Skip to main content

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (5)


காணாமல் போனவர்கள் பற்றின சுவரொட்டிகள்


காணவில்லைசுவரொட்டிகள் என்னை எப்போதும் திடுக்கிட வைக்கும். ஏன்? இன்னாரைக் காணவில்லை என அந்த சுவரொட்டி கூறும் போது அதிலுள்ள புகைப்படத்தில் அன்னார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். “நான் இங்கே தான் இருக்கிறேன்என அவர் கூறுவது போலிருக்கும். அவரை நேரில் பார்த்தால் கூட நான் அந்தளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக மாட்டேன். இயல்பாக அவரிடம் சென்று பேசி விபரங்களை அறிய முயல்வேன். மறைமுகமாய் உறுதிப்படுத்திக் கொண்டு சுவரொட்டியில் உள்ள எண்ணுக்கு அழைப்பேன். இதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. எனக்கு இரு கேள்விகள் இது சம்மந்தமாய் உள்ளன:

1)   ஏன்காணவில்லைசுவரொட்டியில் உள்ளவர் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்? ஏன் என் பார்வை அவர் முகத்தில் சில நொடிகள் நிலைக்கிறது? அப்போது எனக்குள் நிகழ்வது என்ன? ஒரு வாசகனாக ஒரு செய்திப் பத்தியை, அறிக்கையை, கதையை, கவிதையைப் போல அந்த சுவரொட்டியை நான் பார்க்கிறேனா? எனில், அது எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

2)   அந்த சுவரொட்டியில் காணாமல் போனவர் இருக்கிறாரா? அவர் இல்லாமல் அவரைப் பற்றி - அவர் இல்லாமல் ஆனதைப் பற்றி - அங்கு பேசவே முடியாதில்லையா? இந்த முரணை சுவரொட்டியை வாசிப்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள்.


இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் சில சுவரொட்டிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.






காணாமல் போன ஆலிஸ் கிராஸைப் பற்றின சுவரொட்டியில் ஒரு விசயம் சுவாரஸ்யமானது:

ஆலிஸைக் கண்டால் நாம் அழைக்க வேண்டியது காவல்துறையை என முதல் வரியிலே குறிப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டு விசயங்களில் இந்த பிரதி ஒரு தனிப்பட்ட பிரதியாகிறது.

1)   ஆலிஸ் குறித்த தனிப்பட்ட தகவல்கள். அவரது வயது 14. ஹேன்வெல்லில் இருந்து ஆகஸ்ட் 28 வியாழன் அன்று மதியம் மூன்று மணிக்கு காணாமல் போயிருக்கிறார் என்பதில் உள்ள தகவல்கள் காவல்துறை இவ்வழக்கை விசாரித்து தெளிவுற உதவும். யாராவது மூன்றரை மணிக்கு இப்பெண்ணை இந்த படத்தில் பார்த்தேன் என்றால் அது அவரது அசைவுகளை, நகர்வை அறிந்து கொள்ள உதவும். அவர் அணிந்திருந்த ஆடைகளும் அவ்வாறே முக்கியமானவை. ஆனால் இத்தகவல்கள் அவர் அங்கு அப்படத்தில் நம்முடனே இருப்பதான ஒரு முரண் பிம்பத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. 14 வயதில் அந்த குறிப்பிட்ட நாளன்று மூன்று மணிக்கு ஜீன்ஸ் அணிந்த பெண்ணாக அவரை உறைய வைக்க அவை உதவுகின்றன. அவர் அப்படி உறைந்திருப்பதே நமக்கு ஆறுதலாகவும் பதற்றம் தருவதாகவும் ஒரே சமயம் உள்ளன. இதுவே இதன் மற்றொரு நோக்கம் - அவரை வலுவாய் பொருண்மையாய் அங்குஇருத்தி”, கூடவே அவரைஇல்லாமல்பண்ணி பார்ப்பவர்களை தேடலை பங்கெடுக்கத் தூண்டுவது.

2)   ஆலிஸ் எப்படி அப்பிராணியாய் உள்ளவர், பிறரால் சுலபத்தில் பாதிப்புள்ளாகும்படி மனதளவில் மென்மையானவர் / பலவீனமானவர் எனும் தகவலை எப்படிப் பார்ப்பது? அவரது வயது, தோற்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து இது முழுக்க ஒரு புது பரிமாணம் பெறுகிறது. இந்த தனிப்பட்ட அந்தரங்க தகவல் அடுத்துப்ளீஸ் சீக்கிரமே வீட்டுக்கு வா ஆலிஸ். நாங்க எல்லாரும் உன்னை நேசிக்கிறோம். பத்திரமா வீட்டுக்கு வா.” எனும் கோரலில் முழுக்க வேறொன்றாகிறது. முதலில் போலீஸின் அறிவிப்பாக இருந்த இந்த ஆவணம் இப்போது ஒரு குடும்ப உறுப்பினர் மீதான அன்பை அறிவிக்கும் ஆவணம் ஆகிறது. இதைச் சொல்கிறவரும் குடும்பத்துக்குள் ஆலிஸுக்கு இணக்கமான ஒருவர் ஆகிறார். யார் இந்த பிரதியை எழுதுகிறார் என்பது, அந்தஎழுத்தாளனின்இருப்பு சட்டென மற்றொன்றாகிறது - இறுக்கமான அரசு எந்திரத்தில் இருந்து நெகிழ்வான அக்கறையான அன்பான குடும்ப எந்திரமாகிறது. இந்த மாற்றமானது மிக நுணுக்கமாய் நாம் கவனிக்காதபடி வேகமாய் நிகழ்கிறது.

இப்போது இது போலீஸின் பிரதியா, குடும்ப உறுப்பினர் ஒருவர் எழுதும் பிரதியா? இதன் நோக்கம் தகவல் அறிவிப்பா அல்லது அப்பெண்ணை ஆறுதல்படுத்தி வீட்டுக்கு திரும்பும்படி கோருவதா? இதன் வாசகர் வழிப்போக்கரா அல்லது அப்பெண்ணே தானா? ஏனென்றால் முதலில் அப்பெண் மீதான அக்கறையான வாசகங்கள் இரண்டாவதில் அவளை ஒரு பலவீனமான பிரகிருதியாக்குகிறது; பொறுப்பற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஒருத்தியாக்குகிறது; இதை ஒரு குடும்பப் பிரச்சனை ஆக்குகிறது; ஒரு வழிப்போக்கன் தலையிட தேவையில்லாத ஒன்றாக்குகிறது. இந்த சுவரொட்டியை கட்டுடைக்கையில் இவ்வளவு முரண்களும் குழப்பங்களும் நம் முன் கொட்டுகின்றன. ரெண்டு பழங்களில் ஒன்று மற்றொன்றாகி, அந்தஇண்ணொண்ணுஇது தான் என அர்த்தமாகும் தருணங்கள் இந்த சுவரொட்டியிலும் உண்டு.






மேலே உள்ள படத்தில் தோன்றுபவர் நேட் பிஹ்ல்மெயர் எனும் ஹார்வர்ட் பல்கலைக்கழக எம்.பி.ஏ மாணவர். அவர் (7 வருடங்களுக்கு முன்பு) ஒரு இரவில் காணாமல் போனார்; பின்னர் அவரது உடல் ஒரு ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குடிபோதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சுவரொட்டியில் தனித்து தெரிவது அதன் மினிமலிச பாணி. வெறுமனே காணவில்லை என்பதுன் நேட்டின் புகைப்படமும் கண்டுகொண்டவர் அழைக்க வேண்டிய எண்ணும் மட்டுமே தரப்பட்டுள்ளன. இதில் நேட்டின்இன்மைஅவரது பிம்பத்தின்இருப்பால்இன்னும் வலுவாகிறது.

 அதைவிட முக்கியமாய் இங்கு காவல் துறையும் அரசமைப்புமே அவரதுகாணவில்லைசுவரொட்டியின்எழுத்தாளன்”. இந்த எழுத்தாளன் தான் பேசும் விசயத்தைப் பற்றி மிக சொற்பமான தகவல்களையே அளிப்பவன். அதாவது, பெயரைத் தவிர வேறெதையுமே அவன் நேட் பற்றி சொல்லவில்லை. இப்படி பேசுபொருளைப் பற்றி சொற்பமாய் பேசுவதன் வழி இந்த எழுத்தாளன் பேசுபொருளை (அதாவது காணாமல் போன நேட்டை) “இன்மையாக்குகிறான்”.

இந்த இன்மையை ஏற்படுத்தி தன்னைப் பற்றி, தனது திட்டங்கள், தனது பின்னணி, தனது இருப்பு குறித்து பூடகத்தை ஏற்படுத்துகிறான். இந்த பூடகம் அவனை ஒரு புதிர்மையான ஆளாக்குகிறது. இந்த புதிரான எழுத்தாளன் காவல் துறையும், காவல் துறையை ஒரு கருவியாக கையாளும் அரசமைப்பும் என்பதால் இப்புதிர்மை அச்சுறுத்தலை கொணர்கிறது. இப்படி இன்மையை உருவாக்கி புதிர்த்தன்மையை உண்டு பண்ணி ஒரு அரசமைப்பு தன் கீழுள்ள சமூகத்தை (வாசகரை) மறைமுகமாய் அச்சுறுத்த முடியும் எனக் காட்டுகிறது. அச்சுறுத்தல் இங்கு அரசதிகாரமாகிறது.

இவ்வாறு இந்த சுவரொட்டியை கட்டுடைத்தால் - அது முரண்பாடாய், பூடகமாய் செயல்படும் முறையை வெளிப்படுத்தினால் - நமக்கு அரசதிகாரம் செயல்படும் முறை தெரிய வருகிறது. அரசமைப்பு ஒரே நேரம் காணாமல் போகிறவர் குறித்து அக்கறைப்படுவதாகவும் காணாமல் போகிறவருக்கு இணையாக தன்னையும் காணாமல் மறைகிற, அவ்வாறே இருந்தே பின்னிருந்து இயங்கும் ஒரு ஆபத்தான அமைப்பாக காட்டிக் கொள்கிறது என புரிந்து கொள்கிறோம். இந்த அமைப்புக்கு உணர்வுகள் இல்லை, அது நேட்டின் வாழ்நிலையை, அவரது பிரச்சனைகளை, உணர்வுநிலையை பற்றி கவலைப்படாத ஒன்று, அதனாலேயே அது வலிமையும் அதிகாரமும் படைத்தது என இந்த சுவரொட்டி சித்தரிக்கிறது. நேட்டின் இன்மையும் இருப்பும் மாறி மாறி சுவரொட்டியில் தோன்றுவதே இத்தனை சேதிகளையும் நம் மனதுக்கு தெரிவிக்கிறது என்பதே சுவாரஸ்யம்.
                                                   
                                                  (தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...