என் பார்வை
அப்போது அங்கு வந்த ப்ரியா மீது சாய்ந்தது. கன்னம் வற்றி, நெற்றியில் கவலைக்
கோடுகளுடன் அலுப்பாக தெரிந்தாள். என் கண்களை கவனித்ததும் அவள்
முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அட
ஒண்ணும் ஆகாதுங்க. தொடுங்க”
தொட்டேன். ஒன்றும் தெரியவில்லை.
“ஒரு
வைப்ரேஷன் தெரியுதா?”
“இல்லீங்க”
“அதான்.
ஆனால் எனக்குத் தெரியுது. சில நேரம் எதாவது உலோகத்தைத்
தொடுகையில் எனக்கு சின்னதா ஷாக் கூட அடிக்குது. போனவாட்டி நீங்க
இது பற்றி சொன்ன போது விசித்திரமா பட்டுச்சு. இப்போ...”
“என்ன
சொல்றீங்க? அதெப்படி உங்களுக்கு திடீர்னு? சேச்சே”
“இது
காதலில் விழுற மாதிரி இல்லையா?”
“ஆங்?”
“I know this is a stupid comparison. ஆனால் காதல் வயப்பட்டிருக்கையில் நமக்கு மட்டும்
தான் அந்த அவஸ்தை என நினைப்போம். இந்த நிலைமின்சாரப்
பிரச்சனையும் அப்படித் தான். ஆனால் உங்களுக்கு
மட்டுமல்ல பல லட்சம் பேர் இதனால் அவதிப்படுகிறார்கள்.”
அவரது
சொற்கள் எனக்கு ஊடாய் கடந்தன. சும்மா சொன்னேன்,
“என்னால்
நம்ப முடியல சார்!”
“நேத்து ப்ரியா காப்பி கொணந்தாளே அதை
வாங்கின போது ஸ்ர்ர்ன்னு ஒரு ஷாக். கையை விட்டதுல மொத்தமும் கொட்டிடுச்சு.
ஆனால் அடுத்த வாட்டி அவள் காப்பியை கொணந்து கீழே வச்ச பின்னே நானா எடுத்தா
ஷாக் இல்ல.”
“ஓ”
“ஆமா.
அதுக்கு பின்னே தான் நான் இதைப் பற்றி தேடித் தேடி படிச்சேன்.
Static electric field. அது தான் இந்த விசித்திரத்துக்கு எல்லாம் காரணம். இதுக்கு முன்னே எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த மருந்து மாத்திரை, அலைச்சல், பதற்றம், கவலை, பின்னே lack of sex, ஆமா செக்ஸ், she hardly touches me now…”
அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ப்ரியா சட்டென முகம் சிவந்து கண் நிறைந்து போய் எழுந்து நின்றாள். வேகமாய் பக்கத்து அறைக்கு சென்று கதவை சாத்தினாள். அக்ஷய் கணினியை விட்டு
எழுந்து ஓடி வந்து அவன் அப்பா கையை கட்டிக் கொண்டான். அவர் அவனை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டார்.
”சாரி சாரி… நான் அப்படி சொல்லி
இருக்க கூடாது.”
நான் பேச்சை மாற்றினேன். அவருக்கு பிரியமான பாடல் ஒன்றை கிட்டாரில் மீட்டி கேட்பித்தேன். நான் முடித்த போது அவர் என் கையைப் பற்றி தழுதழுத்தார். ஆச்சரியமாய் எங்களுக்குள் ஷாக்கே இல்லை. இதைச் சொன்னதும் அவர் கண்கள் ஜொலிக்க சிரித்தார்.
“தீராவியாதியாளன் ஒருவர் மருத்துவமனையில் தன்னை ஒத்த இன்னொருவனைக் கண்டதும் கொள்ளும்
நிம்மதியைப் போல இது இல்லையா?”
அலுவலகத்தில் எனக்கு மேலாளரான ப்ரியா இப்போது மற்றொருத்தியாக
மாறிப் போனாள். அவளது நடவடிக்கைகளில் ஏதோ இனம்புரியாத மாற்றங்கள். என்னை ஒன்று புறக்கணித்தாள்; அல்லது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாள். ஒருநாள் நான் தனியாய் இருக்கையில் சுவரைப் பார்த்தபடி என்னிடம்
பேசினாள்:
”வீட்டுக் கோவத்தை முழுக்க உன் மேல காட்டுறேன் இல்லையா? ஏன் உன்னை இப்படி வதைக்கிறேன்? சத்தியமா தெரியல…”
வேலையை விடலாம் என அந்த தருணத்தில் முடிவெடுத்தேன்.
அடுத்த நாள் சீக்கிரமாகவே சென்று விட்டேன். வரவேற்பறை தாண்டினதும் வரும் அந்த சின்ன சந்திப்பு அறை. ஒரு சின்ன மேஜை. சில பத்திரிகைகள். இரண்டு நாற்காலிகள். விடாமல் சொட்டும் ஏ.ஸி. அவளை முதன்முதலாய்
பார்த்த இடம் அது. சரியாய் பதிமூன்று
மாதங்களுக்கு முன்.
அன்று என் கையில் ஏற்கனவே சில நிறுவனங்களின் ஆபர் லெட்டர்கள்
இருந்தன. மேலான சம்பளம், நல்ல பொறுப்புகள். சரி, இந்த வேலை வேண்டாம், ஆனால் இறுதி கட்ட நேர்முக சந்திப்பை மட்டும் முடித்து விடுவோம்
என காத்திருந்தேன். அதற்குத் தான்
டையை அடிக்கடி லகுவாக்கி மொபைலை பார்த்தபடியான அந்த காத்திருப்பு. அப்போது தான் அவ்வறையை சிலமுறைகள் கடந்து போன அவளை முதலில்
பார்த்தேன். நீல காட்டன் சேலை; தலையில் கொஞ்சமாய் மல்லிகை. அழகாய் மூக்குத்தி. அந்த அலுவலகத்தில் அப்படி ஒரு தோற்றத்தில் நான் பார்க்கும்
முதல் பெண்.
அங்கு உள்ள ஒரு சீனியர் என்றே அவளைப் பற்றி முதலில் எண்ணினேன். ஆனால் அந்த அறைக்குள் எனது இறுதி கட்ட நேர்முகத்தை எடுப்பதற்கு
அவளே வருவாள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
கண்ணாடிக் கதவைத் திறந்து எனக்கு எதிரே அமர்ந்து கோப்பில்
இருந்து சில காகிதங்களை எடுத்து பார்வையை ஓட்டினாள். முந்தானையை சரி செய்தாள். இருக்கையில் நகர்ந்து அமர்ந்தாள். என்னிடம் அவள் கேட்ட அலுவல் நிமித்தமான கேள்விகள் எப்படியோ
எனது இருப்பை அவள் துல்லியமாய் அந்தரங்கமாய் உணர்ந்து கொண்டதை சொல்லின. நான் மேஜையில் சாய்ந்து கிட்டத்தட்ட அவள் முகவாயை தொடும்
வண்ணம் நகர்ந்து மென்மையாய் பேசினேன். அவள் கேட்டதற்கெல்லாம் சரி என்றேன். இந்த வேலை உறுதியானதல்ல, இது ஒரு பைலட் புரோஜக்ட், புரோஜக்ட் வெற்றி பெற்றால் மட்டுமே ஊதியம் உயரும், உங்கள் அனுபவத்துக்கு இதை விட சிறப்பான பொறுப்புகள் வெளியே
கிடைத்தால் போய் விடுவீர்களா? அவள் விரும்பியதை
நான் சொன்னேன். நான் விரும்பியதை அவள் கேட்டாள். நாங்கள் பரஸ்பரம் கைமாறின சொற்கள் முழங்கையில் ஏறி கொத்தி
விளையாடும் கலர் கலரான கோழிக்குஞ்சுகளைப் போல நடந்து கொண்டன.
நான் எழுந்து கண்ணாடிக் கதவின் பிடியில் கைவைத்தேன். பட்டென மெல்லிய அதிர்ச்சி தாக்கியது. ஒரு நொடி திடுக்கிட்டு தடுமாறினேன். அது தான் துவக்கம்.
(தொடரும்)
Comments