அறிதலை தள்ளிப் போடுவதே வாசிப்பு
ஒரு வாக்கியம் பூடகங்களால், அனர்த்தங்களால், குழப்பத்தின் பனிப்படலத்தால் சூழப்பட்டு
உள்ளது; அதை விலக்கி விட்டு நிஜமான முகத்தை காண
வேண்டும்; அதுவே வாசிக்கும் முறை என நமக்கு தவறாய்
தொடர்ந்து சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் வாசிப்பின் சுவாரஸ்யமே அறிவது அல்ல, அறிதலை தள்ளிப் போடுவதே என தெரிதா சொன்னார். உதாரணமாய், ஒரு கதையோ கவிதையோ வெளிப்படும் தருணம்
என ஒன்று உண்டு. சட்டென ஒரு ஒளி நம் மீது பாய்ந்தது போல
உணர்வோம். “ஆஹா, அபாரமான படைப்பு” என சிலாகிப்போம். ஆனால் ஏன் சிலாகிக்கிறோம் எனக் கேட்டால்
நம்மால் உடனடியாய் தெளிவாய் சொல்ல வராது. தெளிவாய் ஒரு கோட்பாடாய் நம் சிலாகிப்பை வடிவத்துக்குள் கொணர்ந்ததும் அது
சலித்துப் போகும். இதனாலே நமக்கு
தெளிவின்மை சுகிப்பது போல தெளிவு சுகிப்பது இல்லை.
அதாவது அறியாமையே சுவாரஸ்யம் என நான் சொல்லவில்லை; ஆனால் வாசிப்பில் அறிதல் சில நொடிகள் தள்ளிப்
போகும் சந்தர்ப்பம் உண்டு; அப்போது நம்
இதயம் ஒரு சொல்லை, ஒரு சொல்லாடலை
கண்டுணர்ந்து திகைக்கிறது. கொஞ்ச நேரம்
நம் அறிவு மனம் அதை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியாமல் திணறி விட்டு பின்பு
அதை சாதிக்கிறது; அடுத்து வாசிப்பை
தொடர்கிறோம். ஒரே சமயம் அறிவைக் கொண்டும் இதயத்தைக்
கொண்டும் இரண்டிரண்டாய் வாசித்தபடியே இருக்கிறோம்; நம் அறிவு மனம் கைவிடப்பட்டு மீண்டும்
தன்னை நிலைப்படுத்தும் தருணங்களே வாசிப்பின் இன்பமாகிறது.
இந்த இரண்டுக்கும் நடுவே என்ன உள்ளது? அறிய முடியா வியப்புக்கும் அறிதலின் உறுதிப்பாட்டுக்கும்
இடையில் ஒருவித சூனியம் உள்ளது. அதாவது, “இது என்ன?” எனக் கேட்ட அடுத்த நொடி “இது அது தானா?” “இல்லை அதுவாக இருக்க முடியாதே?” “இதுவும் அல்ல, அதுவும் அல்ல எனில்?” என கேட்டுக் கொண்டே போவதே அர்த்தத்தை மனித
மனம் அறியும் விதம் என்றார் தெரிதா.
மற்றமையை கண்டறிவது, அதை மற்றமையுடன் பொருத்தி ஒன்று அதுவல்ல
என உணர்ந்து அவ்வாறே அதைப் புரிந்து கொள்வது, “அதுவல்ல இதுவே” என்ற பின் இந்த “இதுவும்” மற்றொன்றின் எதிர்மையே என அறிந்த பின்
மேலும் குழம்பி அடுத்தடுத்து வரும் மற்றமைகளுடன் அதை உரசிப் பார்த்தபடியே செல்கிறோம். இப்படி அர்த்தத்தை ”அறியும்” அறியும் போதே அதை தள்ளிப் போட்டபடியும்
இருக்கிறோம். வித்தியாசப்படுத்தி தள்ளிப் போடும் செயலே
பொருளறியும் செயல் என்றார் தெரிதா. இந்த இரண்டையும் (difference + deferral) ஒன்றாக்கி அவர் differance என புது கலைச்சொல் ஒன்றை உருவாக்கினார்.
அத்வைத தத்துவத்தில் இறையை “இதுவும் அல்ல” என (”நேத்தி நேத்தி…”) என அடையாளப்படுத்துவதற்கு இணையானது இது
எனலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தன்னை
அர்ஜுனனுக்கு அடையாளப்படுத்துகையில் நான் இதுவும் அல்ல, நான் அதுவும் என ஒவ்வொன்றாய் கழித்துக்
கட்டியபடியே வருகிறார். ஆனால் தான்
இதுவென என குறிப்பிடாமல் அவர் செல்கிறார். இந்த கழித்துச் செல்வது தான் “நான்” என்கிறார் அவர். தெரிதாவின் differance கிட்ட்த்தட்ட “இது” தான் எனலாம். தெரிதாவுடன் இணக்கமான மற்றொரு தத்துவ ஆசிரியர்
பௌத்த அறிஞர் நாகார்ஜுனர் (சூன்யவாதம்) (ஆம், தெரிதா உள்ளிட்டு பல பின்னமைப்பியல் சிந்தனையாளர்களிடமும்
நமது சூன்யவாதத்தின் தாக்கம் உண்டு.)
ஒரு கையெழுத்தில் நாம் எங்கு இருக்கிறோம்?
தெரிதா இந்த தத்துவார்த்த கருவியை அன்றாட உறவாடல்களுக்கு
மத்தியில் வைத்துப் பார்த்தார். மனிதர்கள்
அர்த்தங்களுடன் சூதாடுபவர்கள் என அவர் கருதினார். எழுதுவதும் வாசிப்பதும் ஒரு அர்த்த விளையாட்டே
என்றார். மொழிக்குள் ஒருவர் இருக்கும் போதே இல்லாமல்
ஆகி விடுகிறார்; அவர் அப்படி இல்லாமல் ஆவதற்கு அதற்குள்
அவர் இருந்தாக வேண்டும் என்றார். உதாரணமாய், நீங்கள் ஒரு ஆவணத்தில் கையெழுத்து இடுகிறீர்கள். அந்த
பிரதியில்
நீங்கள் அதிகாரபூர்வமாய் வீற்றிருக்க துவங்குகிறீர்கள். அந்த கையெழுத்தைக் காட்டி “உங்கள் சம்மதம்”, “உங்கள் அதிகாரபூர்வ கோரல்” அங்கு உள்ளதாய் சொல்வார்கள். ஆனால் உங்கள் கையெழுத்து இருக்கும் இடத்தில்
நீங்கள் இருப்பதில்லை என ஏற்றுக் கொண்ட பின்னரே அது கையெழுத்தாக மதிப்பு பெறுகிறது. அதாவது, உங்களது ஒரு காசோலையை கையெழுத்திட்டு அளிக்கும்
போது “உங்கள் சார்பாய் அந்த கையெழுத்தைக் கண்டு
இவருக்கு உங்கள் பணத்தை அளிக்கும் படி” கோருகிறீர்கள். அங்கு நீங்களோ
உங்கள் பணமோ இல்லை என்பதே சுவாரஸ்யம். அதாவது, ஒரு காசோலையை
அளிக்கும் முன் உள்ள உங்கள் ”இருப்பு” காசோலையில் கையெழுத்திடும் போது “இன்மை” ஆகிறது. ஆனால் காசோலை வங்கிக்கு சென்ற பின் அந்த
”இன்மை” மீண்டும் “இருப்பாகும்”. இப்படி இருப்பும்-இன்மையுடம் ஒன்றுடன் ஒன்றுடன் கண்ணைக்
கட்டி திருடன் போலீஸ் விளையாடுவதே காசோலையின் அர்த்தமாகிறது, வங்கி பரிவர்த்தனையாகிறது, பணமதிப்பாகிறது. இன்மையுடன் அதன் பின்னாலேயே மறைவாக “இருப்பு” இருக்க வேண்டும் என்பதே நமது சமூக விதிமுறை. இதனாலே காசோலை பணமின்றி திரும்பும் போது
அது குற்றமாகிறது. அப்போது நீங்கள்
இன்மையில் இருந்து இருப்புக்கு செல்லாமல் தொடர்ந்து இன்மையிலே நீடிக்கிறீர்கள்.
இப்படி சொற்களுக்குள் அர்த்தங்கள் நழுவி நழுவி விளையாடுவதை
தெரிதா மிகவும் கொண்டாடினார் என்பதாலே தனது கலைச்சொல்லுக்கும் differance என பெயரிட்டார். இதில் என்ன விளையாட்டு? Difference என்றால் மாறுபாடு. இதை டிஃபெரன்ஸ் என உச்சரிப்போம்.
Differance என்பதையும் நாம் டிஃபரான்ஸ் என உச்சரிக்கிறோம். அதாவது இச்சொல்லை ”மாறுபடுத்திக்” காட்டும் பொருட்டு. ஆனால் பிரஞ்சுக்காரரான தெரிதா இதை உருவாக்கும்
போது பிரஞ்சில் இச்சொல்லில் “a”எனும் ஒலி
மௌனமாகும் என உணர்ந்திருந்தார். அதாவது, இரண்டு சொற்களும் உச்சரிக்கையில் பிரஞ்சில்
ஒன்று போலவே தொனிக்கும்; இதன் மூலம்
தான் உருவாக்கும் சொல்லையே அவர் மேலும் குழப்பத்தில் விளையாட்டுத்தனத்தில் ஆழ்த்துகிறார்
என்கிறார் ஜூலியன் வூல்ஃபிரேய்ஸ் Deconstruction – Derrida எனும் நூலில். இந்த விளையாட்டுத்தனம் நமது அன்றாட புழக்கத்தில்
நாம் அறியாமலே நிகழும் ஒன்று தான்.
உதாரணமாய், இந்த கட்டுரைக்கு நான் அளித்துள்ள தலைப்பை
பாருங்கள்: “பத்து நிமிட தெரிதா”. நிச்சயம் உங்களால் இதை பத்து நிமிடத்தில்
படிக்க முடியாது என எனக்குத் தெரியும். அப்படி என்றால் “பத்து நிமிடம்” என்பது என்ன? இக்கட்டுரை வழி சுருக்கமாய் தெரிதாவை அறிந்து
கொள்ளலாம் என்கிறேனா? ஆனால் நான்
தெரிதாவைப் பற்றி விரிவாக அல்லவா பேசிப் போகிறேன்! அப்படி என்றால் “பத்து நிமிடம்” என்பது இங்கே என்ன? என்னைப் பொறுத்தமட்டில் “கொஞ்சம் சுலபமாய் கொஞ்சம் எளிதாய்” எனும் பொருளிலே “பத்து நிமிடம்” எனும் சொற்கள் வழி நான் உணர்த்துகிறேன். “சுலபமாய் எளிதாய் தெரிதா” என நான் நேரடியாய் சொன்னால் இந்த ”பொருள்” எழாது. ஏனென்றால் தெரிதாவை சுலபமாய் எளிதாய் அறிய
முடியாது என்று தானே இதில் விவாதிக்கிறேன். எனக்கு “கொஞ்சம்” இங்கு முக்கியம். ”கொஞ்சம் எளிதாய்” என்பதை கூட நான் ”கொஞ்சம் எளிதாய்” என்று சொன்னால் சரியான அர்த்தம் வெளிப்படாது. அதற்கு சற்று மறைமுகமாய், கொச்சையாய் “பத்து நிமிட” என நான் சொல்லியாக வேண்டும். என்னால் சரிவர சொல்ல முடியாத, உங்களால் சரிவர புரிய முடியாத ஒன்றையே
இந்த “பத்து நிமிட” எனும் அடைச்சொற்கள் உணர்த்துகின்றன. இது “ஒன் நிமிட் பாஸ்” என அன்றாட உரையாடல்களில் நாம் சொல்வதற்கு
இணையானது. இவ்வாறு மொழி
விளையாட்டுத்தனமாய்
செயல்படுவதே உண்மைக்கு நெருக்கமாய் நம்மை கொண்டு செல்லும். அதுவே மொழியின் அழகு, சுவாரஸ்யம், அதன் இன்பம்.
ஒக்க நிமிஷம் பாபு
”ஒரு நிமிசம்” என்றால் ஒரு நிமிசம் அல்ல என அனைவரும்
அறிவோம். ஆனால் அது எத்தனை
“நிமிடங்கள்” என ஒருவராலும் உறுதிப்பட சொல்ல முடியாது. நாம் வரவேற்பறையில் ஒருவருக்காய் காத்திருக்கையில் “கொஞ்ச நேரம் இருங்க” என அவர் சொன்னால் நாம் கடுப்பாகி விடுவோம். ஆனால் “ஒன் மினிட் இருங்க” என்றால் ஆறுதலாவோம். “கொஞ்ச நேரத்தில்” உள்ள நேரடியான நிச்சயமின்மையை “ஒன் மினிட்” தள்ளிப் போடுகிறது . ஆனால் அந்த “ஒரு நிமிடமே” கூட ஒரு புது நிச்சயமின்மையை தோற்றுவிக்கிறது. பத்து நிமிடங்கள் கடந்து அரை மணி ஆகி விட்டதே
என நாம் கடிகாரம் பார்க்கும் போது கோபம் தலைக்கேறுகிறது. “எவ்வளவு நேரங்க வெயிட் பண்றது?” என சீறுகிறோம். உடனே நம்மை காத்திருக்க சொன்னவர் “இன்னும் அஞ்சே நிமிசங்கள்” என ஆறுதலாய் சொல்கிறார். நாம் அமைதியாகி காத்திருக்க தொடங்குகிறோம்.
இப்படி ஒத்தி வைப்பதே நல்ல நகைச்சுவையின் அடிநாதமாகிறது
என ஜெர்மானிய தத்துவர் அறிஞர் ஹைடெக்கர் சொல்கிறார். ஒரு நகைச்சுவையை நாம் “புரிந்து” கொள்ளும் அது நகைச்சுவை அல்லாமல் ஆகிறது. நாம் புரிந்து கொள்வதற்கு ”அரை” வினாடிக்குக்கு முன்பு எதற்கு சிரிக்கிறோம்
என தெரியாமல் சிரிப்பதே ஒன்றை நல்ல ஜோக் ஆக்கிறது. அதாவது, நகைச்சுவையின் திளைப்பு புரிதலுக்கும்
புரிதலின்மைக்கு நடுவே, புரிதலை மிகக்
கொஞ்ச நேரம் நாம் ஒத்திப் போடுவதில் உள்ளது. இப்படி ஒத்திப் போடுவதில் ஒரு “காலமற்ற” காலம் உள்ளது. இதுவே நம்மை நகைச்சுவையை இந்தளவுக்கு விரும்பத்
தூண்டுகிறது. நகைச்சுவைக்கு அடுத்தபடியாய் இந்த பண்பு
கவிதைக்கே உண்டு என்கிறார் ஹைடெக்கர்.
Comments