Skip to main content

சாதியை ஏன் திராவிட கழகங்கள் ஒழிக்கவில்லை? (1)


Image result for அண்ணா எம் ஜி ஆர்

இக்கேள்வியை பலரும் எழுப்பி இருக்கிறார்கள். திராவிட கட்சிகள் சாதியுடன் சமரசம் பண்ணிக் கொண்டன என்பது ஒரு பார்வை. திராவிட கட்சிகள் என்றுமே சாதியை ஒட்டுமொத்தமாய் ஒழிக்க முட்டி முனைந்ததில்லை என்பது மற்றொரு வரலாற்று ரீதியான பார்வை.
நமது நீதிக் கட்சி, திராவிட கழகம் துவங்கி திமுக வரை சாதி ஒழிப்பு ஒரு மேலோட்டமான கொள்கையாக இருந்தது உண்மையே. ஆனால் இக்கட்சிகள் ஒருவிதத்தில் தம் பிரதான கொள்கையாய் கொண்டது பிராமண சாதி ஆதிக்கத்தை முறியடிப்பதையே. அத்தோடு சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளையும் முன்னெடுத்தன. 

ஆகையால் இங்கே பல்வேறு முற்போக்கு சிந்தனைகள் முளைக்கும் வளமான விளைநிலம் ஏற்பட்டுள்ளது. இங்கே நீங்கள் சுலபத்தில் சீர்திருத்த கருத்துக்களை பேசி தாக்கம் ஏற்படுத்த முடியும். இங்கே விளிம்புநிலையினருக்கு (அறிவுத் துறையில், அரசியல் சமூக தளங்களில்) இயல்பில் திறந்து கொள்ளும் கதவுகள் கேரளா, வங்காளம் போன்ற இடதுசாரி கோட்டைகளில் கூட திறப்பதில்லை.
ஆனால் அதேவேளை இன்னொரு பக்கம் இங்கே கொடூரமான சாதிய ஒடுக்குமுறை தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே மூன்றாம் பாலினத்தோரை பிச்சைக்காரர்களாய், பாலியல் தொழிலாளிகளாய் நடத்துவதும், பெண்களை சாமர்த்தியமாய் ஒடுக்குவதும் நடந்து கொண்டிருக்கின்றன. முற்போக்கு – பிற்போக்கு விசைகள் தொடர்ந்து மோதி முயங்கும் வெளி தமிழகம். ஆனால் ஒப்பிட்டால் கேரளாவில் பெண்களுக்கான சுதந்திர வெளி ஊசிமுனை அளவே; அங்கு ஆண்கள் பெண்களை இழிவுபடுத்துவதும் ஒடுக்குவதும் பட்டவர்த்தம். அங்கு சாதிய உணர்வுகள் பெயரிலே படமெடுத்து எதிரே வருபவரை நோக்கி சீறுகின்றன. நடிகை பார்வதி மேனன் கூட தன் சாதிப் பெயரை துறக்க தமிழ்க்கவிஞர் குட்டிரேவதியுடனான உரையாடல் தேவைப்பட்டது – இத்தனைக்கும் கேரளா ஒரு முற்போக்கு மாநிலம்.
இச்சூழலுக்காக நாம் பெரியார் உள்ளிட்ட நமது சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், தலைவர்களை கையெடுத்து வணங்கலாம். ஆனால் இத்தலைவர்களால் ஏன் சாதியை முழுக்க ஒழிக்க இயலவில்லை எனும் கேள்வி எழும் போது ஒரு பக்கம் இருந்து தோன்றும் முயற்சிகளால் மட்டும் சமூகம் மாறுவதில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
ஒரு சமூகத்தில் பல்வேறு சமூக பொருளாத பண்பாட்டு விசைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் – கண்ணுக்குத் தெரியாதபடி எளிய விசைகள், வெளிப்படையாய் நம்மை இயக்கும் வலுவான விசைகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது சமூகத்துக்கு ஒரு மாற்றத்துக்கான தேவை ஏற்படுகிறது. அப்போது மக்கள் ஒரு குறிப்பிட்ட விசைக்கு இடம் அளிக்கிறார்கள்; அது மேல் வந்து முன்னேகிப் பாய ஊக்கமளிக்கிறார்கள். அவ்விசையின் முகமாய் தோன்றும் ஆளுமைகள், தலைவர்களை மக்கள் கொண்டாடி வழிபடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்களின் தேவை, நோக்கம், லட்சியம் மாறுபடுகிறது.
ஒரு காலத்தில் பெரியாரை, அண்ணாவை தலைவர்களாய் கொண்ட அதே சமூகம் தான் எம்.ஜி.ஆர் முன்பும் மண்டியிட்டது. கலைஞரை புறக்கணித்து அடுத்து ஜெயலலிதாவின் கார்ப்பரேட் சமூகநல அரசியலையும் அது ஆராதித்தது. இந்த ஒவ்வொரு பத்தாண்டு அல்லது கால்நூற்றாண்டு காலகட்டங்களில் தமிழகத்தில் பொருளாதாரம் மெல்ல மெல்ல காத்திரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வந்தது. லட்சியவாதம் முழுக்க விழத் துவங்கிய காலத்தில் எம்.ஜி.ஆரும், முழுக்க சீரழிந்த காலத்தில் ரஜினியும் இச்சமூகத்தின் முகங்கள் ஆயினர். தமிழகம் கார்ப்பரேட்மயமாக்கலை நோக்கி நகர்கையில் ஜெயல்லிதா தோன்றி கோலோச்சினார்.
இந்த மாற்றங்களுக்கு இடையில் நாம் சாதி ஒழிப்பை சற்றே மறந்து போய் விட்டோம்.
இதைப் பற்றி முக்கியமான வினாக்கள் எழுப்பி எழுத்தாளர் ஜி.முருகன் முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார்:
 கைவிடப்பட்ட சாதி ஒழிப்பு
...
தலித் அமைப்புகள் தவிர்த்து சாதி ஒழிப்புப் போராட்டம் பெரியாரோடு நின்றுவிட்டதாகவேத் தோன்றுகிறது.
சாதி ஒழிப்பில் பெரியார் காட்டிய தீவிரத்தை வேறு யாரும் எடுத்துச் செல்லவில்லை. சில அமைப்புகள் அதை சம்பிரதாயமாகவே தொடர்கின்றன. நலிந்து ஒலிக்கும் அவற்றின் குரல் மக்களின் காதுகளுக்கு சென்று சேர்வதில்லை.
தலித் அமைப்புகளின், சிந்தனையாளர்களின் குரல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை, சில நேரங்களில் புலம்பல்களாக எதிர்கொள்ளப்படுகின்றன, எரிச்சலோடும் பார்க்கப் படுகின்றன.
சாதி ஒழிப்பை முன்னெடுத்திருக்க வேண்டிய திராவிடக் கட்சிகள் வாக்குப் பொறிக்கிகளாக மாறிப்போனது நாம் அறிந்ததே. இவை சாதி முரண்களை அதிகப்படுத்தி பலன் தேடுமே அல்லாது அதை அகற்றத் துணியாது என்பதே நிஜம்.
வன்னியர் சங்கம் பாமகவாக மாறி அது பெற்ற அரசியல் வெற்றிக்குப் பிறகு ஒவ்வொரு சாதியும் நாற்காலிகளைக் கனவு காணும் அரசியல் மையங்களாக ஆனது சாதி ஒழிப்புக்கு நேர்ந்த பெரிய பின்னடைவு.
ஆனால் சாதியப் படுகொலைகளும், சாதி ஆணவப் படுகொலைகளும் காலாகாலத்துக்கும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
வன்செயல்கள் நிகழும் போது கண்டிக்கும் அரசியல் தலைவர்களும் (சிலர் வாயைத் திறப்பதில்லை) கவனம் குவிக்கும் மீடியாக்களும் பின்னர் அவற்றை மறந்துவிடுகின்றனர்.
ஆனால் சாதி வன்மம் சமூகத்தின் ரத்த நாளங்களில் புகைந்து கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது கச்சநத்தம் கிராமத்தில் நடந்தது போல பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது, உயிர்களை பலி வாங்குகிறது.
இந்த வன்செயல்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே நேர்வதால் மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு அதன் வலி தெரியாமல் போகிறது. தன் குடும்பம், தன் சாதி, தன் இனம், அதன் நலன் என வாழும் மக்களால் இந்த வலியை பொதுவானதாக மாற்றிப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
சாதி ஏற்றத் தாழ்வு சமூகத்தின் பெரும் பிரச்சினையாக, கறையாக, கொப்புளமாக மாறி அதன் வலி அதிகரிக்கும் போது அதை பெரும்பாலானவர்கள் உணரும் போதுதான் சாதி ஒழிப்புக்கு சாதகமான வழிகள் திறக்கும் என்று தோன்றுகிறது.
இல்லையென்றால் நல்ல ஆட்சியாளர்கள் கையில் அரசு இருக்க வேண்டும். சாதிய வன்முறைகள் சமூகத்தின் பெரும் தீங்கு என உணர்ந்து அதைக் கலைவதற்கான முன்னெடுப்புகளை அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் அதற்கான சூழல் பின்னடைந்து போவதே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் நிலைநாட்டியே தீருவோம் என்று திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கையில் சாதி ஒழிப்புக்கான சாத்தியங்கள் குறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
சாதிய வன்முறையை தனக்குள் கொண்ட ஒரு சமூகம் நிச்சயம் அறிவார்த்தமான சமூகமாக இருக்க வாய்ப்பே இல்லை. நம்மை நல்லவர்கள் என்றும் அறிவாளிகள் என்றும் சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படவே வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...