சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதிய விசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன் பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரி பார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா?
பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா? மாட்டார்.
தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்த போதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போது தோன்றுகிறது. ஊரில் உள்ள அத்தனை ஆண்களும் உள்ளார ரேப்பிஸ்டுகள். ஆகையால் ஒரு பெண் விரல் சுட்டினால் உடனே கல்லை எடுத்து அடிக்க வேண்டும் எனும் மனோபாவம் ஏன் இப்படி இங்கு வலுத்து வருகிறது?
ஏன் ஆதாரமின்றி வைரமுத்துவை உடனடி குற்றவாளியாய் அறிவிக்க நாம் துடிக்கிறோம் என்பதே என் அடிப்படை வினா; வைரமுத்து குற்றமற்றவர் என சொல்வதல்ல என் நோக்கம்.
“நெருப்பின்றி புகையாது” என்பதை ஏன் பாலியலில் மட்டும் அப்படியே ஏற்கிறோம். திருட்டு, வன்முறை, கொலை போன்ற விவகாரங்களில் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டோரை / அவரது உறவினர்களை நாம் அப்படியே நம்புவதில்லை?
என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான் திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம்.
ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது.
அடுத்து நாம் ஆணை ஒரு காம வேட்டைக்காரனாய் காண்கிறோம். பெண்களுக்கு சதா இந்த அச்சம் இருக்கலாம். தம் உடல் குறித்த ஒரு பிரக்ஞை இருக்கலாம். ஆண்கள் சதா யாரையாவது புணர வாய்ப்பு கிடைக்காதா என அலைவதாய் கற்பித்துக் கொள்கிறோம். இந்த ஆண் எப்போது மற்றமையாக இருக்கிறான். அதாவது நம் அப்பா, அண்ணன், தம்பி, மகனாக இந்த ஆண் இருக்க மாட்டான். ஆனால் அடுத்த வீட்டு ஆண் என்பவன் மட்டும் காமகுரோதன் என நினைக்கிறோம்.
ஆனால் இது உண்மை அல்ல. ஆண்களுக்கு செக்ஸ் பற்றாக்குறை உள்ளது தான். ஆனால் அவர்கள் 24 மணிநேரமும் பெண்ணுக்காய் காத்திருப்பதில்லை. ஆணுலகில் சொத்து, பணம், அதிகாரம், புகழ், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், உணவு, கேளிக்கை ஆகியனவற்றுடன் பக்கத்திலேயே செக்ஸ் தேவையும் இருக்கிறது. செக்ஸ் என்பது ஆணின் ஒரே இலக்கு அல்ல. ஆண்களுக்கு வாழ்விலுள்ள பல இலக்குகளில், தேவைகளில் ஒன்றே செக்ஸ்.
இதற்கு இரு சான்றுகள் தருகிறேன்.
1) பெரும்பாலான ஆண்கள் செக்ஸுக்காக மேற்சொன்ன விசயங்களை விட்டுக் கொடுப்பதில்லை. பத்து கோடி ரூபாய் பணமா பிடித்த ஒரு பெண்ணுடன் ஒருமுறை செக்ஸா என்றால் எந்த ஆணும் பணத்தைத் தான் கேட்பான். ஒரு பிரபல இளம்நடிகையுடன் திருமண வாழ்வா அல்லது மணிரத்னம், சங்கர் போன்ற இயக்குநர்களுக்கு இணையான திரைசாதனை செய்ய வேண்டுமா என தெய்வம் தோன்றி கேட்டால் எந்த இளம் இயக்குநரும் இரண்டாவது தான் வேண்டும் என்பார்,
என் நண்பர் ஒருவர் ( நண்பர்களுடன் உயர்தர பார்களில்) மதுவருந்த மட்டுமே மாதம் 30,000 மேல் செலவழிக்கிறார். அது அவரது பாதி மாத சம்பளம். அவர் பேச்சிலர். வேறு எந்த பொறுப்புகளோ செலவோ இல்லை. அவர் அந்த பணத்தில் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஒரு புது விலைமகளிடம் செல்லலாமே! ஏன் செய்வதில்லை? பெண்ணா சரக்கா என்றால் அவருக்கு சரக்கு தான் வேண்டும்.
சொல்லப் போனால் சொத்து, பணம், அதிகாரம், அந்தஸ்து, பிள்ளைகளின் நலனுக்காக மிக அதிகமாய் செக்ஸை தியாகம் செய்வது நம்மூரில் தான் நடக்கிறது.
ஆண்களுக்கு செக்ஸ் என்பது
non-negotiable அல்ல. கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பிறகு பார்க்கலாம் என்பதே அவர்களின் மனப்போக்கு.
மேற்சொன்ன அத்தனை வசதி வாய்ப்புகளும் புகழும் வேண்டும், கூடவே அல்லது அடுத்து செக்ஸும் வேண்டும் என்றே ஆண்கள் நினைப்பார்கள். அவர்கள் செக்ஸையும் பிற தேவைகளையும் சமன் படுத்த முயல்கிறார்கள்.
சிலநேரம் இப்படி சமன்படுத்துவது முடியாமல் போகும்; அப்போது தான் அவர்கள் சறுக்குவார்கள். ஒரு பெண்ணுடனான பந்தத்துக்காக கொலை செய்து சிறை செல்லும் ஆண்களை பார்க்கிறோம் / கள்ள உறவு கொண்டு அதனால் பிரச்சனைக்கு உள்ளாகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அடுத்து உடனே சமநிலைக்கு மீண்டு விடுவார்கள்.
முழுநேர செக்ஸ் கேளிக்கை என வாழ்பவர்கள் அரிதாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை.
2) மேற்சொன்ன சமூக எண்ணம் (ஆண் எனும் வக்கிர மிருகம்) உருவாக காரணம் சிக்மண்ட பிராயிட். அவர் ஆணின் அடிப்படையான உயிரியல் விழைவு செக்ஸே என்றார். அவர் காலத்திலேயே டார்வின் மனிதன் தன் உய்வுக்காக அன்றாடம் போட்டியிடும் ஒரு மிருகம் என்றார். இந்த இருவரும் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டில் ஆண் = செக்ஸ் + மிருகம் எனும் பிம்பத்தை கட்டமைத்தார்கள். இந்த மிருகம் என்பது எப்போதும் ஏனோ ஆணாக மட்டுமே இருக்கிறது. ஆக, எங்கு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தாலும் கண்ணை மூடி “அந்த செக்ஸ் வெறிகொண்ட மிருகம் செய்திருக்கும்” என்கிறோம். ஆனால் இது பிழையான பார்வை.
ஒரு பெண்ணை அடைய ஒரு ஆணுக்கு சாத்தியம் ஏற்பட்டால் அவன் உடல் அவனை அவளை நோக்கி செலுத்தும். அது இயற்கை. ஆனால் எப்போதும் அப்படி நடப்பதில்லை. சந்தர்ப்ப சூழல், அவனது அப்போதைய மன / உடல் நிலை, மனப்போக்கு ஆகிய பல விசயங்கள் இதை தீர்மானிக்கும். ஆனால் இப்படி சூழ்நிலை ஏற்படுவதும் மிக அரிது தான்.
பெரும்பாலும் ஆண்கள் ஒரு பெண்ணுடன் இடத்தை / நேரத்தை செலவிட நேர்வது பொதுப் போக்குவரத்து, சாலை, கேளிக்கைத் தலங்கள், அலுவலகம் ஆகிய இடங்களில் தான். இங்கு எல்லா ஆண்களும் பெண்களை நோக்கிப் பாய்வதில்லை. பேருந்தில் பெண்ணை உரசுவது, பொதுவிடங்களில் பிரச்சனை தருவது ஆகியவற்றை நூற்றில் ஒன்றிரண்டு ஆண்களே செய்கிறார்கள். ஆனால் மொத்த பழியும் அந்த நூறு பேர்களுக்கும் போகிறது. ஆண் ஒரு செக்ஸ் வெறி கொண்ட மிருகம் என்றால் ஏன் எல்லா ஆண்களும் ஏன் அதை செய்வதில்லை? ஏனெனில் எல்லா ஆண்களுக்கும் எப்போதும் பெண்ணுடல் தேவையில்லை.
சமூகம் பழிக்குமே என்ற பயமா?
அது மட்டுமில்லை. ஒரு குற்றத்தை செய்யும் போது பிடிபட மாட்டோம் எனும் நம்பிக்கை அந்த கணத்தில் எல்லாருக்கும் இருக்கிறது.
இப்போதெல்லாம் மாணவ மாணவியர் (படிக்கிறோம் என்ற பெயரில்) பரஸ்பரம் வீட்டுக்கு சென்று இரவை படுக்கையறையில் பேசியும் குடித்தும் கழிப்பது நடக்கிறது. அங்கெல்லாம் கூட்டு செக்ஸ் நடக்கிறதா? இல்லை. ஏனெனில் செக்ஸ் மட்டுமே மனிதனின் ஒரே தேவை இல்லை.
Comments
உங்கள் பதிவு எங்கள் தளத்தில்:
சிகரம் : மின்னற் பொழுதே தூரம் | கட்டுரை | அபிலாஷ் சந்திரன் | ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)