Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தீப்தி நேவல் கவிதைகள் (1)


Image result for deepthi naval

அறிமுகம்:
தீப்தி நேவல் எண்பதுகளின் மாற்று சினிமா இயக்கத்தின் தாரகை. ஒரு பக்கம் நடிகையாக அவர் பிரசித்தமானவர் என்றால் இன்னொரு பக்கம் இலக்கியம், ஓவியம், புகைப்படக் கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். “தோ பைசே கி…” என ஆரம்பமாகும் நீண்ட தலைப்பு கொண்ட படம் ஒன்றை இயக்கினார். 2009இல் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசை வென்றது. ஒரு கவிஞராக தீப்தி நேவல் முக்கியமானவர். அவர் கவிதைகள் ஜப்பானிய கவிதைகளை நினைவுபடுத்தும் மென்மையும் நுணுக்கமும் கொண்டவை.

 முதல் வாசிப்பில் வெகுசாதாரணமானவையாக வாசகனுக்கு இவை தோன்றலாம். ஆனால் மீளமீள வாசிக்கையில் எப்படி எளிய புற விவரிப்புகள் ஒரு உருவகமாய், குறியீடாக மாறுகின்றன என்பது வாசகனுக்கு துலங்கத் துவங்கும். ஒரு கார் பயணத்தை நினைவுகளை கைவிட்டு புது உறவை நோக்கிச் செல்லும் அகப்பயணத்தின் உருவகமாய் அவர் எந்த பிரயத்தனங்களும் இன்றி மாற்றுவார். இந்த சாதாரணத்துவத்தின் நுணுக்கம் தான் தீப்தியின் கவிதைகளின் சிலாக்கியமான அம்சம்.
அவரது கவிதைகள் நவீனத்துவ கவிதைகளின் வடிவ நேர்த்தியும் தனிமனிதக் குரலும் காட்சிபூர்வமும் உணர்ச்சிக்குவிப்பும் கொண்டவை. உணர்ச்சிகளை அடங்கின தொனியில் பேசுபவை..
 தீப்தி நேவல் எண்பதுகளில் இருந்தே இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். 1983இல் அவரது முதல் தொகுப்பு இந்தியில் வெளியானது (”லம்ஹா லம்ஹா”). 2004இல் அவரது Black Wind and Other Poems எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. இதில் The Silent Scream எனும் ஒரு பகுதியை ஒரு தனி தொகுப்பு எனலாம். பைத்தியம் எனும் தலைப்பில் அவர் எழுதின பல நுட்பமான, இருண்மைக்கு வெகு அருகில் செல்கிற, மனதை கலங்கடிக்கும் கவிதைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் தோன்றிய கதை சுவாரஸ்யமானது. தமிழ்க் கவிஞர்கள் யாரேனும் இத்தகைய சாகசம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்களா என்பது ஐயமே! Ankahi எனும் தனது படம் ஒன்றிற்காக, மனநலம் அற்றவர்களை அணுக்கமாய் கவனிக்கும் நோக்கில், நேவல் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்று நான்கு மணிநேரங்கள் செலவழிக்கிறார். அந்த அனுபவம் அவரை உலுக்கிறது. அதன் பிறகு, 1993இல், அவர் மனநலமற்ற பாத்திரம் ஒன்றை நடிக்க நேரும் நடிகை எப்படி அதனால் பாதிக்கப்படுகிறார் என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதற்காக ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேல் நோயாளிகளுடன் தங்குகிறார். அவர்களை அணுக்கமாய் கவனிக்கிறார். ஒரு பெண் அவரிடம் “ரொம்ப உணர்ச்சிகரமான ஆட்கள் மட்டுமே பைத்தியமாவார்கள்” என்று அடிக்கடி கூறுகிறார். நேவல் அப்போது ஒரு உண்மையை உணர்கிறார். பைத்தியம் என்பது நோய் அல்ல. ஒரு மிகு உணர்ச்சி நிலை. அகம் கட்டற்று வெளிப்படும் நிலை. மேலும் மனப்பிறழ்வு எப்படி ஒரு வைரஸ் போல் இயல்பானவர்களைக் கூட தொற்றிக் கொள்ளும் என உணர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது நமது அணுகுமுறையை, உடல்மொழியை, பேசும் பாணியை நாம் அறியாமலே மாற்றக் கூடும். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் தீப்திக்கு புற உலகத்து மனிதர்கள் விசித்திரமானவர்கள் என தோன்றுகிறது. மனநல மருத்துவமனை உண்மையான உலகம், அதற்கு வெளியே உள்ளது போலியான உலகம் என நினைக்கிறார். இது அவருக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. புற உலகுடன் பொருத்தப்பட முடியாமல் திணறுகிறார். இந்த மனநிலையை ஒட்டி எழுதின கவிதைகளே அவரது The Silent Scream தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், மருத்துவமனைக்குள் உறவினர்களால் தள்ளப்பட்ட எந்த மனநோயும் அற்ற பெண்களின் அவலம், மனநலமற்ற பெண்களின் அன்றாடம் அனுபவிக்கும் கடும் துயரம், வலி, மற்றும் குழப்பநிலை, பாலியல் ஒடுக்குமுறை சிகிச்சைகளின் பெயரில் மனித உடல் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது ஆகியவற்றையும் இக்கவிதைகளில் பதிவு செய்கிறார்.
மேற்சொன்ன இரு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை மொழியாக்கியுள்ளேன். வரும் நாட்களில் அவற்றை இங்கு வெளியிடுகிறேன்...

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...