Skip to main content

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (4)

எழுத்தில் என்னுடைய தாரக மந்திரம் ஒன்றே: எழுத்துடன் தொடர்பில்லாத எதையும் யாரையும் பொருட்படுத்தாதே. நீ இருக்கிற கட்டிடம் இடிந்து விழப் போகிறதா? தீ விபத்தா? பக்கத்து கட்டிடத்துக்கு விரைந்து செல். அங்கு ஒரு நல்ல இடமாக பார்த்துக் கொள். தொடர்ந்து எழுது. எந்த கூச்சலையும் ஆட்கள் பாய்ச்சலையும் காதில் வாங்கிக் கொள்ளாதே; கண்களில் விழ விடாதே.

என் கல்லூரியின் பிரதான வாயிலின் காவலாளிக்கு மட்டுமே என் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு ஒன்பதரைக்கு வெளியே போவது பார்த்து அவர் கேட்டே விட்டார் “சார் கல்லூரி 4 மணிக்கு முடிகிறது. உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு நேரம் 9: 30 வரை வேலை?” நான் புன்னகைத்தபடி வந்து விட்டேன். அவருக்குத் தெரியாது, நான்கு மணி வரை நான் ஒரு கனவில் இருக்கிறேன், நான் விழித்துக் கொள்வதே நான்கு மணிக்கு பிறகு தான் என.
நான் சென்னை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போதும் இதுவே தான் நடக்கும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள் ஐந்து பேர் நாங்கள் மாலை ஐந்து மணியானால் எங்கள் பேராசிரியர் அறைக்குள் வந்து விடுவோம். அரட்டை, கதை வாசிப்பது, எழுதுவது என ஒரு தனி உலகில் திளைப்போம்.. நாங்கள் கிளம்பவே எட்டு மணி ஆகி விடும். அதுவும் கூட அங்குள்ள காவலாளி வந்து துரத்தி விடுவதால் தான். இல்லாவிட்டால் பத்து மணி வரை எங்கள் தர்பார் ஓடும். அவருக்கு நாங்கள் பல்கலைக்கழகம் முடிந்த பின் அங்கு என்ன பண்ணுகிறோம் எனப் புரியாது. எங்களுக்கு இவர்களெல்லாம் சரியாய் நாங்கு மணிக்கு கிளம்பி பேருந்து பிடித்து வீட்டுக்குப் போய் என்னதான் செய்கிறார்கள் எனப் புரியாது. சும்மா சாப்பிட்டு, டிவி பார்த்து மனைவியுடன் ரெண்டு வார்த்தை பேசி தூங்கப் போவதற்கு இவர்களெல்லாம் வாழாமல் இருக்கலாமே என நினைப்போம்.
தொந்தரவுகள் இல்லாத, கவனச்சிதறல்கள், பொருளாதார அழுத்தங்கள் இல்லாத எழுத்து வாழ்வு ஒரு பேரழகியைக் கண்டு காதல் கொண்டு, உடனடியாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்து அவள் பெற்றோராலும் ஏற்கப்பட்டு, விரைவில் மணம் புரிந்து எந்த சிக்கல்க்ளும் இன்றி (கரன் ஜோஹர் படங்களின் ஸ்டைலில்) மகிழ்ச்சியாய் வாழ்வது போல.
ஆனால் அது ஒரு லட்சியக் கனவு மட்டுமே. இன்று பொதுவாகவே எல்லா வேலைகளிலும் நெருக்கடி அதிகரித்து விட்டது. அல்லது வெட்டி வேலை என்றாலும் மனிதர்கள் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள். சும்மா இருக்கிறவர்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே ஒருவர் சும்மா இருக்க முயன்றாலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், குடும்பத்தினர், நண்பர்கள், கூட்டங்கள் என யாராவது / ஏதாவது ஒரு விசயம் நம்மை ஆற்றொழுகு போல் இழுத்துச் செல்ல வந்து விடுகிறது.
நாம் இன்று எழுத்துக்கு முழுக்க விரோதமான ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆயிரம் பெண்கள் காபரே ஆடும் ஒரு விடுதியில் ஒரு விஸ்வாமித்திரர் தியானம் பண்ணுவது போல் நாம் எழுத வேண்டி இருக்கிறது. வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே நிதர்சனம்.
அப்படி ஒருநாள் முழுக்க முழுக்க எழுத்துக்கு மட்டுமே வாழ்வை செலவிடும் நாள் வர வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அக்கனவு நிறைவேறா விட்டாலும் நான் எழுதிக் கொண்டு தான் இருப்பேன். என் நாய்க்கு குலைப்பதற்கு என்று ஒரு காரணம் குறிப்பாய் வேண்டாம். சும்மா போரடித்தால் கூட எழுந்து ரெண்டு முறை குலைத்து விட்டு படுத்துக் கொள்ளும். குலைப்பதே அதன் வாழ்வு. அதே போல் எழுதுவதே என் வாழ்வு.
நடைமுறை வாழ்க்கையின் தேவைகளையும் எழுத்தையும் ஒரே நேரம் சமாளிக்க முடியாது என்னிடம் ஒரு எழுத்தாள நண்பர் புலம்பினார். நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்:
“நடைமுறை சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும். அவற்றை பொருட்படுத்தாமல் போகிற போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நடைமுறையிலும் எழுத்திலும் ஒரே சமயம் ஜெயிக்க முடியாது. இது உண்மை. நடைமுறையில் பெரிதாக சறுக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், அது போதும்.
இருபது வருடங்கள் கழித்து நாம் சம்பாதிக்கும் பணம், அந்தஸ்து எதுவும் நம்முடன் இராது. நம் மனைவி, குழந்தை கூட நம்முடன் இருப்பார்கள் என்பதற்கு உறுதியில்லை. ஆனாலும் எழுத்தும் வாசகர்களின் அணுக்கமும் நிச்சயம் இருக்கும். அதுவே நமது உண்மையான சம்பாத்தியம். அதனால் கலங்காதீர்கள். நாம் இருப்போம். இவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நம்பிக்கை உங்களை செலுத்தட்டும்.”


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...