மனித உறவுகளில் பல வீழ்ச்சிகளும்
முரண்களும் சமரசங்களும் உண்டு. கராறான நல்லவன்—கெட்டவன் எனும்
இருமைக்கு ஆண்-பெண் உறவுகளில் பெரிய மதிப்பில்லை. நாம் நம்புகிறவர்கள், நாம் விரும்புகிறவர்கள்
எல்லாம் நமக்கு நல்லவர்களே. தன் கணவன் ஒரு
தோழிக்கு ஆபாசமாய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் உடனே ஒரு பெண் அவனை மன்னிக்கலாமா அல்லது
அவனை விவாகரத்து பண்ண வேண்டுமா? ரேடிக்கல் பெண்ணியவாதிகள் “எந்த சமரசமும்
கூடாது, அவனை உதைத்து வீட்டை விட்டு துரத்து” என்பார்கள். இந்தியாவில் எத்தனையோ
குடும்பங்களில் கள்ள உறவுகளை ஜீரணித்து தாம்பத்ய பந்தங்கள் உயிர்வாழ்கின்றன.
தாம்பத்யம் இப்படி
மிக மிக சிக்கலான ஒன்று. மனிதர்கள் தொடர்ந்து
உருமாறும் உயிர்கள். எளிய கட்டமைப்புகளைக்
கடந்த பிரியமும் கருணையுமே நம் காதல்களை, தாம்ப்தயங்களை
உய்விக்கின்றன. ஆனால் ரேடிக்கல் பெண்ணியவாதிகள் சிலுவை
எடுத்துக் காட்டி “அப்பாலே போ சாத்தானே” என கூவும் பாதிரியாரைப்
போன்றவர்கள். ஆண்கள் எல்லாரும் சாத்தான்கள் எனும் போது
சாத்தானுடன் சமரசம் பண்ணலாமா? கூடாது என்பார்கள்
அவர்கள். ஹிலாரியின் சமரசம் என்பது அவரது அரசியல்
வாழ்க்கைக்கு, குடும்ப நலனுக்கு, தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு
அவசியமாக இருந்திருக்கலாம். அவரை பெண்கள்
பெருமளவில் ஆதரித்திருந்தால், இன்று டிரம்பின்
பெண் நலனுக்கு எதிரான வலதுசாரி வரிச்சலுகை ரத்துகளை தவிர்த்திருக்க முடியலாம். அரசியல் என்பது
எளிய மற்றமை உருவாக்கமோ, மற்றமையை கடுமையாய்
வெறுத்து போருக்காக அறைகூவல் விடுக்கும் முனைப்போ அல்ல என்கிறார் சூசன். Metoo இயக்கத்தின் முக்கிய
குறையாக இந்த இருமையைக் காணும் சூசன், இதைக் கடந்து
வந்து பரந்துபட்ட அரசியல் சமூக பொருளாதார அக்கறைகளை அது உள்ளடக்க வேண்டும் என்கிறார். ஆனால் அதற்கு
ரேடிக்கல் பெண்ணியம் கிறித்துவ மதவாத கதையாடலின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமே!
சரி செக்ஸ்-நேர்மறை பெண்ணியவாதிகளுக்கும்
போர்னோ எதிர்ப்பாளர்களுக்குமான மோதலுக்கு வருவோம்.
அறுபது-எழுபதுகளின் போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பை விடுத்து ஏன் விபச்சாரத்தை
தாக்கினார்கள்?
1) குடும்ப அமைப்பு ஒப்பிடுகையில் ஆபத்து குறைவானது. ஆகையால் அதை தாக்க வேண்டியதில்லை.
2) விக்டோரிய காலகட்டத்தில் இருந்தே ஓங்கி ஒலிக்கும்
ஒழுக்கவாத குரல்கள் உருவாக்கி வைத்துள்ள செக்ஸ்-வெறுப்பு கதையாடலை இந்த போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்திக்
கொண்டார்கள். குடும்ப செக்ஸை எதிர்ப்பது மிக மிக சிரமம், ஆனால் ஏற்கனவே அதிகார வர்க்கம் கண்டிக்கிற ஒழுக்க மீறல் செயலொன்றை (விபச்சாரம், போர்னோ) எதிர்ப்பது உடனடி வெகுமக்கள் ஆதரவை தமக்குப் பெற்றுத்
தரும் என இவர்கள் அறிந்திருந்தனர்.
3) தீவிர பெண்ணியவாதத்தில் உறைந்திருந்த பாலியல்
ஒழுக்கவாதம், தூய்மைவாதம் (puritanism), ஒழுக்க எதேச்சதிகாரம் இந்த போராட்டங்களில் வெளிப்பட்டதாய்
செக்ஸ்-நேர்நிலை பெண்ணியவாதியான எல்லென் வில்லிஸ் தான் 1981இல் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சொல்கிறார் (Lust Horizons: Is the Women’s Movement
Pro-sex?).
மூன்றாம் அலை பெண்ணியம் போர்னோவை ஒரு குற்றமாய், ஆணாதிக்க நிகழ்த்தலாய் பார்ப்பதில்லை. இச்சையை முன்னெடுப்பது ஆதிக்க எதிர்ப்பின் முக்கிய உத்தி
என மூன்றாம் அலை பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கான மென்-போர்னோ பரவலாக உள்ளது. இன்று தம்பதிகள் போர்னோவை செக்ஸுக்கு முன்பான ஒரு பிரதான
ஊக்கியாக கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கு
சேவை செய்யும் ஆண் விபச்சாரிகள் ஒவ்வொரு நகரத்திலும் (சென்னையில் கூட) இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கணிசமான ரேடிக்கல் பெண்ணிவாதிகள் போர்னோ எதிர்ப்பாளர்களே. செக்ஸை நான்கு சுவர்களுக்குள் முடக்குவதே சிறந்தது என நம்புபவர்களே. உதாரணமாய், ஒரு ரேடிக்கல், போர்னோ-எதிர்ப்பு பெண்ணிவாதியால் ரப்பர் ஆண்குறி போன்ற ஒரு செக்ஸ்
பொம்மையை ஏற்க முடியாது. அவர்களைப் பொறுத்தமட்டில், ஆண்குறி என்பது அது ஒரு பொம்மை என்றாலும் ஒரு ஆதிக்க குறியீடே.
இன்றைய metoo இயக்கம் ரேடிக்கலான, போர்னோ-எதிர்ப்பு பெண்ணியத்தின்
ஒரு நகலைப் போன்றே உள்ளது. ஆணுடலை ஆணாதிக்கமாகவும்
செக்ஸை அச்சம் தரும் ஒன்றாகவும், பாலுறவை ஒடுக்குமுறையாகவும்
காண்பவர்களாகவே இவர்களில் கணிசமானோர் தெரிகிறார்கள். ஆகையால் தான் நேரடியான பாலியல் அத்துமீறல்களை பதிவு செய்யும்
போதே ஒரு ஆணின் செக்ஸ் விருப்ப வெளிப்பாட்டை, அவன் பெண்ணுடலை உற்றுப் பார்ப்பதை, அவன் அவளிடம் வழிவதை, ஒரு பெண்ணின் தோற்றத்தை அவன் பாராட்டுவதை எல்லாம் ஒரு மறைமுக
வன்முறையாய், மென்மையான பலாத்காரமாய் இந்த இயக்கம் பார்க்கிறது; பெண்ணின் கழுத்துக்குக் கீழ் ஒரு நொடி பார்த்தவனைக் கூட ரேப்பிஸ்டாக
முத்திரை குத்துகிறது. ஒரு திருமணமான
ஆள் / அந்நியன் / நண்பன் ஒரு பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் காதல் கடிதம் எழுதினால், அதற்கு அவளது பதிலை வினவினால் அதை பாலியல் ஒடுக்குமுறையாய் metoo போராளிகள் பார்க்கிறார்கள்.
உடல்மொழியிலோ பார்வையிலோ சொற்கள் வழியாகவோ பெண்ணிடம் விருப்பம்
தெரிவித்தாலே அது மறைமுக பலாத்காரம் எனும் கதையாடல் இன்று ஏன் metooவினால் வலுப்பெற்றுள்ளது என நாம் யோசிக்க வேண்டும்.
ஆண்கள் தமது செக்ஸ் விழைவுகளை, இச்சையை அடக்கிக் கொள்ள வேண்டும். பெண்ணாகவே நேரடியாய் விரும்பி வேண்டாத வரை ஆண்கள் தம் இச்சையை
காட்டுவது தப்பாகும். ஏன்?
ரேடிக்கல் பெண்ணியவாதிகளின் வாதம் இப்படிப் போகும்: “செக்ஸ் என்பது ஆண் அதிகாரம் வெளிப்படும் செயல்பாடு. ஆக ஆண் அதிகாரத்தை எதிர்க்க பெண்கள் முதலில் செக்ஸை எதிர்க்க
வேண்டும். ஒரு ஆண் தனது விருப்பத்தை காட்டும் போது தன் அதிகார
ஆயுதத்தையே பெண்ணை நோக்கி உயர்த்துகிறான். பெரும்பாலான பெண்கள் ஆண் அதிகாரத்தை அஞ்சியே ஆண் விருப்பத்துக்கு
உடன்படுகிறார்கள். சில பெண்கள் இதை
அறிந்தும் சிலர் அறியாமலும் செய்கிறார்கள்.”
Comments