Skip to main content

நீட் தேர்வும் சாதியும்


நீட் தேர்வின் மாதிரிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை நான் தரவிறக்கி வாசித்துப் பார்த்திருக்கிறேன். பிற தகுதித் தேர்வுகளைப் போன்றே அவற்றை ஜெயிக்கவும் தனி பயிற்சி வேண்டும் எனும் வாதத்தை நான் ஏற்கிறேன். அவசரமாய் நீட் தேர்வை திணிக்கும் முன்பு அரசு இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாணவர்களை தயாரித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது அரசின் தவறு தான். இந்த அவலநிலைக்கு, அனிதா போன்ற ஒரு எளிய பின்புலத்தில் இருந்து வந்த ஒரு மாணவியின் நெருக்கடிக்கு, தற்கொலைக்கு ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இதே சிக்கல் நெட்/ஸ்லெட் போன்ற தேர்வுகள் நிலுவையில் வந்த போதும் எழுந்தது. முதுகலை பட்டத்தை முதல் வகுப்பில் தேறினவர்களால் கூட சுலபத்தில் பயிற்சியின்றி இத்தேர்வுகளில் வெல்ல முடியவில்லை. அப்படி என்றால் பிற மாணவர்கள் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் குறிப்பிட்ட பாடங்களை படித்து, அலசி ஆராய்ந்து எழுதும் பயிற்சியே அம்மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நெட் தேர்வோ தர்க்கம், தகவல் அறிவு, நினைவுத் திறன் ஆகியவற்றை சோதித்தன. மெல்ல மெல்ல பல்கலைகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்காய் தனி நெட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தன. இன்று இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களே நெட் தேர்வை முன்னிட்டுத் தாம் தயாரிக்கப்படுகின்றன. இன்று முன்பை விட பலமடங்கு அதிகமான மாணவர்கள் நெட் தேர்வில் தேறுகிறார்கள்.
அதாவது மேல் சாதி / கீழ் சாதி வித்தியாசங்கள் நெட் தேர்வு வெற்றி சதவீதத்தில் நான் அறிந்து இல்லை. முழுக்க மாணவர்களின் தயாரிப்பு, அதற்கான வாய்ப்புகள் பொறுத்தே தேர்வு விகிதம் அமைகிறது. மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த தத்தளிப்பு இன்று இல்லை. நீட் தேர்வு விசயத்திலும் எதிர்காலத்தில் இந்நிலை, இன்றுள்ள சுதாரிப்பு நிகழும் என நான் நம்புகிறேன்.
நெட் தேர்வு பட்டதாரி இளைஞர்கள், கல்லூரி ஆசிரியர்கள் எனும் முக்கியத்துவமற்ற பகுதியினர் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருந்ததால் அதை அன்றும் இன்றும் நாம் பொருட்படுத்தவில்லை. இன்று நீட் விசயத்தில் அது நம் மாநிலத்தின் பள்ளி மாணவர்கள் எனும் பெரும் தரப்பு சம்மந்தப்பட்ட, மருத்துவப் படிப்பு எனும் செண்டிமெண்டான விசயம் சார்ந்த பிரச்சனையாக மாறுவதால் தமிழகமே கொந்தளிக்கிறது.
இயல்பாகவே நீட்டை ஒரு ஆரிய சதியாக, பா.ஜ.க தமிழக மாணவர்களை ஒடுக்குவதற்காய் திணிக்கிற ஒரு மாற்றமாக நாம் காண்கிறோம். அனிதா தலித் என்பதால் இது ஒரு சாதிப் பிரச்சனையாகவும் கூட பார்க்கப் படுகிறது. ஆனால் சாதி, சமூக வகுப்பு சார்ந்த பிரிவினை எல்லா பிரச்சனைகளுக்குள்ளும் இருக்கிறது தானே!
பெண்களின் ஒடுக்குமுறையை எடுத்துக் கொண்டால் ஏழைப் பெண்கள் தாம் அதிகமான வன்முறையை, ஏற்றத்தாழ்வை சந்திப்பார்கள். ஏழைகளில் தலித்துகள் இன்னும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்திப்பார்கள். ஏனென்றால் கல்வி, தொழில் வாய்ப்புகள் அவர்களுக்கு இயல்பிலேயே குறைகின்றன. சித்தாளாக ஒரு பிள்ளைமார் பெண் இருக்கப் போவதில்லை. தாழ்த்தப்பட்ட பெண் தான் இருப்பாள். அவளுக்கு நிச்சயம் ஆண்களை விட குறைவான கூலியே வழங்கப்படுகிறது. இந்த பாரபட்சம் ஒரு கார்ப்பரேட் பெண் ஊழியருக்கு இல்லை. அவள் தலித்தாக இருந்தாலும் (தலித்துகளும் இன்று கார்ப்பரேட்டில் இருக்கிறார்கள்.). கணவன் துன்புறுத்தினாலும் அவள் எதிர்த்தடிக்க, தனியாய் வாழ சாத்தியங்களும் வாய்ப்புகளும் மேற்தட்டு பெண்களை விட குறைவே. இதைக் கொண்டு பெண் ஒடுக்குமுறையே ஒரு சாதிய பிரச்சனை என நாம் கூற முடியுமா? முடியாது தானே? அது ஒரு பெண்நிலை, பெண்ணிய பிரச்சனையே!
அதே போல் நீட் தேர்வை ஒரு சாதிய, வர்க்க ஒடுக்குமுறையாக பார்ப்பதும் மிகை தான் – குறுகின பார்வை தான்.
இதை ஒரு பிராந்திய தனி உரிமை பிரச்சனையாக காண்பது மேலும் பொருத்தமானது. தமிழகத்துக்கு என்று ஒரு தனியான இட ஒதுக்கீட்டை நாம் பேணுவதை மைய அரசு விரும்பவில்லை. ஒரு பொது இட ஒதுக்கீட்டுக்குள், பொது அடையாளத்துக்குள், பொது வரையறைக்குள் இவ்விசயத்தை கொண்டு வர முனைகிறது. GST விசயத்தில் எப்படி மாநிலங்கள் காயடிக்கப்பட்டனவோ அவ்வாறே நீட் விசயத்திலும் நடக்கிறது.
நெட் தேர்வில் அனைத்து மாணவர்களாலும் உடனடியாய் வெற்றி பெற முடியாமல் போக தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு போதாமை ஏற்பட்டது. அரசு இதற்கு தீர்வாக ஸ்லெட் என்றொரு மாநில தகுதித் தேர்வை கொணர்ந்தது. (ஆனால் இந்த தேர்வை வெறும் கண் துடைப்பாகவே இன்று வைத்துள்ளது. தொடர்ச்சியாக எல்லா வருடமும் நடத்துவதில்லை. மேலும், ஒழுங்காக, ஊழலின்றி நேர்த்தியாகவும் நடத்துவதில்லை.) நீட்டுக்கும் அப்படி ஒரு தீர்வை கொணர்வதும் அதன் மூலம் நம் மாநிலத்துக்கு உரித்தான இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதும் தோதாக இருக்கும்.
ஆனால் அந்த துணிச்சல் இந்த டம்மி அதிமுக அரசுக்கு உண்டா?

பி,கு: எழுத்து ரீதியான எல்லா தகுதித் தேர்வுகளையும் ஒழித்து நடைமுறைத் தேர்வுகளை ஏன் நாம் அறிமுகப்படுத்தக் கூடாது? இது குறித்த என் கட்டுரை

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...