முக்கால் மணிநேரம் ஆகி விட்டது. அவன் பாதி தேர்வை கூட முடித்திருக்கவில்லை. மனம் நிலைகொள்ளாமல் இருந்தது. சற்று நேரத்துக்கு முன் அவனுக்கு பின்னால் ஒரு பெண்ணை தேர்வெழுதுவதற்காய் அமர்த்தி விட்டு சென்றிருந்தார்கள். அவளது நீள்கூந்தலைப் பற்றி மென்று தின்பதற்கு மனம் தவித்தது. என்ன அற்பத்தனம் என அவன் தன்னை மீண்டும் மீண்டும் கடிந்து கொண்டான். அவள் முகம் முழுக்க பருக்கள். ஒவ்வொன்றாய் மாதுளம் விதைகளைப் போல பிதுக்கி உடைத்தால் எப்படி இருக்கும்?
மொட்டையடித்தவர் மீண்டும் வந்தார்.
“இன்னும் முடிக்கலியா?”
இல்லையென தலையாட்டினான்.
“இவ்வளவு லேட்டா ஏன் பண்ணுறீங்க? உங்களுக்காய் வேலை மெனக்கெட்டு நான் வெயிட் பண்ணனுமா?”
அவன் ஒன்றும் செல்லாமல் தலையை குனிந்தான்.
“சரி சீக்கிரமா முடிங்க”
தலையாட்டினான். அவர் கிளம்பினார். சட்டென திரும்பினார்.
தன் நீள்முடியையையோ பூப்போட்ட சட்டையையோ அடுத்து கண்டிக்க போகிறாரோ என பயந்தான்.
“நான் பதினைஞ்சு நிமிசத்தில வரலேண்ணா வெளியே செக்யூரிட்டி கிட்டே கொடுத்திட்டு கெளம்புங்க.”
தலையாட்டினான். இம்முறை அவர் போகாமல் அவனை உற்றுப் பார்த்தார்.
“வாயில என்ன?”
அவன் மெல்வதை நிறுத்தினான்.
“சூயிங் கம் தானே? இண்டெர்வியுக்கு வரும் போது சூயிங்கம் போடக் கூடாதுன்னு தெரியாது?”
அவன் உறைந்து போனான். நிச்சயமாய் இந்த வேலை கிடைக்காது.
“இப்பிடியா ஒரு கம்பெனிக்கு வரது? உங்களைப் பத்தி என்னவிதமான இம்பிரஷன் கிடைக்குமுன்னு யோசிச்சீங்களா?”
அவன் கால் மாற்றி நிற்க முயன்றான். அப்போது சற்று தடுமாறி மேஜையை பற்றிக் கொண்டான்.
“சரி சரி உட்காருங்க”
அவர் போனதும் அவன் சூயிங்கம்மை துப்பி மேஜைக்கு கீழே ஒட்டிக் கொண்டான். அவனுக்கு பின்னால் இருந்த பெண் தன் முன்னால் இருந்த சாக்லேட்டுகளை எடுத்து தன் பைக்குள் அவசரமாய் பதுக்கிக் கொண்டாள். அவள் மிட்டாய் நிறத்தில் இறுக்கமாய் டாப்ஸும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். பார்க்க பளபளப்பான கவரில் சுற்றப்பட்ட பெரிய மிட்டாய் போல தோன்றினாள்.
அவன் தேர்வுத்தாளுடன் செக்யூரிட்டியை நோக்கி சென்ற போது அதே ஆள் எதிரே வந்தார்.
“என்ன முடிச்சிட்டீங்களா? வாயில எதாவது இப்பவும் போட்டிருக்கீங்களா?”
அவன் இல்லையென்றான். வாயைத் திறந்து காட்டினான். அவர் பார்வையை திருப்பிக் கொண்டார். அவன் வாயை மூடினான்.
“முன்னே வேலை பண்ணின இடத்திலயும் இப்படித் தான் இருப்பீங்களா?”
அவன் பதில் சொல்லவில்லை.
“உங்க ரெஸ்யூம் செக் பண்ணினேன். ஏன் இவ்வளவு வேலைய விட்டிருக்கீங்க? ஒவ்வொரு எடத்திலயும் மூணு மாசம், ஆறு மாசம். உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?”
முந்தின வேலையிடத்தில் புரோஜெக்ட் முடிந்து தன்னையும் சேர்த்து அணியில் எல்லாரையும் அனுப்பி விட்டதாய் சொன்னான்.
அவர் அதிருப்தியாய் ஒரு பாவனை காட்டினார்.
“நீங்க இதுக்கு முன்ன இங்க இண்டெர்வியு அட்டெண்ட் பண்ணலேன்னு ஏன் பொய் சொன்னீங்க. நான் இப்போ தான் செக் பண்ணினேன்”
“ரொம்ப நாள் முன்ன தான் சார் அட்டெண்ட் பண்ணினேன்.”
“ரொம்ப நாளா? போன வருசம் இதே மாசம் அட்டெண்ட் பண்ணி இருக்கீங்க. சரியா?”
ஆமாம் என தலையாட்டினான்.
”ஏன் எங்கிட்ட சொல்லல?”
“ஆனா அப்போ விட இப்போ டெஸ்ட் நல்லா பண்ணி இருக்கேன். நல்லா ஸ்கோர் பண்ணுவேன் சார்.”
“என்ன நல்லா பண்ணி இருக்கீங்க? சும்மா சும்மா வந்து எழுத இதென்ன காலேஜ் அரியர்ஸா? சரி பரவால்ல. ஆனா உங்க நடத்தை சரியில்லையே. முகத்தை ஏன் இப்பிடி வச்சிக்கிறீங்க? போய் கண்ணாடியில பாருங்க. இதுனால தான் உங்க எங்கியும் வச்சிக்கிறதில்லன்னு நினைக்கிறேன். ஒருத்தர் முகத்தை பார்த்தா நல்லதா தோணனும். சரி பரவால்ல. கிளம்புங்க.”
“ரெஸல்ட் எப்பிடிங்க தெரிஞ்சிக்கிறது?”
“கூப்புடுவோம்”
“உங்க நம்பர் தரீங்களா? நீங்க கூப்பிடாட்டி நானே…”
“அதெல்லாம் கூப்பிடாதீங்க. நாங்களே கூப்பிடுவோம். இதை திருத்திற ஆள் லீவ்ல இருக்கார். அவர் வந்து திருத்தி உங்க மத்த விசயங்கள் எல்லாம் பார்த்து முடிவு பண்ணி கூப்பிடுவோம்”. பிறகு அவர் அவனை மேலும் கீழுமாய் பார்த்து யோசித்தார். “இனிமே இது மாதிரி சூயிங்கம்லாம் மெல்லாதீங்க.”
“சாரி சார்”
சில நொடிகள் எதையோ நினைத்துப் பார்த்தார் “எப்பிடி வந்தீங்க?”
“பஸ்ல வந்து இறங்கி நடந்து வந்தேன்”
“போயிடுவீங்களா?”
“ஆமா சார் போயிடுவேன்”
“இல்ல இருங்க. நானே உங்களை பஸ் ஏத்தி விடறேன்”
வழியெல்லாம் அவர் அவன் தேவையின்றி சிரமப்பட்டு அவ்வளவு தூரம் வந்ததற்காய் அவனை கடிந்து கொண்டு வந்தார். பெண்களின் கூட்டமொன்று குறுக்கே வர அவன் கண்களை தாழ்த்திக் கொண்டான். ஆனால் அவர் அப்பெண்களின் மார்பகங்களை தாராளமாய் பார்வையிட்டார். வாழைத்தோப்புக்கு செல்லும் நில உடைமையாளர் விளைந்து தொங்கும் குலைகளை மேற்பார்வையிடுவது போல்! பெண்களைப் பார்க்கும் போது அவர் தன் தோள்களை விரித்து மிடுக்காய் நடந்தார். விருப்பம் ஏற்பட்டால் யார் கையையாவது அவர் பிடித்து இழுக்கவும் கூடும், யாரும் கேட்க முடியாது என நினைத்தான். அவருடன் நடக்கும் போது தனக்கும் அவரது அந்த தன்னம்பிக்கை தொற்றிக் கொள்வதை உணர்ந்தான்.
அவனுக்கு திடீரென பசித்தது. கையிலுள்ள சொற்ப பணத்தில் எதையாவது உடனடியாய் வாங்கித் தின்று விட வேண்டும்; பிறகு யார் பைக்கிலாவது லிப்ட் கேட்டு தொற்றிக் கொண்டு வீடு போய் சேர்ந்து விடலாம் என நினைத்தான்.
பேருந்துகள் தொடர்ந்து வந்தும் போயும் இருந்தன. பக்கத்தில் உள்ள கடையில் பெரிய வாணலியில் பஜ்ஜிகள் பொரிந்தன. அதன் வாசனை அவன் வயிற்றைத் தாக்கியது. அவர் கடைக்கு சென்று இருவருக்கும் டீ சொல்லி விட்டு இரண்டு பஜ்ஜிகளை எடுத்து தட்டில் போட்டு சட்னி வாங்கிக் கொண்டார். அவன் தனக்கு டீ வேண்டாம் என்ற போது அவர் விசித்திரமாய் பார்த்து விட்டு டீயை ரத்து செய்தார்.
யாரும் லிப்ட் தராவிட்டால் எப்படி வீட்டுக்கு போவது?
அவர் நீளமான பஜ்ஜியை சட்னியில் தொய்த்து கடித்து பொறுமையாய் மென்று முழுங்கினார். வேறு பலர் வந்து பஜ்ஜிகளை தொட்டுப் பார்த்து தேர்வதும், செய்தித்தாளில் மடித்து எண்ணெய்யை தோய்த்து விட்டு கடிப்பதும், புது பஜ்ஜிகளுக்காய் வரிசையில் காத்திருப்பதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர் கையில் இருந்தும், ஒவ்வொருவர் கையில் இருந்தும் பஜ்ஜியை பிடுங்கி தின்ன வேண்டும் போலிருந்தது. அடுத்து பாத்திரத்தில் குவிக்கப்பட்ட எல்லா பஜ்ஜிகளையும் தின்னப் போகிறான். வாணலியில் பொரிகிற பஜ்ஜிகளைக் கூட விட்டு வைக்க போவதில்லை.
அவர் சட்டென அவனை நோக்கி திரும்பி எச்சில் கையை நீட்டி “சாப்பிடுறீங்களா?” என சத்தமாய் கேட்டார். ”இல்ல வேணாம் சார்” என்றான் மெதுவாக, தலையை சற்று தாழ்த்தி.
ஒரு பேருந்து வந்தது. கூட்டம் வாசல் வரை பிதுங்கி நின்றது. பல ஒற்றை கைகள் கால்கள் வெவ்வேறு கோணங்களில் வெளியே நீண்டு தெரிந்தன. பேருந்து மெதுவாக நின்றதும் ஒற்றைக் கால்கள் சாலையில் ஊன்றி சமன் செய்து கொண்டன. கைகளும் உடல்களும் கூட்டத்தோடு அடையாளமற்று கலந்திருந்தன. இந்த ஒற்றைக்கால்கள் நடுவில் இருந்து ஒரு குள்ளன் சிரமமப்பட்டு வழுக்கி இறங்க முயன்றான். அவர்கள் இடுப்புகளை அசைத்து அவனுக்கு சற்று இடைவெளி அமைத்தனர். இரு பக்கமாய் ஒற்றைக்கால்கள் விரிந்து முக்கோணமாய் ஒரு பாதை சில நொடிகளுக்கு ஏற்பட்டது. அவன் அதன்வழி வேகமாய் சறுக்கி தொப்பென கீழே குதித்தான். பாதை மீண்டும் உடனே ஜவ்வு போல மூடிக் கொண்டது.
அவன் ஓடிய வேகத்தில் குள்ளன் மீது மோதினான். குள்ளன் உடல் ஒரு சிசுவுனடையது போல் மிருதுவாய் இருந்தது. அப்போது பேருந்து நகரத் தொடங்கியது.
அவன் அந்த நகரும் பேருந்தை நோக்கி தட்டுத்தடுமாறி ஓடினான். புட்போர்டில் ஒருவர் அவனுக்கு கைகொடுத்தார். “ஏ வழிவிடுப்பா… உடம்பு முடியாதவரு… உள்ளே போப்பா நீ”. வேகமாய் ஓடி தொற்றிக் கொண்டான்.
பல உயரங்களில், அசைவுகளில், வாசனைகளில் உடல்கள் அவனை மூடிக் கொண்டன. ஒரு கால் முட்டி அவன் பின்னந்தொடையை உறுத்தியது. ஒரு முழங்கை அவன் விலாவை அழுத்தியது. கார வாசனை கொண்ட ஒரு மூச்சு அவன் காதுமடலை உரசியது. சொரசொர தாடி கொண்ட கூர்மையான நாசி ஒன்று அவன் கன்னத்தை சூடாக்கியது. அவன் மிகவும் இதமாக உணர்ந்தான்.
Comments