முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (4)

எழுத்தில் என்னுடைய தாரக மந்திரம் ஒன்றே: எழுத்துடன் தொடர்பில்லாத எதையும் யாரையும் பொருட்படுத்தாதே. நீ இருக்கிற கட்டிடம் இடிந்து விழப் போகிறதா? தீ விபத்தா? பக்கத்து கட்டிடத்துக்கு விரைந்து செல். அங்கு ஒரு நல்ல இடமாக பார்த்துக் கொள். தொடர்ந்து எழுது. எந்த கூச்சலையும் ஆட்கள் பாய்ச்சலையும் காதில் வாங்கிக் கொள்ளாதே; கண்களில் விழ விடாதே.

என் கல்லூரியின் பிரதான வாயிலின் காவலாளிக்கு மட்டுமே என் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு ஒன்பதரைக்கு வெளியே போவது பார்த்து அவர் கேட்டே விட்டார் “சார் கல்லூரி 4 மணிக்கு முடிகிறது. உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு நேரம் 9: 30 வரை வேலை?” நான் புன்னகைத்தபடி வந்து விட்டேன். அவருக்குத் தெரியாது, நான்கு மணி வரை நான் ஒரு கனவில் இருக்கிறேன், நான் விழித்துக் கொள்வதே நான்கு மணிக்கு பிறகு தான் என.
நான் சென்னை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போதும் இதுவே தான் நடக்கும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள் ஐந்து பேர் நாங்கள் மாலை ஐந்து மணியானால் எங்கள் பேராசிரியர் அறைக்குள் வந்து விடுவோம். அரட்டை, கதை வாசிப்பது, எழுதுவது என ஒரு தனி உலகில் திளைப்போம்.. நாங்கள் கிளம்பவே எட்டு மணி ஆகி விடும். அதுவும் கூட அங்குள்ள காவலாளி வந்து துரத்தி விடுவதால் தான். இல்லாவிட்டால் பத்து மணி வரை எங்கள் தர்பார் ஓடும். அவருக்கு நாங்கள் பல்கலைக்கழகம் முடிந்த பின் அங்கு என்ன பண்ணுகிறோம் எனப் புரியாது. எங்களுக்கு இவர்களெல்லாம் சரியாய் நாங்கு மணிக்கு கிளம்பி பேருந்து பிடித்து வீட்டுக்குப் போய் என்னதான் செய்கிறார்கள் எனப் புரியாது. சும்மா சாப்பிட்டு, டிவி பார்த்து மனைவியுடன் ரெண்டு வார்த்தை பேசி தூங்கப் போவதற்கு இவர்களெல்லாம் வாழாமல் இருக்கலாமே என நினைப்போம்.
தொந்தரவுகள் இல்லாத, கவனச்சிதறல்கள், பொருளாதார அழுத்தங்கள் இல்லாத எழுத்து வாழ்வு ஒரு பேரழகியைக் கண்டு காதல் கொண்டு, உடனடியாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்து அவள் பெற்றோராலும் ஏற்கப்பட்டு, விரைவில் மணம் புரிந்து எந்த சிக்கல்க்ளும் இன்றி (கரன் ஜோஹர் படங்களின் ஸ்டைலில்) மகிழ்ச்சியாய் வாழ்வது போல.
ஆனால் அது ஒரு லட்சியக் கனவு மட்டுமே. இன்று பொதுவாகவே எல்லா வேலைகளிலும் நெருக்கடி அதிகரித்து விட்டது. அல்லது வெட்டி வேலை என்றாலும் மனிதர்கள் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். சும்மா இருக்கிறவர்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே ஒருவர் சும்மா இருக்க முயன்றாலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், குடும்பத்தினர், நண்பர்கள், கூட்டங்கள் என யாராவது / ஏதாவது ஒரு விசயம் நம்மை ஆற்றொழுகு போல் இழுத்துச் செல்ல வந்து விடுகிறது.
நாம் இன்று எழுத்துக்கு முழுக்க விரோதமான ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆயிரம் பெண்கள் காபரே ஆடும் ஒரு விடுதியில் ஒரு விஸ்வாமித்திரர் தியானம் பண்ணுவது போல் நாம் எழுத வேண்டி இருக்கிறது. வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே நிதர்சனம்.
அப்படி ஒருநாள் முழுக்க முழுக்க எழுத்துக்கு மட்டுமே வாழ்வை செலவிடும் நாள் வர வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அக்கனவு நிறைவேறா விட்டாலும் நான் எழுதிக் கொண்டு தான் இருப்பேன். என் நாய்க்கு குலைப்பதற்கு என்று ஒரு காரணம் குறிப்பாய் வேண்டாம். சும்மா போரடித்தால் கூட எழுந்து ரெண்டு முறை குலைத்து விட்டு படுத்துக் கொள்ளும். குலைப்பதே அதன் வாழ்வு. அதே போல் எழுதுவதே என் வாழ்வு.
நடைமுறை வாழ்க்கையின் தேவைகளையும் எழுத்தையும் ஒரே நேரம் சமாளிக்க முடியாது என்னிடம் ஒரு எழுத்தாள நண்பர் புலம்பினார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்:
“நடைமுறை சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும். அவற்றை பொருட்படுத்தாமல் போகிற போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நடைமுறையிலும் எழுத்திலும் ஒரே சமயம் ஜெயிக்க முடியாது. இது உண்மை. நடைமுறையில் பெரிதாக சறுக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், அது போதும்.
இருபது வருடங்கள் கழித்து நாம் சம்பாதிக்கும் பணம், அந்தஸ்து எதுவும் நம்முடன் இராது. நம் மனைவி, குழந்தை கூட நம்முடன் இருப்பார்கள் என்பதற்கு உறுதியில்லை. ஆனாலும் எழுத்தும் வாசகர்களின் அணுக்கமும் நிச்சயம் இருக்கும். அதுவே நமது உண்மையான சம்பாத்தியம். அதனால் கலங்காதீர்கள். நாம் இருப்போம். இவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நம்பிக்கை உங்களை செலுத்தட்டும்.”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...