முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷி பாரதியின் கவிதைகள்: பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு

Image result for மனுஷி பாரதி

சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை இவ்வருடம் பெறும் கவிஞர் மனுஷி பாரதிக்கு வாழ்த்துக்களும் அன்பும். மனுஷி பாரதி ஒரு கவிஞராக தனித்துவமான அடையாளம் கொண்டவர். தொடர்ந்து கவிதையில் தீவிரமாக இயங்கி வருபவர். சமூக இழிவுகள், ஒடுக்குமுறை என ஒரு பக்கமும், மனித வாழ்வில் தீமை, இருண்மை என இன்னொரு பக்கமும் எழுதுபவர். பாதி சமூக விமர்சகர், பாதி உள்மன விசாரிப்பாளர். எந்த குழுவின், அமைப்பின், பத்திரிகையின் முன்னிறுத்தல் இன்றி முழுக்க தன் உழைப்பாலும் திறமையாலும் கவனம் பெற்றவர்.


  சரி, மனுஷியை தமிழ் பெண் கவிதை வரலாற்றில் எங்கு வைப்பது?

தமிழில் பெண் கவிதைகள் ரெண்டாயிரத்துக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும் ரெண்டாயிரம் தாம் பெண் கவிதைக்கு ஒரு தனி அடையாளம் தந்த காலகட்டம். கோட்பாட்டு ரீதியான வாசிப்பின் தாக்கம் வலுவாக கொண்ட உக்கிரமான, கிளர்ச்சியான, பதற்றம் ஏற்படுத்தும், திராவகம் போன்ற கேள்விகளை எழுப்பிய பெண் கவிதைகளின் காலம் அது. குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்த ராணி, சல்மா ஆகியோர் இக்கவிதைகளை அரசியல், சமூகம், பால் நிலை, பாலியல், சாதியம், குடும்ப வெளிக்குள் ஒடுக்கப்படும் உடல் என பல்வேறு திசைகளுக்கு எடுத்து சென்றனர். ஆண் கவிகளில் இருந்து பெண் கவிகள் இன்னொரு விசயத்திலும் வித்தியாசப்பட்டிருந்தனர்: ஆண் கவிகள் மத்திய வர்க்க வாழ்வில் ஒன்று கலந்து இருந்து, இன்னொரு பக்கம் கவிஞர்களாகவும் செயல்பட்டனர் (இதை தான் குற்றமாக காணவில்லை). ஆனால் பெண் கவிகள் புரட்சிகரமாக வாழ்விலும் இயங்கினர். திருமணம் தவிர்த்தனர்; அல்லது மணவாழ்வில் இருந்தாலும் வளைந்து செல்ல மறுத்தனர். வெளிப்படையாய் உடல் பற்றி எழுதி சர்ச்சைக்குள்ளாகினர். சர்ச்சைகளையும், விமர்சனங்களை மூர்க்கமாய் எதிர்கொண்டனர். குட்டி ரேவதி தன் கவிதைத் தொகுப்பு ஒன்றுக்கு “முலைகள்” என தலைப்பிட்டது போல் இதுவரை ஒரு பின்நவீனத்துவ கலகக்கார ஆண் கவிஞரும் தலைப்பிட்டதில்லை என நாம் கவனிக்க வேண்டும்.

Image result for குட்டி ரேவதி

 ரெண்டாயிரத்தின் முதல் பாதி வரை தமிழ் பெண்ணிய கவிஞர்கள் நக்சலைட்டுகள் போல் நம் சூழலில் செயல்பட்டனர். குட்டி ரேவதி ஒரு பதிப்பாளராக மாறி தனக்கு அடுத்து வரும் கவிகளை பிரசுரித்து தன் பாதையை நீட்டித்தார். ஆனால் ஒரு பிரமிளுக்கோ ஆத்மாநாமுக்கோ பின்னர் சுகுமாரனுக்கோ மனுஷ்யபுத்திரனுக்கோ அமைந்தது போல் ஒரு வாரிசு பரம்பரை, கவித்துவ தொடர்ச்சி, பாதச்சுவடுகளின் நீட்சி இப்பெண் கவிஞர்களுக்கு அமையவில்லை. ரெண்டாயிரத்தில் ஒருவிதத்தில் தமிழ் எழுத்துலகை புரட்டிப் போட்ட பெண் கவிதை தொடர்ச்சியற்று முறிந்து போனது.
 இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் இதே ஒடுக்கப்படும் பெண்ணுலகை (கோட்பாட்டு மொழியில் அல்லாது) ஒரு பொது மொழியில் எழுதினர். ஆனால் பாலியலால் கட்டமைக்கப்பட்ட பெண்ணுடலை வெளிப்படையாய், தத்ரூபமாய் எழுதவோ சித்தாந்த மொழியில் அலசவோ இப்புது கவிகள் முயலவில்லை. இந்த அடுத்த தலைமுறையினரின் கவிதைகள் தம் மொழி மற்றும் பாடுபொருளைப் பொறுத்து எண்பதுகளின் நவீன கவிதைகளை ஒத்திருந்தன. மனுஷியின் கவிதைகள் அப்படியானவை.
Image result for சுகுமாரன்Image result for மனுஷ்யபுத்திரன் 
மனுஷியிடம் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம் ஆகியோரின் தாக்கம் வலுவாக இருக்கிறது.

Image result for ஆத்மாநாம்

 அவரது குரல் உள்ளொடுங்கிய ஒரு தனிமனிதரின் குரல் அல்ல; உருவகங்களும் விவரணைகளும் அடர்ந்த குட்டி ரேவதி, சுகிர்த ராணியின் குரல் அல்ல. அது தமிழ்க் கவிதையில் முன்பு ஒலித்த, இன்றும் தொடரும் பொதுக்குரல். அறத்தைப் பற்றியும், சமூகக் கொடுமைகளைக் கண்டும் ஒரு மேடையில் இருந்து கொந்தளித்து கையுயர்த்தி கத்தும் குரல். ”கடவுள் தியானத்தில் இருந்த போது” எனும் அவரது கவிதையின் இறுதிப் பத்தியை கவனியுங்கள்:

”நண்பர்களே
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்”.


பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு பெண் கவிதை வந்துள்ளதற்கான அடையாளம் மனுஷியின் கவிதைகள். இதன் அடுத்த கட்டமாய், வரும் ஆண்டுகளில், பெண் கவிதையை அவர் மற்றும் அவரது சகபாடிகள் எங்கு அழைத்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிய ஒரு வாசகனாக ஆர்வம் கொள்கிறேன். மீண்டும் அவருக்கு எனது வாழ்த்தையும் பிரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: உயிர்மை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...