Skip to main content

உணவு என்பது வெறும் உணவல்ல

Image result for indian lunch

நாம் எந்த புது ஊருக்குப் போனாலும் முதலில் கவலைப்படுவது உணவைப் பற்றித் தான். அங்குள்ள மனிதர்கள் கூட பொருட்டில்லை. ஏன்?
மனிதர்களுடன் தானே அங்கு அன்றாடம் உறவாடுகிறோம். மனித உறவுகள் தாமே நமது வெற்றி தோல்விகளை, சிக்கல்களை, தீர்வை, நிம்மதியை, மகிழ்ச்சியை, அவஸ்தைகளை தீர்மானிக்கப் போகிறது. ஆனால் விஷயம் அதில்லை.

 கணிசமான வெளி மனிதர்களுடனான நமது சடங்கு ரீதியானது. அவர்கள் நமக்கு குறியீடுகள் மட்டுமே. அவர்கள் எதைக் குறிக்கிறார்களோ அந்தளவுக்கு எதிர்வினையாற்றி விட்டு கடந்து விடலாம். உயரதிகாரி என்றால் வணக்கம் வைக்க வேண்டும், அவர் தலையாட்டி விட்டு போய் விடுவார்; கீழ்நிலை வேலையாள் என்றால் நமக்கு வணக்கம் வைப்பார்கள், நாம் தலையாட்டி விட்டு கடப்போம். எங்கு போனாலும் நமக்கென்று ஒரு மிகச்சின்ன வட்டம் அமைகிறது. அதனுள் பேசி கலந்து கைகுலுக்கி மகிழ்ந்து வெளியேறி வீடு திரும்பி விடுவோம்.
 ஆனால் உணவு அப்படி அல்ல. உணவுடன் நமக்கு ஆத்மார்த்தமான உறவு உள்ளது. ஏனென்றால் உணவு நமது தன்னிலையை (subjectivity) கட்டமைக்கிறது. நீங்கள் யாரென்பதை உங்கள் உணவு மூலமே நிறுவுகிறீர்கள். நீங்கள் மதியம் தயிர்சாதம் விரும்பும் ஆளா நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர். நீங்கள் பிரியாணியை வெட்டுபவர் என்றால் ஒரு மனிதர்; சப்பாத்தி என்றால் வேறு. நான் சமூகப்பின்னணியை, சாதியை, மதத்தை இங்கு குறிக்கவில்லை. உங்கள் தனிமனித அடையாளமே உங்கள் உணவு மூலம் தான் தீர்மானமாகிறது.
 என் அப்பா முன்பு மதியம் உணவருந்த மாட்டார். டீயும் கடலை மிட்டாயும் மட்டுமே. முப்பது வருடங்களாய் அப்படித் தான். அதுவே “அவர்”. அவர் மதியம் சோறும் குழம்பும் பொரியலும் கூட்டுமாய் உண்டால் வேறு மனிதராகி விடுவார். நீங்கள் யாரென்பது பற்றி உங்களுக்கே ஒரு தீர்மானம், புரிதல், சித்திரம் இருக்கிறது. இதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு வழி சிறுக சிறுக உருவாக்குகிறீர்கள். இதனால் தான் நீங்கள் ஒரு புது ஊருக்குப் போனால் உங்கள் ஊர் உணவையே தொடர்ந்து உண்ண ஏங்குகிறீர்கள் (நாவின் சுவையும் ஒரு காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த நாவுச் சுவை உங்கள் தன்னிலையின் ஒரு பகுதி; உங்களை அறியாது உங்களை நீங்கள் வடிவமைக்கும் செயல்.)
கேரளாக்காரர்கள் எங்கு போனாலும் தங்கள் ஊர் உணவு கிடைக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள். சமைப்பதற்கான பிரத்யேகப் பொருட்களை சேகரிக்கிறார்கள். ஊரிலிருந்து கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் வெளிநாடு போனால் “அங்கே சரவண பவன் உண்டு. ஆம்பூர் பிரியாணி கிடைக்கும்.” என்று யாரோ ஆறுதல்படுத்துகிறார்கள். சொந்த ஊர் உணவின் சுவை நாவில் பட்டதும் மனிதர்கள் ஆறுதலாகி ஆழ்ந்த திருப்தி கொள்கிறார்கள். தாம் மாறவில்லை; சிதைந்து உருக்குலைய வில்லை எனும் உணர்வு நெஞ்சில் பரவுகிறது.
ஜும்பா லஹிரியின் Namesake நாவலின் துவக்கத்தில் அமெரிக்காவுக்கு புதிதாய் சென்ற மணப்பெண்ணான ஆஷிமா தனது ஊரைப் பற்றின நினைவேக்கத்தில் தவிப்பாள். அவர் கர்பிணி வேறு. அவளுக்கு பிடித்த உணவைப் பண்ணித் தர அவளது அம்மா அங்கில்லை. அதனால் அவளே கொல்கொத்தாவின் தெரு உணவான ஜல்மூரி (நம்மூரில் பேல்பூரி) பண்ணத் துவங்குவாள். அந்த உணவு அவளை சில நிமிடங்கள் கொல்கொத்தாவுக்கு கூட்டிப் போய் விடும்.
(சிலர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் உணவை விரும்பி உண்பார்கள். இவர்கள் வேரற்று உலவ விரும்பும் ஆளுமை கொண்டவர்கள்.)
சென்னையில் கல்லூரியில் படிக்கையில் எனக்கு பிரகாஷ் பத்ரா என ஒரு வங்காளி நண்பன் இருந்தான். அவன் என்னை ஒருநாள் ஒரு சின்ன வங்காளி உணவகத்துக்கு அழைத்துப் போனான். அங்கு சுவையான ரொட்டியும் வங்காள சப்ஜியும் வாங்கித் தந்தான். நான் அதன் பிறகு அங்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். இன்னொரு நண்பர். வறுமையில் இருந்தார். எம்.பில் பண்ணிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த பிரியாணிக் கடைக்கு அவர் சரியாக 11: 30க்கு போவார். அப்போது அங்கே 25 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். கொஞ்சம் தாமதமானால் பிரியாணி மட்டுமே இருக்கும் (விலை 45). நண்பர் இருந்த நிலையில் அவருக்கு அது சிறந்த ஏற்பாடு. என்னை ஒருநாள் அந்த வேளைக்கு அழைத்துப் போய் குஷ்கா வாங்கித் தந்தார். அதன் சுவையை மெச்சிக் கொண்டே சாப்பிட்டார். இருவரும் தத்தமது நிலையை, அடையாளத்தை (தன்னிலையை) என்னிடம் தாம் அன்றாடம் உண்ணும் பிரத்யேக உணவை பங்கிட்டே வெளிப்படுத்தினார்கள்.
எனது தோழி ஒரு கல்லூரியில் முனைவர் பட்ட நெறியாளர். அவரிடம் ஆயுவு செய்யும் திபெத்திய மாணவர்கள் தமது ஊரின் பிரத்யேக தேயிலையை பெட்டி பெட்டியாக வாங்கி அளிப்பார்கள். திபெத்திய சின்னம் பதித்த சேலையை பரிசளிப்பார்கள். அதை நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனாலும் ஏன் அளிக்கிறார்கள்? அவர்கள் நம்மிடம் பேச முயலும் மொழி அது.
(என்னைப் போல்) பேலியோ உணவுப்பழக்கத்தை பின்பற்றுபவர்கள் அதன் மிஷனரிகள் போல் ஆகி விடுவார்கள். என் தோழி ஒருவரின் மகனுக்கு அடிக்கடி சளி, ஜுரம் என படுத்தி எடுக்கும். நான் ஒருநாள் அப்பையனிடம் அறிவுரைத்தேன்: “தம்பி நீ சாப்பிடும் தானியங்கள் தாம் உன் தற்காப்பு சக்தியை அடியோடு படுக்க வைக்கிறது. நீ பலவீனமாகி விட்டாய். தானிய உணவுகளை விட்டு விடு. உனக்கு எந்த நோய்த்தொற்றும் ஏற்படாது.” நான் இதைச் சொன்னதும் தோழி என் மீது ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து விட்டார், “அவனே ஏதோ மூணு வேளை சாப்பிட்டு கிட்டு இருக்கிறான். அதையும் பேலியோ கீலியோன்னு கெடுத்திராதே. சோறு, சப்பாத்தி, தோசை எல்லாம் உடம்புக்கு நல்லது தான்.”
“அதில்ல. அவனுக்கு அடிக்கடி ஜுரம் வருதேன்னு…”
“ஜுரம் வரது நல்லது தான். அப்போ தான் தற்காப்பு சக்தி அதிகமாகும். நீ வாயை மூடு”

அவர் ஏன் அப்படி பதற்றமாகிறார் என எனக்கு புரிந்தது. அவர் சமைத்து அந்த உணவை மட்டும் பரிமாறவில்லை; தன் அன்பையும் எண்ணங்களையும் பரிமாறுகிறார். வாழ்க்கைமுறையை, பண்பாட்டை பகிர்கிறார். மகன் பேலியோவுக்கு மாறி விட்டால் அவன் அவரிடம் இருந்து தனியாகி விடுவான். அவர்களுக்குள் பேசப்படும் அந்தரங்கமான மொழியை துண்டாக்க நான் யார்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...