Skip to main content

பெண்கள் பலாத்காரம் செய்தால்? (1)


Image result for danushree dutta rakhi sawant

நான் இங்கு பேசப் போவது MeToo கதையாடல்களில் அதிகம் அடிபடாத ஒன்று. ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வில் நிகழும் பாலியல் தாக்குதல்கள் நமது ஊடகங்களில் அதிகம் பேசப்படுவதில்லை; MeToo போராட்டத்திலும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிரதான இடம் இல்லை. இதற்கான நடைமுறை காரணம் இவர்கள் சிறுபான்மையினர் என்பது. உலகளவில் பல நாடுகளில் ஆண்-பெண்களின் பாலுறவு நிலைப்பாடு / பால்நாட்டம் குறித்து கணக்கெடுப்புகள் பல நடந்துள்ள. எத்தனை பேர் எதிர்-பால் கவர்ச்சியினர், எத்தனை பேர் ஓரினச் சேர்க்கையினர் (கேய் மற்றும் லெஸ்பியன்) என ஆராயும் இந்த கணக்கெடுப்புகள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து சொல்வதென்ன

உலகம் முழுக்க அவர்களின் எண்ணிக்கையானது 1-8% என சராசரியாக சொல்லலாம். 1948 மற்றும் 1953இல் டாக்டர். ஆல்பிரட் கின்செயின் இரு கணக்கெடுப்புகளை – Sexual Behavior in the Human Male மற்றும் Sexual Behavior in the Human Female – அமெரிக்காவில் நடத்தினார். இதன் படி 37% ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ளார்கள்அதாவது அவர்கள் ஒருமுறையாவது சுயபாலினத்தினருடன் உடல்ரீதியான கவர்ச்சியை, புணர்ச்சியின்பத்தை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு அது வெளிவந்த காலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த கணக்கெடுப்பு முறையை ஆய்வாளர்கள் பின்வரும் காலத்தில் சரி பார்த்து 37% அல்ல 36.4% என தெரிவித்தனர். கின்செயின் கணக்கெடுப்பில் லெஸ்பியன் அனுபவம் கொண்டவர்கள் 13%.

தொண்ணூறுகளில் இருந்து சமீபம் வரை உலகு முழுக்க பல நாடுகளில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. இந்த ஆய்வுகளின் பல நாடுகளில் படி ஓரினச்சேர்க்கையாளர்களின் சதவீதம் மேற்சொன்னவாறு 1-15% வரை உள்ளது.

 இந்த நவீன ஆய்வுகளில் ஒப்பீட்டளவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க ஒரு காரணம் இது ஒருவரின் பால்நாட்டத்தை அறிவிக்க கோருகின்றன; கென்செயின் ஆய்விலோ ஒருவரது ஓரின விழைவல்ல, அனுபவமே பிரதானப்படுத்தப்பட்டன. அதாவது இருபால் விழைஞர்களை (bisexual) கண்டறிவதே கென்செயின் நோக்கம்; மாறாக நவீன ஆய்வுகள் ஓரின விழைஞர்களை பிரதானப்படுத்துகிறது. இருபால் விழைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதில் ஆச்சரியமில்லை. அதாவது இன்று எதிர்பால் விழைஞர்களாய் இருக்கும் பெரும்பான்மையினரோர் இருபால் விழைஞர்களாகவும் இருக்கலாம். மேலும் படித்த, நல்ல வேலையில் இருக்கும் நகர்வாழ் ஆண்கள் தம்மை ஓரின விழைஞர்களாய் அடையாளப்படுத்த அதிக எண்ணிக்கையில் முன்வருகிறார்கள். சமீபகாலம் வரை இந்தியாவில் ஓரின சேர்க்கை ஒரு சட்டவிரோத செயலாக கருதப்பட்டது. எதிர்பால் விழைஞராய் இருக்கும்படியான சமூக அழுத்தமும் அதிகம். ஓரின விழைஞர்களுக்கு போதுமான கௌரவமும் சமூக இடமும் அதிகாரமும் இல்லாத நிலையில் பலரும் இருட்டில் இருக்கவும், மறைநிலை பாலுறவை தொடரவுமே விரும்புவார்கள். கணிசமான எதிர்பால் விழைவார்கள் இவ்வாறு இரட்டை வாழ்வு வாழ்கிறவர்களாகிறார்கள். இவர்கள் கணக்கெடுப்புகளில் உண்மையை சொல்ல மாட்டார்கள்; Gay Pride பேரணிகளில் முகம் காட்ட மாட்டார்கள். இதனால் இவர்கள் ஓரின / இருபால் விழைஞர்கள் அல்ல என நாம் கூற முடியாது.

இத்தகைய சிக்கல்கள் காரணமாய் கணக்கெடுப்புகளை நாம் அப்படியே கேள்வியின்றி எடுத்துக் கொள்ள முடியாது. சராசரியாய் 8% என்பது ஒரு குறைவான எண்ணிக்கையாகவே  இருக்க வேண்டும்.

பாலியல் வல்லுறவைப் பற்றி பேசும் போது நாம் அதை எதிர்பால் விழைஞர்களின் பிரச்சனையாக மட்டுமே காண்கிறோம். இந்த சட்டகத்துள் ஆண் எப்போதும் அதிகாரத்தை பிரயோகிக்கிறவனாய், துன்புறுத்துகிறவனாய் இருக்கிறான். பெண் பாதிக்கப்படுபவளாய் இருக்கிறாள். இந்த சட்டகத்துள் ஒரு மாறாத (ஆண்-பெண்) இருமை உள்ளது. இந்த ஆண் என்பவன் தன் உடலால் ஆணாக இருக்கிறான். அவனது உடல் அடையாளம் / பால்நிலை ஒரு குறிப்பிட்ட பால் விழைவை அவனுக்கு அளிக்கிறது. உடம்பால் ஆணாக இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யவும் ஆட்கொள்ளவுமே விரும்புவான். அவன் வேறெப்படியும் யோசிக்க மாட்டான். இதனாலே ஒரு ஆண் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாய் குற்றச்சாட்டு எழும் போது நாம் கேள்வியின்றி ஏற்கிறோம், அவனை குற்றவாளி என விசாரணையின்றி முத்திரை குத்துகிறோம். அந்த ஆண் தனக்குள் ஓரின விழைவாளனாய், பெண்கள் பால் ஆர்வமில்லாதவனாய் இருந்தால்? அவன் பெண்களை தன்னைப் போல் ஒருவராய் கருதக் கூடியவனாய் இருக்கலாம். இரவில் ஒரு பெண்ணுக்கு அவன் குறுஞ்செய்தி அனுப்புகிறான் / போனில் அழைக்கிறான். அப்போது அப்பெண் தான் தொந்தரவுக்குள்ளாவதாய் நினைக்கலாம். அந்த ஆணின் பால்விழைவு எதிர்பாலினம் சார்ந்தது மட்டுமே என நினைக்கும் ஒருவர் அவனை உடனடியாய் முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் விளாசுவார். இங்கு தவறான முன்னெண்ணமே ஒருவரை குற்றவாளி ஆக்குகிறது. உலகம் முழுக்க எதிர்பாலின விழைவாளர்களே இருக்கிறார்கள் என கோருவதே இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஒரு ஓரின விழைவாளரோ இருபால் விழைவாளரோ இத்தகைய வழக்குகளில் மாட்டிக் கொண்டால் தமக்கு பெண்கள் மீது இயல்பிலேயே விருப்பமில்லை என கோர முடியாதுஅப்போது அவர்கள் இதை விட மோசமான சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாவார்கள்.

அடுத்து, அதிகாரம். ஆண் அதிகாரம். ஆணாதிக்கத்தை நாம் ஆணுடலோடு பிணைக்கிறோம். ஆனால் ஒருவரின் பால் விழைவு உடல் ரீதியான பால் அடையாளத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால் என்னாவது? ஒருவர் ஆணின் உடலும் பெண்ணின் மனமும் கொண்டிருந்தால்? ஆணாக தோற்றம் கொண்டிருப்பதாலே அவர் பெண்களிடம் தப்பாக நடந்து கொள்ள வேண்டியதில்லையே? ஒரு பெண் பெண்களிடமும் ஆண்களிடமும் விழைவு கொண்டவர் என்றால் அங்கு அவரது பால் அதிகாரம் எவ்வாறாக உள்ளது? உயர்-பதவியில் இருக்கும் ஒரு இருபால் விழைவு கொண்ட ஒரு பெண்ணால் இன்று MeTooவில் குற்றம் சாட்டப்படும் ஆண்களுக்கு இணையான குற்றங்களை செய்ய முடியும்ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராக. ஆண் அதிகாரம் என்பது ஆண்களிடத்து மட்டுமல்ல பெண்களிடத்தும் செயல்பட வாய்ப்புண்டு. இதை பல ரேடிக்கல் பெண்ணிய போராளிகள் / MeToo போராளிகள் சில நேரம் ஏற்றுக் கொண்டாலும் தமது கள எதார்த்தத்தில் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாய் முன்வந்தால் MeTooவினரின் அக்கறையும் ஆதரவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலே இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் உடலளவிலேயே பால்விழையை காண்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

அடுத்து, மேற்சொன்ன விசயங்களுக்கு சில உதாரணங்களை தருகிறேன். லெஸ்பியன்கள் சக பெண்களை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்குவதை, இரு பால் விழைவு கொண்ட பெண்கள் ஆண்களை துன்புறுத்துவதை நிரூபிக்கும் சந்தர்பங்கள் இவை. MeTooவைப் போன்றே வாக்குமூலங்களின் அடிப்படையில் தோன்றியவை இந்த குற்றச்சாட்டுகள். ஆகையால், நிரூபிக்கப்படும் வரை இவற்றை குற்றங்களாக அல்ல குற்றச்சாட்டுகளாய் மட்டுமே பார்க்க இயலும். கீழே தரப்பட்டுள்ள வாக்குமூலக் கதைகளை சற்றே விலகலுடன் நாம் வாசிக்க வேண்டும். இவை உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியம் MeToo குற்றச்சாட்டுகள் எந்தளவு உண்மையாக இருக்க முடியுமோ அந்தளவே!



1)   தனுஷ்ஸ்ரீ தத்தா:

தனுஷ்ஸ்ரீ தத்தா ஒரு முன்னாள் பாலிவுட் நடிகை. இவர் பத்து வருடங்களுக்கு முன் (2008இல்) முன்னணி குணச்சித்திர நடிகர் நானா படேகர்ஹார்ன் ஒகெ ப்ளீஸ்எனும் படத்திற்கான பாடல் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்துமீறியதாக சமீபத்தில் போர்க்கொடி உயர்த்தினார். ஒருஐட்டம் பாடலின் நடன அசைவு ஒன்றின் போது படேகரின் நடவடிக்கை தன்னை காயப்படுத்தியதாக அவர் கூறுகிறார். இதன் விளைவாக அவர் தொடர்ந்து நடிக்க மறுத்து வேனிட்டி வேனுக்குள் போய் அமர்ந்து கொள்கிறார். அன்றைய படப்பிடிப்பு ரத்தாகிறது. இதை அடுத்து தயாரிப்பாளர் கடுப்பாகிறார். ஒருநாள் படப்பிடிப்பு ரத்தானால் அதனால் ஏற்படும் நஷ்டம், ஒருவேளை அவர் கடன் வாங்கி தயாரிக்கிறார் என்றால் முதல் மீதான ஒருநாளைய வட்டி, வேலையே செய்யாத படக்குழுவினருக்கு அவள் அளிக்கும் கூலி மற்றும் வேறு செலவுகள் என கணக்கிட்டால் இது எத்தகைய பாதிப்பு என புரியும். ஆக தயாரிப்பாளர் தனுஷ்ஸ்ரீயை பணிய வைக்க மூன்றாம் தர முறைகளை பயன்படுத்துகிறார். தனது ஆட்களைக் கொண்டு அவரது வேனைத் தாக்க செய்கிறார்; தனுஷ்ஸ்ரீயின் பெற்றோர் காரில் வந்து அவரை அழைத்து செல்ல முயல இந்த ஆட்கள் காரை சேதப்படுத்துகிறார். இப்படி பிரச்சனை வளர்ந்து இரு தரப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாலிவுட் சம்மந்தப்பட்டது என்பதால் இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அடிதடி தடபுடல் சமாச்சாரங்கள் குறித்த விவரணையை அளித்தவர் அன்று அங்கு இருந்த பத்திரிகையாளர் ஜேனிஸ் செக்யூரா. நானா படேகர் குறிப்பாய் செய்த தவறு என்ன என்பதை அன்று படப்பிடிப்பின் போது அருகில் இருந்த ஒருவர் பேசினாலோ அல்லது அன்றைய காணொளி கிடைத்தாலோ மட்டுமே நாம் உறுதிப்படுத்த முடியும். குற்றம் என்னவாகினும் இந்த சந்தர்பத்தை படத் தயாரிப்பாளரும் நானா படேகரும் மோசமாக கையாண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அதுவே தனுஷ்ஸ்ரீயை பத்து வருடங்களுக்குப் பிறகு கொந்தளிக்க வைத்துள்ளது. MeToo வகைமையை சேர்ந்த குற்றமா இது, இதற்கு சாட்சி / ஆதாரம் உண்டா எனும் கேள்விகளுக்கு என்னிடம் விடையில்லை. ஆனால் அன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்த பின் தனுஷ்ஸ்ரீ மனிதநேயமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.



இதை அடுத்து மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த், தன் வழக்கமான அதிரடி பாணியில், தனுஷ்ஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனுஷ்ஸ்ரீ உடனே ராக்கிக்கு எதிராக 10 கோடி ரூபாய் கோரி மானநஷ்ட வழக்கைத் தொடுத்தார். இதை அடுத்து ராக்கி திரும்ப 50 கோடிக்கு மானநஷ்ட வழக்கை தனுஷ்ஸ்ரீக்கு எதிராக தொடுத்தார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு குற்றச்சாட்டை வைத்தார்:  தனுஷ்ஸ்ரீயும் ராக்கி சாவந்தும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் சேர்ந்து மது விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு பார்ட்டியின் போது தனுஷ்ஸ்ரீ தனக்கு போதை மருந்து, தான் மயங்கிய நிலையில் இருந்த போது தனது அந்தரங்க இடங்களில் வருடி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ராக்கி கூறுகிறார். ராக்கி அன்று வெறுத்துப் போய், தனுஷ்ஸ்ரீயிடம் இருந்து பிரிகிறார். தனுஷ்ஸ்ரீ அடிப்படையில் ஒரு லெஸ்பியன் என ராக்கி திரும்பத் திரும்ப சொல்கிறார்.

 அன்றைய பத்திரிகையாள சந்திப்பில் ராக்கி பேசின முறை தவறானது என்றாலும் அவரது குற்றச்சாட்டு சுவாரஸ்யமானது. அதை உண்மையென நிரூபிக்க முடியாது. தனுஷ்ஸ்ரீயின் குற்றச்சாட்டைப் போன்றே இதையும் பேச்சளவிலே எடுத்துக் கொண்டு அலசுவோம்.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...