எங்கு போனாலும் இலக்கிய பணியிலே கவனம் செலுத்த வேண்டும்,
இலக்கியம் சார்ந்தவர்களோடு இருக்க வேண்டும், வெளியுலக அலைச்சல்கள், கவனச்சிதறல்களில்
பட்டுக் கொள்ளக் கூடாது, அன்றாட சிக்கல்களில் ஆற்றலை வீணடிக்கக் கூடாது என்பது நான்
ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம். ஜெயமோகனை அண்டார்டிகாவில் கொண்டு விட்டாலும்
அங்கும் விட்ட இடத்தில் இருந்து “வெண்முரசை” எழுதி முடிப்பார்; சின்ன பட்சிகளுடன் இலக்கியம்
பேசி, அண்டார்டிக்காவுக்கு உரித்தான இலக்கிய கொள்கைகளை வகுத்து, அவற்றை உரையாடி நிறுவி
மிக பரபரப்பாக இருப்பார். இதை வேடிக்கைக்காக அல்ல, பாராட்டும்படியாகவே சொல்கிறேன்.
எழுத்தாளனுக்கு அதிரடி
மாற்றங்கள் துன்பத்தையும் குழப்பங்களையும் பலவித அவதிகளையும் தரும். அவனது எழுத்துப்
பணியில் ஒரு தொடர்ச்சி முக்கியம். அது துண்டிக்கப்பட்டால் அவன் அழிவுப் பணியில் ஈடுபடுவான்
– தன்னை சார்ந்தவரக்ளை துன்புறுத்தி, தன்னை அழித்து தானும் துன்புற்று மெல்ல மெல்ல
பைத்தியமாவான். ஆகையால் தான் நான் பயணிக்கும் போதும், என் வாழ்வில் நில அதிர்ச்சி போன்ற
உருக்குலைவுகள் நிகழும் போதும் இலக்கிய பணிகளில் கூடுதல் தீவிரத்துடன் ஈடுபடுவேன்.
இங்கு வேலை கிடைத்து வந்த போது ஒரு கட்டுரை எழுதி வந்தேன், அதை ரயிலில் வரும் போது
கொஞ்சம் எழுதினேன், கீழே விழுந்து கால் உடைந்து கல்லூரியில் சேர முடியாது அக்கா வீட்டில்
ஓய்வில் இருக்கையில் மீதத்தை எழுதினேன், வேலைக்கு சேர்ந்த பின்னும் தொடர்ந்து என் அன்றாட
எழுத்து வேலைகளில் மாற்றம் இன்றி பார்த்துக் கொண்டேன். இது எனக்கு வாழ்வில் எந்த பெரிய
மாற்றமும் இல்லை, நாம் அப்படியே தான் அதே உலகில் தான் இருக்கிறோம் எனும் அக-உறுதியை
பெற உதவியது.
இதைத் தொடர்ந்து கல்லூரிக்குள் மோனோகிராப் எனும் ஒரு ஆய்வு
நூலை எழுத விண்ணப்பித்து அதை துவங்கினேன். ஆனாலும் சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்களின்
அணுக்கம், இலக்கிய கூட்டங்களின் உற்சாகம், டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சுவாரஸ்யம்
ஆகியவற்றை பெங்களூரில் மிஸ் பண்ணினேன். இங்கு வாசக சாலை செயல்படுகிறது, இங்கு பாவண்ணன்,
சரவண கார்த்திகேயன், சர்வோத்தமன், சித்தார்த்தன் சுந்தரம் போன்ற எழுத்தாளர்கள், நண்பர்கள்
இருக்கிறார்கள். ஆனாலும் என் அன்றாட வாழ்வில் இலக்கியச் சூழல் இல்லை. அப்போது ஒரு திருப்பம்
வந்தது முதல் வருடத்தில் லக்கான் குறித்து ஒரு புத்தகத்தை மாணவர்களுடன் எழுதினேன்.
அப்போது தான் மாணாக்கரை என் சக எழுத்தாளர்களாய் மாற்றிக் கொள்ளலாம் எனும் யோசனை தோன்றியது.
இரண்டாம் வருடத்தில் எதேச்சையாய் இந்திய மொழிகளில் இருந்து
கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கினால் என்ன எனும் துணை-யோசனை ஒன்று தோன்றியது. எங்கள்
பல்கலைக்கழகத்தில் பல்வேறு மொழிப்பின்னணி கொண்ட, ஆங்கிலத்தில் சரளமாக புழங்கும் மாணவர்கள்
நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். அவர்களில் சிலரிடம் மொழியாக்கத் திட்டத்தை முன்வைத்தேன்.
மாணவர்கள் ஆர்வம் காட்டியதோடில்லாமல் மிக வேகமாய் வேலை பார்த்தனர். மூன்று வகுப்புகளில்
இருந்தே எனக்கு ஐம்பதுக்கு மேற்பட்ட கதைகள் வந்தன – நேப்பாளி, வங்காளம், இந்தியில்
இருந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் வரை. நான் தாம் மொழியாக்கும் கதையின் தேர்வுப் பொறுப்பை
மாணவர்களிடத்தே ஒப்படைத்தேன். சொல்லுக்கு சொல்லாக பொறுக்கிப் பார்த்து மொழியாக்க அவசியம்
இல்லை, வாசிக்கும் போது கிடைக்கும் அதே உணர்வு வரும் படி மொழிபெயருங்கள், இதயத்தில்
இருந்து எழுதுங்கள், மூளையில் இருந்து அல்ல என அறிவுரைத்தேன். அவ்வாறே (மூலக்கதையில்
இருந்து பெரிதும் விலகாமல்) செய்தனர். மிக சரளமான மொழியாக்க கதைகள் கிடைத்தன. எல்லா
கதைகளும் நல்ல தரமான கதைகள் அல்ல. ஆகையால் ஆழமான தீவிரமான கதைகளை பிரித்தெடுத்து, அவற்றை
ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தொகுத்தேன். அப்படித் தான் Dispossessed எனும் தொகுப்பு
தயாரானது.







Comments