பாலிவுட்டில் சிகரெட்
பாலிவுட்டில் 1943இல் அஷோக் குமாரும் (“கிஸ்மத்”), 1954இல் தேவ் ஆனந்தும் (“டாக்ஸி டிரைவர்”) சிகரெட்டை ஒரு ஸ்டைலான எதிர்நாயக குறியீடாக நிறுவினர். நாற்பது, ஐம்பதுகளில் நிழலுலக படங்களின் அலட்சிய தொனி, கலகம், வன்மம் ஆகியவற்றை சிகரெட் புகையே திரையில் சித்திரமாய் வரைந்தது. “ஹவ்ரா பிரிட்ஜ்”, “நைட் கிளப்”, “இன்ஸ்பெக்டர்” ஆகிய படங்களை உதாரணம் காட்டலாம். இதன் பிறகு எழுபது, எண்பதுகளில் அமிதாப் பச்சன் தனது சமூக கோபம் மிக்க நாயகன் எனும் பிம்பத்துக்கு புகையும் சிகரெட்டை ஒரு சின்னமாக்கினார். “கூலி”, “தீவார்”, “ஷோலே” ஆகிய படங்களை சுட்டிக் காட்டலாம்.
தொண்ணூறுகளில் “பாஸிகரில்” ஷாருக்கானும், “கல்நாயக்கில்” சஞ்சய் தத்தும் சிகரெட் ஏந்தி சீறும் சிங்கங்கள் ஆயினர். இப்படி எதிர்நாயக பிம்பமும் சிகரெட்டும் தாயும் சேயுமாக ஒன்றிணைந்த பின்னர், நாயகிகள் மற்றும் நடிகைகள் விசயத்திலும் புகை விளையாடியது. 1975இல் வெளியான “மௌசம்” முதல் ரெண்டாயிரத்தின் “சமேலி”, “சாந்தினி பார்”, “தெ டெர்ட்டி பிக்சர்” ஆகிய படங்களை வரை எதிர்-நாயகிகள், கவர்ச்சிக் கன்னிகள், குலுக்கல் நடிகைகள் ஆகியோருக்கான குறியீடாக சிகரெட் உதடுகளில் நடுவே புகைந்தது; விரல் இடுக்கில் அமர்ந்து ஆண்களை
அது சீண்டியது.
தடைச்சட்டம்
இந்த சிகரெட் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது 2005இல் உடல்நல மற்றும் குடும்பநல அமைச்சகம் கொண்டு வந்த சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டம். இதன்படி ஒரு படக்காட்சியில் சிகரெட் காட்டப்பட்டால் கூடவே சிகரெட்டின் தீங்கு பற்றின வாசகம் ஒன்றையும் (சிகரெட் உயிருக்குக் கேடு / சிகரெட் புகைப்பது புற்றுநோயை உண்டாக்கும்) கீழே காட்ட வேண்டும். திரை விமர்சகர் அமிதவா நாக் இந்த சட்டமே சிகரெட் திரைச்சட்டகங்களில் மாயமாகி வருவதற்கு முக்கிய காரணம் என்கிறார். மதுவருந்தப்படும் காட்சிகளில் எச்சரிக்கை வசனம் காட்டப்பட வேண்டும் எனும் விதிமுறை 2014இல் கோண்டு வரப்பட்டது; ஆனால் இது மதுவருந்தும் காட்சிகளை குறைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆக, தடைச்சட்டம் மட்டுமே சிகரெட்டின் மறைவுக்கு காரணமல்ல.
நடப்புலகில் சிகரெட்டும் பெண்களும்
இங்கு நான் மற்றொன்றை குறிப்பிட வேண்டும்: தொண்ணூறுகளை விட இன்றே நகரங்களில் பொதுவெளியில் இளம்பெண்கள் புகைபிடிக்கும் காட்சிகளை அதிகம் நாம் காணுறுகிறோம். பெண்கள் பொதுவெளியில் புகை வளையங்களுடன் தோற்றமளிக்க ஆரம்பித்ததும் இவர்களை சிகரெட்டுக்காக கேலி செய்து சீண்டி நாயகன் மிரட்டும் டெம்பிளேட் தமிழில் காணாமல் ஆகி விட்டது. ஆணோ பெண்ணோ பொதுவெளியில் சிகரெட்டுடன் தோன்றுகையில் சினிமாவில் அவர்கள் சினிமாவில் அவ்வாறே தோன்றுவது குறைந்து விடுகிறது. (எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வண்ணமல்ல ஒரு குறியீடாகத் தான் சிகரெட் நம் கலை வடிவங்களில் வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று.)
இலக்கியத்தில் சிகரெட்
பாலிவுட்டிலும் ஓரளவு தென்னிந்திய படங்களிலும் பைப் பிடிப்பது சற்றே எலைட்டான வில்லன்களுக்கும் அலட்சியம் தொனிக்கும் உயர்த்தட்டு குணச்சித்திர ஆண் பாத்திரங்களுக்கும் உகந்ததாக இருந்து வந்துள்ளது. தமிழ் எழுத்தாளர்களில் சதா பைப்புடன் நாம் அடையாளப்படுத்தும் ஒருவர் பாரதி மணி. சொல்லப் போனால் பாரதி மணி உயிர்மையில் ”பல நேரங்களில் பல மனிதர்கள்” தொடர் எழுதக் காரணமே பைப் தான் என மனுஷ்யபுத்திரன் ஒருமுறை என்னிடம் சொன்னார். அந்த கதை இப்படிப் போகிறது: ஒரு மது சந்திப்பில் எழுத்தாளர்கள் சிறு சிறு கூட்டங்களாய் பிரிந்து போதையில் சலம்பியபடி இருக்க பாரதி மணி எனும் முதியவர் மட்டும் ஸ்டைலாய் தனியனாய் கையில் பைப்புடன் இருக்கிறார். அந்த காட்சியை கண்டு ஈர்க்கப்படும் மனுஷ்யபுத்திரன் அவரிடம் உரையாடுகிறார். பாரதி மணி அபூர்வமான ஆளுமை என உணரும் அவர் அவரை தன் உயிர்மை பத்திரிகையில் ஒரு தொடர் எழுதும்படி வேண்டுகிறார். பாரதி மணியும் எழுதுகிறார்; தமிழுக்கு ஒரு கூர்மையான சுவாரஸ்யமான கட்டுரையாளர் பிறப்பெடுக்கிறார். ஆனால் இத்தனைக்கும் பாரதி மணி முகத்தில் அறையும் கலகவாதி அல்ல – இனிமையான விளையாட்டுத்தனமான கனிவான மனிதர். அதேநேரம் அவர் வித்தியாசமானவர்; யாரையும் பிரதியெடுக்காதவர் – இதற்கான ஒரு குறிப்பானாக அவரது பைப் இருந்திருக்கிறது. இதை கவனித்து உள்ளுணர்வு ரீதியாய் கண்டுணர்ந்து மனுஷ்யபுத்திரன் அவரை பத்தியெழுத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். இதைப் பற்றி யோசிக்கையில் எனக்குள் இக்கேள்வி எழும்: சிகரெட் / பைப்பின் குறியீடு சினிமாவில் மட்டுமல்ல இலக்கிய உலகினுள்ளும் ஒரே போலத் தான் இருக்கிறது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள இரு வகைமைகளில் பாரதி மணி எலைட்டான வில்லனாக வர மாட்டார்; அந்த பைப்புடன் அவரது படம் காண்கையில் “அலட்சியம் தொனிக்கும் குணச்சித்திர நடிகராக” அவரை நாம் வாசகர்கள் ஆழ்மனதில் கண்டுணர்கிறோம்.
Comments