Skip to main content

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (4)

எழுத்தில் என்னுடைய தாரக மந்திரம் ஒன்றே: எழுத்துடன் தொடர்பில்லாத எதையும் யாரையும் பொருட்படுத்தாதே. நீ இருக்கிற கட்டிடம் இடிந்து விழப் போகிறதா? தீ விபத்தா? பக்கத்து கட்டிடத்துக்கு விரைந்து செல். அங்கு ஒரு நல்ல இடமாக பார்த்துக் கொள். தொடர்ந்து எழுது. எந்த கூச்சலையும் ஆட்கள் பாய்ச்சலையும் காதில் வாங்கிக் கொள்ளாதே; கண்களில் விழ விடாதே.

என் கல்லூரியின் பிரதான வாயிலின் காவலாளிக்கு மட்டுமே என் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு ஒன்பதரைக்கு வெளியே போவது பார்த்து அவர் கேட்டே விட்டார் “சார் கல்லூரி 4 மணிக்கு முடிகிறது. உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு நேரம் 9: 30 வரை வேலை?” நான் புன்னகைத்தபடி வந்து விட்டேன். அவருக்குத் தெரியாது, நான்கு மணி வரை நான் ஒரு கனவில் இருக்கிறேன், நான் விழித்துக் கொள்வதே நான்கு மணிக்கு பிறகு தான் என.
நான் சென்னை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போதும் இதுவே தான் நடக்கும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள் ஐந்து பேர் நாங்கள் மாலை ஐந்து மணியானால் எங்கள் பேராசிரியர் அறைக்குள் வந்து விடுவோம். அரட்டை, கதை வாசிப்பது, எழுதுவது என ஒரு தனி உலகில் திளைப்போம்.. நாங்கள் கிளம்பவே எட்டு மணி ஆகி விடும். அதுவும் கூட அங்குள்ள காவலாளி வந்து துரத்தி விடுவதால் தான். இல்லாவிட்டால் பத்து மணி வரை எங்கள் தர்பார் ஓடும். அவருக்கு நாங்கள் பல்கலைக்கழகம் முடிந்த பின் அங்கு என்ன பண்ணுகிறோம் எனப் புரியாது. எங்களுக்கு இவர்களெல்லாம் சரியாய் நாங்கு மணிக்கு கிளம்பி பேருந்து பிடித்து வீட்டுக்குப் போய் என்னதான் செய்கிறார்கள் எனப் புரியாது. சும்மா சாப்பிட்டு, டிவி பார்த்து மனைவியுடன் ரெண்டு வார்த்தை பேசி தூங்கப் போவதற்கு இவர்களெல்லாம் வாழாமல் இருக்கலாமே என நினைப்போம்.
தொந்தரவுகள் இல்லாத, கவனச்சிதறல்கள், பொருளாதார அழுத்தங்கள் இல்லாத எழுத்து வாழ்வு ஒரு பேரழகியைக் கண்டு காதல் கொண்டு, உடனடியாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்து அவள் பெற்றோராலும் ஏற்கப்பட்டு, விரைவில் மணம் புரிந்து எந்த சிக்கல்க்ளும் இன்றி (கரன் ஜோஹர் படங்களின் ஸ்டைலில்) மகிழ்ச்சியாய் வாழ்வது போல.
ஆனால் அது ஒரு லட்சியக் கனவு மட்டுமே. இன்று பொதுவாகவே எல்லா வேலைகளிலும் நெருக்கடி அதிகரித்து விட்டது. அல்லது வெட்டி வேலை என்றாலும் மனிதர்கள் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். சும்மா இருக்கிறவர்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே ஒருவர் சும்மா இருக்க முயன்றாலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், குடும்பத்தினர், நண்பர்கள், கூட்டங்கள் என யாராவது / ஏதாவது ஒரு விசயம் நம்மை ஆற்றொழுகு போல் இழுத்துச் செல்ல வந்து விடுகிறது.
நாம் இன்று எழுத்துக்கு முழுக்க விரோதமான ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆயிரம் பெண்கள் காபரே ஆடும் ஒரு விடுதியில் ஒரு விஸ்வாமித்திரர் தியானம் பண்ணுவது போல் நாம் எழுத வேண்டி இருக்கிறது. வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே நிதர்சனம்.
அப்படி ஒருநாள் முழுக்க முழுக்க எழுத்துக்கு மட்டுமே வாழ்வை செலவிடும் நாள் வர வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அக்கனவு நிறைவேறா விட்டாலும் நான் எழுதிக் கொண்டு தான் இருப்பேன். என் நாய்க்கு குலைப்பதற்கு என்று ஒரு காரணம் குறிப்பாய் வேண்டாம். சும்மா போரடித்தால் கூட எழுந்து ரெண்டு முறை குலைத்து விட்டு படுத்துக் கொள்ளும். குலைப்பதே அதன் வாழ்வு. அதே போல் எழுதுவதே என் வாழ்வு.
நடைமுறை வாழ்க்கையின் தேவைகளையும் எழுத்தையும் ஒரே நேரம் சமாளிக்க முடியாது என்னிடம் ஒரு எழுத்தாள நண்பர் புலம்பினார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்:
“நடைமுறை சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும். அவற்றை பொருட்படுத்தாமல் போகிற போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நடைமுறையிலும் எழுத்திலும் ஒரே சமயம் ஜெயிக்க முடியாது. இது உண்மை. நடைமுறையில் பெரிதாக சறுக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், அது போதும்.
இருபது வருடங்கள் கழித்து நாம் சம்பாதிக்கும் பணம், அந்தஸ்து எதுவும் நம்முடன் இராது. நம் மனைவி, குழந்தை கூட நம்முடன் இருப்பார்கள் என்பதற்கு உறுதியில்லை. ஆனாலும் எழுத்தும் வாசகர்களின் அணுக்கமும் நிச்சயம் இருக்கும். அதுவே நமது உண்மையான சம்பாத்தியம். அதனால் கலங்காதீர்கள். நாம் இருப்போம். இவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நம்பிக்கை உங்களை செலுத்தட்டும்.”


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...