ஒரு வீடு இரு வாசல் (1990): என்ன யமுனா நிழலைத் துரத்திக்கிட்டு இருக்கே?
இரண்டு மாற்று மனைவிக் கதைகளின் தொகுப்பு இப்படம். முதல் கதையில் சுகுமார் தன் வீட்டுக்கு வேலைக்கு வரும் செண்பகம் எனும் ஒரு ஏழைப் பெண்ணுடன் உறவு கொண்டு அவளை தன் வைப்பாட்டி போல நடத்துகிறார். அவளுக்கு அவர் மூலம் குழந்தை பிறக்கிறது. அடுத்து சுகுமார் மற்றொரு பெண்ணை (யமுனா) மணக்கிறார். அப்பெண் துணிச்சலானவள்; சுகுமாரின் ஆணாதிக்கம் பிடிக்காமல் பிரிந்து செல்கிறாள். இப்போது சுகுமார் செண்பகத்தை வீட்டுக்கு அழைத்து வந்து தன் மனைவியாக வைத்துக் கொள்கிறார். மனைவியின் புடவையை அவளுக்கு அணியக் கொடுக்கிறார். இந்நிலையில் ஒருநாள் மனைவி மனம் மாறி கணவனைத் தேடி வருகிறார். சுகுமார் தவிக்கிறார். செண்பகத்திடம் வீட்டை விட்டு சென்று விடும்படியாய் கேட்கிறார். செண்பகம் சென்ற பின்னும் அவள் விட்டுப் போன தடயங்கள் வீட்டில் கிடைக்க மனைவிக்கு சந்தேகம் வருகிறது. தன் கணவனின் கள்ளக்காதலி யார் எனத் தேடுகிறார்.
இதைப் பற்றி அவள் யோசித்தபடி வீட்டுக்குள் குறுக்குமறுக்காய் நடக்கும் ஒரு காட்சி வருகிறது. அப்போது பாலசந்தர் சுகுமாரின் பக்கவாட்டு முகத்தை சட்டகத்தின் ஒரு பாதியிலும் மனைவியின் நடக்கும் நிழலை இன்னொரு பாதியிலும் காட்டுகிறார். அப்போது தான் சுகுமார் இவ்வசனத்தை பேசுகிறான்: “என்ன யமுனா நிழலைத் துரத்திக்கிட்டு இருக்கே?”
இந்த இடத்தில் தோன்றும் நகைமுரண் கவனிக்கத்தக்கது. நிழலைத் துரத்தும் யமுனாவே ஒரு நிழல் தானே? அவள் எப்படி நிழலானாள்?
படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகளில் ஒன்றில் செண்பகம் வீட்டு வேலைகள் செய்வதை சுகுமார் இச்சையுடன் கவனிக்கிறான். அப்போது சட்டகத்தின் இடதுபாதியில் பாலசந்தர் செண்பகத்தை அல்ல அவளது நிழலையே காட்டுகிறார். ஏனென்றால், சுகுமார் விரும்புவது நிஜமான செண்பகத்தை அல்ல அவளது சாயையை தான். (சின்ன வீடே ஒரு நிழல் தானே எனும் தொனியும் இதற்குள் வருகிறது.) அடுத்து, மனைவி யமுனா வீட்டை விட்டு வெளியேறிய பின் அவளிடத்தில் செண்பகம் திரும்பிட யார் நிஜ மனைவி எனும் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாய், வீட்டுக்கு திரும்பி வரும் யமுனா தன் புடவையை செண்பகம் அணிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் போது இந்த குழப்படி இன்னும் தெளிவாகிறது. சட்டப்படி செண்பகம் மனைவி அல்ல தான். ஆனால் சுகுமாரைப் பொறுத்தமட்டில் அவள் சற்று காலம் மனைவியாக இருக்கிறாள். மனைவியின் எல்லா பணிகளையும் செய்கிறாள். அவள் வழி குழந்தையும் அவனுக்குக் கிடைக்கிறது. யமுனாவோ மனைவியின் கடமையை முழுமையாய் ஏற்பவள் அல்ல; அவளுக்கு குழந்தையும் இல்லை. இந்த விதத்தில் செண்பகம் அவளை விட கூடுதலான தகுதி பெறுகிறாள். அவள் தற்காலிகமாய் யமுனாவின் இடத்துக்கு வந்து விடும் போது யமுனா “சின்ன வீடாகிறாள்”. இது தான் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியின் உச்சம். அவள் ஒரு மனுஷி எனும் இடத்தில் இருந்து நிழலாக பாவிக்கப்படுகிறாள், நிழலை திடீரென நிஜமாய் பாவித்து விட்டு நிஜத்தை நிழலாக்குகிறான் சுகுமார். இந்த ஒருவள் (மனைவி) மற்றொருவளாகி (சின்ன வீடு), மற்றொருவள் மற்றொன்றாகி (நிழல்), மற்றமையே தான் என இறுதியில் அந்த மனைவி உணரும் இடம் இப்படத்தின் தனித்துவம் எனலாம்.
காட்சி மொழியை பொறுத்தமட்டில் பாலசந்தர் இப்படத்தில் விளையாடி இருக்கிறார். வசனத்தில் அவர் வழக்கமாய் சொல்ல முயலும் பல விசயங்களை காட்சிகள் வழி கடத்தி இருக்கிறார்.
சின்ன வீடு “சின்ன வீடாய்” இருப்பது மட்டுமே “பெரிய வீட்டுக்கு” ஆறுதல் என்பதை இப்படம் உணர்த்துகிறது. இரண்டு வீடுகளுமே ஒரே போல் தோன்றும் போது அது பெரிய சிக்கல்களை குடும்ப அமைப்புக்கு, சமூகத்துக்கு ஏற்படுத்தும் என சொல்கிறது. இதனால் தான் சுகுமாரின் தகாத உறவை அறிந்ததும் யமுனா செண்பகத்துக்கு ஒரு “கடைக்கண்ணி” வைத்துக் கொடுத்து அவளைக் காப்பாற்ற விரும்புகிறாள். அதற்காக 25,000 தரும் படி சுகுமாரிடம் கேட்கிறாள். இந்த இடத்தில் அவள் விரும்புவது நிழலை நிஜமாக்க. செண்பகத்துக்கு வாழ வழி அமைத்து வீடும் கட்டிக் கொடுத்தால் அவள் சுகுமாரின் சின்ன வீடாக வெளிப்படையாகவே மாற நேரிடும். இதை மனைவியே முன்னின்று செய்திட, தனக்கான மற்றமையை அவள் உருவாக்குகிறாள் என பொருள் வரும். ஏனென்றால் செண்பகம் “சின்ன வீடாக” இருப்பதே யமுனா தான் நிழல் எனும் நிலையில் இருந்து நிஜமாக ஒரே வழி. ஆனால் யமுனா எதிர்பாராத படி செண்பகம் தற்கொலை செய்து கொள்கிறாள். நிழலில் இருந்து நிஜமாகி மீண்டும் நிழலாகி உடலற்று மாயமாகிறாள் செண்பகம். திகைத்துப் போகும் யமுனா அவளது குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். ஏனென்றால் இப்போது கணவனின் தகாத உறவின் ஒரே எச்சம், ஒரே ஆதாரம் அந்த குழந்தை தான். அதை வளர்ப்பதன் மூலம் தன் இடத்தை உறுதிப்படுத்தவும் செண்பகத்தின் மற்றமை எனும் அடையாளத்தை நினைவுபடுத்தவும் அவளுக்கு சாத்தியமாகும்.
நிழல் நிஜமாகும் எத்தனங்கள்: வினோதினியின் தேடல்
“ஒரு வீடு இரு வாசலின்” இரண்டாம் கதை இன்னும் தீவிரமானது – நிறைய சிடுக்குகள் கொண்டது. வீனோதினி எனும் துணை நடிகை ஒருத்தி ஒரு எழுத்தாளனை மணம் புரிந்து கொள்கிறாள். சின்ன கருத்து மாறுபாடுகள், கணவனின் தடித்தனம் ஆகியவை அவளை காயப்படுத்த பெற்ற குழந்தையுடன் பிரிந்து வந்து விடுகிறாள். ஆனால் பிரிவுக்கு ஒரு காத்திரமான காரணம் இல்லை என்பது தான் கவனிக்கத்தக்கது. திருமணத்துக்கு முன்னர் அவள் தனக்கு நடிக்க ஏன் பிடிக்கும் என சொல்கிறாள். நடிகையாக அவளால் யாராகவும் ஆக முடிகிறது; அப்படி வேடமணிவதில் ஒரு சுதந்திரம், ஒரு கிளர்ச்சி உள்ளது. அதுவும் அவள் துணை-நடிகை – வேடத்தின் வேடம். நிழலின் நிழல். ஒரு நடிகையிடம் புலப்படுவது அவளது பாத்திரத்தின் இயல்புகள்; ஆனால் துணை-நடிகை அந்த பாத்திரத்தின் ஒரு புலப்படாத உடல். இப்படி இருந்து பழகுவது ஒரு அபூர்வ மனநிலை. இப்படியான ஒருவள் ஒரு பணக்கார ஆளை மணம் புரியும் போது என்னவாகும்? அவளால் துணை-நிலையில் இருந்து மையநீரோட்ட அடையாளத்துக்கு மீள முடியுமா? அவளால் மனைவியாக முடியுமா? அவளது கணவன் திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு துரோகம் செய்வதில்லை என்றாலும் அவளுக்கு நிம்மதி இருப்பதில்லை. அவளால் “அவளாக” இருக்க முடிவதில்லை.
மனைவியாக ஒரு உறுதிப்பட்ட அடையாளத்தில் இருப்பதே அவளுக்கு மூச்சுத்திணறல் ஆகிறது. அவள் நிழல் ஆகிறாள். கணவனைப் பிரிந்து மீண்டும் துணை நடிகை ஆகிறாள். கணவனைப் பிரியும் முன்பான காட்சி ஒன்றில் அவள் அவனை கடிந்து கொள்ளும் போது துணிமணிகளை கழற்றி ஆடை மாற்றுவதை மறைமுகமாய் காட்டுவார் இயக்குநர் – கணவன் பார்த்திருக்க சட்டகத்துக்குள் ஒவ்வொரு துணியாக வந்து விழும். இது ஒரு உருவகக் காட்சி. அவள் தன் மீது சுமத்தப்பட்ட நிரந்தர அடையாளத்தை துயிலுரிந்து விட்ட சுதந்திரமாகிறாள். அது அவளை நிரந்தர இருப்பற்றவளாய், அரூபமாய், சாயையின் சாயையாய் மாற்றலாம். ஆனாலும் அவள் அதையே விரும்புகிறாள்.
இந்த இடத்தில் வினோதினியின் குழந்தை அவளுக்கு ஒரு பற்றுகோலாகிறது. அது அவளது நிழல் வாழ்வுக்கு ஒரு பருவுடலை அளிக்கிறது. அவள் அதை கெட்டியாக பிடித்துக் கொள்கிறாள். அவள் தன் கணவனுக்கு முன்னாள் மனைவி, ஆனால் தாய் எனும் அடையாளத்துக்கு அப்படி முன்னாள், இன்னாள் கிடையாதல்லவா? ஆக, குழந்தை சட்டப்படி கணவனிடம் இருக்க நேரும் வேளைகளில் அவள் கடும் பதற்றத்துக்கு உள்ளாகிறாள். அது பாசப் போராட்டம் மட்டுமல்ல, அவளது இன்மை அளிக்கும் நெருக்கடியின் போராட்டம்.
இறுதிக் காட்சியில் இரவில் தன் குழந்தையைக் காண கணவன் வீட்டுக்கு சென்று அங்கு ஒரு நாய் துரத்த அவள் அரக்கப்பரக்க ஓடுகிறாள்; பிறகு இனிமேல் ஓட முடியாது எனும் நிலையில் துணிச்சலாய் நாயை எதிர்கொள்ள அது திரும்ப ஓடுகிறது. இந்த காட்சி சற்றே குழந்தைத்தனமானது என்றாலும், நிழலில் இருந்து நிஜத்துக்கு திரும்பும் அவளது எத்தனத்துக்கு ஒரு நல்ல உருவகமாகிறது.
இக்கதையில் நேரடியாய் சின்ன வீடு தோன்றவில்லை; ஆனால் ஒரு குறியீடாக சின்ன வீடு வருகிறது. ஒரு மனைவி எந்த நேரமும் சின்ன வீடாக, உள்ளீடற்றவளாய் ஆகக் கூடும் எனும் அவலத்தை இப்படம் சித்தரிக்கிறது. ஒரு மனைவியின் அந்தஸ்தும் சின்ன வீடு எனும் அந்தஸ்தும் இரு வேறு நிலைகள் அல்ல; சின்ன வீட்டின் மீது அணிந்திருக்கும் அரிதாரம் மட்டுமே “பெரிய வீடு” என்கிறது இப்படம். இதை உணர்ந்த பின் சின்ன வீடாகவே வாழவும் முடியாமல் தன் சொந்த இடத்துக்கும் மீள முடியாமல் ஒரு பெண் தவிப்பதை இது பேசுகிறது.
சின்ன வீடு என்பதை ஒரு உள்ளார்ந்த அடையாளச் சிக்கலாய் கையாளும் தனித்துவமான படம் “ஒரு வீடு இரு வாசல்”.
Comments