முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (2)

Image result for boys movie

கலைஞர்கள், படைப்பாளிகள், படைப்பு மனம் கொண்டவர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ்க்கை முழுக்க நீடித்த பதின்பருவத்தில் வாழ்வார்கள். தொடர்ந்து “தன்னை” முன்வைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். பதின்வயதின் சிக்கல்களான வன்முறை, தீவிர போதைப் பழக்கம், கருத்து மோதல், சுய அடையாளத்தை சத்தமாய் அறிவிப்பது, பாலியல் பொறாமை மோதல்கள் ஆகியனவற்றை நாம் இலக்கிய குழுக்களில் இன்றும் காணலாம்.

 பொது சமூகம் எழுத்தாளனையும் கலைஞனையும் சற்று கோணலான பிரகிருதிகளாய் கருதுவது அவர்களின் இந்த “முதிராத”, “முதிர விரும்பாத” தன்மையினால் தான். மேற்கே ஷெல்லியில் இருந்து ஹெமிங்வே வரை, தமிழில் ஆத்மாநாம், ஜி.நாகராஜன், பிரமிள் முதல் லஷ்மி மணிவண்ணன் வரை நம் காண்பது இந்த நீட்டிக்கபட்ட “பாய்ஸ்” மனநிலை தான்.
பொதுவாக படைப்பாளிகள் “பதின்பருவத்தில்” நீடிக்கும் போது நாம் அவர்களை கலகக்காரர்கள் என்கிறோம். ஏனென்றால் சமூக போக்குகளுடனான தமது முரண்பாட்டுக்கு அவர்கள் அரசியல், கலை, உளவியல் சார்ந்த சித்தாந்த நியாயப்பாடுகளை அளிக்கிறார்கள். தாம் கலகக்காரர்கள் எனும் அதேவேளை தாம் அனுபவிக்கும் வேதனையை, பதற்றங்களை, நெருக்கடியை தொடர்ந்து பதிவு செய்யவும் செய்கிறார்கள்.
எழுத்தாளன் என்றாலே துயரத்தில் தோய்ந்தவன், தன் இருப்பு குறித்த ஐயப்பாடுகள் கொண்டவன் எனும் பிம்பம் உலகம் முழுக்க இருக்கிறது. இது பதின்பருவ நிலையின்மையை அவர்கள் கலையின், தத்துவத்தின், அதிகார எதிர்ப்பின் நுட்பமான தீவிரமான நிலைகளுக்கு எடுத்துப் போவதாலே நிகழ்கிறது.
 “முதிர்ச்சியான”, நரைகூடிய, சமூகப் பொறுப்பு கொண்ட “பாய்ஸாக” கலைஞர்கள் இருக்கிறார்கள். சமூகம் அவர்களின் இந்த பங்களிப்பை மதித்தாலும் அங்கீகரித்தாலும், முக்கிய ஆட்சி அதிகார முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளை அது இந்த “பாய்ஸுக்கு” அநேகமாய் அளித்ததில்லை.
 ஒரு சிறந்த ஆட்சியாளனாக தத்துவவாதியும் சிந்தனையாளனுமே இருக்க இயலும் என பிளேட்டோ அறிவித்து எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் அறிவுஜீவிகள் வரலாற்றில் எந்த சமூகமும் முழுக்க நம்பி பொறுப்பை கொடுப்பதாய் நிகழ்ந்ததில்லை. அப்படி நடந்தாலும் அந்த அறிவுஜீவி தன் “கலகக்கார பிம்பத்தை” கழற்றி வைத்து விட்டு “முதிர்ச்சியை” எடுத்து அணிந்தவனாக இருப்பான்.
Image result for karunanidhiImage result for nehru playboy

கலைஞர் கருணாநிதி இதற்கு நேர்மறை உதாரணம். நேரு ஒரு எதிர்மறை உதாரணம். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வெற்றிகரமானது, தத்தளிப்புகள் அற்றது. ஏனெனில் அவர் அரசியலில் டீனேஜ் கலகக்காரர் அல்ல. ஆனால் நேருவோ அவ்வாறு டீனேஜ் முகமூடியை கழற்ற முடியாது தத்தளித்தவர். சர்தார் பட்டேலிடம் இருந்து தொடர்ந்து தன் அரசியல் இடம் குறித்த நெருக்கடியை சந்தித்தவர்.
டீனேஜில் நாம் அனுபவிக்கும் உள்-போராட்டத்தின் மையமே “நான் தனி ஆள்” என காட்டும் விழைவு தான் என கூறினேன் அல்லவா; நமக்குள் இந்த ”தனி ஆள்” உண்மையிலே இருக்கிறானா? அல்லது இது ஒருவித பிரமையா? தனிமனித நிலை உன்னதமானதா அல்லது பொதுப்போக்கு / பொதுப்புத்தி என பழிக்கப்படும் சமூக மனநிலை சரியானதா? ஊரை எதிர்ப்பது சரியா ஊருக்கு வழங்கிப் போவது சரியா? இந்த கேள்விகளை எனது மாணவர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் எழுப்பினார்.
 அவர் பெயர் ஆதர்ஷ். ஆரம்பநிலை எழுத்தாளன். தன் கட்டுரைகளை எனக்கு அனுப்பி கருத்துக் கேட்பார். ஆய்ஷின் கேள்விகள் என்ன என அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...