Dispossessed என்பது நவீன கோட்பாடுகளில் கவனம் பெறும் சொல். நிலத்தை இழந்தவர்கள், சொந்த அடையாளத்தை, பண்பாட்டு வேரை தொலைத்தவர்கள், உளவியல், ஆன்மீக ரீதிகளில் மையத்தில் இருந்து கழன்று வந்து தனித்து விடப்பட்டவர்கள், அகத்தில் இருந்து சிதறிப் போய் உழல்பவர்கள் என பல நிலைகளில் உள்ளவர்களை இக்கதைகள் சித்தரிக்கின்றன. ஐம்பதுகளில் இருந்து 2017இல் எழுதுகிறவர்கள் வரை பிரதிநுத்துவப்படுத்துகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து 16 கதைகள்.
இக்கதைகளின் படைப்பாளிகளையும் அவர்களிடம் இருந்து பதிப்புரிமையை பெற்றுள்ள பிரசுர நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு இக்கதைகளுக்கான அனுமதியை பெறுவது சுலபமல்ல. அது ஒரு தனியாளாய் சாத்தியமாகும் ஒன்றல்ல. ஆகையால் இந்நூலை விற்க வேண்டாம், உள்சுற்றுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். (ஏற்கனவே ஒரு பாடத்துக்கு நாங்கள் இவ்வாறு ஒரு தொகுப்பு நூலை உள்சுற்றுக்கென வைத்திருக்கிறோம்.) ஆனாலும் சு.ராவின் கதைக்காக மட்டும் காலச்சுவடு கண்ணனிடம் தெரிவித்து அவரை வெளியீட்டின் போது பேசக் கேட்டேன். அவருக்கு வேறு கூட்டம் அப்போது இருந்ததால் முடியவில்லை.
லக்கான நூலை விட இதை எடிட் செய்வது சவாலாக அமைந்தது. அத்தனை கதைகளையும் படித்து தேர்ந்தெடுத்து ஒரு வடிவத்துள் கொண்டு வருவது மூட்டைகளை சுமந்து அடுக்குவது போன்ற கடும் பணி. அடுத்து சரித்தன்மை. கன்னடக் கதையை ஒரு நண்பரின் உதவியுடன் சரி பார்த்தேன். தமிழும் மலையாளமும் எனக்கு தெரியும் என்பதால் நானே ஒப்பு நோக்கிக் கொண்டேன். ஆனால் அது மட்டுமல்ல, மொழியாக்க மொழி எல்லா கதைகளுக்கு சீராக வர வேண்டும்; கதைகளின் தொனியும் ஒரே ஸ்ருதியில் அமைய வேண்டும். பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் கையிருந்தாலும் அது ஒற்றைக் கை எழுதியது போன்ற தோரணையை கொண்டிருந்தால் வாசிக்க லகுவாக அழகாக இருக்கும். இறுதியாய் இலக்கணத் தவறுகளை திருத்த வேண்டும். இப்பணிகளை நான் முடித்து விட்டு, மாணவர்களைக் கொண்டு ஒரு ஆசிரியக் குழு அமைத்து இரண்டாம் நிலை திருத்தங்களை மேற்கொண்டேன். அடுத்து, அட்டையை அமைக்கும் பணி. அதில் நான் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டேன். லக்கான் நூலுக்கு அட்டைப்படம் வரைந்தவர் நிதின் எனும் மாணவர். அவரது கோட்டோவிய பாணி எனக்கு பிடித்தமானது – அவரைக் கொண்டே இந்நூலுக்கும் ஒரு அபாரமான ஓவியத்தை வரைந்து பெற்றேன். அலெக்ஸ் எனும் மற்றொரு மாணவர் அட்டை வடிவமைப்பை எடுத்துக் கொண்டார். ஆச்சரியமாக அவர் நமது சந்தோஷ் நாராயணனைப் போல மினிமலிச பாணியில் ஆர்வம் கொண்டவர் என அறிந்து கொண்டேன். ஆக கோட்டோவியமும் மினிமலிசமும் சேர்ந்து ஒரு அபாரமான அட்டைப்படம் தயாரானது. (அதற்கான சில முக்கிய தொழில்நுட்ப, அழகியல் ஆலோசனைகளை வழங்கிய சந்தோஷுக்கு இங்கு என் நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன்.) ஆனால் கல்வி அரையாண்டு முடிந்து போனதால் நூல் தயாரிப்பு நின்று போனது. இந்த அரைக் கல்வியாண்டு துவக்கத்திலேயே நூலை பிரசுரித்து வெளியிட்டு விட்டோம்.
கடத்தி வரப்பட்டவர்களைப் போன்ற பார்வையாளர்களை ஒரு கூடத்தில் வைத்து தனியாய் நூல் வெளியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை – அதனால் வகுப்பிலேயே வெளியிட்டேன். என்னுடன் நூலை எடிட் செய்த மாணவி மிருத்திகா துவக்க உரை வழங்கினார். 2008இல் தனது மராத்திய நாவல் மொழிபெயர்ப்புக்கு (டோப்பி ஷுக்லா) சாகித்ய அகாடெமி விருது பெற்ற பேராசிரியர் மீனாட்சி ஷிவ்ராமும் கவிஞரும் பேராசிரியருமான கெ.ஜெ ஜோஷியும், எங்கள் டீன் ஜான் ஜோசப் கென்னடியும் நூலை வெளியிட்டு பேசினர். நான் நன்றியுரை வழங்கினேன்.
இந்த தொகுப்பு பணியின் போது என்னை ஆச்சரியப்படுத்தின ஒன்று மலையாளிகளின் இலக்கிய ஆர்வம் – அவர்கள் அதிகமான கதைகளை மொழியாக்கினார்கள். கதைத் தேர்வும் அபாரமாய் இருந்தது. இதற்கு அடுத்து இந்தி. தமிழிலிருந்து சு.ராவின் விகாசம் கதையை ஒரு மாணவர் தானாகவே எடுத்து மொழியாக்கினார். மிச்ச இரு கதைகளில் ஒன்றை நானாக மொழியாக்கினேன் (ஜி.நாகராஜனின் “துக்க விசாரணை”); மற்றொன்றை (புதுமைப்பித்தனின் “இது மிஷின் யுகம்”) நான் தேர்ந்து கொடுத்து ஒரு மாணவி மொழியாக்கினாள். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவும் புத்திசாலித்தனமும் உண்டு – ஆனால் தமிழ் இலக்கிய பரிச்சயம் ஏனோ மிகவும் குறைவு. இந்நிலை விரைவில் மாற வேண்டும்.
மொழிபெயர்ப்பு நூல் பிரசுரம் எவ்வளவு சவாலான அதே நேரம் சாகசமான வேலை என அறிந்து கொண்டேன். திறமை மிக்க மாணவர்களை சரிவர பயன்படுத்தி இத்தகைய பணியை நிறுவனங்கள் பெரிய அளவில் செய்தால் இதுவரை மொழிபெயர்ப்பே காணாத பல இந்திய மொழிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கதைகளை ஆண்டு தோறும் கொணர முடியும். அந்த காலம் விரைவில் மலரட்டும்!

Comments