Skip to main content

Dispossessed – மொழிபெயர்ப்புக் கதைகள் (1)













எங்கு போனாலும் இலக்கிய பணியிலே கவனம் செலுத்த வேண்டும், இலக்கியம் சார்ந்தவர்களோடு இருக்க வேண்டும், வெளியுலக அலைச்சல்கள், கவனச்சிதறல்களில் பட்டுக் கொள்ளக் கூடாது, அன்றாட சிக்கல்களில் ஆற்றலை வீணடிக்கக் கூடாது என்பது நான் ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம். ஜெயமோகனை அண்டார்டிகாவில் கொண்டு விட்டாலும் அங்கும் விட்ட இடத்தில் இருந்து “வெண்முரசை” எழுதி முடிப்பார்; சின்ன பட்சிகளுடன் இலக்கியம் பேசி, அண்டார்டிக்காவுக்கு உரித்தான இலக்கிய கொள்கைகளை வகுத்து, அவற்றை உரையாடி நிறுவி மிக பரபரப்பாக இருப்பார். இதை வேடிக்கைக்காக அல்ல, பாராட்டும்படியாகவே சொல்கிறேன்.
 எழுத்தாளனுக்கு அதிரடி மாற்றங்கள் துன்பத்தையும் குழப்பங்களையும் பலவித அவதிகளையும் தரும். அவனது எழுத்துப் பணியில் ஒரு தொடர்ச்சி முக்கியம். அது துண்டிக்கப்பட்டால் அவன் அழிவுப் பணியில் ஈடுபடுவான் – தன்னை சார்ந்தவரக்ளை துன்புறுத்தி, தன்னை அழித்து தானும் துன்புற்று மெல்ல மெல்ல பைத்தியமாவான். ஆகையால் தான் நான் பயணிக்கும் போதும், என் வாழ்வில் நில அதிர்ச்சி போன்ற உருக்குலைவுகள் நிகழும் போதும் இலக்கிய பணிகளில் கூடுதல் தீவிரத்துடன் ஈடுபடுவேன். இங்கு வேலை கிடைத்து வந்த போது ஒரு கட்டுரை எழுதி வந்தேன், அதை ரயிலில் வரும் போது கொஞ்சம் எழுதினேன், கீழே விழுந்து கால் உடைந்து கல்லூரியில் சேர முடியாது அக்கா வீட்டில் ஓய்வில் இருக்கையில் மீதத்தை எழுதினேன், வேலைக்கு சேர்ந்த பின்னும் தொடர்ந்து என் அன்றாட எழுத்து வேலைகளில் மாற்றம் இன்றி பார்த்துக் கொண்டேன். இது எனக்கு வாழ்வில் எந்த பெரிய மாற்றமும் இல்லை, நாம் அப்படியே தான் அதே உலகில் தான் இருக்கிறோம் எனும் அக-உறுதியை பெற உதவியது.
இதைத் தொடர்ந்து கல்லூரிக்குள் மோனோகிராப் எனும் ஒரு ஆய்வு நூலை எழுத விண்ணப்பித்து அதை துவங்கினேன். ஆனாலும் சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்களின் அணுக்கம், இலக்கிய கூட்டங்களின் உற்சாகம், டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சுவாரஸ்யம் ஆகியவற்றை பெங்களூரில் மிஸ் பண்ணினேன். இங்கு வாசக சாலை செயல்படுகிறது, இங்கு பாவண்ணன், சரவண கார்த்திகேயன், சர்வோத்தமன், சித்தார்த்தன் சுந்தரம் போன்ற எழுத்தாளர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் என் அன்றாட வாழ்வில் இலக்கியச் சூழல் இல்லை. அப்போது ஒரு திருப்பம் வந்தது முதல் வருடத்தில் லக்கான் குறித்து ஒரு புத்தகத்தை மாணவர்களுடன் எழுதினேன். அப்போது தான் மாணாக்கரை என் சக எழுத்தாளர்களாய் மாற்றிக் கொள்ளலாம் எனும் யோசனை தோன்றியது.
இரண்டாம் வருடத்தில் எதேச்சையாய் இந்திய மொழிகளில் இருந்து கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கினால் என்ன எனும் துணை-யோசனை ஒன்று தோன்றியது. எங்கள் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மொழிப்பின்னணி கொண்ட, ஆங்கிலத்தில் சரளமாக புழங்கும் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். அவர்களில் சிலரிடம் மொழியாக்கத் திட்டத்தை முன்வைத்தேன். மாணவர்கள் ஆர்வம் காட்டியதோடில்லாமல் மிக வேகமாய் வேலை பார்த்தனர். மூன்று வகுப்புகளில் இருந்தே எனக்கு ஐம்பதுக்கு மேற்பட்ட கதைகள் வந்தன – நேப்பாளி, வங்காளம், இந்தியில் இருந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் வரை. நான் தாம் மொழியாக்கும் கதையின் தேர்வுப் பொறுப்பை மாணவர்களிடத்தே ஒப்படைத்தேன். சொல்லுக்கு சொல்லாக பொறுக்கிப் பார்த்து மொழியாக்க அவசியம் இல்லை, வாசிக்கும் போது கிடைக்கும் அதே உணர்வு வரும் படி மொழிபெயருங்கள், இதயத்தில் இருந்து எழுதுங்கள், மூளையில் இருந்து அல்ல என அறிவுரைத்தேன். அவ்வாறே (மூலக்கதையில் இருந்து பெரிதும் விலகாமல்) செய்தனர். மிக சரளமான மொழியாக்க கதைகள் கிடைத்தன. எல்லா கதைகளும் நல்ல தரமான கதைகள் அல்ல. ஆகையால் ஆழமான தீவிரமான கதைகளை பிரித்தெடுத்து, அவற்றை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தொகுத்தேன். அப்படித் தான் Dispossessed எனும் தொகுப்பு தயாரானது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...