“இல்லை” என குழந்தையிடம் கேட்டாலும் சொல்லி விடும். ஆனால் பேஸ்புக்கில் செந்தில்வேல் என்பவர் இது போன்ற உதாரணத்தை வைத்து இலக்கியம், இலக்கியமற்றது எனும் தரம் பிரித்தலும் சரியே என வாதிட்டிருந்தார். இது போன்ற பார்க்க “அடடே” என சொல்ல வைக்கும் வாதங்கள் அடிப்படையில் பிழையானவை. ஏனென சொல்கிறேன்.
சினிமாவைப் பொறுத்தமட்டில் சங்கர் கணேஷும் ராஜாவும் வணிக இசையமைப்பாளர்களே. அவர்களுக்கான மரியாதை ரசிகர்கள் மத்தியில் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைத்தால் அப்படத்தை சீண்ட மாட்டோம் என எந்த தொழில்நுட்ப கலைஞரோ சக இயக்குநர் நடிகர் பாடகர் சொல்ல மாட்டார்கள். பாடல் நன்றாக அமைந்தால் அதை ரசிப்பார்கள், கொண்டாடுவார்கள்; இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள். இதே விதிதான் ராஜாவுக்கும். ஆனால் இலக்கிய எழுத்து, இலக்கியமற்ற சமரச எழுத்து எனும் பாகுபாட்டின் பிரச்சனை அதில் ஒரு தூய்மைவாதம் உள்ளது, அது ஒரு மற்றமையை முன்னெடுக்கிறது என்பது.
உ.தா., ஏன் சு.ரா சிறந்தவர் எனக் கேட்டார் அவர் இலக்கியவாதி, பாலகுமாரனைப் போல சமரசம் பண்ணாதவர் என ஒருவர் சுலபமாக முகாம் பிரித்து விடுவார். இங்கு ஒரு பிரதி அதனளவில் அனறி அதன் மற்றமையை (வெகுஜன வாசிப்பு) பொறுத்து மதிப்பு பெறுகிறது. சு.ரா அவரைப் போன்று எழுதாதவர்களால் மதிப்படைகிறார். அது தவறு - சு.ரா என்ற பெயரை நீக்கி விட்டு அவரை வாசித்து மதிப்பிட நம்மால் இயல வேண்டும். அவர் யார் அல்ல என்பது அவரை தீர்மானிக்க கூடாது. (இதற்கு அடுத்து, சு.ராவின் நவீனத்துவ ஸ்டைல், அவரது புறவடிவத்தின் சங்கதிகளைத் தாண்டி வெறும் ஆழ்மனப் பாய்ச்சலாக, சிக்கலான மொழி அமைப்பாக அதைக் கண்டு நம்மால் அதனுள் பயணிக்கவும் மதிப்படவும் முடிய வேண்டும். உணர்ச்சியற்ற, உருவக நடையில் எழுதியுள்ளார் என்பதால் மட்டுமே “ஆனா இலக்கியம்” என கூவினால் அது சிறுபிள்ளைத்தனமான வாசிப்பு.)
ஒரு வெகுஜன எழுத்து மேடையில் நீங்கள் வீற்றிருந்தால் நீங்கள் எழுதுவது தரமற்றது என நான் முடிவெடுப்பேன் என ஒருவர் சொல்வது (ஜெயமோகனைப் போல்) வெகுஜன எழுத்தை மற்றமையாக வைத்து இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு மேம்போக்கான காரியம் ஆகி விடும். இந்த நிலைப்பாடே இலக்கிய விரோதமானது.
“பரங்கிமலை ரயில்நிலையம்” எழுதி கடந்த வருடம் அமேசான் கிண்டில் போட்டியில் பரிசு வென்ற சென் பாலனை கார்ல் மார்க்ஸ் நிராகரிப்பதும் இப்படியே இருக்கிறது.
சென் பாலன் தான் ஒரு இலக்கியவாதி அல்ல, வெகுஜன எழுத்தாளன் அல்ல என்கிறார். கார்ல் மார்க்ஸ் ஒரு வெகுஜன படைப்பாகவும் உங்கள் நாவல் தரமாக இல்லை என்கிறார். அதன் பிறகு தன்னை மருத்துவராகவும் சென் பாலனை ஒரு நோயாளியாகவும் கற்பித்து தனது விமர்சனம் “கடுமையாகத் தான் இருக்கும்” என்கிறார். ஒரு விமர்சகன் தன்னை மருத்துவராக கருதும் அளவுக்கு நம் சூழல் அவ்வளவு விஷமாக மாறி விட்டதா? கடவுளே! ஒரு மருத்துவன் ஒரு நோயாளியை கருணைக்கொலை பண்ணலாம், அவனது உறுப்பை வெட்டி நீக்கலாம். நீங்களெல்லாம் இலக்கிய அதிகாரம் பெற்றால் இதையே தான் எழுத்தாளனுக்கும் பண்ணுவீர்களா?
சென் பாலனின் அரசியல் நிலைப்பாடுகள் அவரது புனைவில் வெளிப்படையாக, பிரச்சார உத்தியாக வந்துள்ளது என்பது கார்ல் மார்க்ஸின் குற்றச்சாட்டு. இதை “சுரண்டல்” என்கிறார். இதுவே ஒரு தட்டையான பார்வை தான். “சுரண்டாமல்” நீங்கள் எழுதவே முடியாது. புலப்படாமல் நாசூக்காக சுரண்டலாம், சென் பாலனைப் போன்று வெளிப்படையாக பண்ணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் தமிழில் பெண் பாத்திரங்களை மட்டும் எடுத்துப் பாருங்கள். அதில் இல்லாத “சுரண்டலா”? தஸ்தாவஸ்கியின் “பேதை” நாவலில் அவர் கர்த்தரின் பிம்பத்தில் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மாவாக பிரதான பாத்திரமான மிஷ்கினை காட்ட முயன்று “சுரண்டி” இருப்பார். தஸ்தாவஸ்கி ஒரு மேம்பட்ட படைப்பாளி என்பதால் மிஷ்கினின் குழப்படிகள், முரண்பாடுகளையும் அந்த மேன்மையான பிம்பத்துடன் கொண்டு வருவார். இப்போது அது கர்த்தரை போற்றும் பிரச்சார எழுத்தாக தோன்றாது. ஆனால் அதன் அடிவேர் இறங்கி நிற்பது சுரண்டலில் தான். அவரது வாசகர்கள் யாருமே கிறித்துவர்கள் அல்லவென்றால் அவர் அப்படி அப்பாத்திரத்தை அமைக்க மாட்டார். “குற்றமும் தண்டனையில்” சோனியா பதின்வயது விபச்சாரி. ஆனால் அவளது இளம் உடல் அவளை அப்பழுக்கற்றவளாக மனதளவில் காட்ட, கர்த்தருடன் ஒப்பிட உதவுகிறது. இதுவே சோனியா அறுபது வயது கிழவி என்றால் அப்படி காண்பித்தால் எடுபடாது. “கரமசோவ் சகோதரர்கள்” நாவலின் முடிவில் அவர் எதிர்கால நம்பிக்கையை குறிப்புணர்த்த குழந்தைகளை பயன்படுத்தி இருப்பார். குழந்தையை கண்டாலே புத்துணர்ச்சி, நம்பிக்கை, களங்கமற்ற வாழ்க்கை சாத்தியம் என நம் மனிதமனம் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறது. தஸ்தாவஸ்கி இதை வைத்து நம்மை “சுரண்டுகிறார்”. தஸ்தாவஸ்கி மனித உடல்களை பயன்படுத்தும் விதத்தை நாம் உற்று கவனித்தாலே அதில் நிறைய சுரண்டல்களை நாம் கவனிக்கலாம். கார்ல் மார்க்ஸ் தன் எழுத்தை பரிசீலித்தால் அதிலும் காணலாம்.
சுரண்டுவது என்பது அசைவம் சாப்பிடுவது போல. கறிக்கடையில் நின்று கோழியை ஒருவர் நீரில் அமுக்கி கொன்று கழுத்தை வெட்டுவதை எல்லாம் பார்த்து வாங்கி வருவது வெகுஜன படைப்பு; அதையே பிரியாணியாக யாரோ சமைத்து கவிச்சி வாடை இன்றி நெய்மணக்க மென்மையாக ஆக்கி தந்தால் அது உயர் இலக்கியம். இரண்டுக்கும் வித்தியாசம் அதன் தீவிரத்தில் என்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சார நெடி என்பது ஒரு தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் தான் என்பதற்காக இந்த உதாரணத்தை தருகிறேன்.
Comments