Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)


Image result for vairamuthu

சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதிய விசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன் பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரி பார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா?
பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா? மாட்டார்.

தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்த போதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போது தோன்றுகிறது. ஊரில் உள்ள அத்தனை ஆண்களும் உள்ளார ரேப்பிஸ்டுகள். ஆகையால் ஒரு பெண் விரல் சுட்டினால் உடனே கல்லை எடுத்து அடிக்க வேண்டும் எனும் மனோபாவம் ஏன் இப்படி இங்கு வலுத்து வருகிறது?
ஏன் ஆதாரமின்றி வைரமுத்துவை உடனடி குற்றவாளியாய் அறிவிக்க நாம் துடிக்கிறோம் என்பதே என் அடிப்படை வினா; வைரமுத்து குற்றமற்றவர் என சொல்வதல்ல என் நோக்கம்.
நெருப்பின்றி புகையாதுஎன்பதை ஏன் பாலியலில் மட்டும் அப்படியே ஏற்கிறோம். திருட்டு, வன்முறை, கொலை போன்ற விவகாரங்களில் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டோரை / அவரது உறவினர்களை நாம் அப்படியே நம்புவதில்லை?
 என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டிஇவர் தான் திருடினார், நான் பார்த்தேன்என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்கஎனச் சொல்ல மாட்டோம்.
ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது.
அடுத்து நாம் ஆணை ஒரு காம வேட்டைக்காரனாய் காண்கிறோம். பெண்களுக்கு சதா இந்த அச்சம் இருக்கலாம். தம் உடல் குறித்த ஒரு பிரக்ஞை இருக்கலாம். ஆண்கள் சதா யாரையாவது புணர வாய்ப்பு கிடைக்காதா என அலைவதாய் கற்பித்துக் கொள்கிறோம். இந்த ஆண் எப்போது மற்றமையாக இருக்கிறான். அதாவது நம் அப்பா, அண்ணன், தம்பி, மகனாக இந்த ஆண் இருக்க மாட்டான். ஆனால் அடுத்த வீட்டு ஆண் என்பவன் மட்டும் காமகுரோதன் என நினைக்கிறோம்.
ஆனால் இது உண்மை அல்ல. ஆண்களுக்கு செக்ஸ் பற்றாக்குறை உள்ளது தான். ஆனால் அவர்கள் 24 மணிநேரமும் பெண்ணுக்காய் காத்திருப்பதில்லை. ஆணுலகில் சொத்து, பணம், அதிகாரம், புகழ், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், உணவு, கேளிக்கை ஆகியனவற்றுடன் பக்கத்திலேயே செக்ஸ் தேவையும் இருக்கிறது. செக்ஸ் என்பது ஆணின் ஒரே இலக்கு அல்ல. ஆண்களுக்கு வாழ்விலுள்ள பல இலக்குகளில், தேவைகளில் ஒன்றே செக்ஸ்.
இதற்கு இரு சான்றுகள் தருகிறேன்.
1)   பெரும்பாலான ஆண்கள் செக்ஸுக்காக மேற்சொன்ன விசயங்களை விட்டுக் கொடுப்பதில்லை. பத்து கோடி ரூபாய் பணமா பிடித்த ஒரு பெண்ணுடன் ஒருமுறை செக்ஸா என்றால் எந்த ஆணும் பணத்தைத் தான் கேட்பான். ஒரு பிரபல இளம்நடிகையுடன் திருமண வாழ்வா அல்லது மணிரத்னம், சங்கர் போன்ற இயக்குநர்களுக்கு இணையான திரைசாதனை செய்ய வேண்டுமா என தெய்வம் தோன்றி கேட்டால் எந்த இளம் இயக்குநரும் இரண்டாவது தான் வேண்டும் என்பார்,
என் நண்பர் ஒருவர் ( நண்பர்களுடன் உயர்தர பார்களில்) மதுவருந்த மட்டுமே மாதம் 30,000 மேல் செலவழிக்கிறார். அது அவரது பாதி மாத சம்பளம். அவர் பேச்சிலர். வேறு எந்த பொறுப்புகளோ செலவோ இல்லை. அவர் அந்த பணத்தில் இரண்டு நாளுக்கு ஒருமுறை ஒரு புது விலைமகளிடம் செல்லலாமே! ஏன் செய்வதில்லை? பெண்ணா சரக்கா என்றால் அவருக்கு சரக்கு தான் வேண்டும்.

சொல்லப் போனால் சொத்து, பணம், அதிகாரம், அந்தஸ்து, பிள்ளைகளின் நலனுக்காக மிக அதிகமாய் செக்ஸை தியாகம் செய்வது நம்மூரில் தான் நடக்கிறது.

ஆண்களுக்கு செக்ஸ் என்பது non-negotiable அல்ல. கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பிறகு பார்க்கலாம் என்பதே அவர்களின் மனப்போக்கு.
மேற்சொன்ன அத்தனை வசதி வாய்ப்புகளும் புகழும் வேண்டும், கூடவே அல்லது அடுத்து செக்ஸும் வேண்டும் என்றே ஆண்கள் நினைப்பார்கள். அவர்கள் செக்ஸையும் பிற தேவைகளையும் சமன் படுத்த முயல்கிறார்கள்.
சிலநேரம் இப்படி சமன்படுத்துவது முடியாமல் போகும்; அப்போது தான் அவர்கள் சறுக்குவார்கள். ஒரு பெண்ணுடனான பந்தத்துக்காக கொலை செய்து சிறை செல்லும் ஆண்களை பார்க்கிறோம் / கள்ள உறவு கொண்டு அதனால் பிரச்சனைக்கு உள்ளாகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அடுத்து உடனே சமநிலைக்கு மீண்டு விடுவார்கள்.
முழுநேர செக்ஸ் கேளிக்கை என வாழ்பவர்கள் அரிதாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை.
2)   மேற்சொன்ன சமூக எண்ணம் (ஆண் எனும் வக்கிர மிருகம்) உருவாக காரணம் சிக்மண்ட பிராயிட். அவர் ஆணின் அடிப்படையான உயிரியல் விழைவு செக்ஸே என்றார். அவர் காலத்திலேயே டார்வின் மனிதன் தன் உய்வுக்காக அன்றாடம் போட்டியிடும் ஒரு மிருகம் என்றார். இந்த இருவரும் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டில் ஆண் = செக்ஸ் + மிருகம் எனும் பிம்பத்தை கட்டமைத்தார்கள். இந்த மிருகம் என்பது எப்போதும் ஏனோ ஆணாக மட்டுமே இருக்கிறது. ஆக, எங்கு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தாலும் கண்ணை மூடிஅந்த செக்ஸ் வெறிகொண்ட மிருகம் செய்திருக்கும்என்கிறோம். ஆனால் இது பிழையான பார்வை.
ஒரு பெண்ணை அடைய ஒரு ஆணுக்கு சாத்தியம் ஏற்பட்டால் அவன் உடல் அவனை அவளை நோக்கி செலுத்தும். அது இயற்கை. ஆனால் எப்போதும் அப்படி நடப்பதில்லை. சந்தர்ப்ப சூழல், அவனது அப்போதைய மன / உடல் நிலை, மனப்போக்கு ஆகிய பல விசயங்கள் இதை தீர்மானிக்கும். ஆனால் இப்படி சூழ்நிலை ஏற்படுவதும் மிக அரிது தான்.
பெரும்பாலும் ஆண்கள் ஒரு பெண்ணுடன் இடத்தை / நேரத்தை செலவிட நேர்வது பொதுப் போக்குவரத்து, சாலை, கேளிக்கைத் தலங்கள், அலுவலகம் ஆகிய இடங்களில் தான். இங்கு எல்லா ஆண்களும் பெண்களை நோக்கிப் பாய்வதில்லை. பேருந்தில் பெண்ணை உரசுவது, பொதுவிடங்களில் பிரச்சனை தருவது ஆகியவற்றை நூற்றில் ஒன்றிரண்டு ஆண்களே செய்கிறார்கள். ஆனால் மொத்த பழியும் அந்த நூறு பேர்களுக்கும் போகிறது. ஆண் ஒரு செக்ஸ் வெறி கொண்ட மிருகம் என்றால் ஏன் எல்லா ஆண்களும் ஏன் அதை செய்வதில்லை? ஏனெனில் எல்லா ஆண்களுக்கும் எப்போதும் பெண்ணுடல் தேவையில்லை.
சமூகம் பழிக்குமே என்ற பயமா?
அது மட்டுமில்லை. ஒரு குற்றத்தை செய்யும் போது பிடிபட மாட்டோம் எனும் நம்பிக்கை அந்த கணத்தில் எல்லாருக்கும் இருக்கிறது.
இப்போதெல்லாம் மாணவ மாணவியர் (படிக்கிறோம் என்ற பெயரில்) பரஸ்பரம் வீட்டுக்கு சென்று இரவை படுக்கையறையில் பேசியும் குடித்தும் கழிப்பது நடக்கிறது. அங்கெல்லாம் கூட்டு செக்ஸ் நடக்கிறதா? இல்லை. ஏனெனில் செக்ஸ் மட்டுமே மனிதனின் ஒரே தேவை இல்லை.



Comments

சிறப்பு. இன்று மட்டும் உங்கள் வலையில் இருந்து பத்துப் பதிவுகள் வரை வாசித்து விட்டேன். உங்கள் பன்முகப் பார்வை வியப்பளிக்கிறது. தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை படித்து வருகிறேன்.

உங்கள் பதிவு எங்கள் தளத்தில்:

சிகரம் : மின்னற் பொழுதே தூரம் | கட்டுரை | அபிலாஷ் சந்திரன் | ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...