Skip to main content

எழுத்தாளனின் கலாச்சார அதிகாரம்

நேற்று நண்பர் சர்வோத்தமனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் எழுத்தாளர்களின் கலாச்சார அதிகாரம் பற்றி குறிப்பிட்டார். எழுத்தில் பெரும் சமூக அங்கீகாரமோ பணமோ இல்லை. சொல்லப் போனால் இத்தனை பேர் வருடாவருடம் மலைக்கு மாலை போடுவது போல் நிறைய விரதங்கள் இருந்து எழுதி புத்தகம் போட்டு, அவர்களில் சிலர் கூடுதலாய் செலவு செய்து புத்தகத்தை புரமோட் செய்வது எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் அபத்தமாய் உள்ளது. இதில் இருந்து அவர்களுக்கு கிடைப்பது என்ன? கலாச்சார அதிகாரம் என்றார் சர்வோத்தமன்.
இதையே என் நண்பர் ஒருவர் வாசகர்களின் பேரன்பு என்பார். இன்னொருவர் தோழமை என்பார். மற்றொருவர் பிரியம் என்பார். கலாச்சார அதிகாரம் என்ற சொல் எனக்கு சரியாகப் படுகிறது.
அதாவது ஒரு கூட்டத்தில் யாரென்றே தெரியாத பத்து பேர் உங்களை தேடி வந்து கைகுலுக்கும் போது, புத்தகத்தில் கையெழுத்து வாங்கும் போது ஒரு கிளுகிளுப்பு ஏற்படுகிறது. அல்லது மற்றொரு எழுத்தாளனை பத்து பேர் சூழ்ந்து பேரன்பை காட்டும் போது நமக்கு பொறாமை ஏற்படுகிறது. உங்கள் சொல்லுக்கு என்று ஒரு மதிப்பு, அதைப் படிக்க, கேட்க என ஆட்கள். எவ்வளவு குறைவான எண்ணிக்கை என்றாலும் இது ஒரு அதிகாரம் தான். தெருவில் இஸ்திரி போடுகிறவருக்கோ ஓட்டல் கல்லாவில் இருப்பவருக்கோ இது இல்லை.

எனக்கு எப்போதும் இந்த அதிகாரம் கூச்சம் ஏற்படுத்தும். நேற்று வங்கிக்கு பணம் எடுக்க போயிருந்தேன். அங்கு என்னைப் போன்ற ஒரு வாடிக்கையாளர் என்னை தேடி வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். என் வாசகர் என்றார். என் பிளாகை படிப்பதாய் சொன்னார். உயிர்மை கூட்டங்களுக்கு தவறாமல் வருவதாய் சொன்னார். அவருக்கு என்னை விட இருபது வருடங்கள் மூப்பிருக்கும். நிறைய அனுபவங்கள் கொண்டவர். வெளிநாட்டுக்கு சென்று இருபது வருடங்கள் உழைத்து விட்டு இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு இந்த உலகைப் பற்றி, இந்த வாழ்க்கை பற்றி, என்னை விட பத்து மடங்கு அதிகமாய் தெரிந்திருக்கும். அவருக்கு தெரியாத ஒன்றையும் நான் சொல்லி விடப் போவதில்லை. அவருக்கு தெரிந்ததை ஒரு புது கோணத்தில் எழுதியிருக்கலாம். அதனாலே அவர் தன்னை என் வாசகன் என அறிமுகப்படுத்தியதும் எனக்கு கூச்சம் ஏற்பட்டது. அந்த சந்தர்பத்தில் கிடைக்கும் அங்கீகாரத்துக்கு பொருத்தமானவனாய் நான் என்னை உணரவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு.
எழுத்தாளனின் அதிகாரம் அவனில் இருந்து வரவில்லை என நினைக்கிறேன். இந்த அதிகாரம் எழுத்தின் அதிகாரம். எழுத்தாளனுக்கு அது de facto ஆக கிடைக்கிறது. வில்லை யார் எடுத்தாலும் வில்லாளன் தான். வில்லின் கம்பீரமும், பலமும், அதன் மீது பிறருக்கு உள்ள திகைப்பும் உங்களுக்கு உரியதாகிறது. குழந்தையாய் இருக்கையில் உங்களை எல்லாரும் அள்ளிக் கொஞ்சுவார்கள். அன்பை பொழிவார்கள். உங்கள் குற்றங்களை, சேட்டைகளை, பிடிவாதத்தை எவ்வளவு முன்கோபம் கொண்டவரும் பொறுத்து ஏற்பார்கள். ஆனால் வளர்ந்த பின் உங்களை – அதே உங்களை – ஏன் யாரும் அள்ளி கொஞ்சுவதில்லை? அப்படி என்றால் அந்த அன்பு, செல்லம் கொஞ்சம், ஆசை எல்லாம் உங்கள் மீதானதா அல்லது குழந்தை எனும் பிம்பம் மீதானதா?
 ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறது. அதை சூடிக் கொண்டதும் அதற்கு தோதான அன்பு, மரியாதை, அங்கீகாரம் எல்லாம் கிடைக்கிறது. ஒரு குழந்தைக்கு உள்ள அதிகாரம் வளர்ந்தவருக்கு இருப்பதில்லை. எழுத்தாளனுக்கும் இதுவே நேர்கிறது. அவனால் குழந்தை ஆக முடியாது. அதனால் அவன் எழுத்தாளன் ஆகிறான்.
குழந்தையின் அதிகாரம் என்பது ஆதியில் குழந்தைகளுக்கு என ஏற்பட்ட பிம்பத்தில் இருந்து வருகிறது. அது நம் மரபணுவில் பதிந்திருக்கிறது. தொன்மங்களை பற்றி ஆராய்ந்த கார்ல் யுங் எவ்வாறு பெரும்பாலான மரபுகளில் தெய்வத்தை குழந்தையாக, அதுவும் கைவிடப் பட்ட, ஆபத்தில் இருக்கும் குழந்தையாக, பார்க்கும் வழக்கம் உள்ளது என பேசுகிறார். அவர் கர்த்தரில் இருந்து கிருஷ்ணர் வரை உதாரணம் காட்டுகிறார். நமக்கு எந்த குழந்தையை பார்த்தாலும் அள்ளி கொஞ்ச தோன்றுகிறது. ஒரு யுத்தகளத்தில் ஒரு குழந்தை அனாதரவாய் நிற்கும் புகைப்படம் பார்த்தால் மனம் பதறுகிறது. அன்று முழுக்க அந்த சித்திரம் நம்மை தொந்தரவு செய்கிறது. குழந்தைகளுக்கு சமூகத்தில் உள்ள இடம் என்பது அது ஒரு குழந்தையாய் இருப்பதனால் மட்டுமே விளைகிற ஒன்று. அந்த தனிப்பட்ட குழந்தையின் குணநலன்களினால் அதற்கு கிடைக்கிற சிறப்பு அங்கீகாரம் அல்ல இது.
குழந்தை பிம்பத்தின் மீது நமக்குள் கனிவு மரபணு ரீதியானது என்றேன். இது மனிதனுக்கே உரித்தான சுபாவம் எனத் தோன்றுகிறது. குழந்தை என்றில்லை குட்டிக் குரங்கு, விழுந்து கிடக்கும் காக்காய் குஞ்சு, ரோட்டில் அழகாய் துள்ளி வரும் நாய்க்குட்டி என எதைப் பார்த்தாலும் தூக்கி உதவ, கவனிக்க, சீராக்க தோன்றுகிறது. ஆனால் ஒரு அம்மா நாய் தனது குட்டிக்கு மூன்று மாதங்கள் ஆனதும் அதை துரத்தி விடும். ஆனால் மனிதன் மட்டுமே வளர்ந்த பிறகும் தன் குழந்தையை ஒரு “குழந்தையாகவே” பார்க்கிறான். இதற்கு ஒரு காரணம் வேறு எந்த மிருகத்தை விடவும் மனிதக் குழந்தைகள் வளர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன என்பது. 15 ஆண்டு காலம் என எடுத்துக் கொண்டால் அதுவரை ஒரு மனிதக் குழந்தை பாதுகாப்பற்ற, பலவீன நிலையில் தான் இருக்கிறது. அதனாலே கூட நமக்கு நம்மை அறியாமலே சிறியதாய், பலவீனமாய் தோன்றுகிற எல்லாவற்றின் மீது ஒரு அக்கறை, பிரியம், கவனம், ஆசை ஏற்படுகிறது என நினைக்கிறேன். (இந்த உணர்வு இந்த சமூகத்தில் குழந்தைகளை பாதுகாக்க உதவுகிறது.)
சரி, எழுத்தாளனுக்கு வருவோம். ஒரு காலச்சுவடிலோ உயிர்மையிலோ உங்கள் கதை வெளியாகும் போது அப்பத்திரிகையின் அதுவரையிலான இதழ்களில் எழுதிய அத்தனை மகத்தான எழுத்தாளர்களின் வெளிச்சமும் உங்கள் எழுத்தின் மீது விழுகிறது. நீங்கள் வெளிப்படுத்தும் கவித்துவம், சமூகக் கோபம், மிடுக்கு, கம்பீரம் அனைத்துமே உங்களுக்கு முன்பு எழுதியவர்களின் சொற்களின் வெளிச்சத்தால் அதிக கவனம் பெறுகின்றன. ஒரு கண்ணாடியின் வெளிச்சத்தை மற்றொரு கண்ணாடி வாங்கி பிரதிபலிப்பது போல் இது நிகழ்கிறது. நீங்கள் கவிதை நூல் வெளியிடும் போது இதுவரை தமிழில் சாதித்த அத்தனை கவிகளின் மதிப்பும் அங்கீகாரமும் உங்கள் மீதும் இயல்பாக கவிகிறது. ஒரு சிறுகதையாளனாய் உங்களை அறியப்படுத்தும் போது நீங்கள் பெறும் கலாச்சார அதிகாரம் என்பது உங்களுடையது அல்ல. புதுமைப்பித்தனின், அசோகமித்திரனின், இமையத்தின், சு.ராவின், எஸ்.ராவின், ஜெ.மோவின் அத்தனை பிம்பங்களும் உங்களுக்கு பின்னால் வந்து நிற்கின்றன. என் ஒவ்வொரு சொல்லுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் எனக்கு முன் எழுதப்பட்ட லட்சக்கணக்கான சொற்களில் இருந்து வருகின்றன. இந்த சமூகத்தில் எனக்கு முன்பு பல எழுத்தாளர்கள் எழுத்தாளன் எனும் பிம்பத்திற்கு ஒரு மரியாதையை (பெரும் புகழ் இல்லாவிட்டாலும்) ஏற்படுத்தி இருக்கிறார்கள். எழுத ஆரம்பித்ததும் எனக்கும் அது கிடைத்து விடுகிறது. என் கைகளில் சுடர் விடும் இந்த ஒளி என்னுடன் கைகோர்க்கும் எவருக்கும் கிடைத்து விடும். இந்த சங்கிலித் தொடர் முடிவற்றது.
இதனால் தான் என்னை விட அறிவும் அனுபவமும் மிகுந்த ஒரு ஆள் என்னை தன் வாசகர் என கூறிக் கொள்ள துணிகிறார். அவர் என் வாசகர் அல்ல. நான் கையாளும் மொழியின், அதன் பின் உள்ள லட்சக்கணக்கான சொற்களில் உறைந்துள்ள அறிவின், உணர்ச்சிகளின், குறியீடுகளின் வாசகர். எப்படி காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி காந்தி இல்லையோ அதே போல் இந்த பிம்பம் என்னுடையது அல்ல. நான் இதில் தற்காலிகமாய் குடியிருக்கும் ஒருவன். அதனாலே எனக்கு கூச்சம் ஏற்படுகிறது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...