Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மதிப்பெண் போடும் வியாதி


தமிழ் விமர்சனங்களில் நான் வெறுக்கும் வரி ஒன்று உண்டு: “ஆனால் இப்படைப்பு இலக்கியமாகுமா எனக் கேட்டால்… ” என ஆரம்பிப்பார்கள். ஒரு படைப்பு இலக்கியமாகுமா என ஏன் இவ்வளவு மெனெக்கெட்டு யோசிக்க வேண்டும்? ஏன் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க உங்களுக்கு இவ்வளவு அவசரம்? அதென்ன தேர்வுத் தாளா?

ஒரு படைப்பு எனக்கு எப்படியான அனுபவத்தைத் தருகிறது, அது எனக்கு மனத்திறப்பை அளிக்கிறதா, உற்சாகத்தை, திளைப்பை, குதூகலத்தை தருகிறதா, என் மனதை சிதறடிக்கும் அல்லது ஒருங்கிணைக்கும் அனுபவத்தை தருகிறதா, என் மொழிக்குள் புத்தம் புதிதான ஒரு நுண்ணுணர்வை கொணர்கிறதா ஆகிய கேள்விகள் தாம் எனக்கு முக்கியம். இப்படியான விசயங்களை எந்த பிரதி செய்தாலும் அதைப் பாராட்டுவேன்; கொண்டாடுவேன். அது ஒரு கச்சிதமான கவிதையா, துல்லியமான சிறுகதையா, இலக்கிய ஆகிருதி பெற்ற நாவலா என்றெல்லாம் கேட்க மாட்டேன்.
எழுத்தை ஒரு தேர்வு போல், ஒரு பந்தயம் போல் பார்ப்பது ஒரு வியாதி எனத் தோன்றுகிறது. அந்த பிரதி மீது ஒருவித அதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதற்கு உதாரணம் ஒன்று தருகிறேன்.
ஒரு அழகான பெண்ணை காண்கிறீர்கள். மயங்கி பின் செல்கிறீர்கள். சில நிமிடங்கள் இருவரும் உரையாடுகிறீர்கள். அவளை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகிறது. அவள் தரும் அக்கணத்து அனுபவமே அவள். ஆனால் அது போதாது என முடிவு செய்து அவள் பெண் தானா என சோதிக்க தலைப்படுகிறீர்கள். அவளை தனியாக அழைத்து சென்று ஒவ்வொரு ஆடையாக கழற்றி பார்க்கிறீர்கள். உறுப்புகள் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கிறீர்கள். இது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்? ஒரு படைப்பு இலக்கியம் தானா எனக் கேட்கும் போது நீங்கள் இப்படியான ஒரு காரியத்தையே செய்கிறீர்கள்.
ஒரு பெண்ணுக்கு பர்தா மாட்டி விட்டு திருப்தி கொள்பவருக்கும், முதலிரவுக்கு அடுத்த காலை மணப்பெண்ணின் பிறப்புறுப்பில் குருதி வெளிப்பட்டதா என சோதிப்பவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு படைப்புக்கு கலை அமைதி என ஒரு சங்கதி உண்டென அறிவேன். ஆனால் அதுவே அப்படைப்பின் ஆதார விசயம் அல்ல. உடலின் நெளிவு, சுளிவு போன்றதே கலை அமைதி. ஒரு படைப்பு கரடுமுரடாய், கச்சிதமின்றி, பிசிறுகளுடன் கூட இருக்கலாம். அது ஒரு குறை அல்ல. கலை அமைதி முகத்தில் உள்ள மீசை போல. அதை திருத்தலாம். முறுக்கியும் தாழ்த்தியும் அழகு காட்டலாம். அந்தளவு தான் அது முக்கியம்.
ஒரு படைப்பு குறைபட்டதாய் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு படைப்பு கச்சிதமாக, நிறைவானதாயும் இருக்க இயலாது. அப்படி இருப்பதாய் தோன்றினால் அது பாவனை மட்டுமே. செயற்கையாய் பண்ணி மாட்டின விக் மட்டுமே. காற்றடித்தால் விக் பறந்து போய் சொட்டை தெரியும்.
 உதாரணமாய், ஜெயமோகன் மற்றும் தி.ஜாவின் முக்கியமான நாவல்கள் பல பிசிறுகளும், மிகைகளும், கட்டின்றி நெகிழும் தன்மையும் கொண்டவையே. புதுமைப்பித்தனின் கதைகளும் அவ்வாறானவையே. அசோகமித்திரனின் மிகக் கச்சிதமாய் செய்யப்பட்டதாய் தோன்றும் “தண்ணீர்” நாவல் கூட குறைகள் கொண்டதே. குறைநிலையில் இருந்து நிறைநிலை நோக்கின தாவலை மட்டுமே ஒரு படைப்பு மேற்கொள்ள முடியும். அது என்றுமே “அதை” அடைய முடியாது. ஆக, “சரியான அளவுகளும் பொருத்தங்களும்” கொண்ட “சர்வ லட்சணங்களும் பொருந்திய” இலக்கிய பிரதியே உலகில் இல்லை.
ஒரு விமர்சகனின் பணி மதிப்பிடுவதாய் என்றுமே இருக்கக் கூடாது. ஒரு படைப்பின் மீது அவன் கொள்ளும் அவதானிப்புகளை குறிப்பிடுவதும், அப்படைப்பை தன் கற்பனை மற்றும் அறிவு மூலம் அவன் எந்த எல்லைக்கு கொண்டு சென்று விரிவுபடுத்துகிறான் எனக் காட்டுவதுமே அவன் பணி. தன்னை அப்படி செய்ய ஈர்க்காத படைப்பை அவன் விமர்சிக்கவே கூடாது. இதை அ.முத்துலிங்கம் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எனக்கு பின்னர் அதுவே சரியான அணுகுமுறை எனப்பட்டது.
எல்லா படைப்புகளையும் பாராட்ட வேண்டுமென நான் கூறவில்லை. தெருமுனையில் நின்று பெண்களை வேடிக்கை பார்க்கிறீர்கள். எந்த பெண் மனதை கவர்கிறாளோ அவள் மீது உங்கள் கண்கள் நிலைக்கும். சற்று நேரம் ரசித்து விட்டு விலகுவீர்கள். ஆனால் உங்களை கவராத ஒவ்வொரு பெண்ணாக சென்று பார்த்து “உன் முகம் சரியில்லை”, “நீ அவலட்சணம்”, “நீயெல்லாம் பெண்ணே இல்லை” என சொல்வீர்களா? மாட்டீர்கள் தானே? பின் அதை ஏன் ஒரு படைப்பின் மீது செய்கிறீர்கள்? அது அநாகரீகம் அல்லவா? அது வன்முறை அல்லவா?
நான் என்னை கவராத படைப்புகளை பற்றி எழுதுவதே இல்லை.
மதிப்பெண் இடுவது வாசகனை வழிநடத்த பயன்படும் அல்லவா? இல்லை. அப்படி நினைப்பது விமர்சகனின் மிகைநம்பிக்கையை, அகந்தையை காட்டுகிறது. தனக்கு முக்கியமானது பிறருக்கு அவ்வாறே இருக்கும் என அவன் எப்படி முடிவு செய்யலாம்? வழிநடத்துபவன் அவன் என்றால் வாசகர்கள் எல்லாம் குருடர்களா? அவன் அவர்களின் கைத்தடியா? என்ன அபத்தம்!
மேலும் ஒரு படைப்பு மிக நெகிழ்வானது. பல காரணங்களால் ஒரு வாசகனுக்கு புது திறப்புகளை ஒரு கட்டத்தில் கொடுக்கும் ஒரு படைப்பு இன்னொரு கட்டத்தில் சட்டென மூடிக் கொள்ளும். நிலைத்த மதிப்பென ஒன்று இல்லவே இல்லை.
நிலைத்த மதிப்பு என ஒன்று செவ்வியல் படைப்புகளுக்கு இல்லையா? இல்லை. அப்படி இருப்பதாய் நாமே கற்பிதம் செய்கிறோம். Metaphysical கவிஞர்கள் எனச் சிலர் பதினாறாம் நூற்றாண்டில் செயல்பட்டார்கள். அவர்களை கேலி செய்யும் பொருட்டே metaphysical (தேவையின்றி அரூபமாய் எழுதுகிறவர்கள்) என பெயரிட்டார்கள் ஆங்கில விமர்சகர்கள். முன்னூறு, நானூறு வருடங்கள் யாருமே அவர்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் டி.எஸ் எலியட் அவர்களின் கவிதைகளின் நவீனத்தன்மையை, நுண்ணுணர்வை கொண்டாடினார். சட்டென அக்கவிதைகள் செவ்வியல் தகுதி பெற்றன. ஆனால் இன்று மீண்டும் அவை இருட்டுக்கு சென்று விட்டன. இப்படி எத்தனை எத்தனையோ படைப்புகள் பாதாளத்துக்கும் சொர்க்கத்துக்குமாய் பயணித்தபடி இருக்கின்றன. இங்கு எதுவும் நிலையல்ல.

ஆகையால் “இது இலக்கியமாகுமா?” எனக் கேட்டு இலக்கிய வஹாபியர் போல் செயல்படாதீர்கள். ஒரு நல்ல இலக்கிய விமர்சகன் ஒரு சூபி ஞானியைப் போல் இருக்க வேண்டும். ஒரு சூபி ஞானிக்கு எல்லாமே இறைவன் தான். ஒரு இலக்கிய விமர்சகனக்கும் ….

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...