Skip to main content

முடிவுக்கு வரும் கிரிக்கெட்டோகிராஃபி தொடர்

குமுதத்தில் நான் எழுதி வந்த கிரிக்கெட்டோகிராஃபி தொடர் முடிவுக்கு வருகிறது. 60வது கட்டுரையாக சச்சின் பற்றி எழுதுகிறேன். இது ஏற்கனவே திட்டமிட்டது: இறுதியாக முத்திரையாக சச்சினைப் பற்றி எழுத வேண்டும் என இத்தொடர் துவங்கிய போதே நினைத்தேன். ஆனால் சச்சினுக்கு முன்பு காம்பிளி பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் காம்பிளியை மட்டுமே தவற விட்டேன்.

நான் ஸ்டைலையும் அதிரடியையும் மிக முக்கியமான நினைப்பவன். அதனால் எனக்கு பார்க்கப் பிடிக்காத வீரர்களைப் பற்றி எழுத மிகவும் தயங்கினேன். காலிஸ் பற்றி எழுதவில்லை. ஆனால் சடகோபன் ரமேஷ் பற்றி எழுதினேன். பொலாக்கை தவிர்த்தேன். ஆனால் ஆலன் டொனால்டை கொண்டாடினேன். மேலும், நான் நேரலையாக பார்க்காத வீரர்களைப் பற்றியும் எழுதவில்லை. ஏனெனில் நான் எழுதுகிற வீரர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிரியமானவர்களாய் இருக்க வேண்டும். பார்த்து ரசித்து எனக்குள் ஊறியவர்களாக இருக்க வேண்டும். கேள்விப்பட்டு படித்து அறிந்து கொண்டவர்களாய் இருக்க கூடாது என நினைத்தேன். கவாஸ்கர், டெஸ்மெண்ட் ஹெயின்ஸ் போன்ற சில முக்கிய நட்சத்திரங்களை இவ்வாறு தவிர்த்தேன்.
இத்தொடர் 25 வாரங்களுடன் முடியும் என்றே நினைத்தேன். ஆனால் தொடர்ந்து எழுதத் தூண்டிய ப்ரியா கல்யாணராமன் 60 வாரம் வரை இதை கொண்டு செல்ல பிரதான காரணமாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். நான் அவரை இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் ரொம்ப கூலான, துணிச்சலான மனிதர் என அவதானிக்கிறேன். இத்தொடரை நிறுத்தும்படி அவருக்கு வற்புறுத்தல்களை சிலர் அளித்த போது அவர் பிடிவாதமாய் என்னை தொடர்ந்து எழுத வைத்தார்.
இத்தொடரில் நான் கற்றுக் கொண்டது என்ன? 400 வார்த்தைகளுக்குள் எழுதக் கற்றுக் கொண்டேன். வணிகப் பத்திரிகையில் பதற்றமில்லாமல் ஒரு வருடத்திற்கு மேல் எழுத பழகிக் கொண்டேன். தகவல்களை குறைத்து அதிகமான அலசலும் அவதானிப்புகளுடனும் எழுதினேன். ஆரம்பத்தில் இத்தொடரை எப்படி வடிவமைப்பது என எனக்கு சில குழப்பங்கள் இருந்தது. போகப் போக எனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டேன்.எனக்கு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை கதையாய் சொல்லிக் கொண்டு போவதில் அலுப்புண்டு. ஏனென்றால் எல்லா வீரரின் கதையும் நம்மைப் போன்றதே. ஷோயப் அக்தர், காம்பிளி போன்ற சிலர் வித்தியாசமான போராட்டமான பின்னணியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் சேவாக் போன்ற ஒருவரின் சாகசங்கள் அவரது வாழ்க்கையில் இல்லை. களத்திலேயே இருந்தது. நான் ஒரு வீரரின் பலம் என்ன, தொழில்நுட்பம் என்ன, குறை என்ன, அவரை எப்படி வகைப்படுத்தலாம் என்றே அலச விரும்பினேன். 400 வார்த்தைகளுக்குள் அதை செய்வது மிக மிக சிரமம். என்னால் இயன்றை செய்தேன் என திருப்தி உள்ளது.
குமுதத்துக்காக என் மொழியையோ பாணியையோ நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் முன்னோடியாய் கருதுகிற எந்த எழுத்தாளனும் வணிகப்பத்திரிகையில் தொடர் எழுதிய போது தன் மொழியை மாற்றவில்லை. அதற்கு அவசியமில்லை என நான் இத்தொடருடன் புரிந்து கொண்டேன்.
நான் 2007இல் உயிர்மையின் இணைய பத்திரிகைக்காக எழுத ஆரம்பித்த போது மனுஷ் என்னிடம் சொன்னார்: “நீங்கள் இன்னும் இரு வருடங்களுக்குள் வணிகப் பத்திரிகைகளில் எழுதப் போகிறீர்கள். உங்கள் ஸ்டைல் வெகுஜன் எழுத்துக்கு நன்றாய் பொருந்தும்.” எனக்கு அவர் அப்படி சொன்னது வியப்பாய் இருந்தது. ஏனென்றால் வணிக மீடியா என் இலக்காகவே இருந்ததில்லை. நான் தொடர்ந்து இடைநிலை இதழ்களில் எனக்கு மனதுக்கு கிளர்ச்சியான மூளைக்கு சவால் அளிக்கிற விசயங்களைப் பற்றித் தான் எழுதினேன். யாருக்காகவும் நான் என்னை மாற்றிக் கொண்டதில்லை. இதை எழுதினால் இவருக்கு பிடிக்குமா என குழம்பவில்லை. எனக்கு சுவாரஸ்ய்மாய் பட்டால் வாசகனும் ஆர்வமாய் படிப்பான் என நம்பினேன்.
தினமணியிலும் குமுதத்திலும் எழுத வாய்ப்புகள் கிடைத்த போது அதை தவற விட விரும்பவில்லை. அந்த அனுபவம் எப்படி இருக்கும் என நெருங்கிப் பார்க்க விரும்பினேன். மனுஷின் ஆருடம் பத்து வருடங்களுக்கு பிறகு பலித்தது. ஆக, இந்த தொடர் ஒருவேளை புத்தகமாய் வருமானால் நான் அவருக்கே இதை சமர்ப்பிப்பேன்.
மொழியை பொறுத்தமட்டில் நான் இணையத்தின் குழந்தை. இணையத்தில் எழுதிப் பழகும் யாருக்கும் சரளத்தன்மை கிடைக்கும். ஆக இடைநிலை இதழ்களில் இருந்து வெகுஜன இதழுக்கு தாவுவது ஒன்றும் அசகாய சாதனையாக இல்லை. இதையே சுரேஷ் கண்ணனுக்கும் சொல்லலாம். நாங்கள் இருவரும் உயிர்மையிலும் எழுதுகிறோம், குமுதத்திலும் எழுதுகிறோம். அதே மொழி, அதே அணுகுமுறை. இரண்டுக்கும் வெவ்வேறு வாசகர்கள் என்பதால் எழுத்தாளன் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.

நான் மூன்று வருடங்கள் முழுநேரமாய் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் எனக்கு நிறைய அவகாசம் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் பொறுமையாக புரூஸ் லீ புத்தகமும் ரசிகன் நாவலும் எழுதினேன். அதன் பின்னர் நான் ஒரு கட்டாயம் காரணமாய் வேலைக்கு செல்ல துவங்கிய போது இரண்டு தொடர் வாய்ப்புகளும் (தினமணி + குமுதம்) அமைந்தன. அதுவும் நான் ஒரு நேர்முகத்துக்கு சென்று வேலைக்கு தேர்வாகி வீட்டுக்கு வந்து உட்கார்ந்த போது சரியாய் ப்ரியா கல்யாணராமன் அழைத்து “கிரிக்கெட் பற்றி தொடர் எழுதுகிறீர்களா?” எனக் கேட்டார். அடுத்த வாரம் வேலைக்கு போக வேண்டும். அடுத்த வாரம் ஒரு தொடரையும் ஆரம்பிக்க வேண்டும்.
வேலை செய்து கொண்டே அவ்வப்போது பேஸ்புக்கில் எழுதலாம். உயிர்மையில் கட்டுரை கூட எழுதலாம். ஆனால் வாரத் தொடர் எழுதுவது மிகவும் சிரமம். முழுநாளும் வேலை செய்த அலுப்பில் தூங்கலாம் என கண்கள் சொக்கும். ஆனால் இரவு முழித்திருந்து ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் எனக்கு எழுத மனநிலை அமைய நேரம் பிடிக்கும். அதற்காக வார்ம் அப்பாக பிளாகில் ஒரு கட்டுரை எழுதுவேன். அதன் பிறகு அதே சரளத்துடன் என் தொடர் கட்டுரையை ஆரம்பிப்பேன். இரவு உறங்க செல்லும் போது மணி மூன்றாகி விடும். காலையில் லேட்டாக எழுந்து எப்படிடா இன்று வேலைக்கு செல்வது என கண்ணை திரும்பும் போது இரண்டாவது பத்திரிகையின் எடிட்டர் அழைத்து “ஏன் இன்னும் பத்தியை அனுப்பவில்லை? அரைமணியில் அனுப்புங்கள்” என்பார். அதற்கு என்ன எழுத வேண்டும் என யோசித்தபடி சாப்பிட்டு பல் தேய்த்து குளித்து விட்டு அவசர ஆராய்ச்சி செய்து வேகவேகமாய் அதை எழுதி அனுப்பி அலுவலகம் போய் அமரும் போது எப்போதுடா ராத்திரி வரும், படுக்கையில் விழலாம் என இருக்கும். அதேநேரம் இந்த சவால் ஒரு ஜாலியான அனுபவமாகவும் இருந்தது.

இறுதியாக ஒரு விசயம்: நம் மீடியாவுக்கு விளையாட்டு பற்றி எழுத ஆட்கள் கைவசம் இல்லை. அதனால் என்னை எழுத வைக்கிறார்கள். (இப்போது ஐ.பி.எல் பற்றி வாராவாரம் எழுத இரு பத்திரிகைகளில் கேட்டிருக்கிறார்கள்!) அடுத்த பத்து வருடங்களில் என் இடத்தில் கிரிக்கெட் நிபுணர்கள் தமிழில் வந்து விடுவார்கள் என நம்புகிறேன். (பேஸ்புக்கிலும் பிளாகிலும் கிரிக்கெட் பற்றி ஆர்வமாய் எழுதும் புது ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நம் எடிட்டர்கள் கண்ணில் படவில்லை.) அதுவரை நான் இந்த தேசிய நெடுஞ்சாலையில் என் இலக்கிய காளை மாட்டு வண்டியை ஓட்டுவேன். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...