Skip to main content

ஹெச்.ஜி ரசூலை காலம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது

Image result for ஹெச்.ஜி.ரசூல்

(ஜெயமோகனுக்கு அப்பாற்பட்டு) என்னை எழுத்தாளனாய் வடிவமைத்ததில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு: ஹெச். ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா, நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார். இவர்களில் ரசூல் அண்ணனும் ராஜ்குமார் அண்ணனும் ஒரே வகையானவர்கள்: மட்டற்று அன்பை பொழிபவர்கள். குழந்தையை போன்றவர்கள். ரசூல் அண்ணன் எனக்கு 20 வயதுக்கு மூத்தவர் எனலாம். ஆனால் அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் மறைவதற்கு முன்பு வரை தன் மூப்பை உணர்த்தாது சமவயது நண்பன் போன்றே நடந்து கொண்டார்.


எந்த கூட்டத்திலும் நண்பர்களில் யாராவது ரசூல் அண்ணனை கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர் இனிய புன்னகையுடன் அக்கேலியை ரசித்துக் கொண்டிருப்பார். கசப்பு, வெறுப்பு, எரிச்சல் ஆகியவற்றுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் நடந்து கொள்வார். எதையும் இனிக்க இனிக்க சர்க்கரையை அள்ளிப் போட்டு ருசிக்கத் தெரிந்த மனிதர் அவர்.

நான் அவரை முதலில் முஸ்தபா அண்ணனின் புத்தகக் கடையில் தான் பார்த்தேன். எனக்கு அப்போது வானம்பாடிக் கவிதையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரசூல் அண்ணன் வானம்பாடியில் இருந்து நவீன கவிதைக்கு நகர்ந்த காலம் அது. அவர் வானம்பாடிக் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் அத்தொகுப்பை படிக்கத் தரும்படி தொந்தரவு செய்வேன். அவர் அத்தொகுப்பு என் பார்வையில் படாதபடி பார்த்துக் கொள்வார்.

 கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களில் அக்காலத்தில் நான் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற, பாராட்டுகிற ஒரே நபர் ரசூல் அண்ணன் மட்டுமே. ஒரு இளைஞனை எந்த காரணம் கொண்டும் மனம் தளர செய்யக் கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார். அதனால் அவர் ஒரு போதும் என்னை விமர்சித்ததோ திருத்தியதோ இல்லை. நான் குப்பையாக ஒரு வரி எழுதிப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு சிறப்பான விசயத்தை கண்டு பாராட்ட அண்ணனுக்கு முடிந்தது. அதனாலே அக்கட்டத்தில் அவர் எனக்கு மிகவும் ப்ரியத்த்துக்கு உரியவராக இருந்தார்.

நான் அவரை சந்தித்த வேளையில் அவர் தனது கவிதைத்தொகுப்பு ஒன்றுக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதற்காக தனது சமுதாயத்தின் மீது கசப்போ வெறுப்போ அவர் காட்டவில்லை. ஒரு கண்ணியமான லட்சியவாதி போல அந்த சமூக புறமொதுக்கலை எதிர்கொண்டார். இன்றைய இலக்கிய குழுக்களில் யாராவது ஒருவர் தன் ஒற்றை வரி விமர்சிக்கப்பட்டால் கூட அதை வைத்து கச்சேரியே செய்து ஊரைக் கூட்டி புலம்பும், கசப்பை உமிழும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ரசூல் அண்ணன் தன்னை கடுமையாய் வெறுத்தவர்களையும் ஒரு புன்னகையுடனே எதிர்கொண்டார்.

பதின்பருவத்தில் நான் அவர் வீட்டுக்கு சென்றது, அவரது குடும்பத்தினரை சந்தித்ததெல்லாம் நினைவு வருகிறது. அவரது குடும்பத்தினரும் அவரைப் போன்றே இனிமையானவர்கள். அவரது மகள்களில் ஒருவர் பின்னர் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார் என்பது நினைவுள்ளது. அதைப் பற்றி அண்ணனுக்கு தனி பெருமை இருந்தது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு ஆட்டோ தான் ஒரே உபயம். வழக்கமாய் நான் செல்லும் ஆட்டோவில் ஒருநாள் பள்ளி முடிந்ததும் டியூசன் போகாமல் ரசூல் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டேன். என்னைக் காணவில்லை என அம்மா பயந்து விட்டார். ரசூல் அண்ணனுடன் மணிக்கணக்காய் பேசி விட்டு தாமதமாய் வீட்டுக்கு வந்து அர்ச்சனை வாங்கியது நினைவுள்ளது.

 ஒருமுறை மன்ற கூட்டமொன்றில் அவர் பின்நவீனத்துவ எழுத்து எப்படி இருக்கு வேண்டுமென சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: ”நாம் மென்மையான, மகத்துவமான காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சென்னை மாதிரியான ஒரு நகரத்தில் நடைபாதையில் தூங்கும் தம்பதியினர் உடலுறவு கொள்ளும் போது மானம், வெட்கம் என்றெல்லாம் தயங்குவார்களா? நாம் பதிவு செய்ய வேண்டிய அப்பட்டமான உண்மை இது போன்றது தான்.” பின்னர், பல வருடங்களுக்கு முன்பு, சென்னை கடற்கரையில் கூட்டங்கூட்டமாய் தங்கி இருக்கும் நரிக்குறவர்களைக் காணும் போது அண்ணன் சொன்னது எனக்கு நினைவு வரும்.
ஒரு எழுத்தாளனாய் எவ்வளவு கனிவுடன், பித்துடன், மகிழ்ச்சியுடன், குழந்தைத்தனமாய் இருக்க வேண்டும் என நான் அண்ணனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். அவரைப் போன்ற ஒரு அற்புத மனிதரை அறிய வாய்ப்பளித்ததற்கு கடவுளுக்கு நன்றி!

கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என அண்ணனின் மறைவை சொல்லலாம்.

ரசூல் அண்ணனின் இலக்கிய பங்களிப்பு எழுத்து சார்ந்தது மட்டும் அல்ல. அவர் பல நல்ல கட்டுரைகளை, கவிதைகளை எழுதியிருக்கிறார். சடங்குகள், நம்பிக்கைகளின் பண்பாட்டு தடங்கள் படைப்பில் எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர் அவரே. மன்றக் கூட்டங்களில் தொடர்ந்து கோட்பாட்டு நூல்களைப் படித்து அது குறித்து பேசியவராக இருந்து அவர் என்னைப் போன்றவர்களுக்கு புது உலகையே காணத் தந்தார். தனது மென்மையான, மயக்கும் வசீகரம் கொண்ட மொழியைக் கொண்டு அவர் மேலும் பல கதைகளை, நாவல் ஒன்றை எழுதியிருக்கலாம். ஆனால் பெரிய ஆசைகளோ சுயமுன்னெடுப்பு வெறியோ அற்றவராய் அவர் இருந்தார்.

 ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் அவனது எழுத்து மட்டும் அல்ல. அவனது வாழ்க்கையும், அதன் மூலம் அவன் தன் சூழலில் ஏற்படுத்தும் பங்களிப்பும் தான். அவ்விதத்தில் ரசூல் அண்ணன் ஒரு டினோசர் கால் தடத்தை தமிழில், குமரி மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறார்.


இந்த கணத்தில் என் கண்களில் அரும்பி நிற்கும் நீர்த்துளிகளின் ஈரத்தை காற்றில் எங்கிருந்தோ நின்று நீங்கள் தொட்டுணர்வீர்கள் என நம்புகிறேன் அண்ணா. போய் வாருங்கள்!

Comments

Geetha said…
சொல்ல வார்த்தைகள் இல்லை

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...