முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (2)


Image result for desire painting

இச்சையை ரெண்டாக பிரிக்கலாம்: 1) உடனடியானது மற்றும் தற்காலிகமானது (immediate and short-lived) 2) படிப்படியாய் திரண்டு வளர்வது (cumulative).
முதலாவது உடனடியாய் உருவாவதாலே தற்காலிகமாகவும் இருக்கிறது. இரண்டாவது நமது உணர்வுகள், கற்பனை, நம்பிக்கை, சிந்தனை, கனவுகள், நினைவில் மீட்டு லயித்தல் என பல கெலிடோஸ்கோப் துண்டு சித்திரங்களால் உருக்கொள்கிறது. ஒருவரை நீங்கள் போகிற போக்கில் பார்த்து ரசிக்கிற போது இப்படி துண்டுதுண்டாய் அவரைப் பற்றின ஒரு சித்திரம் நமக்குள் உருவாவதில்லை.

நமது நாட்டில் பல கோடி மக்கள் காதலிப்பவர்களை மணப்பதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் போலியான, பாசாங்கான திருமண உறவிலும் இல்லை. பார்த்தவுடன் மோகம் தோன்றாத ஒருவரிடம் கூட போக போக ஒரு பிரியம் தோன்ற வாய்ப்புண்டு. திருமணம் எனும் சமூக அமைப்பு இன்றும் வலுவாக நிலைப்பதற்கு ஒரு காரணம் அதில் இருவகை மோகங்களுக்கும் சாத்தியமுண்டு என்பதே.
 தொடர்ந்து ஒருவருடன் வாழ்ந்து அவரை ரசிக்கவும் சமாளிக்கவும் அவருடன் இணக்கமாக உணரவும் நம்மால் திருமணத்துக்குள் முடிகிறது. இந்த உறவு நீடித்தும் இருக்கிறது. அதேவேளை இந்த உறவில் உக்கிரமான இச்சையும் அதன் விளையாட்டு பாவனைகளும் சாத்தியமில்லாமல் போகும் போது நீங்கள் திருமணத்துக்கு வெளியே உறவுகளை அமைத்துக் கொண்டு அங்கு தேவையானதை பெறவும் முடியும்.
திருமணத்துக்குப் பின் வேலையிடங்களில் எதிர்பாலினத்துடன் பழகும் கணவன் மனைவி ஒன்று அதிக ஆபத்தில்லாத கடலை போடுதல்கள், சீண்டலான உரையாடல்கள், பரஸ்பர பார்வை பரிமாற்றங்கள் என ஒரு எல்லைக்குள் நிற்கும் உறவுகளை உருவாக்கிக் கொள்வதை இன்று மிக அதிகமாக பார்க்கிறேன். சமூக வலைதளங்கள் இந்த மீறல்களை இன்னும் சுலபமாக்குகின்றன. ஆனால் மிக மிக அரிதாகத் தான் திருமணம் கடந்த உறவுகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதற்காக குடும்ப அமைப்பை கைவிட ஆணோ பெண்ணோ தயாராகிறார்கள். சமூக பழியை அஞ்சி அல்ல அவர்களை இப்படி திருமணத்துக்குள் நிலைப்பது. “தகாதஉறவுகளில் நீடித்த தன்மை இல்லை, அவை தற்காலிகமானவை, அவை திருமண உறவை விட போலியானவை, மேம்போக்கானவை என இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இன்று ஏன் மணமுறிவுகள் அதிகமாக நிகழ்கின்றன? முன்பை விட ஆணும் பெண்ணும் இன்று அதிக நேரம் வெளியே இருக்கிறார்கள். பரஸ்பரம் நேரப் பகிர்வும் அருகாமையும் இன்று குறைந்து விட்டன. ஒருவருடன் நீங்கள் செலவழிக்கும் காலம் குறைய குறைய (அதாவது ஒருவருடன் அதிக நேரம் இருந்து அலுப்பதனால் அல்ல) அவர் மீதான ஆர்வம் குன்றுகிறது; அவரைப் பற்றின சாதகமான சித்திரமும் சிதிலமுறுகிறது. அவர் மெல்ல மெல்ல உங்கள் உலகில் இருந்து இல்லாமல் ஆகிறார்.
இன்னொரு கேள்வி: ஒருவருடன் நீண்ட காலம் சேர்ந்திருக்கையில் அவர் மீது அலுப்பும் கோபமும் அதிகமாவதில்லையா? பழக பழக இச்சை வளருமெனில் நீண்ட கால உறவுகளில் ஏன் நேர்மாறாக நடக்கிறது?
இதுவும் உண்மை தான். ஒருவரது தொடர்ச்சியான அருகாமை கசப்பையும் ஏமாற்றத்தையும் தரலாம். இது இயல்பே என நினைக்கிறேன். எது ஒன்றை சிறப்பை கொணர்கிறதே அதுவே சீரழிவையும் தரும். அன்பு மட்டுமே வெறுப்பாக மாறுகிறது; மாற்றம் மாற்றமின்மையையும், நம்பிக்கைகள் அவநம்பிக்கைகளும் கொண்டு வருகின்றன. நீங்கள் இத்தனை நாள் இச்சை கொண்டிருந்த ஒருவர் மீது உங்களுக்கு மெல்ல மெல்ல அலுப்பு ஏற்படும் என நான் நினைக்கவில்லை.
மாறாக நீங்கள் செக்ஸியாக கருதின ஒன்று இப்போது கசப்பாக மாறலாம். சில மாதங்களுக்கு முன்னால் கிளர்ச்சி ஏற்படுத்திய ஒருவரது குழந்தைத்தனம் இப்போது முதிர்ச்சி இன்மையாய் படலாம். சுட்டியாய் தோன்றின முன்கோபம் இப்போது பொறுப்பின்மையாய் தோன்றலாம். விசயம் ஒன்று தான். அது மாறாமல் அப்படியே இருக்கிறதுஅதன் மீதான எதிர்வினை மட்டுமே மாறி இருக்கிறது.
இது எப்படி சாத்தியம்? ஒரே காரணம் எப்படி இருவேறு முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?
 நிச்சயம் ஏற்படுத்தும். அன்றாட வாழ்விலே கவனித்தோமானால் எத்தனையோ உதாரணங்களைக் காண முடியும். இதோ இந்த கட்டுரையை நான் அலுப்புடன். வெறுப்புடன், கசப்புடன் தான் எழுதுகிறேன். அதேவேளை என் எழுத்தை நான் என் உயிரை விட அதிகமாய் நேசிக்கிறேன். எந்தளவு நேசிக்கிறேனோ அந்தளவு அதை வெறுக்கவும் செய்கிறேன். அது மகிழ்ச்சியும் தரும் அளவுக்கு எனக்கு துன்பத்தையும் அளிக்கிறது. அது என்னை விடுவிக்கும் அளவு என்னை பிணைத்தும் வைக்கிறது. கண்டாலே எரிந்து விழும் மனைவியிடம் செல்லும் கணவனைப் போன்றே நான் என் எழுத்தை நாடி, தயக்கத்துடன், கசப்புடன், என்னையே கடிந்தபடி, செல்கிறேன். ஏன்? வேறு யாரும் தராத அபாரமான மகிழ்ச்சியை, களிப்பை, கிளர்ச்சியை அது தருகிறது என்பதால்.
உலகில் எல்லா திகைப்பூட்டும் அனுபவங்களுக்கும் இப்படி இரு பக்கங்கள் உண்டு. இரண்டும் சேர்ந்தே நம்மை வந்தடைகின்றன. ஆனால் இதற்கும் தாம்பத்யத்துக்குமான வித்தியாசத்தையும் நான் அறிவேன்.
(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...