Skip to main content

மனுஷி பாரதியின் கவிதைகள்: பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு

Image result for மனுஷி பாரதி

சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை இவ்வருடம் பெறும் கவிஞர் மனுஷி பாரதிக்கு வாழ்த்துக்களும் அன்பும். மனுஷி பாரதி ஒரு கவிஞராக தனித்துவமான அடையாளம் கொண்டவர். தொடர்ந்து கவிதையில் தீவிரமாக இயங்கி வருபவர். சமூக இழிவுகள், ஒடுக்குமுறை என ஒரு பக்கமும், மனித வாழ்வில் தீமை, இருண்மை என இன்னொரு பக்கமும் எழுதுபவர். பாதி சமூக விமர்சகர், பாதி உள்மன விசாரிப்பாளர். எந்த குழுவின், அமைப்பின், பத்திரிகையின் முன்னிறுத்தல் இன்றி முழுக்க தன் உழைப்பாலும் திறமையாலும் கவனம் பெற்றவர்.


  சரி, மனுஷியை தமிழ் பெண் கவிதை வரலாற்றில் எங்கு வைப்பது?

தமிழில் பெண் கவிதைகள் ரெண்டாயிரத்துக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும் ரெண்டாயிரம் தாம் பெண் கவிதைக்கு ஒரு தனி அடையாளம் தந்த காலகட்டம். கோட்பாட்டு ரீதியான வாசிப்பின் தாக்கம் வலுவாக கொண்ட உக்கிரமான, கிளர்ச்சியான, பதற்றம் ஏற்படுத்தும், திராவகம் போன்ற கேள்விகளை எழுப்பிய பெண் கவிதைகளின் காலம் அது. குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்த ராணி, சல்மா ஆகியோர் இக்கவிதைகளை அரசியல், சமூகம், பால் நிலை, பாலியல், சாதியம், குடும்ப வெளிக்குள் ஒடுக்கப்படும் உடல் என பல்வேறு திசைகளுக்கு எடுத்து சென்றனர். ஆண் கவிகளில் இருந்து பெண் கவிகள் இன்னொரு விசயத்திலும் வித்தியாசப்பட்டிருந்தனர்: ஆண் கவிகள் மத்திய வர்க்க வாழ்வில் ஒன்று கலந்து இருந்து, இன்னொரு பக்கம் கவிஞர்களாகவும் செயல்பட்டனர் (இதை தான் குற்றமாக காணவில்லை). ஆனால் பெண் கவிகள் புரட்சிகரமாக வாழ்விலும் இயங்கினர். திருமணம் தவிர்த்தனர்; அல்லது மணவாழ்வில் இருந்தாலும் வளைந்து செல்ல மறுத்தனர். வெளிப்படையாய் உடல் பற்றி எழுதி சர்ச்சைக்குள்ளாகினர். சர்ச்சைகளையும், விமர்சனங்களை மூர்க்கமாய் எதிர்கொண்டனர். குட்டி ரேவதி தன் கவிதைத் தொகுப்பு ஒன்றுக்கு “முலைகள்” என தலைப்பிட்டது போல் இதுவரை ஒரு பின்நவீனத்துவ கலகக்கார ஆண் கவிஞரும் தலைப்பிட்டதில்லை என நாம் கவனிக்க வேண்டும்.

Image result for குட்டி ரேவதி

 ரெண்டாயிரத்தின் முதல் பாதி வரை தமிழ் பெண்ணிய கவிஞர்கள் நக்சலைட்டுகள் போல் நம் சூழலில் செயல்பட்டனர். குட்டி ரேவதி ஒரு பதிப்பாளராக மாறி தனக்கு அடுத்து வரும் கவிகளை பிரசுரித்து தன் பாதையை நீட்டித்தார். ஆனால் ஒரு பிரமிளுக்கோ ஆத்மாநாமுக்கோ பின்னர் சுகுமாரனுக்கோ மனுஷ்யபுத்திரனுக்கோ அமைந்தது போல் ஒரு வாரிசு பரம்பரை, கவித்துவ தொடர்ச்சி, பாதச்சுவடுகளின் நீட்சி இப்பெண் கவிஞர்களுக்கு அமையவில்லை. ரெண்டாயிரத்தில் ஒருவிதத்தில் தமிழ் எழுத்துலகை புரட்டிப் போட்ட பெண் கவிதை தொடர்ச்சியற்று முறிந்து போனது.
 இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் இதே ஒடுக்கப்படும் பெண்ணுலகை (கோட்பாட்டு மொழியில் அல்லாது) ஒரு பொது மொழியில் எழுதினர். ஆனால் பாலியலால் கட்டமைக்கப்பட்ட பெண்ணுடலை வெளிப்படையாய், தத்ரூபமாய் எழுதவோ சித்தாந்த மொழியில் அலசவோ இப்புது கவிகள் முயலவில்லை. இந்த அடுத்த தலைமுறையினரின் கவிதைகள் தம் மொழி மற்றும் பாடுபொருளைப் பொறுத்து எண்பதுகளின் நவீன கவிதைகளை ஒத்திருந்தன. மனுஷியின் கவிதைகள் அப்படியானவை.
Image result for சுகுமாரன்Image result for மனுஷ்யபுத்திரன் 
மனுஷியிடம் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம் ஆகியோரின் தாக்கம் வலுவாக இருக்கிறது.

Image result for ஆத்மாநாம்

 அவரது குரல் உள்ளொடுங்கிய ஒரு தனிமனிதரின் குரல் அல்ல; உருவகங்களும் விவரணைகளும் அடர்ந்த குட்டி ரேவதி, சுகிர்த ராணியின் குரல் அல்ல. அது தமிழ்க் கவிதையில் முன்பு ஒலித்த, இன்றும் தொடரும் பொதுக்குரல். அறத்தைப் பற்றியும், சமூகக் கொடுமைகளைக் கண்டும் ஒரு மேடையில் இருந்து கொந்தளித்து கையுயர்த்தி கத்தும் குரல். ”கடவுள் தியானத்தில் இருந்த போது” எனும் அவரது கவிதையின் இறுதிப் பத்தியை கவனியுங்கள்:

”நண்பர்களே
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்”.


பெண்ணிய வெளியில் இருந்து பொதுவெளிக்கு பெண் கவிதை வந்துள்ளதற்கான அடையாளம் மனுஷியின் கவிதைகள். இதன் அடுத்த கட்டமாய், வரும் ஆண்டுகளில், பெண் கவிதையை அவர் மற்றும் அவரது சகபாடிகள் எங்கு அழைத்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிய ஒரு வாசகனாக ஆர்வம் கொள்கிறேன். மீண்டும் அவருக்கு எனது வாழ்த்தையும் பிரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: உயிர்மை

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...