முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவுச்சிக்கல்கள் பாலியல் குற்றமாகும் தருணம் – சுபாய் கய் – கேட் ஷர்மா விவகாரம் (2)

Image result for subhash ghai kate sharma



இப்போது கேட் ஷர்மா வழக்குக்கு வருவோம். இப்பெண்ணும் இயக்குநருக்கு ஒரு எல்லை வரை இடமளித்திருக்கிறார். இல்லையென்றால் பிற ஆண்கள் முன்னிலையில் மசாஜ் பண்ணியிருக்க மாட்டார். ஆனால் முன்னர் குறிப்பிட்ட பெண்ணைப் போல இவர் வெறும் ஊழியர் அல்ல. இவர் இயக்குநரின் தோழி. சற்று நெருக்கமானவர். பிறர் முன்னிலையிலான அந்த மசாஜ் ஒருவிதத்தில் அப்பெண்ணுக்கு இயக்குநர் மீதுள்ள உரிமைக்கான ஒரு நிலைநாட்டல் (அவர் வயதானவர் என்பதால் மசாஜ் செய்ய இசைந்தேன் என்பது நம்பும்படியாய் இல்லை). ஆனால் பெண்கள் ஒரு உறவில் பல நிலைகளை வைத்துள்ளார்கள் – கொஞ்சம் பாலியல் சாயலுள்ள நட்பு, விளையாட்டான பாலியல் தன்மையுள்ள நட்பு, ஓரளவு பொறுத்துப் போகும் உறவு, முழுமையான காதலாகும் முன்பான பரிசோதனை உறவு. சில பெண்கள் ஒரே சமயம் பரிசீலனையில் பல ஆண்களை வைத்திருப்பார்கள். இது தவறான நடத்தை அல்ல. ஆனால் ஆண்களுக்கு இந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வது மிக மிக சிரமம். ஆண்களுக்கு பாலியல் என்பது படுக்கையில் தொடங்கி படுக்கையில் முடிகிறது. பெண்களுக்கு தொடுகையுடன் மட்டும் முடிகிற, பார்வையில், மொழியில் மட்டும் முடிந்து போகிற செக்ஸ் உண்டு. இத்தகைய ஆண்-பெண் புரிதலின்மையே குற்றங்களில் போய் முடிகிறது.

 நான் இவ்வழக்குகளில் ஆண்களை முழுக்க குற்றம் சொல்ல மாட்டேன் என்றாலும் பெண்களை ஆதரிப்பதே நியாயம் என நினைக்கிறேன். ஏனென்றால் கராறான தோழமை என்றால் பத்து நிமிட மசாஜ் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. கேட் ஷர்மா விசயத்தில் அதையும் மீறி ஒரு அணுக்கமான இடத்தை அவர் சுபாய் கய்க்கு அளிக்கிறார். அவரை உரிமை கொண்டாட விரும்பி இருக்கிறார். ஆனால் அதே நேரம் அவருக்கு தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் விரும்பி மசாஜ் செய்து விடும் ஒரு தோழி தன்னை ஏன் அணைக்கவோ முத்தமிடவோ அனுமதிப்பாள் என சுபாய் கய் எதிர்பார்ப்பதும் பெரிய குற்றமல்ல.
இதை உறவுச்சிக்கல் எனப் பார்க்கவும் வழியுள்ளது. ஆனால் இது ஒரு பாலியல் குற்றமாவது அவர் கேட் ஷர்மாவுக்கு தன் படத்தில் வாய்ப்பளிக்க மாட்டேன் என எச்சரித்த போது தான். இது சம்மந்தமாய் கேட் ஷர்மாவுக்கு அவர் அளித்த குறுஞ்செய்திகளே முக்கியமான ஆதாரம். இப்போது இது பலாத்கார வழக்கல்ல, வேலையிடத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு வழக்கு. இதை அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் – தன்னை இயக்குநர் அணைத்ததை அவர் நிரூபிக்க தேவையில்லை. இந்த குறுஞ்செய்திகளே போதும் என நினைக்கிறேன். (ஆனால் தன்வசம் இத்தகைய ஆதாரம் இல்லாததாலே சின்மயி இப்போது பொய்யறியும் சோதனைக்கு வைரமுத்து உடன்பட வேண்டும் என கோருகிறார் என நினைக்கிறேன்.)
மசாஜ் விசயமே இங்கு முக்கியமல்ல என்றாலும் அவர் ஏன் அதை இங்கு கொண்டு வருகிறார்?
கட்டியணைத்து முத்தமிட முயன்றது ஒரு தனியான அறையில். அதில் ஆதாரமில்லை என்பது தன் குற்றச்சாட்டை பலவீனமாக்கும் என அவர் அஞ்சுகிறார். ஆகையால் மசாஜ் சம்பவத்தை கொண்டு வருகிறார். ஆனால் இது தன் தரப்பை பலவீனமாக்கும் என அவர் உணரவில்லை என்பது பரிதாபம்.
சினிமாத் துறையில் என்றில்லை, செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பல ஆண்களும் பாலியல் வறட்சியால் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களாக போய் பெண்களை பலவந்தப்படுத்துவதில்லை. பாலியல் நோக்கத்துடன் ஒரு உறவை துவங்குகிறார்கள்; பெண்ணுக்கு பல நம்பிக்கைகளை, உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். ஆனால் செக்ஸ் ஒன்றையே அடிப்படை நோக்கமாய் வைத்து பெண்ணை நெருங்குவது பிரச்சனையிலே போய் முடியும். ஆண்கள் ஒரு கடையில் பொருள் வாங்குவது போல செக்ஸை பார்க்க பெண்கள் ஒரு சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு உறவின் ஒரு நிலையாக மட்டுமே செக்ஸை பார்க்கிறார்கள். என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும், தற்காலிக செக்ஸ் நோக்கங்களுக்கு உடன்படுவதை பெரும்பாலான இந்தியப் பெண்கள் விரும்புவதில்லை.
ஒரு விமானப்பணிப் பெண் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரணதுங்கா பற்றி சொன்ன குற்றச்சாட்டும் இவ்வகையானதே. இருவரும் பரஸ்பரம் பழக்கமானவர்கள். ஒரு நட்சத்திர விடுதியின் நீச்சல்குளத்தின் அருகே இருக்கையில் அவர் தன் கையைப் பிடித்து இழுத்ததாய் அப்பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, நிர்வாகவோ “இது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை, நாங்கள் தலையிட முடியாது” என பொறுப்பற்று பதில் சொல்லி விட்டது. பின்னர் அப்பெண் முகநூலில் இதை பதிவு செய்தார்.
வேலையிடங்களில் ஆண்கள் இப்படி கொக்கி போடுவதும் ஆபத்தில் போய் முடிகிறது.
ஆனால் இதையெல்லாம் சொல்வது எளிது – பல உறவுச் சிக்கல்களில், பாலியல் வறட்சியில் மாட்டி ஆண்கள் நிலையற்று இருக்கும் போது அவர்கள் எல்லா இடங்களிலும் கொக்கி போடுகிறார்கள், அந்த கொக்கியில் பின்னர் அவர்களே மாட்டிக் கொள்கிறார்கள்.
நம்மூரில் பதியப்படும் கணிசமான பலாத்கார வழக்குகள் அந்நியர்களுக்கு இடையில் நடப்பதல்ல. நமது உறவுச் சிக்கல்களே குற்றங்களாய் பரிணமிக்கின்றன என்பதாலே இதையெல்லாம் சொல்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...