நான் இதைப் பற்றி பேச விரும்புவதற்கான காரணங்களை முதலில் சொல்ல வேண்டும்
1) பாலியல் வன்முறைகள் / பலாத்காரங்களை ஆண்கள் மட்டுமே செய்தவாய் ஒரு பிம்பம் உள்ளது. ஆண் சமூகம் வன்முறையானது, அது பெண்களை தொடர்ந்து ஒடுக்கக் கூடியது என பிரச்சாரம் பெண்ணிய பிரசார இயக்கத்தின் துவக்க காலம் முதலே உள்ளது. நமது ஆண்-மைய சமூகத்தில் இத்தகைய கொடூரமான நிலை உள்ளதை, பெண்கள் காலங்காலமாய் பாதிப்புள்ளாவதை நான் ஏற்கிறேன். ஆனால் ஆண்களும் இந்த சமூக அமைப்பில் பாதிப்புள்ளாகிறார்க. அதுவும் ஆண் குழந்தைகள் நிச்சயமாய் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்; சிறு வயதில் நிகழும் அத்துமீறல்களால் அவரக்ள் வாழ்நாள் முழுக்க்க மனக்காயங்களோடு வாழ்கிறார்கள். பெண்கள் தவறே செய்வதில்லை, அவர்களுக்கு அத்துமீறவே தெரியாது, அவர்கள் சாந்தசொரூபிகள், அவர்கள் பாலியல் குற்றம் செய்வதே இல்லை எனும் மிகையான தவறான பிம்பத்தை தீவிர பெண்ணியவாதிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள். இது பிரச்சார நோக்கத்திலேயே செய்யப்பட்டு வருகிறது. இதில் முழுக்க உண்மையில்லை.
2) ஆண் குழந்தைகள் மீது நிகழும் வன்முறையை நம் சமூகங்கள் பொருட்படுத்துவதில்லை. சொல்லப் போனால் ஆண் குழந்தைகளை பாதுகாக்கும் அக்கறையே நம் சமூக, அரசியல், சட்ட அமைப்புகளுக்கு இல்லை. ஒரு பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்படும் போது மீடியா அதற்கு தரும் கவனமும் ஏற்படுத்தும் பரபரப்பும் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படும் போது நிகழ்வதில்லை. “ஆண் குழந்தை தானே, அவனுக்குத் தன்னை பார்த்துக் கொள்ளத் தெரியும், அவனுக்கு எந்த ஆபத்தும் வராது” எனும் அலட்சியத்தை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது.
3) ஆண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகையில் குற்றவாளிகள் ஆண் மட்டுமே, இது ஒரு ஒருபாலின ஈர்ப்பு விவகாரம் என நாம் சுருக்கிக் கொள்கிறோம். ஆனால் கணிசமான குற்றங்களில் பெண்கள் ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்வதுண்டு / தவறாக நடந்து கொள்வதுண்டு / அத்துமீறுவதுண்டு. பெண்கள் தாயுள்ளம் படைத்தவர்கள், மென்மையானவர்கள், பாதுகாத்து உணவூட்டுபவர்கள் எனும் stereotype நம்மை உண்மையை பார்க்க விடாமல் செய்கிறது.
4) ஆண்மையை நாம் ஆதிக்கம், உறுதி, தைரியம், துணிச்சல், உடல் ஆற்றம் என வகைப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் சமூகத்தில் எல்லா ஆண்களும் பாகுபலிகள் அல்ல. ஆனால் சமூகம் பாகுபலி பிம்பத்தை எல்லா ஆண்கள் மீதும் திணிப்பதால் அவர்கள் தமக்கு நிகழும் பாலியல் அத்துமீறலை வெளியே பேச அஞ்சுகிறார்கள். பல ஆய்வுகள் என்ன காட்டுகிறது என்றால் தொடர்ந்து கணக்கெடுப்புகள் நடக்கும் போது பாதிக்கப்படும் ஆண்கள் முன்வந்து பேசும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதாவது இப்போதுள்ள புள்ளிவிபரம் கூட முழுக்க உண்மையல்ல. சமூகச் சூழல் அவர்களை ஊக்கப்படுத்துமானால் மேலும் பல ஆண்கள் தாம் அனுபவித்த பாலியல் கொடுமைகளை துணிச்சலாய் வெளிப்படுத்துவார்கள்.
5) சமீபத்தில் உளவியலாளர் ஷாலினி பேசுகையில் ஒரு பிரச்சனையை குறிப்பிட்டார். ஆண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச, அவர்களுக்கு சமூகத்துடன் உறவாடும் பயிற்சியை அளிக்க நம் சமூகம் தவறுகிறது. மாறாக ஆனால் எப்படி பேச வேண்டும், யாருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விசயங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது (இதில் பெண்களை கட்டுப்படுத்தும் நோக்கம் இருந்தாலும்) என்றார் ஷாலினி. விளைவாக, நம் சமூகங்களில் உணர்ச்சிகரமாய் ஒரு பலவீனமான இடத்தில் ஆண்கள் இருக்கிறார்கள். தமது பிரச்சனைகளை வெளியே வந்து பேசவும், பெண்களின் உணர்ச்சிநிலையை புரிந்து கொள்ளவும், பெண்களுக்கு தம்மை உணர்த்தவும் புரிய வைக்கவும் ஆண்களால் முடியாமல் போகிறது. இதை ஒரு சமூக ஊனம் எனக் கூறலாம். இன்று நிகழும் பல விவாகாரத்துகள், கள்ள உறவுகளுக்கு ஆணின் இந்த ஊனமே ஒரு காரணம் என ஷாலினி கருதுகிறார்.
ஆகையால் நாம் இங்கு ஆண்களின் பிரச்சனைகளையும் பிரதானப்படுத்தி பேச வேண்டி உள்ளது. பெண்கள் மட்டுமே முக்கியம் எனும் மிகைப்பிரச்சாரத்தை சற்று மட்டுப்படுத்தி பாதிக்கப்படும் எல்லா தரப்பினரையும் தீவிர பெண்ணியவாதிகள் பொருட்படுத்த வேண்டும்.
2009இல் பி.பி.பி நிறுவனம் வெளியிட்ட தகவல் இது. இங்கிலாந்தில் 2005முதல் 2006 வரை 2142 குழந்தைகள் பெண்களால் தான் பலாத்காரம் செய்யப்படுவதாய் ஹெல்ப்லைனை அழைத்து புகார் தெரிவித்தார்கள். 2015இல் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் ஆண் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் 20% மேலாக பெண்களே பாலியல் அத்துமீறல் செய்தவர்கள்.
1998இல் கத்தோலிக்க திருச்சபைகளில் பலாத்காரம் செய்யப்பட்டவர்களிடம் ஆய்வு செய்ததில் 5% குற்றவாளிகள் கன்னியாஸ்திரிகளே என கண்டறியப்பட்டது.
நம் சமூகங்கள் ஆண்களே பாலியல் குற்றவாளிகள், பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் நிரந்த தேவதைகள் எனும் முன்னெண்ணம் வலுவாக உள்ளது. நீங்கள் ஒரு காவல் நிலையத்துக்கு சென்று ஒரு சிறுவன் ஒரு பெண்ணால் பலாத்காரம் செய்யப்படுவதாய் சொன்னால் சிரிப்பார்கள், மீடியாவும் நம்பாது, ஆனால் இதுவே பாதிக்கப்பட்டது சிறுமி என்றால் அடுத்த நாளே அது தலைப்பு செய்தியாகும், கைது நடக்கும், நாடெங்கும் பேரணிகள் நடக்கும். இந்த எதிர்மறை நிலை காரணமாய் ஆண்கள் தமது சிறுவயது அனுவபவங்களை வெளியே சொல்வதே இல்லை. பல ஆண்கள் மனதுக்குள் புதைத்து விடுகிறார்கள். சிலர் இதன் விளைவாய் கடும் உளவியல் பாதிப்புக்குள்ளாகி வன்முறையான மனிதர்களாய் உருவெடுக்கிறார்கள். பலாத்காரம் என்றாலே பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே எனும் இந்த தவறான எண்ணத்தை வலுப்படுத்தியதில் பெண்ணிய அமைப்புகளின் தொடர் பிரச்சாரத்துக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. ஆண் கெட்டவன், எல்லா ஆண்களும் பலாத்கார வெறியர்கள், வன்முறையாளர்கள் எனும் மிகைச்சித்திரத்தை உருவாக்கினார்கள் ஆரம்ப கால பெண்ணியவாதிகள். இவர்கள் பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நின்றாலும் என்றுமே பாதிக்கப்பட்ட சிறுவர்களை பொருட்படுத்தியதோ பலாத்காரம் செய்யும் பெண்களை கண்டித்ததோ இல்லை. அது முக்கியம் அல்ல என்பதே கணிசமான பெண்ணியவாதிகளின் நிலைப்பாடு. இவர்களுக்கு ஒரு மகன் இருந்து, 12 வயதில் அவன் ஒரு வளர்ந்த பெண்ணால் பலாத்காரம் பண்ணப்பட்டால் அதை மறைத்து வைத்து, பரவாயில்லை விடு என சொல்வார்களா? மாட்டார்கள். தீவிர பெண்ணியவாதிகளின் ஒரு பிரச்சனை அவர்கள் பெண்களை எப்படியாவது பாதுகாக்க வேண்டும், பெண் ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும் எனும் பிரச்சார வேகத்தில் ஒரு இருமையை உருவாக்குகிறார்கள் என்பது – அவர்களின் உலகில் எல்லா ஆண்களும் நம்பியார்கள். மாமியார் கொடுமைகள் நடந்தாலும் அதற்கும் ஆண்களே காரணம்.
Comments