கலைஞர்கள், படைப்பாளிகள்,
படைப்பு மனம் கொண்டவர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ்க்கை முழுக்க நீடித்த பதின்பருவத்தில்
வாழ்வார்கள். தொடர்ந்து “தன்னை” முன்வைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். பதின்வயதின்
சிக்கல்களான வன்முறை, தீவிர போதைப் பழக்கம், கருத்து மோதல், சுய அடையாளத்தை சத்தமாய்
அறிவிப்பது, பாலியல் பொறாமை மோதல்கள் ஆகியனவற்றை நாம் இலக்கிய குழுக்களில் இன்றும்
காணலாம்.
பொது சமூகம் எழுத்தாளனையும் கலைஞனையும் சற்று கோணலான
பிரகிருதிகளாய் கருதுவது அவர்களின் இந்த “முதிராத”, “முதிர விரும்பாத” தன்மையினால்
தான். மேற்கே ஷெல்லியில் இருந்து ஹெமிங்வே வரை, தமிழில் ஆத்மாநாம், ஜி.நாகராஜன், பிரமிள்
முதல் லஷ்மி மணிவண்ணன் வரை நம் காண்பது இந்த நீட்டிக்கபட்ட “பாய்ஸ்” மனநிலை தான்.
பொதுவாக படைப்பாளிகள்
“பதின்பருவத்தில்” நீடிக்கும் போது நாம் அவர்களை கலகக்காரர்கள் என்கிறோம். ஏனென்றால்
சமூக போக்குகளுடனான தமது முரண்பாட்டுக்கு அவர்கள் அரசியல், கலை, உளவியல் சார்ந்த சித்தாந்த
நியாயப்பாடுகளை அளிக்கிறார்கள். தாம் கலகக்காரர்கள் எனும் அதேவேளை தாம் அனுபவிக்கும்
வேதனையை, பதற்றங்களை, நெருக்கடியை தொடர்ந்து பதிவு செய்யவும் செய்கிறார்கள்.
எழுத்தாளன் என்றாலே துயரத்தில்
தோய்ந்தவன், தன் இருப்பு குறித்த ஐயப்பாடுகள் கொண்டவன் எனும் பிம்பம் உலகம் முழுக்க
இருக்கிறது. இது பதின்பருவ நிலையின்மையை அவர்கள் கலையின், தத்துவத்தின், அதிகார எதிர்ப்பின்
நுட்பமான தீவிரமான நிலைகளுக்கு எடுத்துப் போவதாலே நிகழ்கிறது.
“முதிர்ச்சியான”, நரைகூடிய, சமூகப் பொறுப்பு கொண்ட
“பாய்ஸாக” கலைஞர்கள் இருக்கிறார்கள். சமூகம் அவர்களின் இந்த பங்களிப்பை மதித்தாலும்
அங்கீகரித்தாலும், முக்கிய ஆட்சி அதிகார முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளை அது இந்த
“பாய்ஸுக்கு” அநேகமாய் அளித்ததில்லை.
ஒரு சிறந்த ஆட்சியாளனாக தத்துவவாதியும் சிந்தனையாளனுமே
இருக்க இயலும் என பிளேட்டோ அறிவித்து எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் அறிவுஜீவிகள்
வரலாற்றில் எந்த சமூகமும் முழுக்க நம்பி பொறுப்பை கொடுப்பதாய் நிகழ்ந்ததில்லை. அப்படி
நடந்தாலும் அந்த அறிவுஜீவி தன் “கலகக்கார பிம்பத்தை” கழற்றி வைத்து விட்டு “முதிர்ச்சியை”
எடுத்து அணிந்தவனாக இருப்பான்.
கலைஞர் கருணாநிதி இதற்கு நேர்மறை உதாரணம். நேரு ஒரு
எதிர்மறை உதாரணம். கலைஞரின் அரசியல் வாழ்க்கை வெற்றிகரமானது, தத்தளிப்புகள் அற்றது.
ஏனெனில் அவர் அரசியலில் டீனேஜ் கலகக்காரர் அல்ல. ஆனால் நேருவோ அவ்வாறு டீனேஜ் முகமூடியை
கழற்ற முடியாது தத்தளித்தவர். சர்தார் பட்டேலிடம் இருந்து தொடர்ந்து தன் அரசியல் இடம்
குறித்த நெருக்கடியை சந்தித்தவர்.
டீனேஜில் நாம் அனுபவிக்கும்
உள்-போராட்டத்தின் மையமே “நான் தனி ஆள்” என காட்டும் விழைவு தான் என கூறினேன் அல்லவா;
நமக்குள் இந்த ”தனி ஆள்” உண்மையிலே இருக்கிறானா? அல்லது இது ஒருவித பிரமையா? தனிமனித
நிலை உன்னதமானதா அல்லது பொதுப்போக்கு / பொதுப்புத்தி என பழிக்கப்படும் சமூக மனநிலை
சரியானதா? ஊரை எதிர்ப்பது சரியா ஊருக்கு வழங்கிப் போவது சரியா? இந்த கேள்விகளை எனது
மாணவர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் எழுப்பினார்.
அவர் பெயர் ஆதர்ஷ். ஆரம்பநிலை எழுத்தாளன். தன் கட்டுரைகளை
எனக்கு அனுப்பி கருத்துக் கேட்பார். ஆய்ஷின் கேள்விகள் என்ன என அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)
Comments