அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஆண் ஜொள்ளு விடுவதை பலாத்காரம் என மிகைப்படுத்தக் கூடாது. ஆண்கள் தம் எல்லைகளை, தாம் விருப்பத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்தான். ஆனால், அதற்காய் ஓர் ஆண் செய்வதெல்லாம் ரேப் ஆகாது. இது உண்மையான பாலியல் தாக்குதல் வழக்குகளின் தீவிரத்தை இல்லாமல் ஆக்கும்.
இது நான் சொல்வதல்ல, பிரான்ஸின் முக்கியமான பெண்ணியவாதிகள் இந்த இயக்கம் குறித்து தம் கவலைகளை தெரிவிக்கையில் கூறியது. Vox / Morning Consult நிறுவனம் பெண்களிடம் நடத்திய சர்வே ஒன்றில் கணிசமான பெண் பங்கேற்பாளர்கள் தெரிவித்த கவலை இது. ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் காமக் குரோதர்களாய்ச் சித்தரிக்காதீர்கள். நாளை உங்கள் மகனோ, தம்பியோ ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து “நீ அழகாய் இருக்கிறாய்” எனச் சொன்னால் அப்பெண், “இவன் என்னிடம் பாலியல் அத்துமீறல் செய்தான்” எனப் பொதுவெளியில் சொன்னால் உங்களுக்கு அது எப்படி இருக்கும் என சர்வே பங்கேற்பாளர்கள் பலர் வினவுகிறார்கள். பத்தியாளர் மார்கரெட் வெண்டே, எழுத்தாளர்கள் மார்கரெட் ஆட்வுட், நடிகர்கள் மேட் டேமன், லீயம் நீசம் உள்ளிட்ட பலரும் இத்தகைய கருத்தை இந்த #metoo இயக்கத்துக்கு எதிராய் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகை கேதரின் டெனுவே தலைமையில் நூறு பெண் கருத்தாளர்கள் #metoo குறித்து கவலை தெரிவித்து லெ மொண்டே பத்திரிகையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சார இயக்கம் இப்போது ஒட்டுமொத்த ஆணினத்தையே ஒழிக்கக் கிளம்பியிருக்கும் சூனியக்கார வேட்டையாக (witch hunt) மாறிப் போயிருப்பதாய் இவர்கள் கோருகிறார்கள். அனைத்து ஆண்களும் ரேப்பிஸ்ட்டுகள் அல்ல. சில செயல்கள் தெரியாத்தனமாகவும் சில மென்மையான விருப்பத் தெரிவிப்பாகவும் சில நடவடிக்கைகள் எளிய தொந்தரவுகளாகவும் உள்ள நிலையில் அனைவரும் பொத்தாம் பொதுவாய் தாம் அத்துமீறப்பட்டதாய் ஒப்பாரி வைக்கையில், “அத்துமீறல்” எனும் குற்றச்செயலே நீர்த்துப் போகும் நிலை ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு தம் தரப்பை விளக்கவோ, நிரூபிக்கவோ வாய்ப்பே தராமல் அவர்களைக் கூட்டமாய் மக்கள் மொத்துவது ஒருவித பெண்ணிய சர்வாதிபத்தியம் என்கிறார்கள் இந்த விமர்சகர்கள்.
“அவன் ஆணா என்று பார். ஆணென்றால் ரேப்பிஸ்ட்தான் என முத்திரை குத்தி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றும் ஒருவித வெறித்தனத்தை இந்தப் பிரச்சாரத்தின்போது எல்லாத் தளங்களிலும் பார்க்க முடிகிறது” என்கிறார் கேதரின் டெனுவே. இது பெண்ணியம் அல்ல, ஆண்கள் மற்றும் பாலியல் மீதான ஒருவித வெறுப்பு பிரச்சாரம் இது என்கிறார்.
பாலியல் அழைப்பை எப்போது தொந்தரவாகவோ, தாக்குதலாகவோ பார்க்கலாம் எனும் விஷயத்திலேயே இரு சாராருக்கும் கருத்து முரண். இன்முகம் காட்டினாலே பாலியல் தாக்குதல் என வகைப்படுத்தக் கூடாது என ஒரு தரப்பும், எந்த அளவுக்குப் போனால் பாலியல் குற்றமாகும் என்பதைப் பாதிக்கப்பட்டவரே முடிவெடுக்க வேண்டும் என அதன் எதிர்த்தரப்பும் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்டோரின் கோணத்தில், அவர்களின் விருப்பப்படி, பார்வையின்படி, ஒரு குற்றத்தை மதிப்பிடலாம் என்பது ஆபத்தானது மற்றும் அநியாயமானது.
http://www.minnambalam.com/k/2018/10/17/37?fbclid=IwAR2x49EadTH02rzH1yKF4Zo_mjIbELJCaUJKp2KoEEhfnbROurYez5Dfp4w
Comments