| காற்று வெளியிடை |
(எனது “90களின் தமிழ் சினிமா” நூலை
ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி
இது.)
18. சமூகத்திலும் அரசியலிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் சினிமாவில் எப்படிப்
பிரதிபலிக்கிறது என்று இந்தப் புத்தகத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்திலும்
அத்தகைய மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுகிறதா?
ஆர். அபிலாஷ்: இல்லை, இலக்கியம் அவ்வாறு சமூகத்திலும் அரசியலும் உடனுக்குடன் நிகழும் மாற்றங்களை
பிரதிபலிப்பதில்லை. சொல்லப் போனால் மிக நுணுக்கமான தீவிரமான பண்பாட்டு
நகர்வுகளைக் கூட உடனுக்குடன் காட்டுவது சினிமா தான். இலக்கியம்
சமூக கலாச்சார நகர்வுகளை, அசைவுகளை, சரிவுகளை
உருவகமாய் மாற்றுகிறது. அதற்கு ஒன்றோ இரண்டோ பத்தாண்டுகள் தேவைப்படுகின்றன.
ஈழப் படுகொலைகள் முடிந்த பின், குருதியை மண் உறிஞ்சிய
பின், காற்றில் ஓலங்கள் கரைந்து மறைந்த பின், ஈழப் போர் இலக்கியம் உக்கிரமாய் எழுந்து வந்தது. அதுவும்
கூட நேரடியான அனுபவ சாட்சியங்களாய்த் தான். அடுத்த 25
ஆண்டுகளில் அந்த போர் அனுபவங்கள் மேலும் ஆழமாய் தீவிரமாய் பேசப்படலாம்.
ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” படிக்கையில் அது நேருவின் காலம் துவங்கி இந்தியா முழுக்க இடதுசாரிகள் வீழ்ச்சியடைந்த
காலம் வரையிலான காலகட்டத்தின் சித்திரம் என எனக்குத் தோன்றியது. அதாவது நமது சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா குறித்த ஒரு உருவக / நீதிக் கதையாக அதைப் படிக்க முடியும். அதே போலத் தான் “பொன்னியின் செல்வனும்”. “விஷ்ணுபுரத்தின்” தீவிரமும் சிக்கலும் இல்லையெனிலும், “பொன்னியின் செல்வனில்” சுதந்திரம் பெற்ற இந்தியாவின் லட்சியவாதமும் துடிப்பும் நிறைந்த, கல்மிஷம் இல்லாத ஒரு இளைஞனின் பார்வையில் (வந்தியத்தேவனின் பார்வையில்) சோழ சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் சதி வலைகளும் சூழ்ச்சிகளும்
சித்தரிக்கப்படுகின்றன. சுந்தரச்சோழர்
இந்திய தேசத்துக்கான உருவகமா அல்லது காந்தியின் குறியீடா?
ஆனால் சினிமா
இப்படி வரலாற்றை தின்று செரித்து புத்துருவாக்கம் செய்வதில்லை. அது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றக் கூடியது.
19. அரசியல் சரிநிலைகளை நிராகரிப்பது பின்-நவீனத்துவத்தின்
கூறுகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. திரைப்படங்களுக்கு நம் சமூகத்தில் அதிக கவனம்
கிடைக்கிறது. இவ்விரண்டு விஷயங்களையும் வைத்து பார்க்கும் போது, இன்று பின்-நவீனத்துவத்தை அறிந்துகொண்டு சினிமா
இயக்க வரும் ஒருவர், அரசியல் சரிநிலைகளைக் கவனத்தில் கொள்ள
வேண்டுமா?
ஆர். அபிலாஷ்: இன்றைய காலத்தின் ஆபத்தே
அரசியல் சரிநிலைகள் தாம் – அவை
நம்மை சதா எச்சரிக்கை உணர்வுடன் இருக்க செய்கிறன. யாரையும் காயப்படுத்தக்
கூடாது, நாம் பிற்போக்கு எனும் பிம்பம் ஏற்படக் கூடாது எனும்
பீதி நம் மென்னியை பிடித்து நெரிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு அபாரமான
சுதந்திரம் முக்கியம். அவன் தன்னை மொத்த சமூகத்துக்கும் பொறுப்பாக
கருதும் போது, தன் பிம்பம் குறித்த மிதமிஞ்சிய பிரக்ஞை கொள்ளும்
போது, தன் சுதந்திரத்தை இழக்கிறான். பின்–நவீனத்துவம் அறிந்தவரோ அறியாதவரோ சரிநிலைகளை கைவிட வேண்டும்; அது தான் முக்கியாம். உ.தா.,
மணிரத்னம் பின்நவீனத்துவவாதி அல்ல. அவரது ”காற்று வெளியிடை” அரசியல் சரிநிலைகள் அற்ற ஒரு படம்.
இப்படம் தன்முனைப்பு
மிக்க ஆனால் மூர்க்கமாய் ஒரு பெண்ணை நேசிக்கிற ஆணின் காதலை அவன் கோணத்தில் இருந்து
பேசியது; அவனது குரூரத்தை, அக்கறையின்மையை, முரட்டுத்தனத்தை சித்தரித்தது;
அத்தோடு அவனை எல்லா குறைகளை சகித்துக் கொண்டு ஒரு பெண் கசிந்துருகி காதலிப்பதையும்
காட்டியது. இதை நம் பெண்ணியவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவர்கள் இப்படத்தை கடுமையாய் எதிர்த்தனர்.
பெண்ணியவாதிகள் எதிர்பார்ப்பது அப்பெண்
அவனை உதறிக் கொண்டு சுதந்திரமாய் வாழ்வதாய் மணிரத்னம் சித்தரித்திருக்க வேண்டும் என்பது.
அது கருத்தியலுக்கு உவப்பாய் இருக்கலாம்; ஆனால்
வாழ்க்கைக்கு நியாயமாய் இருக்காது. நிஜ வாழ்க்கையில் காதல் பல
தீமைகளின் ஊடாய் தான் உயிர்க்கிறது, தழைக்கிறது; இப்பெண் ஏன் அவளை மதிக்காத அந்த ஆண் மீது இப்படி பைத்தியமாய் இருக்கிறாள் என்ற
கேள்விக்கு சுலபத்தில் பதில் இருப்பதில்லை; காதல் நம்மை ஒரு அடிமையாய்
இருக்க செய்கிறது; அதில் மனம் திளைக்க செய்கிறது. வாழ்க்கையை பகுத்தறிவுடன் மட்டும் எதிர்கொள்ளும் சில எளிய பெண்ணியவாதிகளுக்கு
இந்த ஆழம் புரியாது.
ஒரு படைப்பாளி இவர்களைப்
புறக்கணிக்க வேண்டும்.
Comments