
செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற டாஸ்க் சற்றே சிக்கலானது.
போன் மணி அடிக்க அதை எடுக்கிறவர் அடுத்த வாரம் வெளியேற்றத்துக்காக நாமினேட் ஆகிறார்.
அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இன்னொரு பங்கேற்பாளரை ஒரு கஷ்டமான டாஸ்கை செய்ய வைக்க
வேண்டும். யஷிகாவை பிக்பாஸ் அழைத்து ஜனனியை தனது இமையை பிளீச் செய்ய வைக்க வேண்டும்;
அப்படி செய்தால் நீங்கள் தப்பிக்கலாம் என்கிறார். யஷீகாவும் ஜனனிக்கும் சும்மாவே முட்டிக்
கொள்ளும். இப்போது போய் எப்படி இந்த சிரமமான காரியத்தை செய்யும் படி வேண்டி ஏற்க வைப்பார்?
ஜனனிக்கு கண்கள் தனித்து தெரியும். அந்த முட்டைக் கண்களை கூடுதலாய் மலர வைக்கும் இமைகள்.
அந்த இமைகளை பிளீச் செய்தால் ஒன்று அவை வெளிறும் அல்லது சிவக்கும். எந்த பெண்ணும் யோசிப்பாள்.
தான் வெறுக்கும் யஷிகாவுக்காக ஜனனி இதை செய்வாரா?
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் தமக்கு ஒவ்வாத உடன்பாடில்லாத
காரியங்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு செய்து தியாகியாக மக்களிடம் பெயரெடுக்க முயல்கிறார்கள்.
செண்ட்ராயன் தன் சுருள் முடியில் சாயம் பூசினார், விஜலக்ஷ்மி சாணி நிரம்பிய தொட்டியில்
படுத்துக் கொண்டார், பாலாஜி மொட்டை அடித்தார்; ஜனனியும், ஆக, இதை செய்யலாம். ஆனால்
யஷிகாவுக்காக செய்வாரா என்பதே கேள்வி. யஷிகா எப்படி ஒப்புக்கொள்ள வைக்கப் போகிறார்?
யஷிகா தன் மொத்த தந்திரத்தையும் காட்டின இடம் இது. அவர் ஜனனியிடம்
போய் சொன்னார்: “நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்
என உங்களுக்குத் தெரியும். எனக்கு பிக்பாஸில் ஜெயிக்க வேண்டும். ஆனால் அதற்காக நீங்கள்
இமையில் பிளீச் அடிப்பது சிரமம் தான். உங்களுக்காக பாலாஜி அண்ணன் மொட்டையெல்லாம் அடித்துக்
கொண்டாரே? அப்படி இருக்க நீங்கள் எனக்காக இந்த தியாகத்தை செய்யலாம் தானே. உங்கள் கண்கள்
தான் உங்களுக்குப் பிளஸ். அதை அசிங்கப்படுத்தும்படியாய் இந்த ப்ளீச் ஆகி விடலாம். ஆனால்
என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் இதை செய்ய வேண்டும்.”
1) எந்த இடத்திலும் அவர் இறங்கி வந்து கெஞ்சவோ, தான்
இதுவரை அவருடன் முறைத்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோரவோ இல்லை. ஏனென்றால் ஜனனி என்ன
தான் வாயாடினாலும் இயல்பில் சற்று பணிந்து போகிறவர். அவரிடம் சற்று கெத்தாய் ஆதிக்க
தொனியில் பேசினால் எடுபடும் என யஷிகா அறிந்து வைத்திருக்கிறார்.
2) தனது பிக்பாஸ் போராட்டத்தை மிகைப்படுத்திப் பேசி,
ஜனனியின் தியாகம் ஒரு உன்னத தியாகம் எனும் பிம்பத்தை ஏற்படுத்துகிறார். நாம் எப்போதுமே
ஒரு பெரிய விசயத்துக்காக இழப்பை சந்திக்க தயங்க மாட்டோம் – அடுத்தவர்களின் விசயமே என்றாலும்
கூட. ஆகையால் தான் யஷிகா “என்னை ப்ளீஸ் காப்பாற்றுங்கள்” எனக் கோராமல், “என்னைப் போன்ற
ஒருவர் காப்பாற்றப்படுவது அவசியம், நான் அந்தளவுக்கு போராடி இருக்கிறேன், உழைத்திருக்கிறேன்”
என பில்ட் அப் கொடுக்கிறார்.
3) கடைசியாய் அவர் பாலாஜி ஜனனிக்காக அடித்த மொட்டையை,
தியாகத்தை, ஏதோ யஷிகாவே ஜனனிக்காக செய்தது போல சித்தரித்தார். பாலாஜி செய்த தியாகத்துக்கு
பதிலாக பாலாஜிக்காக ஜனனி பிளீச் செய்யலாம். ஏன் யஷிகாவுக்கு செய்ய வேண்டும். ஆனால்
யஷிகா பேசும் போது அத்தியாகத்தை செய்தது பாலாஜி அல்ல, யஷிகாவே எனும் தொனி ஏற்பட்டது.
தர்க்கத்தில் ஒரு வாக்கியம் ஒரு முதற்கோள் (premise)
மற்றும் அதன் விளைவினால் (conclusion) தோன்றுவது என்பார்கள்.
“பசிக்குது,
சோறு போடுங்க” என்பதில் ”பசிக்குது” முதற்கோள், “சோறு போடுங்க”” அதன் விளைவு. வெறுமனே
“சோறு போடுங்க” என்றாலே உங்களுக்கு பசிக்கிறது எனும் அர்த்தம் வந்து விடும். பசியில்லாமல்
நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள்.
”வெயில் அடிக்கிறது” என்றால், அவ்வளவு நேரமும்
வெயில் இல்லை, இப்போது தான் அடிக்கிறது என பொருள் வந்து விடும்.
முதற்கோள் அடித்தளம் என்றால் அதன் மீது கட்டி
எழுப்பப்பட்ட கட்டிடமே விளைவு / முடிவு.
யஷிகா இங்கு என்ன செய்கிறார் என்றால் சாமர்த்தியமாய்
ஒரு செயலுக்கான முதற்கோளை இன்னொன்றுக்கு பொருத்துகிறார்.
“பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால்
ஜனனி அவருக்கு கடன்பட்டிருக்கிறார்” என்பதில் முதற்கோள் “பாலாஜி மொட்டை அடித்து தியாகம்
செய்தார்.” அதை யஷிகா எடுத்துக் கொண்டு “பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால்
எனக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்” என இணைத்து பித்தலாட்டம் செய்கிறார். இதை சரிவர
யோசிக்காமல் கேட்டுக் கொண்டால் “ஆமா சரி தானே” எனத் தோன்றும்.
இது பாஜகவினர் தமக்கு எதிராய் போராடுகிறவர்கள்
தேச துரோகிகள் என்பது போல.
பாஜகவினரின் கோரலை நாம் இப்படி வகுத்துக் கொள்ளலாம்.
முதற்கோள்: பாஜக என்பது தேசப்பற்றாளர்களின் கட்சி.
தேசப்பற்றாளர்களை எதிர்ப்பது தேசத்துரோகம்.
இதில் இருந்து நாம் வகுப்பது
பாஜக = தேசப்பற்று
முடிவு: ஆக பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் துரோகிகள்.
இது கேட்க சரியாக தோன்றினாலும் தவறான வாதம். பிழை
முதற்கோளில் உள்ளது. பாஜக என்பது தேசப்பற்று மட்டுமல்ல; அக்கட்சி மதவாதமும் தான். ஆக
முதற்கோளின் சரியான வழிப்பொருள் (derivative): பாஜக = தேசப்பற்று / மதவாதம்.
ஆக, இதன் சரியான முடிவு – “பாஜகவை எதிர்ப்பவர்கள்
அனைவரும் துரோகிகள் அல்லது மதவாத எதிர்ப்பாளர்கள்”
இதே போன்ற ஒரு உதவி கோரும் நிலை ஐஸ்வர்யாவுக்கு
ஏற்பட்ட போது அவர் பதற்றப்பட்டு குழம்பி செண்ட்ராயனிடம் பொய் சொல்லி பெரிய குழப்பங்களை
ஏற்படுத்தி கெட்ட பெயரை சம்பாதித்தார். ஆனால் யஷிகாவோ ஒரு தேர்ந்த வியாபாரியைப் போல
தேர்ந்த சொற்களால் பித்தலாட்டமான வாதங்களால் ஜனனியை மறுவாதமே இன்றி ஏற்றுக் கொள்ள வைத்து
விட்டார். அவர் ஒரு வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். பேசி எதையும் விற்கும் திறன் அவர்
ரத்தத்திலே உண்டு போல!
Comments