முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்தி நேவல் கவிதைகள் (1)


Image result for deepthi naval

அறிமுகம்:
தீப்தி நேவல் எண்பதுகளின் மாற்று சினிமா இயக்கத்தின் தாரகை. ஒரு பக்கம் நடிகையாக அவர் பிரசித்தமானவர் என்றால் இன்னொரு பக்கம் இலக்கியம், ஓவியம், புகைப்படக் கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். “தோ பைசே கி…” என ஆரம்பமாகும் நீண்ட தலைப்பு கொண்ட படம் ஒன்றை இயக்கினார். 2009இல் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த திரைக்கதைக்கான பரிசை வென்றது. ஒரு கவிஞராக தீப்தி நேவல் முக்கியமானவர். அவர் கவிதைகள் ஜப்பானிய கவிதைகளை நினைவுபடுத்தும் மென்மையும் நுணுக்கமும் கொண்டவை.

 முதல் வாசிப்பில் வெகுசாதாரணமானவையாக வாசகனுக்கு இவை தோன்றலாம். ஆனால் மீளமீள வாசிக்கையில் எப்படி எளிய புற விவரிப்புகள் ஒரு உருவகமாய், குறியீடாக மாறுகின்றன என்பது வாசகனுக்கு துலங்கத் துவங்கும். ஒரு கார் பயணத்தை நினைவுகளை கைவிட்டு புது உறவை நோக்கிச் செல்லும் அகப்பயணத்தின் உருவகமாய் அவர் எந்த பிரயத்தனங்களும் இன்றி மாற்றுவார். இந்த சாதாரணத்துவத்தின் நுணுக்கம் தான் தீப்தியின் கவிதைகளின் சிலாக்கியமான அம்சம்.
அவரது கவிதைகள் நவீனத்துவ கவிதைகளின் வடிவ நேர்த்தியும் தனிமனிதக் குரலும் காட்சிபூர்வமும் உணர்ச்சிக்குவிப்பும் கொண்டவை. உணர்ச்சிகளை அடங்கின தொனியில் பேசுபவை..
 தீப்தி நேவல் எண்பதுகளில் இருந்தே இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். 1983இல் அவரது முதல் தொகுப்பு இந்தியில் வெளியானது (”லம்ஹா லம்ஹா”). 2004இல் அவரது Black Wind and Other Poems எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. இதில் The Silent Scream எனும் ஒரு பகுதியை ஒரு தனி தொகுப்பு எனலாம். பைத்தியம் எனும் தலைப்பில் அவர் எழுதின பல நுட்பமான, இருண்மைக்கு வெகு அருகில் செல்கிற, மனதை கலங்கடிக்கும் கவிதைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் தோன்றிய கதை சுவாரஸ்யமானது. தமிழ்க் கவிஞர்கள் யாரேனும் இத்தகைய சாகசம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்களா என்பது ஐயமே! Ankahi எனும் தனது படம் ஒன்றிற்காக, மனநலம் அற்றவர்களை அணுக்கமாய் கவனிக்கும் நோக்கில், நேவல் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்று நான்கு மணிநேரங்கள் செலவழிக்கிறார். அந்த அனுபவம் அவரை உலுக்கிறது. அதன் பிறகு, 1993இல், அவர் மனநலமற்ற பாத்திரம் ஒன்றை நடிக்க நேரும் நடிகை எப்படி அதனால் பாதிக்கப்படுகிறார் என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதற்காக ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேல் நோயாளிகளுடன் தங்குகிறார். அவர்களை அணுக்கமாய் கவனிக்கிறார். ஒரு பெண் அவரிடம் “ரொம்ப உணர்ச்சிகரமான ஆட்கள் மட்டுமே பைத்தியமாவார்கள்” என்று அடிக்கடி கூறுகிறார். நேவல் அப்போது ஒரு உண்மையை உணர்கிறார். பைத்தியம் என்பது நோய் அல்ல. ஒரு மிகு உணர்ச்சி நிலை. அகம் கட்டற்று வெளிப்படும் நிலை. மேலும் மனப்பிறழ்வு எப்படி ஒரு வைரஸ் போல் இயல்பானவர்களைக் கூட தொற்றிக் கொள்ளும் என உணர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது நமது அணுகுமுறையை, உடல்மொழியை, பேசும் பாணியை நாம் அறியாமலே மாற்றக் கூடும். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் தீப்திக்கு புற உலகத்து மனிதர்கள் விசித்திரமானவர்கள் என தோன்றுகிறது. மனநல மருத்துவமனை உண்மையான உலகம், அதற்கு வெளியே உள்ளது போலியான உலகம் என நினைக்கிறார். இது அவருக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. புற உலகுடன் பொருத்தப்பட முடியாமல் திணறுகிறார். இந்த மனநிலையை ஒட்டி எழுதின கவிதைகளே அவரது The Silent Scream தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், மருத்துவமனைக்குள் உறவினர்களால் தள்ளப்பட்ட எந்த மனநோயும் அற்ற பெண்களின் அவலம், மனநலமற்ற பெண்களின் அன்றாடம் அனுபவிக்கும் கடும் துயரம், வலி, மற்றும் குழப்பநிலை, பாலியல் ஒடுக்குமுறை சிகிச்சைகளின் பெயரில் மனித உடல் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது ஆகியவற்றையும் இக்கவிதைகளில் பதிவு செய்கிறார்.
மேற்சொன்ன இரு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை மொழியாக்கியுள்ளேன். வரும் நாட்களில் அவற்றை இங்கு வெளியிடுகிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...