முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“முலைகள்” கடந்து வந்த பாதை



பண்டைய தமிழர் நம்மைப் போல பெண்ணுடலை பொத்திப் பாதுகாக்க வேண்டிய “செல்வமாக”, ஆண் சமூகத்தின் “உடைமையாக” கருதினார்களா அல்லது அது மிக இயல்பான ஒன்றாக கருதப்பட்டதா? இன்று இந்நிலை எப்படி உள்ளது? இலக்கியத்தில் இதற்கு கிடைக்கும் பதில்கள் என்ன?
கம்பராமாயணம் போன்ற காப்பியங்களோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியமோ, சங்க இலக்கியமோ பெண் உடல் வர்ணனைகள் மலிந்து கிடக்கின்றன. கொசலை நாட்டு தெருக்களில் எதிர்படும் மகளிர், அந்தரப்புர அழகியர் என யாரைக் குறித்தென்றாலும் கம்பன் தடமுலைகளைக் குறிப்பிடாமல் நகர்வதில்லை. ஏன்?

பெண்ணின் மேலுடலை மறைப்பது இந்திய வரலாற்றில் சமீபத்தைய நிகழ்வு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்று பெண்ணின் முகத்தை பாராட்டி ரசிப்பது போன்றே முலைகளைப் பற்றி விவரிப்பதும் இருக்க வேண்டும். அதாவது பாலுறுப்பு எனும் மிகையான சமூகக் கூச்சம் இல்லாதிருந்திருக்க வேண்டும். உதாரணமாய் சிலப்பதிகாரத்தில் பதிகத்தின் முதல் பாடலில் ஒற்றை முலையுடன் கண்ணகி மரத்தின் கீழ் நிற்கும் சித்திரம் வருகிறது. அவள் முலையை திருகி வீசுவதும் தெருவிலே பட்டவர்த்தமாய் நடக்கிறது. முலை எனும் சொல்லின் வேர்ச்சொல்முல்” – இதன் பொருள் முன்னே. முலை என்றால் முன்னிற்கும் உறுப்பு என அர்த்தம். அவ்வளவு தான். அதில் எந்த கவர்ச்சியான உட்செய்தியும் இல்லை. ஆதி தமிழர் முலையை இவ்வாறு ஒரு சாதாரண உடலுறுப்பாகவே கண்டனர்.
கம்பராமாயணத்தில் நூற்றுக்கணக்கான முறை முலைகள் வருகின்றன.

ஒரு உதாரணம் தருகிறேன்:
 கமலப் பொதியினை நகுவன புணர் முலை”. (நாட்டுப்படலம், 44)
புணர் முலை என்பது நெருங்கிய ஸ்தனங்கள். இந்த முலைகள் கட்டுக்குலையாதவை எனக் குறிப்பிட கம்பன் அவற்றை விரியாத தாமரை மொட்டுகளுடன் ஒப்பிடுகிறார். இப்பெண்களின் முலைகள் தாமரை மொட்டுகளை விட மேலானவை. ஏனெனில் மொட்டுகள் மலர்ந்து பின் வாடி விடும். ஆனால் பெண் முலைகளோ ஆணின் கரம் பட்டு மலராது பின் வாடாது மொட்டாகவே இருப்பவை.
அண்ணாதுரை வைணவ பக்தி இலக்கியத்தை விமர்சித்து, திராவிட அடையாளத்தை அதற்கு மாற்றாய் கட்டமைக்கும் நோக்கில் கம்பரசம் (1947) எனும் நூல் எழுதுகிறார். அதில் பக்கம் பக்கமாய் கம்பனின் பெண் பாலுறுப்பு வர்ணனைகளை மேற்கோள் காட்டி கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என வரையறுக்கிறார்.
பழந்தமிழ் பெண்டிர் ஆடைக்கட்டுப்பாட்டை பொறுத்தமட்டில் கூடுதல் சுதந்திரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் பெண்ணுடலை உடைமையாக காணும் நோக்கு அன்றும் வலுவாகவே இருந்தது.
நவீன காலத்தில் ஒரு பக்கம் பெண்கள் வேலை செய்யவும் சம்பாதிக்கவுமான வாய்ப்புகள் பெருக ஆடை சுதந்திரமும் பெண்களுக்கு கிடைக்கிறது. இன்னொரு பக்கம், இப்போது தான் பெண்கள் மீதான கண்காணிப்பும் கற்பு குறித்த விசாரணைகளும் பலாத்காரங்களும் வன்முறையும் அதிகமாகியுள்ளன. “முலை” என்ற சொல்லை வெளிப்படையாய் உச்சரிக்கவே நாம் தயங்குகிறோம். இப்போது பெண் உடலை வெளிப்படையாய் சித்தரிப்பதே பெண் சுதந்திரத்தை அடைய சிறந்த வழி எனும் நிலைப்பாட்டை பெண் கவிகள் உலகம் முழுக்க எடுக்கிறார்கள். “காலாவில்” ரஞ்சித் சொல்வது போல் “உடலே ஆயுதம்” எனும் இடத்திற்கு இவர்கள் வந்து சேர்கிறார்கள். தமிழிலும் இது நேர்கிறது.
ரெண்டாயிரத்தில் குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி எனும் படைப்பாளிகளின் வருகை தமிழ் கவிதை உலகை தடம் புரள் செய்கிறது; புத்துணர்வு அளிக்கிறது. ஆனால் நவீன இலக்கியம் இதை சரிவர புரிந்து கொள்ளும் முதிர்ச்சியுடன் இல்லாததால் பெண் கவிதை கடும் சர்ச்சைக்குள் ஆகிறது. அண்ணா கம்பனை பழித்தது போன்றே இப்போது நம் பெண் கவிகள் பழிக்கப்படுகிறார்கள். குட்டிரேவதியின் “முலைகள்” (2002) எனும் தொகுப்பு ஏற்படுத்திய சலசலப்பை இங்கு குறிப்பிடலாம்.
ஆனால் பண்டைய இலக்கியத்தில் தென்படும் ஆண்-மைய நோக்கு, ஆணின் பார்வை (male gaze) குட்டிரேவதியின் கவிதைகளிலும் உள்ளது ஆச்சரியமே.
 பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்” (முலைகள்)
 கம்பனைப் போன்றே குட்டிரேவதியும் முலையை ஒரு மலராகத் தான் காண்கிறார்.
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன”

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்
தேங்கித் தளுப்புகின்றன” (முலைகள்)
இங்கு முலைகளின் இருப்பே ஆணின் தழுவலில் ஏற்படும் பூரிப்பிலும் மதலையின் உறிஞ்சுதலில் கிடைக்கும் புளகாங்கிதத்திலும், ஆணுடனான வருத்தத்தில் ஏங்கி தளும்புதலிலும் தான் நிகழ்கிறது. ஆணின்றி முலைகளை கட்டமைக்க முடியாது எனும் இடத்தில் மீண்டும் பெண்ணிருப்பு வந்து நிற்கிறது.
ஆனால் இதற்கான எதிர்நிலையில் நின்று லீனா மணிமேகலை, மாலதி மைதிரி, சுகிர்தராணி ஆகியோர் எழுதினர்.
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது.
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.” (“உடலெழுத்து”, சுகிர்தராணி)
இப்படி ஆண் அதிகாரத்தை முறியடிக்க பெண் கவிகள் முலைகளை வெளிப்படையாய் சித்தரிக்கத் துவங்கின போது கடும் சர்ச்சைகள் கிளம்பின (அண்ணாவின் கம்பரசம் போன்றே); அவற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.
நன்றி: விகடன் தடம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...