Skip to main content

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (2)


அறிதலை தள்ளிப் போடுவதே வாசிப்பு

Image result for bhagwat geeta

ஒரு வாக்கியம் பூடகங்களால், அனர்த்தங்களால், குழப்பத்தின் பனிப்படலத்தால் சூழப்பட்டு உள்ளது; அதை விலக்கி விட்டு நிஜமான முகத்தை காண வேண்டும்; அதுவே வாசிக்கும் முறை என நமக்கு தவறாய் தொடர்ந்து சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் வாசிப்பின் சுவாரஸ்யமே அறிவது அல்ல, அறிதலை தள்ளிப் போடுவதே என தெரிதா சொன்னார். உதாரணமாய், ஒரு கதையோ கவிதையோ வெளிப்படும் தருணம் என ஒன்று உண்டு. சட்டென ஒரு ஒளி நம் மீது பாய்ந்தது போல உணர்வோம். “ஆஹா, அபாரமான படைப்புஎன சிலாகிப்போம். ஆனால் ஏன் சிலாகிக்கிறோம் எனக் கேட்டால் நம்மால் உடனடியாய் தெளிவாய் சொல்ல வராது. தெளிவாய் ஒரு கோட்பாடாய் நம் சிலாகிப்பை வடிவத்துக்குள் கொணர்ந்ததும் அது சலித்துப் போகும். இதனாலே நமக்கு தெளிவின்மை சுகிப்பது போல தெளிவு சுகிப்பது இல்லை.


 அதாவது அறியாமையே சுவாரஸ்யம் என நான் சொல்லவில்லை; ஆனால் வாசிப்பில் அறிதல் சில நொடிகள் தள்ளிப் போகும் சந்தர்ப்பம் உண்டு; அப்போது நம் இதயம் ஒரு சொல்லை, ஒரு சொல்லாடலை கண்டுணர்ந்து திகைக்கிறது. கொஞ்ச நேரம் நம் அறிவு மனம் அதை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியாமல் திணறி விட்டு பின்பு அதை சாதிக்கிறது; அடுத்து வாசிப்பை தொடர்கிறோம். ஒரே சமயம் அறிவைக் கொண்டும் இதயத்தைக் கொண்டும் இரண்டிரண்டாய் வாசித்தபடியே இருக்கிறோம்; நம் அறிவு மனம் கைவிடப்பட்டு மீண்டும் தன்னை நிலைப்படுத்தும் தருணங்களே வாசிப்பின் இன்பமாகிறது.

இந்த இரண்டுக்கும் நடுவே என்ன உள்ளது? அறிய முடியா வியப்புக்கும் அறிதலின் உறுதிப்பாட்டுக்கும் இடையில் ஒருவித சூனியம் உள்ளது. அதாவது, “இது என்ன?” எனக் கேட்ட அடுத்த நொடிஇது அது தானா?” “இல்லை அதுவாக இருக்க முடியாதே?” “இதுவும் அல்ல, அதுவும் அல்ல எனில்?” என கேட்டுக் கொண்டே போவதே அர்த்தத்தை மனித மனம் அறியும் விதம் என்றார் தெரிதா.

மற்றமையை கண்டறிவது, அதை மற்றமையுடன் பொருத்தி ஒன்று அதுவல்ல என உணர்ந்து அவ்வாறே அதைப் புரிந்து கொள்வது, “அதுவல்ல இதுவேஎன்ற பின் இந்தஇதுவும்மற்றொன்றின் எதிர்மையே என அறிந்த பின் மேலும் குழம்பி அடுத்தடுத்து வரும் மற்றமைகளுடன் அதை உரசிப் பார்த்தபடியே செல்கிறோம். இப்படி அர்த்தத்தைஅறியும்அறியும் போதே அதை தள்ளிப் போட்டபடியும் இருக்கிறோம். வித்தியாசப்படுத்தி தள்ளிப் போடும் செயலே பொருளறியும் செயல் என்றார் தெரிதா. இந்த இரண்டையும் (difference + deferral) ஒன்றாக்கி அவர் differance என புது கலைச்சொல் ஒன்றை உருவாக்கினார்.

அத்வைத தத்துவத்தில் இறையைஇதுவும் அல்லஎன (”நேத்தி நேத்தி…”) என அடையாளப்படுத்துவதற்கு இணையானது இது எனலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தன்னை அர்ஜுனனுக்கு அடையாளப்படுத்துகையில் நான் இதுவும் அல்ல, நான் அதுவும் என ஒவ்வொன்றாய் கழித்துக் கட்டியபடியே வருகிறார். ஆனால் தான் இதுவென என குறிப்பிடாமல் அவர் செல்கிறார். இந்த கழித்துச் செல்வது தான்நான்என்கிறார் அவர். தெரிதாவின் differance கிட்ட்த்தட்டஇதுதான் எனலாம். தெரிதாவுடன் இணக்கமான மற்றொரு தத்துவ ஆசிரியர் பௌத்த அறிஞர் நாகார்ஜுனர் (சூன்யவாதம்) (ஆம், தெரிதா உள்ளிட்டு பல பின்னமைப்பியல் சிந்தனையாளர்களிடமும் நமது சூன்யவாதத்தின் தாக்கம் உண்டு.)

ஒரு கையெழுத்தில் நாம் எங்கு இருக்கிறோம்?

தெரிதா இந்த தத்துவார்த்த கருவியை அன்றாட உறவாடல்களுக்கு மத்தியில் வைத்துப் பார்த்தார். மனிதர்கள் அர்த்தங்களுடன் சூதாடுபவர்கள் என அவர் கருதினார். எழுதுவதும் வாசிப்பதும் ஒரு அர்த்த விளையாட்டே என்றார். மொழிக்குள் ஒருவர் இருக்கும் போதே இல்லாமல் ஆகி விடுகிறார்; அவர் அப்படி இல்லாமல் ஆவதற்கு அதற்குள் அவர் இருந்தாக வேண்டும் என்றார். உதாரணமாய், நீங்கள் ஒரு ஆவணத்தில் கையெழுத்து இடுகிறீர்கள். அந்த  பிரதியில் நீங்கள் அதிகாரபூர்வமாய் வீற்றிருக்க துவங்குகிறீர்கள். அந்த கையெழுத்தைக் காட்டிஉங்கள் சம்மதம்”, “உங்கள் அதிகாரபூர்வ கோரல்அங்கு உள்ளதாய் சொல்வார்கள். ஆனால் உங்கள் கையெழுத்து இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பதில்லை என ஏற்றுக் கொண்ட பின்னரே அது கையெழுத்தாக மதிப்பு பெறுகிறது. அதாவது, உங்களது ஒரு காசோலையை கையெழுத்திட்டு அளிக்கும் போதுஉங்கள் சார்பாய் அந்த கையெழுத்தைக் கண்டு இவருக்கு உங்கள் பணத்தை அளிக்கும் படிகோருகிறீர்கள். அங்கு நீங்களோ உங்கள் பணமோ இல்லை என்பதே சுவாரஸ்யம். அதாவது, ஒரு காசோலையை அளிக்கும் முன் உள்ள உங்கள்இருப்புகாசோலையில் கையெழுத்திடும் போதுஇன்மைஆகிறது. ஆனால் காசோலை வங்கிக்கு சென்ற பின் அந்த இன்மைமீண்டும்இருப்பாகும்”. இப்படி இருப்பும்-இன்மையுடம் ஒன்றுடன் ஒன்றுடன் கண்ணைக் கட்டி திருடன் போலீஸ் விளையாடுவதே காசோலையின் அர்த்தமாகிறது, வங்கி பரிவர்த்தனையாகிறது, பணமதிப்பாகிறது. இன்மையுடன் அதன் பின்னாலேயே மறைவாகஇருப்புஇருக்க வேண்டும் என்பதே நமது சமூக விதிமுறை. இதனாலே காசோலை பணமின்றி திரும்பும் போது அது குற்றமாகிறது. அப்போது நீங்கள் இன்மையில் இருந்து இருப்புக்கு செல்லாமல் தொடர்ந்து இன்மையிலே நீடிக்கிறீர்கள்.

இப்படி சொற்களுக்குள் அர்த்தங்கள் நழுவி நழுவி விளையாடுவதை தெரிதா மிகவும் கொண்டாடினார் என்பதாலே தனது கலைச்சொல்லுக்கும் differance என பெயரிட்டார். இதில் என்ன விளையாட்டு? Difference என்றால் மாறுபாடு. இதை டிஃபெரன்ஸ் என உச்சரிப்போம்.  Differance என்பதையும் நாம் டிஃபரான்ஸ் என உச்சரிக்கிறோம். அதாவது இச்சொல்லைமாறுபடுத்திக்காட்டும் பொருட்டு. ஆனால் பிரஞ்சுக்காரரான தெரிதா இதை உருவாக்கும் போது பிரஞ்சில் இச்சொல்லில் “a”எனும் ஒலி மௌனமாகும் என உணர்ந்திருந்தார். அதாவது, இரண்டு சொற்களும் உச்சரிக்கையில் பிரஞ்சில் ஒன்று போலவே தொனிக்கும்; இதன் மூலம் தான் உருவாக்கும் சொல்லையே அவர் மேலும் குழப்பத்தில் விளையாட்டுத்தனத்தில் ஆழ்த்துகிறார் என்கிறார் ஜூலியன் வூல்ஃபிரேய்ஸ் Deconstruction – Derrida எனும் நூலில். இந்த விளையாட்டுத்தனம் நமது அன்றாட புழக்கத்தில் நாம் அறியாமலே நிகழும் ஒன்று தான்.

உதாரணமாய், இந்த கட்டுரைக்கு நான் அளித்துள்ள தலைப்பை பாருங்கள்: “பத்து நிமிட தெரிதா”. நிச்சயம் உங்களால் இதை பத்து நிமிடத்தில் படிக்க முடியாது என எனக்குத் தெரியும். அப்படி என்றால்பத்து நிமிடம்என்பது என்ன? இக்கட்டுரை வழி சுருக்கமாய் தெரிதாவை அறிந்து கொள்ளலாம் என்கிறேனா? ஆனால் நான் தெரிதாவைப் பற்றி விரிவாக அல்லவா பேசிப் போகிறேன்! அப்படி என்றால்பத்து நிமிடம்என்பது இங்கே என்ன? என்னைப் பொறுத்தமட்டில்கொஞ்சம் சுலபமாய் கொஞ்சம் எளிதாய்எனும் பொருளிலேபத்து நிமிடம்எனும் சொற்கள் வழி நான் உணர்த்துகிறேன். “சுலபமாய் எளிதாய் தெரிதாஎன நான் நேரடியாய் சொன்னால் இந்தபொருள்எழாது. ஏனென்றால் தெரிதாவை சுலபமாய் எளிதாய் அறிய முடியாது என்று தானே இதில் விவாதிக்கிறேன். எனக்குகொஞ்சம்இங்கு முக்கியம். ”கொஞ்சம் எளிதாய்என்பதை கூட நான்கொஞ்சம் எளிதாய்என்று சொன்னால் சரியான அர்த்தம் வெளிப்படாது. அதற்கு சற்று மறைமுகமாய், கொச்சையாய்பத்து நிமிடஎன நான் சொல்லியாக வேண்டும். என்னால் சரிவர சொல்ல முடியாத, உங்களால் சரிவர புரிய முடியாத ஒன்றையே இந்தபத்து நிமிடஎனும் அடைச்சொற்கள் உணர்த்துகின்றன. இதுஒன் நிமிட் பாஸ்என அன்றாட உரையாடல்களில் நாம் சொல்வதற்கு இணையானது. இவ்வாறு மொழி  விளையாட்டுத்தனமாய் செயல்படுவதே உண்மைக்கு நெருக்கமாய் நம்மை கொண்டு செல்லும். அதுவே மொழியின் அழகு, சுவாரஸ்யம், அதன் இன்பம்.

ஒக்க நிமிஷம் பாபு

 ஒரு நிமிசம்என்றால் ஒரு நிமிசம் அல்ல என அனைவரும் அறிவோம். ஆனால் அது எத்தனை  நிமிடங்கள்என ஒருவராலும் உறுதிப்பட சொல்ல முடியாது. நாம் வரவேற்பறையில் ஒருவருக்காய் காத்திருக்கையில்கொஞ்ச நேரம் இருங்கஎன அவர் சொன்னால் நாம் கடுப்பாகி விடுவோம். ஆனால்ஒன் மினிட் இருங்கஎன்றால் ஆறுதலாவோம். “கொஞ்ச நேரத்தில்உள்ள நேரடியான நிச்சயமின்மையைஒன் மினிட்தள்ளிப் போடுகிறது . ஆனால் அந்தஒரு நிமிடமேகூட ஒரு புது நிச்சயமின்மையை தோற்றுவிக்கிறது. பத்து நிமிடங்கள் கடந்து அரை மணி ஆகி விட்டதே என நாம் கடிகாரம் பார்க்கும் போது கோபம் தலைக்கேறுகிறது. “எவ்வளவு நேரங்க வெயிட் பண்றது?” என சீறுகிறோம். உடனே நம்மை காத்திருக்க சொன்னவர்இன்னும் அஞ்சே நிமிசங்கள்என ஆறுதலாய் சொல்கிறார். நாம் அமைதியாகி காத்திருக்க தொடங்குகிறோம்.

இப்படி ஒத்தி வைப்பதே நல்ல நகைச்சுவையின் அடிநாதமாகிறது என ஜெர்மானிய தத்துவர் அறிஞர் ஹைடெக்கர் சொல்கிறார். ஒரு நகைச்சுவையை நாம்புரிந்துகொள்ளும் அது நகைச்சுவை அல்லாமல் ஆகிறது. நாம் புரிந்து கொள்வதற்குஅரைவினாடிக்குக்கு முன்பு எதற்கு சிரிக்கிறோம் என தெரியாமல் சிரிப்பதே ஒன்றை நல்ல ஜோக் ஆக்கிறது. அதாவது, நகைச்சுவையின் திளைப்பு புரிதலுக்கும் புரிதலின்மைக்கு நடுவே, புரிதலை மிகக் கொஞ்ச நேரம் நாம் ஒத்திப் போடுவதில் உள்ளது. இப்படி ஒத்திப் போடுவதில் ஒருகாலமற்றகாலம் உள்ளது. இதுவே நம்மை நகைச்சுவையை இந்தளவுக்கு விரும்பத் தூண்டுகிறது. நகைச்சுவைக்கு அடுத்தபடியாய் இந்த பண்பு கவிதைக்கே உண்டு என்கிறார் ஹைடெக்கர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...