முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (2)


Image result for desire painting

இச்சையை ரெண்டாக பிரிக்கலாம்: 1) உடனடியானது மற்றும் தற்காலிகமானது (immediate and short-lived) 2) படிப்படியாய் திரண்டு வளர்வது (cumulative).
முதலாவது உடனடியாய் உருவாவதாலே தற்காலிகமாகவும் இருக்கிறது. இரண்டாவது நமது உணர்வுகள், கற்பனை, நம்பிக்கை, சிந்தனை, கனவுகள், நினைவில் மீட்டு லயித்தல் என பல கெலிடோஸ்கோப் துண்டு சித்திரங்களால் உருக்கொள்கிறது. ஒருவரை நீங்கள் போகிற போக்கில் பார்த்து ரசிக்கிற போது இப்படி துண்டுதுண்டாய் அவரைப் பற்றின ஒரு சித்திரம் நமக்குள் உருவாவதில்லை.

நமது நாட்டில் பல கோடி மக்கள் காதலிப்பவர்களை மணப்பதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் போலியான, பாசாங்கான திருமண உறவிலும் இல்லை. பார்த்தவுடன் மோகம் தோன்றாத ஒருவரிடம் கூட போக போக ஒரு பிரியம் தோன்ற வாய்ப்புண்டு. திருமணம் எனும் சமூக அமைப்பு இன்றும் வலுவாக நிலைப்பதற்கு ஒரு காரணம் அதில் இருவகை மோகங்களுக்கும் சாத்தியமுண்டு என்பதே.
 தொடர்ந்து ஒருவருடன் வாழ்ந்து அவரை ரசிக்கவும் சமாளிக்கவும் அவருடன் இணக்கமாக உணரவும் நம்மால் திருமணத்துக்குள் முடிகிறது. இந்த உறவு நீடித்தும் இருக்கிறது. அதேவேளை இந்த உறவில் உக்கிரமான இச்சையும் அதன் விளையாட்டு பாவனைகளும் சாத்தியமில்லாமல் போகும் போது நீங்கள் திருமணத்துக்கு வெளியே உறவுகளை அமைத்துக் கொண்டு அங்கு தேவையானதை பெறவும் முடியும்.
திருமணத்துக்குப் பின் வேலையிடங்களில் எதிர்பாலினத்துடன் பழகும் கணவன் மனைவி ஒன்று அதிக ஆபத்தில்லாத கடலை போடுதல்கள், சீண்டலான உரையாடல்கள், பரஸ்பர பார்வை பரிமாற்றங்கள் என ஒரு எல்லைக்குள் நிற்கும் உறவுகளை உருவாக்கிக் கொள்வதை இன்று மிக அதிகமாக பார்க்கிறேன். சமூக வலைதளங்கள் இந்த மீறல்களை இன்னும் சுலபமாக்குகின்றன. ஆனால் மிக மிக அரிதாகத் தான் திருமணம் கடந்த உறவுகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதற்காக குடும்ப அமைப்பை கைவிட ஆணோ பெண்ணோ தயாராகிறார்கள். சமூக பழியை அஞ்சி அல்ல அவர்களை இப்படி திருமணத்துக்குள் நிலைப்பது. “தகாதஉறவுகளில் நீடித்த தன்மை இல்லை, அவை தற்காலிகமானவை, அவை திருமண உறவை விட போலியானவை, மேம்போக்கானவை என இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இன்று ஏன் மணமுறிவுகள் அதிகமாக நிகழ்கின்றன? முன்பை விட ஆணும் பெண்ணும் இன்று அதிக நேரம் வெளியே இருக்கிறார்கள். பரஸ்பரம் நேரப் பகிர்வும் அருகாமையும் இன்று குறைந்து விட்டன. ஒருவருடன் நீங்கள் செலவழிக்கும் காலம் குறைய குறைய (அதாவது ஒருவருடன் அதிக நேரம் இருந்து அலுப்பதனால் அல்ல) அவர் மீதான ஆர்வம் குன்றுகிறது; அவரைப் பற்றின சாதகமான சித்திரமும் சிதிலமுறுகிறது. அவர் மெல்ல மெல்ல உங்கள் உலகில் இருந்து இல்லாமல் ஆகிறார்.
இன்னொரு கேள்வி: ஒருவருடன் நீண்ட காலம் சேர்ந்திருக்கையில் அவர் மீது அலுப்பும் கோபமும் அதிகமாவதில்லையா? பழக பழக இச்சை வளருமெனில் நீண்ட கால உறவுகளில் ஏன் நேர்மாறாக நடக்கிறது?
இதுவும் உண்மை தான். ஒருவரது தொடர்ச்சியான அருகாமை கசப்பையும் ஏமாற்றத்தையும் தரலாம். இது இயல்பே என நினைக்கிறேன். எது ஒன்றை சிறப்பை கொணர்கிறதே அதுவே சீரழிவையும் தரும். அன்பு மட்டுமே வெறுப்பாக மாறுகிறது; மாற்றம் மாற்றமின்மையையும், நம்பிக்கைகள் அவநம்பிக்கைகளும் கொண்டு வருகின்றன. நீங்கள் இத்தனை நாள் இச்சை கொண்டிருந்த ஒருவர் மீது உங்களுக்கு மெல்ல மெல்ல அலுப்பு ஏற்படும் என நான் நினைக்கவில்லை.
மாறாக நீங்கள் செக்ஸியாக கருதின ஒன்று இப்போது கசப்பாக மாறலாம். சில மாதங்களுக்கு முன்னால் கிளர்ச்சி ஏற்படுத்திய ஒருவரது குழந்தைத்தனம் இப்போது முதிர்ச்சி இன்மையாய் படலாம். சுட்டியாய் தோன்றின முன்கோபம் இப்போது பொறுப்பின்மையாய் தோன்றலாம். விசயம் ஒன்று தான். அது மாறாமல் அப்படியே இருக்கிறதுஅதன் மீதான எதிர்வினை மட்டுமே மாறி இருக்கிறது.
இது எப்படி சாத்தியம்? ஒரே காரணம் எப்படி இருவேறு முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?
 நிச்சயம் ஏற்படுத்தும். அன்றாட வாழ்விலே கவனித்தோமானால் எத்தனையோ உதாரணங்களைக் காண முடியும். இதோ இந்த கட்டுரையை நான் அலுப்புடன். வெறுப்புடன், கசப்புடன் தான் எழுதுகிறேன். அதேவேளை என் எழுத்தை நான் என் உயிரை விட அதிகமாய் நேசிக்கிறேன். எந்தளவு நேசிக்கிறேனோ அந்தளவு அதை வெறுக்கவும் செய்கிறேன். அது மகிழ்ச்சியும் தரும் அளவுக்கு எனக்கு துன்பத்தையும் அளிக்கிறது. அது என்னை விடுவிக்கும் அளவு என்னை பிணைத்தும் வைக்கிறது. கண்டாலே எரிந்து விழும் மனைவியிடம் செல்லும் கணவனைப் போன்றே நான் என் எழுத்தை நாடி, தயக்கத்துடன், கசப்புடன், என்னையே கடிந்தபடி, செல்கிறேன். ஏன்? வேறு யாரும் தராத அபாரமான மகிழ்ச்சியை, களிப்பை, கிளர்ச்சியை அது தருகிறது என்பதால்.
உலகில் எல்லா திகைப்பூட்டும் அனுபவங்களுக்கும் இப்படி இரு பக்கங்கள் உண்டு. இரண்டும் சேர்ந்தே நம்மை வந்தடைகின்றன. ஆனால் இதற்கும் தாம்பத்யத்துக்குமான வித்தியாசத்தையும் நான் அறிவேன்.
(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...