Skip to main content

மதிப்பெண் போடும் வியாதி


தமிழ் விமர்சனங்களில் நான் வெறுக்கும் வரி ஒன்று உண்டு: “ஆனால் இப்படைப்பு இலக்கியமாகுமா எனக் கேட்டால்… ” என ஆரம்பிப்பார்கள். ஒரு படைப்பு இலக்கியமாகுமா என ஏன் இவ்வளவு மெனெக்கெட்டு யோசிக்க வேண்டும்? ஏன் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க உங்களுக்கு இவ்வளவு அவசரம்? அதென்ன தேர்வுத் தாளா?

ஒரு படைப்பு எனக்கு எப்படியான அனுபவத்தைத் தருகிறது, அது எனக்கு மனத்திறப்பை அளிக்கிறதா, உற்சாகத்தை, திளைப்பை, குதூகலத்தை தருகிறதா, என் மனதை சிதறடிக்கும் அல்லது ஒருங்கிணைக்கும் அனுபவத்தை தருகிறதா, என் மொழிக்குள் புத்தம் புதிதான ஒரு நுண்ணுணர்வை கொணர்கிறதா ஆகிய கேள்விகள் தாம் எனக்கு முக்கியம். இப்படியான விசயங்களை எந்த பிரதி செய்தாலும் அதைப் பாராட்டுவேன்; கொண்டாடுவேன். அது ஒரு கச்சிதமான கவிதையா, துல்லியமான சிறுகதையா, இலக்கிய ஆகிருதி பெற்ற நாவலா என்றெல்லாம் கேட்க மாட்டேன்.
எழுத்தை ஒரு தேர்வு போல், ஒரு பந்தயம் போல் பார்ப்பது ஒரு வியாதி எனத் தோன்றுகிறது. அந்த பிரதி மீது ஒருவித அதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதற்கு உதாரணம் ஒன்று தருகிறேன்.
ஒரு அழகான பெண்ணை காண்கிறீர்கள். மயங்கி பின் செல்கிறீர்கள். சில நிமிடங்கள் இருவரும் உரையாடுகிறீர்கள். அவளை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகிறது. அவள் தரும் அக்கணத்து அனுபவமே அவள். ஆனால் அது போதாது என முடிவு செய்து அவள் பெண் தானா என சோதிக்க தலைப்படுகிறீர்கள். அவளை தனியாக அழைத்து சென்று ஒவ்வொரு ஆடையாக கழற்றி பார்க்கிறீர்கள். உறுப்புகள் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கிறீர்கள். இது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்? ஒரு படைப்பு இலக்கியம் தானா எனக் கேட்கும் போது நீங்கள் இப்படியான ஒரு காரியத்தையே செய்கிறீர்கள்.
ஒரு பெண்ணுக்கு பர்தா மாட்டி விட்டு திருப்தி கொள்பவருக்கும், முதலிரவுக்கு அடுத்த காலை மணப்பெண்ணின் பிறப்புறுப்பில் குருதி வெளிப்பட்டதா என சோதிப்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு படைப்புக்கு கலை அமைதி என ஒரு சங்கதி உண்டென அறிவேன். ஆனால் அதுவே அப்படைப்பின் ஆதார விசயம் அல்ல. உடலின் நெளிவு, சுளிவு போன்றதே கலை அமைதி. ஒரு படைப்பு கரடுமுரடாய், கச்சிதமின்றி, பிசிறுகளுடன் கூட இருக்கலாம். அது ஒரு குறை அல்ல. கலை அமைதி முகத்தில் உள்ள மீசை போல. அதை திருத்தலாம். முறுக்கியும் தாழ்த்தியும் அழகு காட்டலாம். அந்தளவு தான் அது முக்கியம்.
ஒரு படைப்பு குறைபட்டதாய் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு படைப்பு கச்சிதமாக, நிறைவானதாயும் இருக்க இயலாது. அப்படி இருப்பதாய் தோன்றினால் அது பாவனை மட்டுமே. செயற்கையாய் பண்ணி மாட்டின விக் மட்டுமே. காற்றடித்தால் விக் பறந்து போய் சொட்டை தெரியும்.
 உதாரணமாய், ஜெயமோகன் மற்றும் தி.ஜாவின் முக்கியமான நாவல்கள் பல பிசிறுகளும், மிகைகளும், கட்டின்றி நெகிழும் தன்மையும் கொண்டவையே. புதுமைப்பித்தனின் கதைகளும் அவ்வாறானவையே. அசோகமித்திரனின் மிகக் கச்சிதமாய் செய்யப்பட்டதாய் தோன்றும் “தண்ணீர்” நாவல் கூட குறைகள் கொண்டதே. குறைநிலையில் இருந்து நிறைநிலை நோக்கின தாவலை மட்டுமே ஒரு படைப்பு மேற்கொள்ள முடியும். அது என்றுமே “அதை” அடைய முடியாது. ஆக, “சரியான அளவுகளும் பொருத்தங்களும்” கொண்ட “சர்வ லட்சணங்களும் பொருந்திய” இலக்கிய பிரதியே உலகில் இல்லை.
ஒரு விமர்சகனின் பணி மதிப்பிடுவதாய் என்றுமே இருக்கக் கூடாது. ஒரு படைப்பின் மீது அவன் கொள்ளும் அவதானிப்புகளை குறிப்பிடுவதும், அப்படைப்பை தன் கற்பனை மற்றும் அறிவு மூலம் அவன் எந்த எல்லைக்கு கொண்டு சென்று விரிவுபடுத்துகிறான் எனக் காட்டுவதுமே அவன் பணி. தன்னை அப்படி செய்ய ஈர்க்காத படைப்பை அவன் விமர்சிக்கவே கூடாது. இதை அ.முத்துலிங்கம் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எனக்கு பின்னர் அதுவே சரியான அணுகுமுறை எனப்பட்டது.
எல்லா படைப்புகளையும் பாராட்ட வேண்டுமென நான் கூறவில்லை. தெருமுனையில் நின்று பெண்களை வேடிக்கை பார்க்கிறீர்கள். எந்த பெண் மனதை கவர்கிறாளோ அவள் மீது உங்கள் கண்கள் நிலைக்கும். சற்று நேரம் ரசித்து விட்டு விலகுவீர்கள். ஆனால் உங்களை கவராத ஒவ்வொரு பெண்ணாக சென்று பார்த்து “உன் முகம் சரியில்லை”, “நீ அவலட்சணம்”, “நீயெல்லாம் பெண்ணே இல்லை” என சொல்வீர்களா? மாட்டீர்கள் தானே? பின் அதை ஏன் ஒரு படைப்பின் மீது செய்கிறீர்கள்? அது அநாகரீகம் அல்லவா? அது வன்முறை அல்லவா?
நான் என்னை கவராத படைப்புகளை பற்றி எழுதுவதே இல்லை.
மதிப்பெண் இடுவது வாசகனை வழிநடத்த பயன்படும் அல்லவா? இல்லை. அப்படி நினைப்பது விமர்சகனின் மிகைநம்பிக்கையை, அகந்தையை காட்டுகிறது. தனக்கு முக்கியமானது பிறருக்கு அவ்வாறே இருக்கும் என அவன் எப்படி முடிவு செய்யலாம்? வழிநடத்துபவன் அவன் என்றால் வாசகர்கள் எல்லாம் குருடர்களா? அவன் அவர்களின் கைத்தடியா? என்ன அபத்தம்!
மேலும் ஒரு படைப்பு மிக நெகிழ்வானது. பல காரணங்களால் ஒரு வாசகனுக்கு புது திறப்புகளை ஒரு கட்டத்தில் கொடுக்கும் ஒரு படைப்பு இன்னொரு கட்டத்தில் சட்டென மூடிக் கொள்ளும். நிலைத்த மதிப்பென ஒன்று இல்லவே இல்லை.
நிலைத்த மதிப்பு என ஒன்று செவ்வியல் படைப்புகளுக்கு இல்லையா? இல்லை. அப்படி இருப்பதாய் நாமே கற்பிதம் செய்கிறோம். Metaphysical கவிஞர்கள் எனச் சிலர் பதினாறாம் நூற்றாண்டில் செயல்பட்டார்கள். அவர்களை கேலி செய்யும் பொருட்டே metaphysical (தேவையின்றி அரூபமாய் எழுதுகிறவர்கள்) என பெயரிட்டார்கள் ஆங்கில விமர்சகர்கள். முன்னூறு, நானூறு வருடங்கள் யாருமே அவர்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் டி.எஸ் எலியட் அவர்களின் கவிதைகளின் நவீனத்தன்மையை, நுண்ணுணர்வை கொண்டாடினார். சட்டென அக்கவிதைகள் செவ்வியல் தகுதி பெற்றன. ஆனால் இன்று மீண்டும் அவை இருட்டுக்கு சென்று விட்டன. இப்படி எத்தனை எத்தனையோ படைப்புகள் பாதாளத்துக்கும் சொர்க்கத்துக்குமாய் பயணித்தபடி இருக்கின்றன. இங்கு எதுவும் நிலையல்ல.

ஆகையால் “இது இலக்கியமாகுமா?” எனக் கேட்டு இலக்கிய வஹாபியர் போல் செயல்படாதீர்கள். ஒரு நல்ல இலக்கிய விமர்சகன் ஒரு சூபி ஞானியைப் போல் இருக்க வேண்டும். ஒரு சூபி ஞானிக்கு எல்லாமே இறைவன் தான். ஒரு இலக்கிய விமர்சகனக்கும் ….

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...