Skip to main content

அருந்ததி ராயின் அடுத்த நாவல்

Image result for arundhati roy
அருந்ததி ராயின் அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness வெளிவரும் செய்தி ஆங்கில ஹிந்து நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தியாக வந்துள்ளது. அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்: “வாழ்வுடா!”

அருந்ததி ராய்க்கு இந்த இடம் எப்படிக் கிடைத்தது? உலகமயமாக்கல், அபரித தொழில் வளர்ச்சி, படித்த மேல் மத்திய வர்க்கத்தின் எழுச்சி, உலகம் முழுவதுமான இந்தியர்களின் பரவல், இந்திய சமூகத்துக்கு ஒரு வளர்ச்சியடைந்த சக்தியாக தன்னை முன்வைக்க வேண்டிய பெரும் தேவை – இவை நிகழும் தொண்ணூறுகளில் சச்சின், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்று நவீன தொன்மங்கள், நட்சத்திரங்கள் தோன்றுகிறார்கள். இவர்களை உலக அரங்கின் முன்வைத்து முஷ்டியை உயர்த்தி காட்டுகிறோம். அருந்ததி ராயின் முதல் நாவலான God of Small Things புக்கர் பரிசை வெல்ல ஐஸ்வர்யா ராய்க்கு இணையான புகழ் இவருக்கும் கிடைக்கிறது.
 கேரளாவின் நிலப்பிரபுத்துவ, சாதிய ஒடுக்குமுறை சூழல், அதன் வன்முறை, அங்குள்ள மார்க்ஸிய அரசியல், இவற்றின் மீதான விமர்சனமும் கிண்டலும் என இங்கிருந்து ஆரம்பித்து சமகாலத்துக்கு வந்து இன்றுள்ள இளந்தலைமுறையினர் உணரும் வேரற்ற தவிப்பு, எந்த இடத்திலும் அடையாளத்திலும் பண்பாட்டிலும் தம்மை பொருத்திக் கொள்ள முடியாத அவஸ்தை ஆகியவற்றை பேசி முடிக்கிறார். இந்த நாவல் இந்தியா குறித்த ஒரு தட்டையான சித்திரம் கொண்டுள்ள வெள்ளையர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி தகவல்களும், சித்திரங்களும் கொடுத்து உலுக்கி, அவர்களின் “விசித்திர இந்தியா” எனும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்நாட்டின் பண்பாட்டையும் போக்குகளையும் அறிந்த நமக்கு இந்நாவலில் புதிதாக அறிய ஒன்றுமில்லை. கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு இது சற்றே பழைய மலையாள நாவல் ஒன்றின் ஆங்கில மொழியாக்கம் போல் தோன்றும். அதாவது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் (இந்நாவலில் மலையாள சிறியன் கிறித்துவ பண்பாடு) பல அடுக்குகளுக்குள் நாவல் பயணிக்கும் போதே வாசகனுக்கு அது அபாரமான அனுபவத்தை தரும். புதுமைப்பித்தனின் “கபாடபுரம்”, “கயிற்றரவு” போன்றவற்றை உதாரணம் காட்டலாம். ஆனால் அருந்ததி ராய் இந்த பண்பாட்டு கூறுகளை லேசாய் மீன்களின் செதில்களை திறந்து மீன்காரி காண்பிப்பது போல் ஆங்கில வாசகனுக்கு காண்பிக்கிறார். உடனே அடுத்த இடத்துக்கு நகர்ந்து விடுகிறார். மேலோட்டமாய் ஒரு விசயத்தை தொட்டு காட்டி அதிர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தினாலே ஆங்கிலேய வாசகன் லயித்து விடுவான். இந்தியா குறித்து மேலும் விவரமாய் ஆழமாய் பேசி அவனை குழப்பி ஒரேயடியாய் துரத்தி விடக் கூடாது எனும் ஆதார விதியை ராய் சாமர்த்தியாய் பின்பற்றினார்.
 ஒரு பக்கம் இங்குள்ள பிற்போக்கு கலாச்சாரம், நம்பிக்கைகள், அவற்றில் இருந்து விடுபடத் தவிக்கும் மக்கள் ஆகியோரை காட்டினால் வெள்ளை வாசகர்களுக்குள் உள்ள காலனிய மனதுக்கு மசாஜ் பண்ணி விட்ட கிளர்ச்சி கிடைக்கும். அமெரிக்க, இங்கிலாந்து வாசகர்களுக்கு கம்யூனிஸ்டுகள் என்றால் ஒவ்வாது. ஆக கம்யூனிஸ கிண்டலையும் லேசாய் நாவலில் தூவினார். அதேநேர சமூக சீரழிவுகளையும் விமர்சித்து தனக்குள் உள்ள ”புரட்சியாளரையும்” ராய் வெளிக்கொணர்ந்தார். நாவலில் பெண்ணிய டெம்பிளேட்டும் செயல்படுகிறது. எல்லா பெண் பாத்திரங்களும் ஒன்று தமக்கு விருப்பமான ஆணை அடைவதில்லை. அல்லது ஆண்களால் ஒடுக்கப்பட்டு வெறுமையின் பள்ளத்தாக்கில் தள்ளப்படுகிறார். ”ஏ கேடுகெட்ட ஆண்சமூகமே” என கூவ விரும்பும் ஆரம்ப நிலை விடலை பெண்ணியவாதிகளுக்கும் இந்நாவலில் கொஞ்சம் மசாலா வைத்திருந்தார். இப்படி இந்நாவல் ஒரு கனகச்சிதமான பேக்கேஜ்.
 பிற்போக்கான அறுபதுகளில் இருந்து இன்றுள்ள உலகமய தாராளவாத சமூகம் வரை ஒரு வரலாற்று சித்திரத்தை அளிப்பது, நாவலில் மைய பாத்திரம் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு சென்று சில காலம் வாழ்வது இந்திய ஆங்கில நாவல்களுக்கான ஒரு கம்ர்ஷியலான மற்றொரு டெம்பிளேட்டையும் ராய் உருவாக்கினார். இந்திய ஆங்கில நாவல்கள் தாராளமயமாதலின் குழந்தை என்பதால் அதன் வரலாற்று காலத்தை எப்படி காட்டுவது எனும் கேள்வி எழுகிறது. ஜெயமோகன் பிச்சைக்காரர்கள் பற்றி ஒரு நாவல் எழுதலாம். அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோ காலகட்டம் பற்றி எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பெயளவில் மட்டும் இந்தியனான வாசகனுக்கும், இந்தியாவை பற்றி மீடியா வழி மட்டுமே அறிந்த வெள்ளை வாசகனுக்கும் இது போன்ற உள்ளூர்தன்மை கொண்ட சித்திரங்களில் ஆர்வமில்லை. அவனுடைய காலம் என்பது ஐரோப்பிய தாக்கம் இந்திய வரலாற்றை மாற்ற துவங்கிய காலம். அல்லது ஐரோப்பிய காலனியவாதிகள் கைவிட்ட இந்தியாவுக்கு என்ன நேர்ந்தது என பேசும் வரலாறு. எப்படியும் இந்த வரலாற்று காலத்தில் ஒரு “வெள்ளை” நிழல் விழ வேண்டும்.
 அதே போல் நாவலின் “இடமும்” திருநெல்வேலி ஜில்லாவில் ஆரம்பித்தாலும் உலகம் முழுக்க ஒரு சுற்று சுற்றி வர வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஆரம்பித்து அங்கு வாழும் இந்தியனின் மன அலைகளாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இந்த டெம்பிளேட்டை நாம் ஆரம்ப கால இந்திய ஆங்கில நாவலாரிசியர்களான ஆர்.கே நாராயணனிடம் பார்க்க முடியாது. அருந்ததி ராய் இதை (வணிகரீதியாய் வெற்றிகரமாய்) கட்டமைத்து தன் வாரிசுகளுக்கு கையளித்தார்.
ராயின் இந்த முதல் நாவல் இப்படித் தான் இந்திய ஆங்கில வெற்றி நாவல்களுக்கான அரங்கை அமைத்து கொடுத்தது. ராய்க்கு பின்வந்தவர்களில் ஜும்பா லஹரி போன்றவர்கள் அவரை விட அதிக ஆழமுள்ள தளம் கொண்ட எழுத்தை பயின்றார்கள். அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள்.
ரெண்டாயிரத்துக்கு மற்றொரு மாற்றம். ”நம் இந்தியாவே ஒரு அமெரிக்கா தானே” என படித்த மேற்தட்டினர் நம்ப துவங்கினார்கள். அப்போது அவர்களுக்காக படித்து, ”அமெரிக்க இந்திய” உயர்தட்டுக்கு நகர விரும்பும் ஒரு தலைமுறையின் சிக்கல்களை பேசும் (அதோடு ராயின் சமூக சீரழிவு விமர்சனங்களும் தாங்கிய) படைப்புகள் வந்தன. சேத்தன் பகத், அரவிந்த் அடிகா போன்றோர் தோன்றினார்கள். இவர்களிடம் “உலகமய” காலம், இடம், வரலாறு ஆகிய டெம்பிளேட்டுகள் இருக்காது. மேலும் இவர்கள் இந்திய நாவல்களை இந்திய வாசகனுக்கே விற்று சம்பாதிக்கலாம் என நிரூபித்து வெற்றி கண்டார்கள்.
 சமூகம் பொருளாதார ரீதியில் வளர்ந்து மாறுதல் அடையும் போது அடுக்குமுறை கலைத்து அடுக்கப்படும். கீழே இருப்பவர் மேலே செல்வார். அப்போது என்னவகையான பிரச்சனைகள் வரும் எனும் கேள்வி இன்றைய தலைமுறைக்கு உள்ளது. ரோட்டில் கைவண்டி தள்ளிக் கொண்டிருந்தவன் ரௌடியிஸம், ரியல் எஸ்டேட், அரசியல் என்று முன்னேறி வந்து பென்ஸ் காரில் செல்கிறான் என்றால் அவனைப் பார்த்து படித்த மேல்தட்டு பயப்படும். அவனைப் பற்றி அறியவும் தம் பதற்றத்தை பரிசீலிக்கவும் விரும்பும். ”அவனைப்” பற்றி (அவன் தரப்பில் இருந்தும்) அரவிந்த அடிகா எழுதினார்.
இப்படி God of Small Thingsஇல் இருந்து நாம் வேறு ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம். எல்லா தடபுடலையும் ஆரம்பித்து வைத்தவர் 19 வருடங்களுக்கு பிறகு இப்போது தன் இரண்டாவது நாவலை எழுதி முடித்து விட்டார். நாவலின் தலைப்பை பார்க்கும் போது அது பின்நவீனத்துவ பாணியிலான அரசியல் பகடியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன்.

நான் நிச்சயம் இந்த இரண்டாவது நாவலை படிக்க விரும்புகிறேன். என்னதான் ராய் மீது விமர்சனங்கள் வைத்தாலும் எனக்கு அவர் மொழி மீது மரியாதை உண்டு. முதல் நாவலில் அவர் பயன்படுத்திய நான்லீனியர் ஸ்டைல், சொற்களை பயன்படுத்துவதில் ஒரு விளையாட்டுத்தனம், குழந்தைகளின் மனநிலையை, சிதைவுற்ற சமகால மனநிலையை சுட்டும் விதம் நினைவுகளை அவர் கலைத்து, சிதைத்து மூட்டமாய் சித்தரித்த விதம் என்னை கவர்ந்தது. 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...