இப்போது
கேட் ஷர்மா வழக்குக்கு வருவோம். இப்பெண்ணும் இயக்குநருக்கு ஒரு எல்லை வரை
இடமளித்திருக்கிறார். இல்லையென்றால் பிற ஆண்கள் முன்னிலையில் மசாஜ் பண்ணியிருக்க
மாட்டார். ஆனால் முன்னர் குறிப்பிட்ட பெண்ணைப் போல இவர் வெறும் ஊழியர் அல்ல. இவர்
இயக்குநரின் தோழி. சற்று நெருக்கமானவர். பிறர் முன்னிலையிலான அந்த மசாஜ்
ஒருவிதத்தில் அப்பெண்ணுக்கு இயக்குநர் மீதுள்ள உரிமைக்கான ஒரு நிலைநாட்டல் (அவர்
வயதானவர் என்பதால் மசாஜ் செய்ய இசைந்தேன் என்பது நம்பும்படியாய் இல்லை). ஆனால்
பெண்கள் ஒரு உறவில் பல நிலைகளை வைத்துள்ளார்கள் – கொஞ்சம் பாலியல் சாயலுள்ள நட்பு,
விளையாட்டான
பாலியல் தன்மையுள்ள நட்பு, ஓரளவு பொறுத்துப் போகும்
உறவு, முழுமையான காதலாகும்
முன்பான பரிசோதனை உறவு. சில பெண்கள் ஒரே சமயம் பரிசீலனையில் பல ஆண்களை
வைத்திருப்பார்கள். இது தவறான நடத்தை அல்ல. ஆனால் ஆண்களுக்கு இந்த நுணுக்கங்களை
புரிந்து கொள்வது மிக மிக சிரமம். ஆண்களுக்கு பாலியல் என்பது படுக்கையில் தொடங்கி
படுக்கையில் முடிகிறது. பெண்களுக்கு தொடுகையுடன் மட்டும் முடிகிற,
பார்வையில்,
மொழியில்
மட்டும் முடிந்து போகிற செக்ஸ் உண்டு. இத்தகைய ஆண்-பெண் புரிதலின்மையே
குற்றங்களில் போய் முடிகிறது.
நான்
இவ்வழக்குகளில் ஆண்களை முழுக்க குற்றம் சொல்ல மாட்டேன் என்றாலும் பெண்களை
ஆதரிப்பதே நியாயம் என நினைக்கிறேன். ஏனென்றால் கராறான தோழமை என்றால் பத்து நிமிட
மசாஜ் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. கேட் ஷர்மா விசயத்தில் அதையும் மீறி ஒரு
அணுக்கமான இடத்தை அவர் சுபாய் கய்க்கு அளிக்கிறார். அவரை உரிமை கொண்டாட விரும்பி
இருக்கிறார். ஆனால் அதே நேரம் அவருக்கு தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை.
ஆனால் விரும்பி மசாஜ் செய்து விடும் ஒரு தோழி தன்னை ஏன் அணைக்கவோ முத்தமிடவோ
அனுமதிப்பாள் என சுபாய் கய் எதிர்பார்ப்பதும் பெரிய குற்றமல்ல.
இதை
உறவுச்சிக்கல் எனப் பார்க்கவும் வழியுள்ளது. ஆனால் இது ஒரு பாலியல் குற்றமாவது
அவர் கேட் ஷர்மாவுக்கு தன் படத்தில் வாய்ப்பளிக்க மாட்டேன் என எச்சரித்த போது
தான். இது சம்மந்தமாய் கேட் ஷர்மாவுக்கு அவர் அளித்த குறுஞ்செய்திகளே முக்கியமான
ஆதாரம். இப்போது இது பலாத்கார வழக்கல்ல, வேலையிடத்தில்
நடைபெற்ற பாலியல் தொந்தரவு வழக்கு. இதை அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் –
தன்னை இயக்குநர் அணைத்ததை அவர் நிரூபிக்க தேவையில்லை. இந்த குறுஞ்செய்திகளே போதும்
என நினைக்கிறேன். (ஆனால் தன்வசம் இத்தகைய ஆதாரம் இல்லாததாலே சின்மயி இப்போது
பொய்யறியும் சோதனைக்கு வைரமுத்து உடன்பட வேண்டும் என கோருகிறார் என நினைக்கிறேன்.)
மசாஜ்
விசயமே இங்கு முக்கியமல்ல என்றாலும் அவர் ஏன் அதை இங்கு கொண்டு வருகிறார்?
கட்டியணைத்து
முத்தமிட முயன்றது ஒரு தனியான அறையில். அதில் ஆதாரமில்லை என்பது தன் குற்றச்சாட்டை
பலவீனமாக்கும் என அவர் அஞ்சுகிறார். ஆகையால் மசாஜ் சம்பவத்தை கொண்டு வருகிறார்.
ஆனால் இது தன் தரப்பை பலவீனமாக்கும் என அவர் உணரவில்லை என்பது பரிதாபம்.
சினிமாத்
துறையில் என்றில்லை, செல்வாக்கும் அதிகாரமும்
கொண்ட பல ஆண்களும் பாலியல் வறட்சியால் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து
ஈடுபடுகிறார்கள். அவர்களாக போய் பெண்களை பலவந்தப்படுத்துவதில்லை. பாலியல்
நோக்கத்துடன் ஒரு உறவை துவங்குகிறார்கள்; பெண்ணுக்கு
பல நம்பிக்கைகளை, உத்தரவாதங்களை
அளிக்கிறார்கள். ஆனால் செக்ஸ் ஒன்றையே அடிப்படை நோக்கமாய் வைத்து பெண்ணை
நெருங்குவது பிரச்சனையிலே போய் முடியும். ஆண்கள் ஒரு கடையில் பொருள் வாங்குவது போல
செக்ஸை பார்க்க பெண்கள் ஒரு சிக்கலான, பல
அடுக்குகள் கொண்ட ஒரு உறவின் ஒரு நிலையாக மட்டுமே செக்ஸை பார்க்கிறார்கள்.
என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும், தற்காலிக
செக்ஸ் நோக்கங்களுக்கு உடன்படுவதை பெரும்பாலான இந்தியப் பெண்கள் விரும்புவதில்லை.
ஒரு
விமானப்பணிப் பெண் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரணதுங்கா பற்றி சொன்ன
குற்றச்சாட்டும் இவ்வகையானதே. இருவரும் பரஸ்பரம் பழக்கமானவர்கள். ஒரு நட்சத்திர
விடுதியின் நீச்சல்குளத்தின் அருகே இருக்கையில் அவர் தன் கையைப் பிடித்து
இழுத்ததாய் அப்பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க,
நிர்வாகவோ
“இது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை, நாங்கள் தலையிட முடியாது”
என பொறுப்பற்று பதில் சொல்லி விட்டது. பின்னர் அப்பெண் முகநூலில் இதை பதிவு
செய்தார்.
வேலையிடங்களில்
ஆண்கள் இப்படி கொக்கி போடுவதும் ஆபத்தில் போய் முடிகிறது.
ஆனால்
இதையெல்லாம் சொல்வது எளிது – பல உறவுச் சிக்கல்களில்,
பாலியல்
வறட்சியில் மாட்டி ஆண்கள் நிலையற்று இருக்கும் போது அவர்கள் எல்லா இடங்களிலும்
கொக்கி போடுகிறார்கள், அந்த கொக்கியில் பின்னர்
அவர்களே மாட்டிக் கொள்கிறார்கள்.
நம்மூரில்
பதியப்படும் கணிசமான பலாத்கார வழக்குகள் அந்நியர்களுக்கு இடையில் நடப்பதல்ல. நமது
உறவுச் சிக்கல்களே குற்றங்களாய் பரிணமிக்கின்றன என்பதாலே இதையெல்லாம் சொல்கிறேன்.
Comments