கிழக்கு பதிப்பகம் நடத்தும்
சென்னை நாள் சிறுகதைப் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராய் 44 கதைகளைப் (நானூற்று சொச்சம்
பக்கங்கள்) படித்து மதிப்பெண் இட்டு இப்போது தான் அனுப்பி விட்டேன். கதைகள் பற்றின
என் கருத்துக்களை இப்போதைக்கு கூறப் போவதில்லை. ஆனால் பொதுவாக ஆர்வமூட்டும் சற்றே ஆச்சரியப்படுத்தும்
ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாய் இது அமைந்தது
எனபதை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.
உணர்ச்சிகளை
வைத்து விளையாடும் மலினமான வணிகக் கதை பாணியில் இருந்து இன்றைய வெகுஜன கதைசொல்லிகள்
நகர்ந்து வந்திருக்கிறார்கள். இலக்கிய கதைகளுக்கு மட்டுமே உரித்தான சில கதைக்கருக்களை,
களங்களை இன்று வெகுஜன எழுத்தில் கையாள்கிறார்கள். விளிம்புநிலையினர் பிரச்சனைகள், ஒடுக்கப்பட்டோர்
நிலைமை முன்னுரிமை பெறுகின்றன. எப்போதும் போலவே வசனத்தை நன்றாய் எடுத்தாள்கிறார்கள்.
நமக்கு இப்போதைக்கு தேவை
இத்தகைய கதைசொல்லிகளுக்கு ஒரு பெரும் கவனப் பரப்பு – டிவி போல, பெரிய மேடைகள் போல.
கதையை படைப்பாளி சத்தமாய் வாசித்துக் காட்டுவதை, அதை உணர்ச்சிகரமாய் நிகழ்த்துவதை பல
லட்சம் பேருக்கான ஒரு பொழுதுபோக்கு வடிவமாய் நம்மால் உருவாக்க முடிந்தால் அது சிறுகதை
வடிவை ஒரு பெரிய இடத்துக்கு கொண்டு போக உதவலாம்; சிறுகதையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு
உயரும்; பல்லாயிரம் கதைகள் எழுதப்பட்டால் நூறு கதைகளாவது சாதனைப் படைப்புகள் ஆகும்.
பிக்பாஸில் அடிக்கொரு தரம் கேரள வெள்ளம் பற்றி பேசும் கமல் அதே பொறுப்புணர்வுடன் தனக்கு
உவப்பான ஒரு சிறுகதையில் இருந்து அரைப்பக்கம் படித்து காண்பிக்கலாம். பிக்பாஸ் வீட்டுக்குள்
ஒரு முக்கிய கதையை பரஸ்பரம் வாசித்துக் காட்டி நிகழ்த்துவதை ஒரு டாஸ்காக செய்ய சொல்லலாம்.
எப்படியோ நீங்கள் இத்தகைய
முயற்சிகள் எடுக்காவிட்டாலும் பதிப்பகத துறையினரும் வாசக சாலை போன்ற இலக்கிய அமைப்புகளும்
தொடர்ந்து முயன்றபடி தான் இருக்கிறார்கள்.
இந்த போட்டியை ஒருங்கிணைத்த
கிழக்கு பதிப்பகத்துக்கு என் வாழ்த்துக்கள்!
Comments