ஹர்த்திக் பாண்டியாவின் சர்ச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே?
கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத ஒரு பிரச்சனைக்காக கடும் விமர்சனத்துக்கு உள்ளான
அவர், பெண்ணிய அரசியலின் ஈகோ மோதல்களில்
மாட்டிக் கொண்டு அணியில் இருந்து தற்காலிகமாய் தடை செய்யப்பட்டு, அவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கூட ஆட முடியாமல் போகும் என எதிர்பார்க்கப்பட்டு,
பின்னர் நீதிமன்ற பிரதிநிதியின் அறிவுறுத்தலின் படி இப்போது தடையில்
இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் எனும்
மிகப்பெரிய அமைப்பு சமூக வலைதள போராளிகள், ஒழுக்கவாதிகள் மற்றும்
பெண்ணியவாதிகளின் எழுச்சியின் முன் நடுக்கம் கொண்ட தடுமாறிய முதல் வரலாற்று தருணம்
இது. இந்த பரபரப்பும், குழப்பமும்,
நெருக்கடியும், ஒரு அமைப்பையே ஆட்டுவித்த நடுக்கமும்
ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ன, அரசியல் சரித்தன்மைகளை ஓட்டி
போலியாய் மட்டுமே பொதுவெளியில் உரையாடும் ஒரு நிலையில் நாம் இன்று மாடிக் கொண்டிருக்கிறோமா
எனும் கேள்விகளை சற்றே கேட்டுப் பார்ப்போம்.
சரி, இதுவரை நடந்தது
என்ன?
கரன் ஜோஹரின் Coffee with
Karan நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும்
ராகுலும் பங்கேற்கிறார்கள். அந்நிகழ்ச்சியின் மரபுப்படி தனிப்பட்ட
விவகாரங்கள், பாலியல் கேலி, கிண்டல்கள்
விவாதிக்கப்படுகின்றன. எவ்வளவு வெளிப்படையாய் பேசுகிறார்களோ அவ்வளவுக்கு
கரன் ஜோஹர் அவர்களை பாராட்டுவார்; கூடுதலாய் தூண்டி விடுவார்.
அந்த மாதிரி நிகழ்ச்சியில் நீங்கள் பட்டும்படாமல் பேசி வரவே முடியாது.
ஆக, ஒரு கிரிக்கெட் பிரபலம் இந்த நிகழ்ச்சியில்
பங்கேற்றதே அடியை காசு கொடுத்து வாங்குவது தான். ஹர்த்திக்கும்
ராகுலும் அப்படித் தான் மாட்டிக் கொள்கிறார்கள்.
பார்ட்டியில் பல பெண்களை சந்திப்பது,
அவர்களுடன் உறவு கொள்வது, ஒரு பெண்ணை அவளது உடலழகை
மட்டும் கொண்டு மதிப்பிடுவது, தனது உடலுறவு அனுபவத்தை தான் தனது
குடும்பத்துடன், பெற்றோருடன் வெளிப்படையாய் பேசுவது பற்றியெல்லாம்
ஹர்த்திக் வெளிப்படையாய் சொல்கிறார். ராகுல் இதையெல்லாம் மறுக்காமலோ
ஏற்காமலோ “ஆமாம் நானும் ஜாலியாய் பார்ட்டி பண்ணுவதுண்டு,
பெண்களுடன் போவதுண்டு” எனும் கணக்கில் நழுவி செல்கிறார்.
இயல்பாகவே பெரும் சர்ச்சை வெடிக்கிறது.
(அந்த குறிப்பிட்ட அத்தியாயத்தை ஹாட்ஸ்டாரில் இருந்தே தூக்கி விட்டார்கள்.)
ஒரு பக்கம் கலாச்சார காவலர்களும் இன்னொரு பக்கம் பெண்ணிய போராளிகளும்
வானுக்கும் பூமிக்குமாய் குதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்
வாரியம் ஏற்கனவே குழம்பிப் போய் இருக்கிறது. அதன் நிர்வாகம் முழுக்க
அதன் கையில் இல்லை. நீதிமன்றம் நிறுவிய நிர்வாகிகள் குழு ஒன்று
வாரியத்தை இப்போது ஒற்றைக்கால் கொக்கைப் போல கவனிக்கிறது; நிர்வாகிக்கிறது.
இந்த நிர்வாகிகள் குழுவை சேர்ந்த வினோத் ராய் ஹர்த்திக்கையும் ராகுலையும்
கடுமையாய் கண்டித்து அவர்களை தண்டிக்க வேண்டுமென ஊடகங்களுக்கு சொல்கிறார். அதற்கு ஏற்ப இரு கிரிக்கெட் வீரர்களும் தற்காலிகமாய் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, அடுத்து நியுசிலாந்தில்
நடந்து வரும் ஆட்டங்களில் இவர்கள் இனி கலந்து கொள்ள முடியாது எனும் நிலை ஏற்பட்டது.
இது (ஹர்த்திக்கை பொறுத்தமட்டில்) அணிக்கு ஒரு பெரும் இழப்பு என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்தனர்
(இப்போது தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.)
ஆனால் இதில் இப்போது வேறொரு சிக்கலும்
தோன்றுகிறது.
இந்த நிர்வாகிகள் குழுவில் டயானா எதுல்ஜி எனும் முன்னாள் பெண் கிரிக்கெட் வீரரும்
இருக்கிறார். இவர் ஒரு பெண்ணிய
போராளி. முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர்.
ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்த இவர் அர்ஜுனா
மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். ஆனால் இவரிடம் அறுபது
எழுபதுகளில் வளர்ந்து வந்த பெண்களிடம் உள்ள ஒரு பிரச்சனை உள்ளது: “உலகமே ஆண்களால் ஆளப்படுகிறது; பெண்களுக்கு இங்கு இடமோ
மரியாதையோ இல்லை; ஆண்களின் மொகரையை பெயர்த்தால் ஒழிய அவர்கள்
நம்மை மதிக்க மாட்டார்கள். பெண்ணியம் என்றால் எதிரே வரும் ஆண்களை
உதைத்து ஓட ஓட விரட்டுவது” என இத்தகைய பெண்கள் நம்புவார்கள்.
இந்த எதிர்மறை பெண்ணியம் இவர்கள் வளர்ந்து வந்த அநீதியான சூழலால் தோன்றியது
தான். ஆனால் இன்று நிலைமை வெகுவாக மாறி வருகிறது. வேலையிடங்கள், விளையாட்டு, கல்வியிடங்கள்
என எங்கும் பெண்களின் ஆதிக்கம் உயர்ந்து வருகிறது. இன்றைய தலைமுறை
பெண்களுக்கு தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை மனப்பான்மையும் தம்
முந்தைய தலைமுறை பெண்கள் அளவுக்கு இல்லை. அவர்கள் உலகமே தமக்கு
எதிரானது, அனைத்து ஆண்களும் கொடூரமானவர்கள் என நம்புவதில்லை.
அவர்கள் ஆண்களுடன் உரையாடவும் சேர்ந்து நட்புணர்வுடன் பணி செய்யவும்
தயாராக இருக்கிறார்கள். ஆனால் டயானா துரதிஷ்டவசமாக முந்தின தலைமுறையை
சேர்ந்த “மூர்க்கமான பெண்ணிய போராளி”. எங்காவது
ஒரு பெண் கண்ணீர் மல்கினால் உடனே அதற்கு ஒரு ஆண் தான் காரணமாக இருப்பான் என முடிவு
செய்து கத்தியை தூக்கி கொண்டு “வெட்டுடா அவனை” என கிளம்பி விடுவார். அந்த பெண் சொல்வது சரி தானா,
உண்மை தானா, இதை எப்படி நியாயமாக கையாள்வது என்றெல்லாம்
யோசிக்க மாட்டார். முதலில் அடி, அடுத்து
பேசு என்பதே டயானாவின் பாணி. நீதிமன்ற நிர்வாகக் குழுவில் இணையும்
முன்பே அவர் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆணாதிக்க குழுமம் என்றே கூறி வந்தார்.
ஒருமுறை இங்கிலாந்தில் எம்.ஸி.ஸியின் லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் அவரை அனுமதிக்கவில்லை என்பதால் எம்.ஸி.ஸி என்றால் ஆணாதிக்க பன்றிகள் என அவர் கூறினார்.
ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த போது அவர்
டயானாவிடம் “நான் முடிவெடுப்பதென்றால் இந்திய பெண்கள் கிரிக்கெட்
அணி என்ற ஒன்றே இருக்காது” என்றார். இதையும்
டயானா பெண் வெறுப்பு என்று தான் புரிந்து கொண்டார். ஆனால் ஸ்ரீனிவாசனின்
தரப்பு வேறு. அதுவே நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்
தரப்பாக இருந்து வந்தது.
பெண்களின் கிரிக்கெட்டுக்கு வணிக மதிப்பில்லை என வாரியத்தினர் நம்பினர். ஏனென்றால் பெண்கள் கிரிக்கெட்டில்
ரன் ரேட் மெத்தனமாய் இருந்தது. ஆண்கள் கிரிக்கெட்டில்
400 ரன்களை 50 ஓவர்களில் அடித்தால் இங்கு பெண்கள்
முக்கி முக்கி 180 அடித்து மூச்சு விடுவார்கள். வேக வீச்சாளர்கள் இல்லை. பெரும்பாலும் சுழல் தான்.
அதுவும் மெதுவான பந்து, சுழலும் பந்தல்ல.
பாய்ந்து பிடிக்கும் களத்தடுப்பு இல்லை. சிக்ஸர்கள்
இல்லை. வேகமாய் ஓடி ஒற்றை, இரட்டை ஓட்டங்கள்
எடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த நிலை T20 கிரிக்கெட் கிளப்களின் வருகையுடன் மாறியது. ஐ.பி.எல், ஆஸ்திரேலிய பிக் பேஷ் போன்ற
T20 ஆட்டத்தொடர்களில் ஆக்ரோஷமான இளம் வீராங்கனைகள் தோன்றினார்கள்.
பெண்கள் கிரிக்கெட் பிரசித்தமாகத் தொடங்கியது. அவர்கள் கூடுதல் வேகமாய் வீசினார்கள்; துடிப்பாக களத்தடுப்பாடினர்கள்;
அவர்கள் சிக்ஸர்கள் விளாசினார்கள். இந்திய
50 ஓவர் பெண்கள் கிரிக்கெட் அணியும் மிக நன்றாய் ஆடி வெற்றிகளை குவித்தது.
இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் விரிவாக்கம்.
அதற்கு பெண்கள் கிரிக்கெட்டை ஒரு நல்ல பண்டமாக மாற்றத் தெரிந்தவர்களின்
வணிக சாமர்த்தியம். இது ஒன்றைக் காட்டுகிறது - இத்தனை நாட்கள் பெண்கள் கிரிக்கெட் கவனமும் அக்கறையும் பெறாதது ஆண்களின் பெண்
வெறுப்பினால் அல்ல; பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஒரு வணிகத் தேவையும்
மதிப்பும் இல்லாததனால் தான்; ஆம், பெண்களுக்கு
இடமளிக்காத ஒரு நிலப்பிரபுத்துவ சூழல் இங்கே இருந்தது தான். ஆனால
அது இன்று மாறி வருகிறது. டயானா போன்றவர்கள் இந்த பொருளாதார நிலைமாற்றத்தை
வெறுமனே விழுமியம் சார்ந்த ஒன்றாக சுருக்கிக் கொள்கிறார்கள். ஸ்ரீனிவாசன் சொன்னதைத் தான் இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் தொடர்ந்து உணர்ந்தார்கள்
- யாரும் பார்க்க விரும்பாத, வணிக மதிப்பில்லாத
ஒரு ஆட்டமான பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்து, உழைப்பை செலுத்தி, மனித வளத்தை வீணடிக்கிறோம் என அவர்கள்
வியந்தார்கள். இது பெண் வெறுப்பல்ல. இதுவே
அன்றைய நடைமுறைச் சூழல். கிரிக்கெட் இன்று அடைந்து வரும் வணிக
விரிவாக்கத்தை ஸ்ரீனிவாசன் கூட அன்று ஊகித்திருக்க மாட்டார். அடுத்த கால்நூற்றாண்டுக்குள் (அல்லது அதற்கு முன்பு கூட)
பெண்களின் ஐ.பி.எல் ஒரு பெரும்
லாபமீட்டும் ஆட்ட வடிவமாகும். அப்போது ஸ்ரீனிவாசன் கூட ஒரு பெண்கள்
அணியை வாங்கி விட விரும்புவார். அவர் ஒரு வணிகர். அப்படித் தான் அவரால் சிந்திக்க முடியும். இதை பெண் வெறுப்பு
/ ஆணாதிக்கம் என சுருக்கிப் பார்ப்பது முட்டாள்தனம்.
மீ-டூ இயக்கத்தின்
ஒரு பகுதியாக ஒரு அடையாளம் வெளிப்படுத்தாத பெண் இந்திய கிரிக்கெட் வாரிய சி.இ.ஓவான ஜோஹ்ரி மீது குற்றம் சுமத்தினார். ஜோஹ்ரி தான் முன்பு (2016இல்) வேலை
செய்த நிறுவனத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதே குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து நிர்வாகிகளின் குழு ஜோஹ்ரி மீது சட்டபூர்வமான விசாரணை நடத்துவதற்கு
முடிவெடுத்து அதற்கு ஒரு முன்னாள் நீதிபதி, பெண்ணிவாதி,
மற்றும் தில்லி பெண்கள் நலவாரியத்தின் தலைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவிடம்
விசாரணை நடத்த கோரியது. இந்த வழக்குக்கும் இப்போது ஹர்த்திக்
மற்றும் ராகுல் மீதான நடக்கப் போகும் விசாரணைக்கும் இரு விதங்களில் தொடர்புண்டு.
1)
ஜோஹ்ரி
இந்திய வாரியத்தில் பணி செய்யும் போது குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராய் விசாரிப்பது
நியாயம். ஆனால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு
வேறு ஒரு நிறுவனத்தில் செய்ததாய் நம்பப்படும் குற்றத்துக்கு இப்போது அதற்கு சம்மந்தமில்லாத
ஒரு நிறுவனம் விசாரிப்பது நியாயமா? அதில் லாஜிக் உண்டா?
நீங்கள் A எனும் நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு
முன்பு பணி செய்த போது சமர்ப்பித்த ஒரு செலவுக் கணக்கில் ஆயிரம் ரூபாய் குறைகிறது.
நீங்கள் அந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டதாக இப்போது டிவிட்டரில் ஒருவர்
எழுதுகிறார். எந்த தேவைக்காக அந்த செலவு செய்யப்பட்டது,
கணக்கில் வந்த தப்பு என்ன, அந்த குற்றச்சாட்டு
உண்மையா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அதற்கான ஆவணங்கள்
இல்லை. ஆனாலும் இந்த ட்வீட்டை உங்களது இப்போதைய நிர்வாகம் சீரியசாக
எடுத்துக் கொண்டு உங்களை விசாரிக்கிறது; விசாரணைக் காலம் முடியும்
வரை உங்களை தற்காலிகமாய் வேலை நீக்கம் செய்கிறது. இது எப்படியான
ஒரு நெருக்கடியாய், கொடுமையாய், வதையாய்
உங்களுக்கு இருக்கும், யோசியுங்கள்! ஒன்று,
நீங்கள் பண்ணின குற்றத்துக்காக உங்களை விசாரிக்கும் பொறுப்பு தற்போதைய
நிர்வாகத்துக்கு இல்லை. இரண்டு, குற்றம்
சாட்டியவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. மூன்று,
உங்களுக்கு எதிரான ஆவணமோ நிரூபணமோ இல்லை. இவ்வளவுக்குப்
பிறகும் உங்களுக்கு எதிராய் உங்கள் தற்போதைய நிர்வாகம் விசாரணை நடத்துகிறதென்றால் அவர்களின்
நோக்கம் உங்கள் குற்றமின்மையை நிரூபிக்க உதவுவதோ உங்களை விசாரித்து அறிவதோ அல்ல
- உங்களை ஒடுக்குவதே. உங்கள் மீது கூடுதலாய் அதிகார
பிரயோகம் செய்வதே. இதையே, ஊடகங்களும் மீ
டூ இயக்கவாதிகளும் இந்திய வாரியத்தின் இப்போதைய நிர்வாகக் குழுவும் ஜோஹ்ரிக்கு செய்தது.
இதையே, ஹர்த்திக் பாண்டியா மற்றும் ராகுலுக்கு
அவர்கள் இப்போது செய்கிறார்கள்.
Comments