நான்
அதிகமாய் ஆச்சரியப்படுவது என் மனப்போக்குகளைக் கண்டு தான். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.
கடந்த
முறை மனுஷ்யபுத்திரனை சந்தித்த போது அவர் “நீ பெங்களூருக்கு சென்ற பின் நிறைய
எழுதுகிறாய். அது நல்லது. ஆகையால் இன்னும் சில வருடங்கள் கிரைஸ்டிலேயே இரு.”
என்றார். ஆம் உண்மை. அதற்கான காரணம் தான் விசித்திரம் - கிரைஸ்டில் வேலைப்பளுவும்
நெருக்கடியும் அதிகம். சதா வேதாளம் கழுத்தைப் பற்றி தொங்கி கதை சொல்லி கேள்வி
கேட்டபடி இருக்கும். ஆனால் இந்த சூழலில் தான் என் எழுத்து தீவிரமும் அதிகமாகிறது.
மாறாக, எப்போதெல்லாம் விடுமுறைக் காலம் துவங்குகிறதோ நான் எழுதுவது எல்.கெ.ஜி
குழந்தை ஸ்லேட்டில் எழுதுகிற கணக்கில் குறைந்து போகிறது. ஒருவித சோம்பல், ஆர்வமின்மை, விழித்து விழித்து பார்த்து அதுக்குள்ள
விடிஞ்சிருச்சா என உறங்கும் மனநிலை. நான் இதைக் கொண்டு என்னைப் பற்றி ரெண்டு
விசயங்களை புரிந்து கொண்டேன்:
- பொதுவாக எழுத்தாளர்கள் தமக்கு நன்றாய் எழுத எந்த குறுக்கீடும் இல்லாத சுதந்திரம் அவசியம் என்பார்கள். அவர்கள் விடுமுறைகளில் நன்றாய் எழுதக் கூடியவர்கள். ஆனால் எனக்கோ தலைகீழ் - எனக்கு சுதந்திரமே முட்டுக்கட்டை. சுதந்திரமின்மையின் போது என் எழுத்து பூனையை துரத்திப் போகும் நாயைப் போல பறக்கும். எனக்கு எழுத்தை முடுக்கி விட புற வேலை நெருக்கடிகள் அவசியம். அப்படி மென்னியை யாராவது நெருக்குவது அதிகமாகும் போது அதை சமாளித்து அல்லது புறக்கணித்து எழுதுவது போது ஜோராக இருக்கிறது. ஆனால் வெளியே இருந்து எழுத்துக்கு தடை வரவில்லை என்றால் உள்ளிருந்து நானே தடை போட்டு விடுகிறேன்.
- எழுத்தாளர்கள் தனிமை விரும்பிகள். கோடைவாசஸ்தலம், வனாந்தர வீடுகளுக்கு சென்று விடிய விடிய எழுத முயல்வார்கள். ஆனால் எனக்கு எழுத்து நரம்புகள் சூடேற மனித அருகாமை அவசியம். மக்கள் கூட்டம் கூட்டமாய் என்னைச் சுற்றி புழங்கியபடி இருக்க வேண்டும். அப்போது அவர்களை கவனிக்காமல் அவர்கள் வழியாக எழுத்தை அணுகுவேன். அப்போது மனம் கூர்மை பெற்று எழுத்து அப்படி லாவகமாய் பாயும். மக்கள் கூட்டம் விடைபெற்ற தனிமையில் என் எழுத்து சன்னியாசம் பெற்று புறப்பட்டு விடும். அதை திரும்ப இழுத்து வருவது ரொம்ப பெரிய போராட்டம்.
இதனால்
தான் நான் விடுமுறைகளை வெறுக்கிறேன்.
Comments