பெண்ணியத்துக்கும் ஹிந்து தேசியவாதத்துக்கும் உள்ள தொடர்பு வெகுநுட்பமானது. பெண்கள் தம்மை ஒரு அதிகாரத் தரப்பாக உணரும் காலகட்டம் ஒன்றில் அவர்கள் ஒழுக்கவாதம் எனும் ஆண் ஆயுதத்தை எடுத்து ஆண்களுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள். மற்றொரு பக்கம் இந்துத்துவர்களும் இதே ஒழுக்கவாதத்தைக் கொண்டு சுதந்திரவாதத்தை தாக்குவார்கள். ஆண்-பெண் உறவு குடும்ப ஒழுக்கவியலில் இருந்து பிறழக் கூடாது எனும் ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உள்ளதை நாம் காண வேண்டும். ஐரோப்பாவிலும் ஒரு காலத்தில் தேவாலயத்தின் பின்னணியில் தான் முதல் தலைமுறை பெண்ணியவாதிகள் ஒழுக்க சுத்தீகரிப்பை மேலெடுத்தார்கள். அது பின்னர் பால் சமத்துவ இயக்கமானது. முகிலன் விவகாரத்தில் நாம் இதை இன்று அப்பட்டமாக காண்கிறோம். இன்று பெண்ணிய ஆயுதம் சுல்பமாய் இந்துத்துவர்களின் கையில் போகிறது. சற்று முன்பு தான் ஒரு தலைமை நீதிபதியை இதே சிலுவையில் அறைந்தார்கள். போராளிகள் எல்லாம் பெண் விசயத்தில் பொறுக்கிகள் என தாமரை இப்போது சொல்லுவதில் எனக்கு அதிர்ச்சி இல்லை.
பெண்ணியவாதிகளுக்கும் இந்துத்துவர்களுக்குமான இலக்குகள் வேறு, ஆனால் ஆயுதம் ஒன்றே.
சில மாதங்களுக்கு முன்பு மீ டூ குறித்தான ஒரு கட்டுரையில் நான் இதைப் பேசிய போது பலரும் ஒத்துக் கொள்ளவில்லை. இன்று பலரும் சொல்கிறார்கள், விக்டோரிய ஒழுக்கவாதத்தை சில பெண்ணியவாதிகள் முன்னெடுக்கிறார்கள் என்று. இதை நாம் மேலும் விரிவாக விவாதிக்க வேண்டும். அல்லாவிட்டால் பெண்ணியத்தை முழுக்கவே ஒழுக்கவாதிகள் ஹைஜேக் பண்ணி விடுவார்கள். அதற்கு முதல் படியாக பெண்ணியவாதிகள் செய்ய வேண்டியது பெண்ணியத்தை பாலியல் சர்ச்சைகளில் இருந்து விடுதலை பண்ணி, சமூக அரசியல் ஏற்றத்தாழ்வுகளின், இயங்கியலின் பின்னணியில் வைத்து விவாதிக்க ஆரம்பிப்பது. செக்ஸில் மட்டும் தானா ஒடுக்குமுறை நடக்கிறது?
இப்பிரச்சனை குறித்து இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே
“நேற்று ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆண்களுக்கு இது ஒரு பெரிய பலவீனம்தானே என்றார். அவர் சொன்னது முகிலன் விவகாரத்தை மனதில் வைத்து...
எனக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் நுட்பமான சிக்கல்கள் நிறைய உள்ளன. நாம் இன்னமும் பாலியல் சார்ந்த உரையாடல்களில் போன நூற்றாண்டு மதிப்பீடுகளையே கொண்டிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள் இதில் மிகவும் தடுமாறுகிறார்கள். ஒரே சமயத்தில் விடுதலையும் கட்டுப்படுதலும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண் பாலியல் விடுதலையை முன்வைக்கும் அளவுக்கு பெண்ணுக்கு அது ஏனோ சாத்தியமாகவில்லை. எவ்வளவு முற்போக்கான பெண்ணியம் பேசும் பெண்களும் ஒரு கட்டுப்பெட்டியான பெண்கள் போலவே இவ்விஷயத்தில் சிந்திக்கிறார்கள்.
அடல்ட்ரி என்றோர் விஷயம் உண்டு. அது இருவருக்கும் இடையே அந்தரங்கமானது. ஒரு கட்டத்தில் உறவு வரைக்கும் தயாராகும் பெண் அதிலிருந்து வெளியேறியதும் அதன் மொத்தக் குற்றக்கணக்கையும் ( அது குற்றமா என்ன) ஆணின் தலையில் கட்ட விழைவது துரதிர்ஷ்டம்.
அவன் சமூக செயல்பாட்டாளனாகவோ, கலைஞனாகவோ, பொது வாழ்வில் இருப்பவனாகவோ இருந்துவிட்டால் ஒட்டுமொத்த சமூகமும் விக்டோரிய ஒழுக்கவாதத்தை கையில் எடுக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கமாய் அதை மீறுபவர்கள்கூட கூச்சமின்றி கல்லெடுக்கிறார்கள். ஆண் நிர்தாட்சண்யமாய் கழுவில் ஏற்றப்படுகிறான். அவனின் இதுவரையான போராட்டங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் யாவும் வெறும் பெண் பிடிக்கும் தந்திரமென குறுக்கப்பட்டு காறி உமிழப்படுகிறது.
அவனின் அரசியல் எதிரிகளுக்கும், தத்துவ எதிரிகளுக்கும் இந்த முட்டு சந்து வாகாய் இருக்கிறது. அவனை பேசவே விடாமல் இதில் வைத்து வெளுத்துக்கட்டிவிடுகிறார்கள்.”
Comments