இனி சில மருத்துவ விளம்பரங்களைக் காண்போம். கீழ்வருபவற்றை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ்
மருத்துவமனை வளாகத்தில் நான் படமெடுத்தேன்.
அறிவியல் எந்தளவுக்கு அறிவிடம் பேசுகிறது?
இந்த விளம்பரங்கள் என்னை வெகுவாய் கவர்ந்ததற்கு ஒரு
விநோதக் காரணம் உண்டு – இவை மருத்துவ
சேதிகளை கிட்டத்தட்ட ஒரு மருத்துவ மொழியில் சொல்கின்றன, ஆனால் மருத்துவ சேதிகளைப் போல் அல்லாது
இவை நம்மை சற்றே குழப்புகின்றன. தெளிவாக ஒரு
நோக்கத்துடன் குழப்புகின்றன. இப்படி குழப்பினாலும்
அவற்றின் நோக்கமான அதிர்ச்சியை ஏற்படுத்துவதை கச்சிதமாய் நிறைவேற்றுகின்றன. எப்படி எனப் பார்ப்போம்.
ஆறு நொடிகளுக்கு ஒருமுறை இவ்வுலகில் ஒருவர் பக்கவாதத்
தாக்குதலுக்கு ஆட்படுகிறார் என்பது மருத்துவ உண்மையே. ஆனால் நமக்குத் தெரியும் நம்மிடையே மிகச்சிலருக்குத்
தான் பக்கவாதம் வருகிறது என்று, ஜலதோஷம், தலைவலி போல பக்கவாதத் தாக்குதல் பரவலான
நோயோ நோய் அறிகுறியோ அல்ல என்று. அதாவது ஒரு
அலுவலகத்தில் சதா பத்து பேர் மூக்கு சிந்துவதை, இருமுவதைப் பார்ப்போம். ஆனால் பத்து பேர் நம் முன்பு பக்கவாதம்
வந்து தளர்ந்து சரிந்து விழுவதை பார்க்க மாட்டோம். ஆனால் இந்த
வாக்கியம்
அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுகிறது.
“ஸ்டுரோக் என்றால் என்ன?” என ஒரு கேள்வியை
எழுப்பி விட்டு கீழே அதற்கு பதில் அளிக்காமல் பக்கவாதத் தாக்குதலை கண்டு கொள்வதற்கான
அறிகுறிகளை பட்டியலிடுகிறது. விளக்கம்
இதற்குக் கீழாக வருகிறது. ஏன் விளக்கம்
உடனடியாய் மேலே தரப்படவில்லை? பொதுமக்களுக்கு
விளக்கம் மிகவும் தேவையில்லை. அவர்களுக்கு
அது புரியாது; விளக்கம் மருத்துவர்களுக்கு உரியது என்பது
இதை எழுதியவர்களுக்கும் இதை வாசிப்பவர்களுக்கும் புரிய வரும் ஒரு மறைமுக சேதி. ஆனாலும் அந்த கேள்வி ஏன் அங்கு வருகிறது
என்றால் அப்போது தான் அது ஒரு மருத்து சேதிப் பலகை எனும் தொனி ஏற்படும். அடுத்து கீழே வரும் அறிகுறிகளில் எவை வேண்டுமெனிலும்
ஒரு பக்கவாதத் தாக்குதலை குறிக்கலாம் என நான்கு படங்களை தருகிறார்கள். லேசாய் உதடு கோணிப் போன ஒரு அழகிய நங்கையின்
முகம் (அதைப் பார்க்க ஏதோ கேலியில் உதட்டை சுழிப்பது
போல இருக்கிறது), ஒருவரது தொங்கும் கை, அதன் அருகே கவிழ்ந்த காபி கோப்பை (கையை தொங்கப் போட்டு தூங்குகிறவராகவும்
அது இருக்கலாம்), அடுத்து அதே பெண்ணின் உதடுகளின் குளோசப், கடைசியாய் ஒருவர் போன் செய்யும் படம் வருகிறது (போன் பண்ணுவது ஸ்டுரோக்கின் அறிகுறி என்றா? அடப்பாவிங்களா?) இந்த படங்களைக் கொண்டு பக்கவாதத் தாக்குதலைப்
பற்றி நீங்கள் ஒரு மண்ணும் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, சும்மா திரிபவர்கள் கூட ஒரு பக்கம் கோணிக்
கொண்டு கீழே விழலாம் எனும் பீதியை இந்த விளம்பரப் பலகை ஏற்படுத்துகிறது.
இப்படி அறிகுறிகளே எவை என சரியாய் சொல்லாமல் “அந்த இன்னொரு பழம்” பாணியில் குழப்பி விட்டு, இவ்வாறு அறிகுறிகள் உங்களுக்கோ பிறருக்கோ
தோன்றினால் அவை மறையும் வரை காத்திருக்காமல் மருத்துவமனையை நாடுங்கள் என இந்த விளம்பரம்
கோருகிறது. அதிலும் “நம்பினால்” எனும் சொல் இங்கு முக்கியம். “நீங்களோ உங்களுக்குத் தெரிந்த பிறரோ பக்கவாதத்தால்
தாக்குண்டதாய் நீங்கள் நம்பினால் மருத்துமனையை நாடுங்கள்.” எனும் வாக்கியத்தில் “சந்தேகப்பட்டால்” என்பதற்குப் பதில் “நம்பினால்” என ஏன் வருகிறது? நம்புதல் என்பது உறுதியாக ஒன்றை ஏற்று
செய்வது. மருத்துவர் அல்லாத சாமான்யரான நாம் எப்படி
ஆதாரமின்றி “நம்ப” முடியும்? இங்கு தான் இந்த விளம்பரம் ஒரு மருத்துவ
சேதி அறிவிப்பாகவும் வெறும் பீதியை கிளப்பும் விளம்பரமாகவும் ஒரே சமயம் இருக்கிறது. ஒரு போதுநல நோக்கிலான மக்கள் நல அறிக்கையாக
தெரியும் ஒன்றை நாம் கட்டுடைக்கையில் அது நேர்மாறான ஒரு நோக்கைக் கொண்டிருப்பதை, ஒரே சமயம் அறிவியல் சேதியை பரப்பவும் குழப்பவும்
பீதியை கிளப்பவும் செய்வதை அறிகிறோம். இப்போது அறிவியல் எழுத்து கூட பொதுவெளியில் வேடிக்கையாக ஒரு விளையாட்டாக, முரணாய் செயல்படுவதை நாம் புரிந்து கொள்கிறோம். இதை விட, இவ்வளவு குழப்பமான உள்முரணான ஒரு சேதி
நமக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்துவதில்லை, நமக்கு முரண்களே கண்ணில் படுவதில்லை என்பது
இங்கு முக்கியம். நம் அன்றாட
பரிவர்த்தனைகளில் கணிசமான வாக்கியங்கள் இவ்வாறே உள்ளன.
திரைப்பாடல்கள்
நமது திரைப்பாடல்களும் இவ்வாறானவையே. நீங்கள் அடுத்த முறை எந்த பிடித்தமான பாடல்
வரிகளைக் கேட்கும் போதும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் முரண்கள் பல தென்படும். அந்த முரண்களே அவற்றின் அழகு, அந்த முரண்களும் பூடகத்தன்மையையுமே அவை
நம் இதயத்துடன் உரையாடக் காரணம் என நாம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாய், “புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று” (”மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு”) எனும் வரி. புழு துடிப்பது வேறு, மின்னல் வெட்டுவது வேறு. அவற்றை நீங்கள் இணைக்கவே முடியாது – புழுவைப் போன்றே மின்னல் துடித்து வெட்டி
இழுபட்டு மறைகிறது என்றாலும் கூட. ஆனால் இங்கு
இந்த இரு சித்திரங்களும் அழகாய் இணைகின்றன. “தூண்டிற் புழுவினைப் போல” எனும் பாரதியின் வரியை நினைவுபடுத்தும்படியாய்
அப்பெண் தான் புழுவாய் துடிப்பதாய் சொல்கிறாள். அவளது விரக தாப துன்பத்தை இது சுட்டுகிறது. ஆனால் அவள் ஒரு மின்னல் வெட்டாய் நம்மை
தீண்டி இன்பத்தை மின்சாரமாய் நமக்குள் இறக்குபவளும் தான். இந்த விநோதக் கலவை உணர்வை, பொருந்தா முரண்பாட்டின் பொருத்தத்தை (விரக தாபம் + காமத் திளைப்பின் மின்சாரம்) இவ்வரியின் மூலம் நம் ஆழ்மனம் உணர்கிறது, நமது அறிவு அதை கவனிக்காமல் விட்டாலும்
கூட.

Comments