முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா?




கடந்த மூன்று மாதங்களில் நான்நிறையஎழுதினேன். ஆனால் பிளாகை தொடர்ந்து அப்டேட் செய்ய வில்லை. மொத்தமாய் 8 பதிவுகள் தான். இதற்கு முந்தின மாதங்களில் சராசரியாய் மாதத்துக்கு 30 பதிவுகள் ஏற்றுவேன். கடந்த சில மாதங்களில் நான் தமிழில் எழுதியது வெகுவாய் குறைந்து போனது. ஏன் இந்த வித்தியாசம்? காரணம் எளிது, சுவாரஸ்யமானதும் கூட. இது என்னைப் பற்றி வித்தியாசமான ஒன்றை எனக்கு சொல்லித் தந்தது. முதலில் காரணம், அடுத்து படிப்பினை.


கடந்த மூன்று மாதங்களில் நான் ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஹைடெக்கர் குறித்து ஒரு ஆங்கில நூலை நண்பர்கள் இருவருடன் இணைந்து எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். நூல் முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடக்கின்றன. இரண்டு வாரங்களில் வெளிவரும். ஜூன் மாதம் பல்கலைக்கழகம் திறந்த பின் நூலை வெளியிட உத்தேசம். இந்த காலகட்டத்தில் நான் தினமும் தத்துவம் வாசிப்பது, நண்பர்களுடன் கூட்டாய் வாசிப்பது, விவாதிப்பது, வீட்டுக்கு சென்று எழுதுவது என்றிருந்தேன். இது வழக்கமே என்றாலும் நான் ஆங்கிலத்தில் இப்படி முழுக்க புழங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இரு ஆங்கில நூல்களுக்கு சில பக்கங்கள் பங்களித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தீவிரமாய் அதிகமாய் ஆங்கிலத்தில் முன்பு எழுதினதில்லை.

இது என் மனத்தின் திசையை மெல்ல மாற்றி விட்டிருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன். ஆகையால், எழுதும் தூண்டுதல் ஏற்படும் போதெல்லாம் நான் அதை ஹைடெக்கர் நூலை நோக்கி திசை மாற்றி இருக்கிறேன். உதாரணமாய், புல்வாமா தாக்குதல் நடந்த போது நான் ஆழமாய் தூண்டப்பட்டேன். ஆனால் அதை தமிழில் எழுதாமல் மரணம் குறித்து ஹைடெக்கரும் பிறரும் சொல்வதென்ன என தேடி அறிந்து, பின்னர் என் எண்ணங்களை ஒரு தனி அத்தியாயமாய் ஆங்கிலத்தில் எழுதினேன். தலித் அரசியலின் சிக்கல், அடையாளம், பெண்மை மனநிலை, பெண் மொழி குறித்தெல்லாம் நான் தமிழில் எழுத வேண்டியது இந்நூலில் வேறு வடிவில் இடம் பெற்றன. அதன் பிறகு இரண்டு மொழியாக்க நூல்களில் (தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு) வேலை செய்யத் தொடங்கினேன். அவற்றில் ஒன்றை முடித்தேன். இந்த ஈடுபாடுகள் மெல்ல மெல்ல என்னை வேறு பக்கம் இழுத்து விட்டன.
 இது சரியா தவறா, ஒரு தமிழ் எழுத்தாளன் தன் ஆற்றலை ஆங்கிலத்தில் மடைமாற்றலாமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் வேறு சில விசயங்களை தெரிந்து கொண்டேன்.
  1. மொழி நமது மனப்போக்கை, விருப்பங்களை, மனத்தின் பாய்ச்சலை வெகுவாக தீர்மானிக்கிறது. ஆங்கிலம்-தத்துவம்-ஹைடெக்கர் என ஒரு தடம் உருவானதும் எங்கு போகும் தேவை ஏற்பட்டாலும் கால்கள் அந்த தடத்தில் நடக்கவே பிரியப்படுகின்றன. அதாவது, நாம் செல்ல வேண்டிய இடம் அல்ல, நாம் அமைக்கும் பாதையே நம் அகப்பாய்ச்சலை, போக்கை தீர்மானிக்கிறது. அது ஒரு neural networkஆக நமக்குள் அமைந்து விடுகிறது. அதைத் தாண்டி சென்று இரு குதிரைகளில் பயணிப்பது, ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் எழுதுவது, சுலபமல்ல.
  2. மொழியில் ஒரு சுகம் உள்ளது. ஆங்கிலத்தின் சுவையும் சௌகர்யமும் வேறு, தமிழின் சுவையும் லாவகமும் வேறு. ஒன்றில் சற்று காலம் பயின்றால் அதன் மடியில் விழுந்து விடுவோம். அதில் இருந்து எழுந்து மீள்வது சுலபமல்ல. ஒவ்வொரு நாளும் காலையில் நான் யோசிக்காமலே மடிக்கணினியை திறந்து தமிழில் சரளமாய் எழுதி வந்தேன். இதுவே என் மொழி, இதில் பயில்வதே எனக்கு அளிக்கப்பட்ட பணி, இது என் பிறவிக்கடன் என்றெல்லாம் சொல்லி வந்தேன். ஆனால் ஒரு புதுக்காதலி வந்ததும் மனம் தடுமாறுகிறது. என்னை அறியாமலே நான் ஆங்கிலத்திடம் வசியப்படுகிறேன்.
  3. இந்த படிப்பினை எல்லாருக்கும் உதவும் என நான் கூறவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு, போதை மனநிலை கொண்டவர்களுக்கு, மொழியின் சுவையில் சொக்கிப் போகிறவர்களுக்கு, ஒரு சொல்லை எழுதும் போதே அதன் தேன்சுவை நரம்பில் ஊறுவதை உணர்பவர்களுக்கு, சொற்களில் திளைத்துக் கொண்டிருக்கவே மணிக்கணக்காய் பேசவும் எழுதவும் ஏங்குகிறவர்களுக்கு, இது உதவும். இரு மொழிகளில் ஒரே சமயம் இயங்குவது ஆரோக்கியமானது அல்ல.
  4. இதற்கு முன்பு ஆங்கிலத்தில் அதிகமாய் எழுதும் சில பேராசிரிய தமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்ததுண்டு. அவர்கள் ஆங்கிலத்தில் புழங்கினால் கிடைக்கும் அங்கீகாரத்துக்காக, வசதிக்காக தமிழை புறக்கணிக்கிறார்கள் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அப்பார்வை தவறாக இருக்கலாம் என இப்போது புரிகிறது.ஆரண்ய காண்டத்தில்அந்த வசனத்தில் சொல்லப்படுவது போல நீங்கள் ஒன்று கமலாக இருக்கலாம், இல்லை ரஜினியாக இருக்கலாம், இரண்டும் வெவ்வேறு மொழிகள், மனம் ஒரு சமயம் ஒன்றுக்கு தான் வசப்படும். எதுவென்பது உங்கள் தீர்மானம்.
  5. இனி நான் ஆங்கிலத்தில் புழங்கும் முன் அது என்னை எங்கே எடுத்துச் செல்லும் என்பதில் தெளிவாக இருப்பேன். ஒன்று முழுக்க ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிடுவேன். அல்லது, ஒரு துல்லியமான காலத்தை தீர்மானித்து அப்போது மட்டும் ஆங்கிலத்தில் எழுத முயல்வேன். அல்லது ஆங்கிலத்தில் எழுதத் துவங்கும் போது தமிழில் அதை விட அதிகமாய் எழுதி, ஒரு போதையை இன்னொன்றால் முறியடிக்க முயல்வேன்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து
(குறள் எண் 1102) [இவள் தந்த காதல் நோய்க்கு இவளே மருந்தாவாள்]

எந்தமருந்துவேலை செய்யும் என முயன்று பார்த்து சொல்கிறேன்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...