். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு பத்தி, ஒரு வரி அல்லது ஒரு சொல்லாவது எழுதிவிடுவேன். அப்படித் தொடர்ச்சியாக எழுதியதன் வாயிலாக, என்னால் நாவலுக்குள் எளிதாகப் பிரவேசிக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை, நாவல் என்பது திறக்கப்படாத கதவு. நீங்கள் அதை சிரமப்பட்டு தள்ளி உள்ளே சென்றுவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு அது உங்களை தனக்குள் இழுத்துக் கொண்டுவிடும். ஏறக்குறைய அரேபிய இரவுகள் கதை போலத்தான். அந்த இரவு விடியவே விடியாது. 
கால்கள் நாவலை, ஏறக்குறைய 800 பக்கங்களுக்கு மேல் எழுதினேன். பிறகு, அதனை எடிட் செய்து 550 பக்கமாகக் குறைத்தேன். அந்த நாவல், நம்முடைய உடல் இந்த உலகத்தோடு எதிர்கொள்கிற பிரச்சினைகளைப் பற்றியது. அதை இலக்கிய உலகில் அதிகமாக யாரும் எழுதவோ, பேசவோ இல்லை என்று நினைத்தேன். அப்படியான மாறுபட்ட உலகத்தைப் பற்றி பேசுகிறது  கால்கள் நாவல்.

வெகுசன இதழ்களில், பல்வேறு விதமான விஷயங்களையும் உங்களால் எழுத முடிகிறதே?
இயல்பிலேயே எனக்குப் பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. அதற்குக் காரணம், எழுத்தாளர் ஜெயமோகன் என்று கூட சொல்லலாம். என்னுடைய பதினைந்தாவது வயதிலேயே, அவரைச் சந்தித்து உரையாட முடிந்தது. ஏனெனில், அவர் என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருந்தார். அவர் எல்லாவற்றையும் படிப்பார். எது குறித்து வேண்டுமானாலும், அவரிடம் விவாதிக்கலாம். எனக்குத் தெரிந்து, அவர் ஒரு குழந்தை மாதிரி இருந்தார். ஒரு இடத்தில் விட்டால், எப்படி அது நிற்காமல் அங்குமிங்கும் சுறுசுறுப்புடன் சந்தோஷமாக சுற்றித் திரியுமோ, அப்படி! எனவே அவரைப் போல் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால், பரவலாக என்னுடைய வாசிப்பு பழக்கத்தை வைத்துக்கொண்டேன். அதனால்தான், இப்போது எது குறித்தும் எழுத முடிகிறது என்பதாக நினைக்கிறேன்.

யுவபுரஸ்கார் விருதை, எழுத்தின் தொடக்கத்திலேயே பெற்றுவிட்டீர்களே?
உண்மையில் கால்கள் நாவலுக்காக மட்டும் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததாக, நான் நினைக்கவில்லை. அதற்கு முன்னதாகவே நான் எழுதி வந்த கதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள் மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிவந்த பங்களிப்புக்குக் கிடைத்த வெகுமதியாகத்தான், அந்த விருதைப் பார்க்கிறேன். அந்த நாவல் முழுக்க என்னுடைய அனுபவமாக இருந்ததால், அதை எழுதும்போது ஒரு தயக்கம் இருந்தது. எனவே, அதை ஒரு பெண்ணுக்குரிய பிரச்சினையாக மாற்றி எழுதினேன். மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணுக்கு, ஆணைக் காட்டிலும் அதிகமான உளவியல் சிக்கல்களும் பிரச்சினைகளும் இருக்கிறது. அதனால்தான், அது பெரும்பாலான பெண் வாசகர்களைப் பாதித்தது. அதுதான், கால்கள் நாவலின் உண்மையான வெற்றி.
ஒரு நாவல் ஐம்பது வருடங்களைக் கடந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். மற்றபடி, விருது என்பது ஒரு எழுத்தாளனுக்கான தற்காலிக வெளிச்சம்தான்!

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பங்காற்றியும், எதிர்வினையாற்றியும் வருகிறீர்களே?
சமூக வலைதளங்கள் மூலம், இன்று ஒரு எழுத்தாளருக்குப் பரவலான வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஆனால், 1980 மற்றும் 1990களில் அப்படியான ஒரு பரந்துபட்ட வெளி என்பது கிடையாது. ஆனால், இதைவிடக் காரசாரமான மோதல்களும் தனிநபர் தாக்குதல்களும், அன்றைய இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கின்றன. அன்று லட்சியவாதங்களுடைய உட்சபட்சமான காலம். அத்தகைய லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதற்காக, அவர்கள் அடிதடியில் இறங்கவும் கூட செய்தார்கள். ஆனால், இரண்டாயிரத்துக்குப் பிறகு லட்சியவாதங்கள் தோற்றதால், தனிநபர் வழிபாடு, சமூக மேல்நிலையாக்கம் போன்ற விஷயங்கள் பிரதானமாகி விட்டன. முன்பு லட்சியத்துக்காகச் சண்டையிட்டவர்கள், இப்போது தனிநபருக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி இலக்கியச் சண்டைகள் காலந்தோறும் நடக்கவே செய்யும்!

உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் யார்?
நவீன இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், தமிழ்மகன், விநாயக முருகன், சரவணன் சந்திரன் உள்ளிட்ட நிறைய பேர் அந்தப் பட்டியலில் அடக்கம். பொதுவாக, எனக்கு நாவலாசிரியர்களை விட கவிஞர்களைத்தான் அதிகம் பிடிக்கும். அந்தவகையில் தேவதச்சன், தேவதேவன், பிரமிள், கலாப்ரியா, விக்ரமாதித்தன், முகுந்த் நாகராஜன், போகன் சங்கர் என விரிவான பட்டியல் என்னிடம் உண்டு.

சினிமாவில் எழுதும் வாய்ப்பு கிடைத்ததா?
கடந்த சில வருடங்களாகவே, எனக்கு அந்த வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும், நண்பர்களால் எடுக்கப்படும் படங்களில்தான் வேலை செய்கிறேன். சினிமா என்பது இலக்கிய உலகம் போன்றது அல்ல; அது முற்றிலும் வேறான உலகம். ஒரு திரைக்கதையை எழுதிவிட்டு, நீங்கள் தயாரிப்பாளரிடம் சென்று கதை சொல்லி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது நின்றுவிடலாம். பிறகு, படம் நின்றுவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு தயாரிப்பாளர் உடனடியாக அந்தப் படத்தை தயாரித்து, நீங்கள் இயக்குநராக வெளியே தெரியலாம். சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சினிமாவில் எதையும் எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ முடியாது!

அடுத்த நாவல் எப்போது?
நான்கு அல்லது ஐந்து கட்டுரை தொகுப்புகள் வெளியிடும் அளவுக்குப் படைப்புகள் உள்ளன. ஆனால், அது எதுவும் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. எனவே, அவற்றை ஒரு படைப்பாகக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. நிறைய திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. உறுதியாக ஒன்றை வேண்டுமானால் சொல்லுவேன், இந்த வருடம் என்னிடமிருந்து எந்த நாவலும் வெளிவராது!
தமிழ் இலக்கிய உலகில், தற்போது இயங்கிவருபவர்களின் இயல்புகளும் செயல்பாடுகளும் மாறிப்போய்விட்டன. அதன் தற்போதைய தோற்றத்தைத் தன்னளவில் பிரதிபலித்திருக்கிறார் ஆர். அபிலாஷ்



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...