ஜீவஜோதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி அளித்த வாக்குமூலத்தில் இருந்து ஒரு சிறுபகுதி இப்போது:
“பிழைப்புக்காக ஊரில் உள்ளசொத்துக்களை விற்று கடந்த 1994ம் ஆண்டு சென்னைக்கு குடும்பத்துடன் வந்தேன். எங்களது சித்தப்பா தட்சிணாமூர்த்தி, கே.கே.நகரில் உள்ள ஹோட்டல் சரவண பவனில் மேலாளராக இருந்து வந்தார்.
அவரிடம் சென்று, கையில் உள்ள ரூ. 4.5 லட்சம் பணத்தை வைத்து தொழில் செய்யலாம் என்றிருக்கிறோம் என்று தெரிவித்தோம். அந்தப் பணத்தை தனது முதலாளி ராஜகோபாலிடம் கொடுத்து வைத்து அதன் மூலம் வரும் வட்டியைப் பெற்று குடும்பம் நடத்துமாறு சித்தப்பா அறிவுறுத்தினார்.
அதன்படி பணத்தை ராஜகோபாலிடம் கொடுத்தோம். மாதந்தோறும் ரூ.7,000 வரை வட்டி போல கொடுக்க ஆரம்பித்தார் ராஜகோபால்.
பின்னர் அசோக் நகரில் உள்ள சரவண பவன் ஹோட்டலில் எனது அப்பாவுக்கு வேலை போட்டுக் கொடுத்தார். இதையடுத்து கே.கே.நகரில் உள்ள தனது ஊழியர் குடியிருப்பிலேயே எங்களையும் தங்க அனுமதித்தார் ராஜகோபால். அந்தச் சமயத்தில், எனது தம்பிக்கு டியூஷன் எடுப்பதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் வீட்டுக்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்கத் தொடங்கினோம். ஆனால், ராஜகோபாலுக்கு சாந்தகுமாரைப் பிடிக்கவில்லை. அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிடும்படி வற்புறுத்தினார். இதை ஏற்க எனது தந்தை மறுத்து விட்டார்.
பின்னர் ராஜகோபாலிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை எனது தந்தை திருப்பி வாங்கினார். அதன் மூலம் லாரி பிசினஸில் ஈடுபட்டார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் சாந்தகுமார் வீட்டுக்கு வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராஜகோபால் கூறினார். இதையடுத்து எனது தந்தை சரவண பவனில் பார்த்து வந்த வேலையை விட்டார். எம்.ஜி.ஆர். நகரில் வேறு வீடு பார்த்து குடியேறினோம்.
பின்னர் எனது தந்தை வேலைக்காக மலேசியா சென்று விட்டார். இந்நிலையில் பிரின்ஸுடனான எனது காதலை எனது தாயார் எதிர்த்தார். இதனால் நானும், சாந்தகுமாரும் அண்ணாநகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் மதுரை சென்று விட்டோம். அங்கு சாந்தகுமாரின் பெற்றோர் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவைத் தொடர்பு கொண்டேன். அவர் மதுரைக்கு வந்து எங்களை ஏற்றுக் கொண்டு சென்னைக்கே திரும்ப அழைத்து வந்தார்.
இங்கு வந்த பிறகு வேளச்சேரியில் ஒரு வீட்டில் குடியேறினோம். டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்று நினைத்தோம். கையில் பணமில்லாததால், பணத்திற்காக ராஜகோபாலையே அணுகினோம். அவரும் கடன் கொடுத்தார்.
ராஜகோபாலே தலைமை தாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.”
இது தான் நான் ஆரம்பத்திலேயே கேட்ட கேள்வி தான். தன்னை நிராகரித்து மற்றொருவரை மணந்த பெண்ணுக்கு அவர் ஏன் கடன் கொடுக்க வேண்டும்? தவறான நோக்கத்தில் ஜீவஜோதி கடன் கேட்டதாய் நான் கூறவரவில்லை. மாறாக அவர்கள் இடையிலான பந்தத்துக்கு இந்த கடன் ஒரு அத்தாட்சி என்கிறேன். உங்களை தொடர்ந்து தொந்தரவு பண்ணுகிற, உங்கள் திருமணத்தை தடுக்க முனைந்த ஒருவரிடம் நீங்கள் சுலபத்தில் உதவி கேட்டு செல்ல மாட்டீர்கள். அது ஒரு அவமானம். மேலும் ஜீவஜோதி ஒன்றும் ஏழ்மையில் விளிம்பில் இல்லை. அவரது தந்தை வெளிநாட்டில் அப்போதும் வேலை செய்கிறார். பெற்றோர் உதவி இல்லை எனினும் கூட அவர்களால் சென்னையில் வேலை பார்த்து வாழ முடியும். உங்கள் வாழ்வில் வில்லனாக வருகிற ஒருவரிடமே நீங்கள் உதவி நாடி செல்கிறீர்கள் என்றால் அவர் அதற்கு கடன்பட்டவர், பொறுப்பை உடையவர் என நீங்கள் நினைக்கிறவர் எனப் பொருள். அப்படி எனில் எதற்கு ஈடாக இந்த கடன்?
மேலும் வாக்குமூலத்தை பார்ப்போம்:
“அதன் பின்னர் அடிக்கடி எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார் ராஜகோபால். எனக்குக் கட்டளையிடுவது போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் நோக்கிலேயே அவரது பேச்சுக்கள் இருக்கும்.
ஒரு முறை எனது கணவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பதாகவும், என்னை சினிமாவில் சேர்த்து விட பிரின்ஸ் முயற்சிப்பதாகவும், நீ சினிமாவில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை என ராஜகோபால் கூறினார். அதுபற்றி நான்தான் கவலைப்பட வேண்டும், நீங்கள் கவலைப்பட அவசியமில்லை என்று நான் கூறிவிட்டேன்.
(...) என்னை மகளாக நினைத்துத் தான் ராஜகோபால் உதவி செய்தவதாக நினைத்தேன்.
ஆனால், என் தாயாரிடம் என்னை அவருக்கு மூன்றாவது மனைவியாக கட்டி வைக்குமாறு கோரிய பின்னர் தான் தெரியவந்தது.”
இந்த “மகள்” பகுதியை கவனியுங்கள். வாக்குமூலத்தின் இறுதியில் இது வருகிறது. தனக்கு எந்த ஈடுபாடோ தொடர்போ இருக்கவில்லை என்பதை நிறுவ ஜீவஜோதி இதைச் சொல்கிறார். அவர் தன்னை மகளாக கருதுவதாக எந்த கட்டம் வரை ஜீவஜோதி நம்பினார்? நியாயமாக, சாந்தகுமார் அவரை சந்திக்கக்கூடாது என ராஜகோபால் வற்புறுத்திய போதே அந்த தந்தை-மகள் சித்திரம் கலைந்திருக்க வேண்டும் அல்லவா? பின்னர் ஏன் அந்த விழிப்பு தனக்கு தன் தாய் மூலமாகவே கிடைத்தது என்கிறார்?
மற்றொரு செய்திக்குறிப்பில் இப்படி வருகிறது (அடுத்தவன் மனைவி மீது ஆசை! சரவணபவன் அண்ணாச்சி புழல் சிறையில் களி தின்பதின் உண்மை பின்னணி!
http://dhunt.in/6v7GQ?ss=eml&s=i):
ஜீவஜோதி தன் அப்பாவுடன் அடிக்கடி ஓட்டலுக்கு சென்று வருகிறார். அப்போது அண்ணாச்சியுடன் நட்பாகிறார். “நெருங்குகிறார்”. அவருக்கு சரவணபவனில் அண்ணாச்சி வேலை கொடுக்கிறார். இதன் பிறகு தான் சாந்தகுமாரை அவர் நெருங்க கூடாது என அண்ணாச்சி வற்புறுத்தி அது கடைசியில் இந்த கொலைகுற்றத்தில் கொண்டு போய் விடுகிறது.
இந்த செய்தி தான் அதிக உண்மைத்தன்மை கொண்டதாக தெரிகிறது. ஏனென்று சொல்கிறேன்.
Comments